நளன் அவன் மடிக்கணிணியுடன் அவன் பால்கணியில் அமர்ந்து நேத்ராவைத் தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்தான் சமூக வலைத்தளங்களில்…
“ஹே… வனிதா போன எடுக்க இவ்வளவு நேரமா, என்ன டி பண்ற” என்ற நேத்ராவிற்கு,
“பேசுவ ம்மா பேசுவ… உனக்கென்ன, உங்க அம்மா நீ சாப்பிட்ட பிளேட்டை கூட உன்னைய கழுவ விட மாட்டாங்க, எனக்கு என்ன அப்படியா அம்மா கூட இருந்து அடுப்படிய ஒதுங்க வைக்க வேண்டாமா” என்ற வனிதாவிடம்,
“ஓஒ சரி சரி, சும்மா தான் கால் பண்ணேன்” என்றாள் நேத்ரா.
“சும்மா கால் பண்ற மூஞ்சியைப் பாரு, உன்னைய பத்தி எனக்குத் தெரியாதா? நீ சும்மா எல்லாம் கால் பண்ணியிருக்க மாட்ட, விஷயத்தை சொல்லு” என்றாள் வனிதா.
நுனி நாக்கைத் வெளியே துருத்தி லேசாகக் கடித்தவள் “அது… அதுவந்து… நம்ம நளன் சார் இருக்காருல்ல…” என்று இழுத்தவளிடம்,
“என்னது நம்ம்ம்ம நளன் சாரா, என்ன டி பேச்செல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு, என்ன விஷயம்” என்ற வனிதாவிடம்,
இன்று நளன் ட்ரோப் செய்ததை விளக்கியவள் “ஆனா ரொம்ப நல்லவரு டி, எனக்கு எவ்வளவு ஹெல்ப் பண்றாரு தெரியுமா” என்றாள் நேத்ரா.
“ஓ அப்படி போகுதா கதை, அப்போ சரிதான், சரி… உனக்கு அவரை புடிச்சிருக்கா” என்ற வனிதாவிடம்,
“ஹே நீ நினைக்கிற மாதிரில்லாம் ஒன்னும் இல்லை, போ டி சும்மா உன்கிட்ட சொல்லணுன்னு தோணுச்சு அதான் சொன்னேன், நான் வச்சிடுறேன்” என்றவள் வனிதாவின் பேச்சை கேட்காமல் அழைப்பை துண்டித்திருந்தாள் வெட்கப்புன்னகை உதட்டில் தவழ.
போனை அணைத்தவள், படுத்துக் கொண்டே அவள் வலைதளத்தைப் பார்த்துக்கொண்டிருக்க சட்டென்று வந்த பிரெண்ட் ரிக்குவெஸ்ட்டை கவனித்தவள் எழுந்து அமர்ந்தாள்.
நளன் கார்த்திகேயன் என்ற பெயரை தாங்கி வந்த அந்த பிரெண்ட் ரிக்குவெஸ்ட்டை படபடக்கும் மனதுடன் பார்த்தவள் சிறிதும் யோசிக்காமல் வேகமாக அக்செப்ட் செய்தாள்.
வலைத்தளங்களில் நேத்ராவின் பெயரைத் தேடியவன் பல நேத்ராக்கள் இருக்க, இறுதியாக அவள் படித்த அவர்கள் கல்லூரியின் வலைதளத்தில் அவளைக் கண்டுபிடித்தான் நளன்,
கண்டுபிடித்தவன் பிரெண்ட் ரிக்குவெஸ்ட் பட்டனை கிளிக் செய்துவிட்டு அவள் முகநூலை ஆராய்ந்து கொண்டிருந்தான்.
அதிக புகைப்படங்கள் இல்லாவிடினும் சில புகைப்படங்களில் அவளை பார்த்தவன், அவளை ரசித்துக் கொண்டிருந்த வேளை,
“உன் அழகை – எவ்வாறு
உரைப்பது! – இயலவில்லை
உணர்கிறேன்! – என் தூய
உணர்வுகளில் நீயாக”
அவன் ரிக்குவெஸ்ட் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கான அறிவிப்பு வரவும் சந்தோஷத்தில் எழுந்து ஆடத் தோன்றிய மனதை அடக்கியவன், சாட் பாக்சை ஓப்பேன் செய்தான்…
அதில் அவள் ஆன்லைனில் இருக்கவும், “ஹாய் நேத்ரா” என்று வேகமாக டைப் செய்தான்.
அவள் பதிலுக்காக காத்திருந்த ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகங்களாக கழிய “ஹாய்…” என்று வந்த அவளது பதிலில் யா ஹூ… என்று கத்தியேவிட்டான் நளன்.
“டேய் ஏன் டா இப்படி பண்ற” என்ற வினோத்தின் முனகலை டீலில் விட்டவன்,
“தூங்கலையா” என்று டைப் செய்தான்.
“ம்ம் இனிமே தான், நீங்க?” என்று பதில் வரவும், சந்தோசம் தாள முடியவில்லை நளனுக்கு. இங்கு நேத்ராவுக்கும் அதே நிலை தான்.
இப்படியே சாட்டில் நளனும் நேத்ராவும் அவர்கள் நட்பை ஆன்லைனில் பேசி வளர்த்துக் கொண்டிருக்க, ஒரு நாள் நேத்ரா அவள் குடும்பத்தில் நடக்கும் திருமண விழாவிற்கு சென்றிருக்க அன்று அவளால் நளனின் சாட்டை ஏற்க முடியவில்லை.
விடுப்பு முடிந்து அடுத்த நாள் அவள் ஆபீசில் இருக்கும் போது வீடியோ கால் செய்தான் நளன். இதுவரை பேசிய நாட்களில் நளன் எப்போதும் சேட் மட்டும் தான் செய்வான். போனில் கூட பேசியதில்லை.
நளன் கால் செய்யவும் அதுவும் வீடியோ கால் செய்யவும் இதயம் படபடக்க அதை கட் செய்தவள். வேகமாக நளனுக்கு டைப் செய்தாள்.
“ஏதாவது முக்கியமான விஷயமா?” என்ற செய்தி வரவும், கோபமடைந்தான் நளன்.
எப்போதும் பேசும் நேரத்திற்கு நேத்ராவிற்கு சாட் செய்தவன், அவள் ஆன்லைனில் இல்லாமல் இருக்கவும், மேலும் அவன் அனுப்பிய செய்தி சென்றடையாமல் இருக்கவும், நளனால் அவனது அன்றாட வேலையை எப்போதும் போல் செய்ய முடியவில்லை.
அவள் வெளியூர் சென்றிருப்பது தெரிந்திருந்தும், அவனால் அந்த நிகழ்வை ஏற்றுக்கொள்ள முடியவில்லை
அன்று முழுவதும் வீட்டிலும் அலுவலகத்திலும் அவன் இயலாமையைக் கோபமாக வெளிக்காட்டியவன், மறுநாள் காலை நேத்ராவிற்கு வீடியோ கால் செய்திருந்தான்.
நளனின் வீடியோ காலை கட் செய்த நேத்ரா அவனுக்கு “ஏதாவது முக்கியமான விஷயமா?” என்று செய்தி அனுப்பவும்,
“ஐ வாண்ட் டு மீட் யூ நவ்” என்று செய்தி அனுப்பினான்.
“நளன் ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க, நான் நேத்தும் லீவு, இன்னைக்கு கண்டிப்பா என்னால பெர்மிஸ்ஸன் கூட போட முடியாது” என்றாள்.
“…………” நளன் பதில் ஏதும் அனுப்பாமல் இருக்கவும்,
“ப்ளீஸ்… என்று கெஞ்சியவள், நளனின் கோபம் புரிந்து பின் ஓகே இன்னைக்கு ஈவினிங் உங்களுக்காக நான் 2 ஹவர்ஸ் பெர்மிஸ்ஸன் போட்டுட்டு வரேன், 5ஓ கிளாக் ஓகே வா” எனவும்,
“ஓகே” என்று மட்டும் அனுப்பியவன் சாட்டிலிருந்து வெளியேறியிருந்தான்.
“ஏன் இவ்வளவு கோபமா இருக்காங்கன்னு தெரியலையே, நாம ஊருக்கு போறத சொல்லீட்டு தானே போனோம், சரி ஈவினிங் பாக்கலாம்” என்றவள் அவள் வேலையில் மூழ்கினாள்.
சரியாக ஐந்து மணிக்கு நளனுக்கு சாட் செய்தவள் அவள் அலுவலகத்திலிருந்து கிளம்பப்போவதாகக் கூறவும்,
“ஐ ஆம் வெயிட்டிங் அவுட்சைட்” என்ற அவனது பதிலில் “அதுக்குள்ளே வந்துட்டாங்களா” என்று வேகமாக வெளியேறினாள்.