காலையில் சுலோவின் குரலையும் மீறி ஹாலில் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கினான் மணிகண்டன். ரவி வேலைக்கு கிளம்பும் பரபரப்பில் ஹாலில் சட்டை பொத்தானை போட, ரவியின் தலை தென்படவும் சிற்றுண்டி செய்யும் மும்முரத்தில் இருந்த சுலோச்சனா வெளியே வந்து பெரியவனிடம்,
“நிஜமாவே இவன் வேலைக்கு போறானான்னு சந்தேகமா இருக்குடா. காலையில பத்து மணி வரைக்கும் தூங்குறான். அப்புறம் கிளம்பி போனா ராத்திரி தான் வரான். காலையில சாப்பிடுறதோட சரி மதியமும் நைட்டும் என்ன பண்றான்னே தெரியல. இவனுக்கும் சேர்த்து வடிச்ச சோறு எல்லாம் வீணாபோகுது.” என்று புலம்ப, முகத்திலிருந்து போர்வையை சட்டென விலக்கிய மணி,
“அதுல தான் தண்ணியை ஊத்தி தினம் காலையில எனக்கு பழைய சோறு வைக்குறீயே அப்புறம் என்ன சலம்புற?” என்று கடுப்பானான். சீராட வந்த கடைக்குட்டி பத்து நாள் இருந்துவிட்டு அவள் வீட்டிற்கு சென்றுவிட, இங்கே மூவரும் ஒருவரை ஒருவர் குத்திக் குதற தயாராய் இருந்தனர்.
“மதியமும் ராத்திரியும் சாப்பிடுறியா இல்லையானு தெரியாம வருத்தத்துல பேசுனா சலம்புறனாமே? இது எனக்கு தேவைதான்டா.” என்று சுலோவும் விடாது அங்கலாய்த்தார்.
“சாப்பாடு ரெடியா?” என்று ரவி குரல் உயர்த்தவும் சுலோச்சனா அடுப்பறையில் புகுந்து கொண்டார்.
ரவியின் பார்வை தற்போது மணி மீது பதிய, அவன் மீண்டும் போர்வைக்குள் புகுந்துகொண்டான்.
“எங்க வேலைக்கு போற?” அண்ணனின் கேள்விக்கு தம்பியின் பதில் மெளனமே.
“நீ முழிச்சிட்டுதான் இருக்கேனு எனக்கு தெரியும். தூங்குற மாதிரி நடிக்க வேண்டாம்.” என்றுபடி குனிந்தவன் மணி முகத்தில் இருந்த போர்வையை இழுத்து விலக்கிவிட்டான்.
“ம்ச்… என்ன வேணும் உனக்கு?” மணி கடுப்பில் முகம் சுளிக்க,
“என்ன வேலைக்கு போற?” என்ற கேள்வியே மீண்டும் ரவியிடம்.
அண்ணனுக்கு சலைக்காத தம்பியாய் அலட்சியத்துடன், “அது தெரிஞ்சு என்ன பண்ண போற நீ?”
“அதை தெரிஞ்சுக்குற உரிமை கூட எனக்கில்லையா?” உணர்ச்சிப்பிழம்பாய் இன்றி அகத்திலிருந்து நா வழியே சிதறிய வார்த்தைகள் தம்பியின் மனதை தாக்கும் முன்,
“உன் மேல உள்ள அக்கறையில கேட்டா அதுக்கு பதில் சொல்லக்கூட வலிக்குதா உனக்கு? அப்படியே அப்பனே மாதிரியே வந்து வாச்சிருக்கு.” என்று வரிந்து கட்டிக்கொண்டு வந்து நின்றார் சுலோச்சனா.
அவ்வளவுதான் போர்வையை உதறித்தள்ளி எழுந்த மணிகண்டன், “உங்க ரெண்டு பேருக்கும் பதில் சொல்லியே என் காலம் முடிஞ்சிடும். இவ்ளோ நாள் வேலைக்கு போகாம இருந்தது பிரச்சனை. இப்போதான் போறேனே? ஏன் நொய் நொய்னு என்னை இம்சை பண்றீங்க? நிம்மதியா தூங்ககூட முடியல. சும்மா எப்போ பாத்தாலும் அப்பனை மாதிரின்னு சொல்லிட்டே இருக்க… என் அப்பனை மாதிரி இல்லாம பக்கத்து வீட்டுக்காரன் மாதிரியா இருப்பேன்.” கோபத்தில் வார்த்தை தடித்து விழுந்துவிட, ரவி மணியின் சட்டையை பிடித்துவிட்டான்.
“என்ன பேச்சு பேசுற நீ? அம்மாகிட்ட பேசுற பேச்சா இது? ஏதோ பொறுப்பில்லாம இருக்க ஆனா நல்ல பையன்னு நினைச்சா என்ன பேச்சு பேசுற? அதுவே நம்மள நட்டாத்துல விட்டுட்டு அந்தாளு போயிட்டாரேன்னு ஆற்றாமையில புலம்பிட்டு இருக்கு. நீ வாய்க்கு வந்து எல்லாம் பேசுற?”
ஆங்காரமாய் ரவியை பிடித்து தள்ளிவிட்ட மணி, “அவரா போயிருக்க மாட்டாரு இதுதான் பேசி பேசி துரத்தி விட்டுருக்கும். இவங்களுக்கு யாராவது ஒருத்தர் அவலா வாயில மென்னுதிங்க வேணும். முதல்ல அவரு இப்போ நான்.”
“ஏலே என்னமோ நான் வேணும்னே உன் அப்பனை துரத்திவிட்ட மாதிரி பேசுற? சம்பாரிக்குற காசெல்லாம் தினம் குடிச்சே அழிச்சு சின்ன புள்ளைன்னு கூட பாக்காம உங்களை போதையில அடிச்சு உதைச்சது எல்லாம் மறந்து போச்சோ? அந்தாளு பண்ணாத அட்டூழியமே கிடையாது. விட்டிருந்தா உன் தங்கச்சியை வித்து குடிச்சிட்டு வந்திருப்பான். கட்டையில போறவன். அதான் துரத்தி விட்டேன். இப்போ அதுக்கு என்ன செய்யணுங்குற?” என்று தணலாய் தகித்தார் சுலோச்சனா.
அவரின் தணலில் மணி தணிந்துவிட அவன் வேலை செய்யும் உணவகம் பற்றி சொல்ல,
“அங்கெல்லாம் ஏன் போற? கஷ்டப்பட்டு இன்ஜினியரிங் படிக்க வச்சதெல்லாம் இப்படி சர்வரா வேலை செய்யவா? நீ ஒன்னும் அங்க வேலைக்கு போக வேண்டாம்.” என்றான் ரவி முடிவாய்.
கசப்பாய் அதை மறுத்தவன், “கஷ்டப்பட்டதை விட இஷ்டப்பட்டதை படிச்சிருந்தா இப்போ ஏன் இப்படி இருக்க போறேன்?” என்றிட, ரவி புரிதலுடன்,
“இப்போ என்ன கெட்டுப்போச்சு? இஷ்டப்பட்டதை செய்ய வேண்டியதுதானே? நீ கேட்டேன்னு தான் எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி வேலைக்கு ஏற்பாடு பண்ணேன். அங்கேயும் ஒழுங்கா வேலை பாக்காம ஒரு மாசத்துல வந்துட்ட.” என்று முன்னர் நடந்த நிகழ்வை நினைவுபடுத்த, நின்று பேச விருப்பப்படவில்லை மணி.
“எனக்கு புடிக்கலை வந்துட்டேன். எனக்கு புடிச்ச மாதிரி வேலை அமையிற வரைக்கும் இப்படித்தான்.” என்ற மணி அதற்கு மேல் அங்கு நிற்காது பாயை மடித்து எடுத்துக்கொண்டு அறைக்குச் சென்றான்.
“அவனுக்கு என்னதான் புடிக்குமோ தெரியல…” என்று ரவி நெற்றியை தேய்க்க,
“அது தெரிஞ்சா அவன் ஏன் இப்படி இருக்கான். அவன் கேக்க மாட்டான். அவன் நினைச்சதைதான் செய்வான் அப்படியே அவன் அப்பனை மாதிரி.” என்று பல்லைக் கடித்தார் சுலோச்சனா.
“நீ இப்படி பேசுறது அவனுக்கு புடிக்கலைனு தெரியுதுல்ல அப்புறம் ஏன் அவனை சீண்டுற மாதிரியே பேசுற?”
“அப்படியாவது அவங்க அப்பனை மாதிரி எந்த வேலையிலும் நிலையா இல்லாம தனக்குனு ஒரு வேலையை உருப்படியா தேடிக்குவான்னு பாக்குறேன்.” என்று அங்கலாய்த்து சுலோ தன் வேலையை பார்க்கச் சென்றுவிட, ரவியும் அப்பேச்சை அத்துடன் விட்டு அலுவலகம் கிளம்பிச் சென்றான்.
அறைக்குள் சென்ற மணி இதற்கு மேல் வீட்டில் இருந்தால் சரியாய் இருக்காது என்று முடிவெடுத்து நேரமாகவில்லை என்றாலும் பரவாயில்லை என்று குளித்துக் கிளம்பி கடைக்குச் செல்ல ஆயத்தமானான்.
அதற்கும் சுலோச்சனா விடாது, “இங்க இருந்தா கேள்வி கேட்பேன்னு நேரமே கிளம்பி ஓடுறியா?” என்று நோண்ட,
“ஆமா பின்ன இங்க இருந்து உன் சலம்பலை கேட்டுட்டு இருப்பாங்களா? சோறை போடு வரேன்.” என்று அவனும் விடாது வாயாடி வீட்டிலிருந்து கிளம்பினான்.
வெளியே வந்து செருப்பு போட்டு கேட்டை மூடுகையில் பார்வை தன்னால் யாழினி வீடு புறம் சென்று பதிந்தது. அவளுடன் பேசி பத்து நாட்களாவது இருக்கும். அன்று இரவு பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து பேசிய பின்பு அவள் கண்ணிலே படவில்லை. காலை இவன் வேலைக்கு கிளம்பும் நேரம் அவள் அலுவலகம் சென்றிருப்பாள். இரவு வேலை முடித்து வந்துப்பார்த்தால் அவள் வண்டி பூட்டிய அவர்கள் வீட்டினுள் நிற்கும். இரவு தாமதியாமல் வீட்டிற்கு நேரமே சென்றுவிடுகிறாள் என்று அவன் ஆசுவாசப்பட்ட அந்நாள் அதை பொய்க்கும் வண்ணம் கடைக்கு வந்து சேர்ந்தாள் யாழினி.
அன்றுபோல் இன்றும் அக்கடையில் இருந்த அனைத்து உணவும் அவள் மேசையில்…
வேலை நேரத்தில் இவளை நெருங்க முடியாது தவித்த மணி, பணம் செலுத்திவிட்டு அன்று போலவே உணவுகளை சூடு செய்து வாங்கிச் சென்ற யாழியை எண்ணி ஒருவித பரபரப்பிலே வேலையை முடித்து ஓட்டமும் நடையுமாய் பேருந்து நிலையம் வந்தான். அவன் யூகித்தது போல் அவனுக்கு முன்னரே அங்கு வந்து அமர்ந்திருந்தாள் யாழினி.
“என்னாச்சு? வீட்ல பிரச்சனையா?” என்று சுத்தி வளைக்காது கேள்வி எழுப்பினான்.
பதில் சொல்லாது அவள் இருக்கையை சுட்டிக்காட்ட, இடைவெளி விட்டு அவள் அருகில் அமர்ந்தவன், “பொண்ணு பார்க்க வந்தாங்களா? என்னாச்சு?” என்க,