22
பூங்கொடி வந்த நாளிலிருந்து மீனாட்சிக்கு சற்று உதவியாக இருந்தது யாருமில்லாத தனிமையும் தெரியாமல் இருந்தது அம்மா இது செய்யட்டுமா அது செய்யட்டுமா என்ற ஓடியோடி வீட்டு வேலையை ரங்கராட்டினம் போல் சுற்றி சுற்றி செய்தாள் பூங்கொடி.
இப்படி ஒரு மகளும் மருமகளோ இருந்திருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும் என்று தோன்றியது எனக்கும் வாய்த்திருக்கிறார்களே மருமகள்கள். என்று தனது மருமகளை இறக்கி வைத்து விட்டு ஒரு படி பூங்கொடியை மேலே உயர்த்தி வைத்து பார்த்தாள் மீனாட்சி. வறுமையின் காரணமாக பூங்கொடி இங்கேயே இருந்துவிட்டு அவ்வப்போது தன் குடும்பத்தை காட்டூர் சென்று பார்த்துவிட்டு வருவாள். லதா கனகா இல்லாத இடத்தை இவள் நிரப்பி விட்டாள்.
சிங்கப்பூரில் இருக்கும் லதா தன் கணவனிடம்…
“என்னங்க உங்க அம்மா பண்றது நல்லாருக்கா யாரோ ஒரு பொண்ணை வீட்ல உட்கார வச்சிருக்காங்க இரண்டு பேருக்கு என்ன பெரிய வீட்டு வேலை வந்திட போது ” என்றாள் லதா.
“சரி லதா அப்போ ஒன்னு பண்ணு நீ கிளம்பி அங்க போய் இரு , எல்லாம் சரியாகிவிடும். அவங்க உதவிக்கு ஆள் இருந்தா அவங்க ஏன் யாரையோ அழைச்சிட்டு வந்து வச்சிக்க போறாங்க” என்றான் கோபி.
“இது என்ன கோபி சுத்த நான்சென்ஸா இருக்கு, வீட்டுக்கு வந்திருக்க மருமகளுங்க என்ன ஹெல்பரா? இப்போ நான் அங்க போனா அவளை அனுப்பிடுவாங்க அப்படினா நானும் அவளும் ஒன்னா ” என்றாள் கோபமாக.
‘ஆஹா வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சு போலருக்கு ‘, என்று நினைத்துவிட்டு அவளை சமாதானம் செய்தான்.
மாதங்கள் கடந்தன…
கனகுவிற்கும் சரி லதாவுக்கும் சரி இது தலை பிரசவம் என்பதால் சீமந்தம் செய்ய கோபியின் பெற்றோர் முடிவு எடுத்தனர். நிறைமாதம் என்பதால் ப்ளைட்டில் பயணம் செய்வது சரியல்லவே ,எனவே நீங்க ,அப்பா இரண்டு பேரும் இங்க வந்திடுங்க என்றான் கோபி.
“சரி கோபி முதல்ல கனகாவுக்கு இங்கேயே சீமந்தம் முடிச்சிட்டு அப்றம் சிங்கப்பூர் வரேன். என்றார் மீனாட்சி.இவனும் சரி என்று ஒப்புக்கொண்டான். கனகாவிற்கு சீமந்தம் சிறப்பாக செய்யப்பட்டது . அவளுடைய பெற்றோர் பிரசவத்திற்கு அவளை அழைத்துச் சென்றனர். பூங்கொடி சிறிது காலம் காட்டூரில் இருந்துவிட்டு வருவதாக சொல்லி கிளம்பினாள்.
சிங்கப்பூரில் அனைவரும் மீனாட்சி மற்றும் அவரது கணவர் வருகையை எதிர்பார்த்து இருந்தனர்.
“நான் போய் ஏர்போர்ட்டில் அழைச்சிட்டு வந்திடுறேன்”என்று கோபி சொல்லிவிட்டு கிளம்பினான்.
பங்கஜம் மற்றும் லதா இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.
“என்னடி மா இனிமே இந்த அத்தையை நீ மறந்திடுவ தானே” என்க.
“அது எப்படி அத்தை உங்களை மறப்பேன். மீனாட்சி அத்தை வந்தாலும் நீங்க தானே இவ்ளோ நாள் என்னை கவனிச்சிங்க அதை எல்லாம் மறக்குற விஷயமா சொல்லுங்க” என்றாள் லதா சற்று வருத்தமாக.
“அப்படி இல்லை என்னதான் இருந்தாலும் அவங்க தானே உன் மாமியார். அவங்க தானே உன்கிட்ட உரிமை கொண்டாடுவாங்க இனிமே. ” என்க.
“அவங்க இப்போ என்மேல் காட்ட போற அன்பு அக்கறை எல்லாம் எனக்கு பிரசவம் ஆகுற வரைக்கும் தான் ஆனால் நீங்க என்மேல எப்பவுமே அன்பா இருப்பீங்கன்னு வந்த முதல் நாளே நான் புரிஞ்சிக்கிட்டேன். அதனால எப்பவுமே நீங்க தான் என்னோட ஃபேவரிட் மாமியார் ஓகேவா” என்று பங்கஜம் மீது சாய்ந்தாள் லதா.
மீனாட்சி வந்து இறங்கியதும் முதல் வேலை லதாவுக்கு த்ரிஷ்டி சுத்தி போட்டது தான்.
“ஊர் கண்ணு உறவு கண்ணு என்று ஆரம்பித்து அவர் சொல்லி முடிப்பதற்குள் லதாவுக்கு அசதியே வந்துவிட்டது.
“அம்மா போதும் அவளை விடு மா ” என்றான் கோபி.
“டேய் என் மருமகளுக்கு இந்நேரம் எவ்ளோ கண்ணு பட்டுருக்கும் தெரியுமா சும்மா இருடா ” என்றார் மீனாட்சி.
சற்று நேரம் கழித்து லதா சமையல் செய்ய சமையலறை சென்றாள். மீனாட்சி கால் பிடித்தவாறு”அம்மாடி இந்த முட்டி வலி என்னைக்கு தான் போகுமோ தெரியலை ” என்று புலம்பியபடி அமர்ந்திருக்க கோபி பார்த்துக்கொண்டு இருந்தான்.
‘ச்ச இந்நேரம் பங்கஜம் அம்மா சமையல் பண்ணி இவளுக்கு ஊட்டியே விடுவாங்க ஆனால் எங்க அம்மா பாரு,அவ்ளோ தூரத்துல இருந்து கிளம்பி வந்துட்டு ஏதோ பார்த்துக்க வந்தேங்குற பேருல கம்முன்னு இருக்காங்க. எப்பவும் வர முட்டிவலி தானே ,ஏதோ இன்னைக்கு தான் வந்த மாதிரி அதையே சொல்லிக்கிட்டு இருக்காங்க’ என்று வருத்தமாய் லதாவை பார்த்தான். சமையலறை சென்றவன்..
“லதா நான் வேணும்னா ஹெல்ப் பண்ணட்டுமா ” என்று அவள் கையில் இருந்த காய்கறியை பிடுங்கி நறுக்கி தர முற்பட்டான்.
“டேய் ஆம்பள புள்ள கிச்சன்ல என்னடா வேலை ” என்று மீனாட்சி குரல் கொடுக்க…
அங்கிருந்து ஓடி வந்து…
“மா தயவு செஞ்சு சும்மா இரு . அவள் வயித்துல புள்ளைய வச்சிக்கிட்டு இருக்கா இந்த நேரத்தில் அவளுக்கு யாராவது சமைக்க உதவி பண்ணா தானே நல்லாருக்கும் ” என்று சொல்லி கோபமாக பார்த்துவிட்டு நகர்ந்தான்.
“திமிர் பாரு இவனுக்கு” என்று முறைத்தாள் மீனாட்சி.
மொட்டை மாடியில் துணி காயவைக்க வந்த பங்கஜம் கோபிக்கு கால் செய்தார்.
“என்ன கோபி ,லதா என்ன பண்றா “என்க.
“சமைக்கிறா மா” என்றான்.
“என்ன சமைக்கிறாளா? என்ன இதெல்லாம் இதுக்கு தான் உங்க அம்மா அங்க இருந்து இங்க வந்தார்களா? இதெல்லாம் சரி இல்லை.”என்று பங்கஜம் கூறியதற்கு அவனும் ஆமோதித்தான்.
வீட்டுக்குள் நுழைந்ததும் பங்கஜத்திற்கு துர்க்கம் தாங்க முடியவில்லை.
‘அந்த பொண்ணு பாவம் ,அடுத்த வாரம் பிரசவம். இப்போ போய் கிச்சன்ல சமையல் அது இதுனு , அந்த மீனாட்சி இதுக்கு தான் வந்துச்சா? ‘ என்று அழவே துவங்கினாள்.
மறுநாள் சீமந்த ஏற்பாடு…வீட்டிலேயே சிம்பிளான முறையில் அரங்கேறியது. நிலங்கு வைக்கும் போது ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தபடி இருந்த பங்கஜத்தை மீனாட்சி அழைத்தார்.
“பங்கஜம் நீங்க வாங்க இப்படி ,மருமகளுக்கு நிலங்கு வைங்க ” என்றதும் பங்கஜத்திற்கு சந்தோஷமாக இருந்தது .
எங்கு தன்னை ஒதுக்கி விடுவார்களோ என்று பயந்த பங்கஜத்திற்கு மகிழ்ச்சியாக இருந்தது மீனாட்சி அழைத்ததும்
“இதோ நிலங்கு வைக்காமையா என் மருமகளுக்கு ” என்று நிலங்கு வைத்தார் பங்கஜம். எல்லா பெண்களும் லதாவுக்கு வளையல் அணிவித்து அழகு பார்த்தனர். தூரத்தில் நின்று ஜாடையில் கோபி லதாவிடம் “நீ அழகா இருக்க ” என்று கூறினான் . அவளும் வெட்கத்தில் கீழே
தலை குனிந்தாள். இதை கவனித்த மதன்..
“என்ன மிஸ்டர் கோபி ,ரொமான்ஸா ?” என்க.
“அட நீங்க வேற ப்ரோ ” என்று வெட்கம் கொண்டான்.
இந்த காட்சிகளை பார்த்துக்கொண்டு இருந்த மித்ராவுக்கு குழந்தை ஆசை வந்தது. நாமும் குழந்தை பெற்றுக் கொண்டால் எவ்ளோ நல்லாருக்கும் என்று தன் வயிற்றை தடவினாள். இதை யார் கவனித்தார்களோ இல்லையோ பங்கஜம் கவனித்தாள்.
‘பாவம் புள்ள அதுக்கும் குழந்தை ஆசை வந்துடுச்சு போலருக்கு. இதுக்கு ஒரே வழி மதன் மித்ரா இரண்டு பேருக்கும் சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைக்கனும். லிவிங்ல குழந்தை பெத்துக்கிறது சாத்தியப்படாது , அதனால இவங்களுக்கு கல்யாணம் பண்ணிடனும் ‘ என்று நினைத்துவிட்டு
நகர்ந்தாள்.
நாட்கள் இப்படியே உருண்டோடியது. நம் கதாநாயகி லதாவுக்கு ஆண் குழந்தையும்,அங்கு கனகாவிற்கு பெண் குழந்தையும் பிறந்தது. இருவருக்கும் 30 நாட்கள் வித்தியாசம் தான்.
பிரசவம் ஆகிவிட்ட நிலையில் தற்போது கொஞ்ச நாட்கள் சொந்த ஊரில் இருக்கலாம் என்று லதாவும் கோபியும் இந்தியா வந்தனர். மீனாட்சி,கனகாவையும் லதாவையும் குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள பூங்கொடியை கையில் வைத்துக்கொண்டாள்.
“இங்க பாரு பூங்கொடி கொஞ்ச நாள் இங்கேயே இரு புரியுதா” என்றார் மீனாட்சி.
“சரிங்க மா ஆனால் வேலை அதிகமா இருக்கு. சம்பளம் கொஞ்சம் அதிகம் வேணும்” என்றாள். அதற்கு ஒப்புக்கொண்டாள் மீனாட்சி.
இரண்டு படுக்கையறை கொண்ட வீடு ஒன்றை வாடகைக்கு பிடித்தனர். கனகா கார்த்திக் தம்பதி ஒரு அறையும் ,லதா கோபி ஓர் அறையும் பயன்படுத்திக்கொண்டனர்.
“ப்பா வீடு பெருசா இருந்தா தான் கூட்டு குடும்பத்துக்கு லாயக்கு ” என்று மீனாட்சி கணவர் கூற அதற்கு மீனாட்சி உம் என்று தலையாட்டினாள். முன்பின் நிறைய விஸ்தாரமான இடமும் அங்கு இருந்ததால், எல்லாவற்றிற்கும் வசதியாக இருந்தது.
சாயந்திர நேரத்தில் கனகாவும் லதாவும் வீட்டுக்கு பின்புறம் வாக்கிங் செய்வது வழக்கமாக வைத்துக் கொண்டனர். இன்று வழக்கம் போல் பேசிக்கொண்டே இருவரும் வாக்கிங் செய்தனர்.
“அக்கா உங்களுக்கு டெலிவரி எக்ஸ்பீரியன்ஸ் போட்டு இருந்துச்சு ஷேர் பண்ணிக்கோங்க” என்றாள் கனகா புன்னகையுடன்.
“ஹாஹா ஐயோ வலினா வலி அப்படி ஒரு வலி முடியலை , ஆனால் அங்க இருந்த டாக்டர்ஸ் நர்ஸ் எல்லாம் ஸோ ஸ்வீட் தெரியுமா,நல்லா பாத்துக்கிட்டாங்க ” என்றாள் லதா.
“தட்ஸ் குட் அக்கா… எனக்கும் அந்த வலி ரொம்ப கஷ்டமா இருந்தது. என்னதான் நான் நர்ஸாக இருந்தாலும் மத்தவங்க அந்த வலி அனுபவிக்கிறப்ப ஒன்னும் தெரியாது ஆனால் எனக்குன்னு வரப்போ ஐயோ அழுதே அழுதுட்டேன் “என்றாள் கனகா.
“ஆனால் அந்த வலியையும் தாண்டி குழந்தை முகம் பார்க்கிறப்ப ஒரு சந்தோஷம் வருதுல அதான் தாய்மையோட சந்தோஷம் “என்றாள் லதா.
“அக்கா உங்களுக்கு இன்னொரு குழந்தை பெத்துக்குற ஐடியா இருக்கா “
“கண்டிப்பா கனகா, நான் தான் தனியா வளர்ந்தேன் என் புள்ள ஆச்சும் உடன்பிறப்புகள் கூட வளரனும் ” என்றாள் லதா.
இதை கேட்ட பூங்கொடி தூரத்தில் இருந்து.
“ம்ம் நம்ம வாழ்க்கையில ஒரு சந்தோஷமும் காணும். குடும்பத்துக்கு உழைச்சு கொட்டுறதுக்கே நேரம் கரெக்டா இருக்கு. உழைச்சு உழைச்சு எலும்பும் தோளுமா இருக்கேன். கஷ்டகாலம்,என்னலாம் யாரு கட்டிக்க போறாங்க ” என்றாள் வருத்தமாக தன் மனதுக்குள்.
அவள் ஏக்கம் தீருமா ?, தொடரும்.