KUK- 11
சூர்யாவும், நவீனும் அவனை எழுப்ப முயன்று சோர்ந்து விட்டனர். அவன் அந்த அளவுக்கு குடித்து இருந்தான். கடைசி முயற்சியாக அவன் மூக்கில் பலமாக ஒரு குத்துவிட்டான் சூர்யா.
“டேய் மச்சான் செத்துகித்து போயிறாமடா…. கொலை கேசு ஆகிரும்” பயந்து போய் நவீன் சொன்னான்.
சூர்யாவின் அந்த குத்து வேலை செய்தது. கடகடவென மூக்கில் ரத்தம் வர வலியில் கண் விழித்தான். அவனை அப்படியே கார் இருக்கும் இடத்திற்கு இழுத்து சென்றனர்.
கண் விழித்தவன் தன் முன்பு இரண்டு பேர் கொலை வெறியில் நிற்பதை பார்த்து அடித்த போதை இறங்க நழுவி ஓட பார்த்தான்.
அவனை ஒரே தாவலில் பிடித்த சூர்யா கை இரண்டையும் பின்னால் வளைத்தான்.
“அய்யோ அம்மா…. கை வலிக்…குது விடு…டா” வலியில் கத்தினான்.
தன் காலை அவன் காலில் வைத்து அழுத்திய சூர்யா “சொல்லுடா நேற்று நைட்டு எதுக்கு பெரிய வீட்டுக்கு வந்த?? எதை திருடிட்டு போன” என்று கேட்டான்.
உடல் முழுவதும் வலி எடுக்க “நா..ன் எந்த பொருளை…யும் எடுக்க வரல… ஸ்டோர் ரூம் பூட்டை தான் உடை…க்க கூப்…ட்டாங்க அதுக்கு மட்டும்தான் கா…சு வாங்குனே…ன்” போதையிலும், வலியிலும் உளறினான்.
அவனது கன்னத்தை இறுக்கமாக பிடித்து “எந்த ஸ்டோர் ரூம்டா?” நவீன் கேட்டான்.
“ஆஆ… என..க்..கு தெரி…யல”
“மச்சான் இவன் போதையில இருக்கான். இப்போ நம்ம என்ன கேட்டாலும் பதில் சொல்ல மாட்டான்.” என்றான் நவீன்.
“அதுக்குனு இவனை இப்படியே விட சொல்றியா? யார் சொல்லி வந்தானு தெரியல? எதுக்கு பூட்டை உடைச்சானும் தெரியல.” யோசித்தவன்,
“மச்சான் இவன் போன் ஹிஸ்ட்ரியை பார்த்தா யாரு இவனுக்கு ஆர்டர் கொடுத்ததுனு தெரிஞ்சுரும்” என்று சூர்யா சொல்லி முடிக்கவும் அந்த மஞ்சள் சட்டைக்காரன் போன் ஒலித்தது.
அதை அட்டென்ட் செய்து லெளட் ஸ்பீக்கரில் போட்டான் நவீன். “டேய் இடும்பா நீ நேற்று நைட்டே ஊருக்கு கிளம்பிருவேனு சொன்ன… இப்போ குடிச்சிட்டு திருவிழால சுத்திட்டு இருக்க. ஒழுங்கு மரியாதையா ஊரு போய் சேர்ந்து தொலை. உன்னால எனக்கும், விக்கிக்கும் ப்ராபளம் வர கூடாது” பொரிந்து தள்ளினால் அனிக்கா.
“டேய் இடியட் நான் பேசிட்டே இருக்கேன் நீ திரும்பி ஒரு வார்த்தை பேசாம இருக்க… என்னடா பண்ணிட்டு இருக்க” என்றாள்.
போனை அவன் வாய் பக்கம் கொண்டு வந்தான் நவீன்… சூர்யா அந்த இடும்பன் கைகளை லேசாக வளைக்க வலியில் முனங்கினான்.
“ரஸ்கல் பதில் சொல்ல முடியாத அளவுக்கு ஃபுல் போதையில் இருக்க போல…. குடிச்சிட்டு இங்க விழுந்து கிடக்காம ஊர் போய் சேறு” போனை வைத்துவிட்டாள்.
“சூர்யா இந்த நாயிங்க தான் ஏதோ ப்ளான் போட்டு இருக்காங்க. ஆனால் நம்ம வீட்ல மாடியில மட்டும் மூணு ஸ்டோர் ரூம் இருக்கேடா அதுல இவன் எதை சொல்றானு தெரியலையடா” என்றான் நவீன்.
“நவீன் இவனை மோட்டர் ரூம்ல அடைத்து வை. காலையில் போதை தெளிந்ததும் அங்கிள் கிட்ட ஆதாரத்திற்கு இவனை காட்டனும்.” என்றவன் வீட்டை நோக்கி காரை விரைந்து ஓட்டினான்.
“சூர்யா அதான் இவனை பிடிச்சாச்சுல அப்புறம் எதுக்கு டென்சனா இருக்க… வீட்ல எந்த பொருள் காணாம போனாலும் கண்டுபிடிக்கலாம். கொஞ்சம் மெதுவா போடா” நவீனுக்கு அவனது அவசரம் ஏன் என்று புரியவில்லை.
“இல்லை மச்சான் மனசு ஏதோ ஒரு மாதிரி இருக்கு. கோவில் பூஜை முடிச்சிட்டு பெரியவுங்க வர அரைமணி நேரம் ஆகும். வீட்டுக்கு போய் எந்த ஸ்டோர் ரூம்னு பார்க்கனும்” என்றவன் ஒரு நிலையில் இல்லை. பதட்டமாகவே இருந்தான்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் கார் வீட்டு போர்ட்டிக்கோவில் வந்து நின்றது. கார் வந்ததும் கோவிலுக்கு போனவங்க திரும்பி வந்து விட்டார்கள் என்று நினைத்து ‘மலர் உன் மானமே போக போகுது… உன்னை பார்த்து உன் அத்தான் எப்படி துடிக்கிறானு நானும் பார்க்கிறேன்’ ஆவலுடன் வெளியே வந்தாள்.
நவீன் யாரையோ இழுத்து செல்வது தெரிந்தது, ‘இவன் எதுக்கு இப்போ இங்க வந்தான்’ யோசித்தவளின் முன் சூர்யா வந்து நின்றான். வீடு இருட்டாக இருப்பதை அறிந்தவன் வெளியே சென்று ஆஃப் பண்ண மெயின் சுவிட்சை போட்டு விட்டான்.
இவர்கள் இருவரையும் அவள் எதிர்பார்க்கவில்லை என்பது அவளது திகைத்த முழியிலே தெரிந்தது. “அந்த இடும்பனை எதுக்கு இங்கு வர வச்சிங்க” சுற்றி வளைக்காமல் நேரடியாகவே கேள்விக்கு வந்தான்.
சூர்யாவின் கேள்வி இன்னும் திகைப்பை கொடுக்க செல்போனை இருகையால் பொத்தி மலங்க, மலங்க விழித்தாள், அவளது பார்வை அடிக்கடி மேலே சென்று வருவதை கவனித்தவன் அவள் அறியா வண்ணம் மேல் அறைகளை பார்த்தான்.
மலர் ரூம் நோக்கி அவள் பார்வை செல்வதை கவனித்தவன் இதயம் வேகமாக துடிக்க புயலென அவள் அருகில் வந்தவன் அனிக்காவின் கழுத்தை இறுக்கமாக பிடித்துவிட்டான்.
“ஏய் உன் தம்பியை எங்க?? கோவிலையும் அவனை காணும். சொல்லு உன் தம்பி மலருக்கு எதிரா ஏதாவது செய்ய போறானா?? சொல்லுடி” அவள் கழுத்து எழும்புகள் நொருங்கும்படி பிடித்தான்.
அதற்குள் மலர் அறையில் ஏதோ விழும் சத்தம் கேட்க. அனிக்காவை ஒரே பிடியில் தள்ளியவன் இரண்டு படிகளால் தாவி மேலே சென்றான்.
மலர் அறைக்கதவை திறந்து உள்ளே பார்க்க கோபத்தில் நரம்புகள் புடைக்க விக்கியை இழுத்து பளார் என்று ஒரு அறை விட்டான். சூர்யா விட்ட அறையில் தலை சுற்ற, கண்கள் சொருகி கீழே விழுந்தான் விக்கி.
மலர் சத்தம் கேட்டு உள்ளே வந்ததும் கரென்ட்டை அனிக்கா கட் பண்ண பக்கத்து அறையில் காத்து இருந்த நவீன் அவள் அறைக்கு வந்தான்.
திரும்பி பார்த்தவள் இருட்டில் ஒரு உருவம் தன்னை நோக்கி வருவதை உணர்ந்தவள் பயத்தில் மயங்கி சரிந்து விட்டாள். சற்று மயக்கம் தெளிந்து கத்த வாய் திறக்கவும் விக்கி ஓடி வந்து அவள் வாயை பொத்தினான்.
“ஏய்!, சத்தம் போட்டு காரியத்தை கெடுத்து விடாதே. ஹ்ம்ம் நீ என்னதான் முயற்சி பண்ணாலும் ஒருத்தரும் வர மாட்டாங்க. உன்னை சும்மா பார்த்ததுக்கே உன் அத்தான் அப்படி துடித்தான். நம்ம இரண்டு பேரையும் ஒரே ரூம்ல எல்லாரும் பார்த்தாங்கனா அடுத்த நடக்க வேண்டியது என்னனு உனக்கே தெரியும்” கண்களில் ஒரு வெறியுடன் சொன்னவனை பார்த்தவளுக்கு பயம் உண்டாக, கண்களில் கண்ணீர் வடிய, உடல் சில்லிட்டு போனது மலருக்கு.
“சும்மா சொல்ல கூடாதுடி…. அப்படியே ஆளை கிறங்க அடிக்கிற அழகுடி நீ… இத்தனை நாள் அனிக்கா பின்னாடி சுத்திட்டு இருந்த உன் அத்தான் இப்போ என்ன உன் பின்னாடி சுத்துறான். இனி அவனால் முடியாது…….” என்றவன் பலமாக சிரித்தான்.
அதற்குள் அவளது அறை விளக்கு எறிய சற்று தையிரியம் வர தன் பலம் கொண்டு விக்கியை தள்ளிவிட்டவள் கால்கள் தல்லாட, அவன் பேசிய பேச்சில் பயத்தில் மூளை மரத்து போக தொப்பென கீழே விழுந்தாள்.
அந்த சத்தம் கேட்டுதான் சூர்யா மேலே வந்தான். வந்தவன் கண்ணில் மயங்கி கிடந்த மலர் தெரிய அவளுக்கு எதிரில் விக்கி விழுந்துகிடந்தான்.
தனது அடியில் கீழே விழுந்தவன்னை கழுத்தை பற்றி எழுப்பி “நீ இந்த அளவுக்கு வருவன்னு நான் எதிர்பார்க்காம விட்டத்து என்னோட தப்புடா. இனி உன் நிழல் கூட மலர் பக்கம் வர கூடாது. இங்க நடந்தது எதுவும் யாருக்கும் தெரிய கூடாது” என்றவன் அவனை ஸ்டோர் ரூமில் கொண்டு போட்டான்.
“காலை எழுந்து நீயா வெளியே வரனும் உன் மேலே யாருக்கும் எந்த சந்தேகமும் வர கூடாது. உன்னை மாட்டி விட எனக்கு ஒரு நொடி ஆகாது….. ஆனால் உன் கீழ் தரமான வேலையால் மலர் பெயர் மற்றவர்கள் வாயில் அரைபடுவதை என்னால் அனுமதிக்க முடியாது. இதுக்கு மேலையும் ஸ்மார்ட்டா ஏதாவது செஞ்ச அந்த இடும்பன் என்கிட்ட தான் இருக்கான்…. ஒரு பொய் கேஸ் போட்டு வாழ் நாள் முழுவதும் ஜெயிலில் கழி திங்க வெச்சிருவேன்” எச்சரித்தவன் மலர் ரூமிற்கு சென்றுவிட்டான்.
அனிக்கா ஒருவாறு தடுமாறி நிற்க… கோவிலில் இருந்து பெரியவர்கள் வர சரியாக இருந்தது. கூடவே நவீனும் அங்கு வந்தான்.
“என்ன அனிக்கா நீ எப்போ வந்த??? மலர் உன் கூடையா வந்தா… கோவிலில் எங்கும் அவளை காணும்…” சுஜா கேட்ட்டுகிட்டு இருக்கும் பொழுதே, மாடியில் சூர்யாவின் சத்தம் கேட்க எல்லோரும் சத்தம் கேட்ட திசையை நோக்கி சென்றனர்.
சங்கர் கதவை திறக்க சூர்யா மயங்கி இருந்த மலரை தூக்கி கட்டிலில் கிடத்தினான். அங்கு அவர்கள் குடும்பம் மட்டும் இருந்திருந்தால் இப்பொழுது கண்ட காட்சி பெரிய விக்ஷயமாக தெரிந்து இருக்காது.
ஆனால், அங்கு திருவிழாவிற்குனு தூரத்து உறவுகள் வந்து இருக்க சங்கர், கங்காவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வந்தவர்கள் வாய்க்கு வந்ததை ஏதோ பேச அது எதுவும் பாதிக்காதபடி வெளியே வந்த சூர்யா மலரின் ரூம்மை பூட்டினான்.
“போதும் நிறுத்துங்கள்” சூர்யாவின் கர்ஜனையில் வாயை இறுக முடி சொந்தங்கள் முன் “என்னையும், மலரையும் பற்றி என் அப்பா, அம்மாக்கு நல்லா தெரியும்…. தேவையில்லாத ரூமரை பேசி சாதாரண விக்ஷயத்தை பெருசு பண்ணாதிங்க” என்றவன் கீழே ஹாலிற்கு சென்று சோபாவில் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.
அருகில் தன் அன்னை வந்து நிற்கவும், நிமிர்ந்து பார்த்தவன் “அம்மா, நீ உன் புள்ளைங்களை சந்தேக படலையே??” குரல் கலங்கி போய் கேட்டான்.
அவன் தலைமுடியை கோதியவள், சுற்றி நின்ற அனைவரையும் பார்த்து “என் புள்ளைங்க மேலே எனக்கு நம்பிக்கை இருக்கு,… அந்த அளவுக்கு தரம் தாழ்ந்து அவங்களை நான் வளர்க்கல…. நவீன் நீ சூர்யா கூட இன்னைக்கு ரெஸ்ட் எடு” என்றவள் திரும்பி எல்லாரையும் பார்க்க ஒவ்வொருவராக கலைந்து சென்றனர்.
தூக்கம் தெளிந்த பாட்டியின் காதில் இவர்கள் பேச்சு கேட்க மறுபடி மூச்சு திணறல் வர பக்கத்தில் மேஜை மீது இருந்த கண்ணாடி டம்பளரை தள்ளி விட்டார். சத்தத்தில் கலைந்த கூட்டம் பாட்டி அறைக்கு சென்றது.
“பாட்டி” என கத்திக்கொண்டு அருகில் சென்ற சூர்யா அவரின் மூச்சு சீராக இல்லை என்பதை உணர்ந்து தன் தந்தையிடம் திரும்பி “அப்பா பாட்டியை உடனே ஹாஸ்பிட்டலில் சேர்க்கனும்” என்றவன் நொடியும் தாமதிக்காது அவரை தூக்கி கொண்டு காரில் ஏறினான்.
சங்கர் தன் நண்பனிடம் இங்கு இருந்து பார்த்துக்க சொல்லிவிட்டு, தன் மகனுடன் சென்று விட்டார். கூட வந்த கங்காவை மலரை பார்த்துக்க சொல்லி வீட்டிலையே விட்டு வந்தார்.
பாட்டியை சேர்த்துவிட்டு சோர்ந்து போய் அமர்ந்து இருந்தவனை நவீன் ஆதரவாக அணைத்துகொண்டான். ஒரு ராத்திரியில் என்னவெல்லாம் நடந்து விட்டது. தான் மட்டும் சரியான நேரத்தில் மலர் இருக்கும் இடத்திற்கு சென்று இருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும் என்று யோசிக்கவே அவனுக்கு பயமாக இருந்தது.
நவீனுக்கு அதிக குழப்பம் இருந்தாலும் இப்போதைக்கு எதுவும் கேட்க அவன் விரும்பவில்லை. சூர்யாவிற்கு ஆதரவாக பக்கத்தில் இருந்தான்.
சற்று நேரத்தில் தெளிந்த சூர்யா வீட்டில் நடந்த எல்லாவற்றையும், விக்கி, அனிக்கா மீது உள்ள சந்தேகத்தையும் சொல்லி முடித்தான.
சூர்யா சொல்வதை அனைத்தும் கேட்டவன் “நான் நினைத்தது சரி தான்” கடித்த பற்களுக்கு இடையில் வார்த்தையை துப்பினான்.
இங்கு வீட்டில் விக்கி, அனிக்கா தவிர மற்ற அனைவரும் மலர் அறையில் இருந்தனர். அனிக்கா ரூமிற்கு சென்று அடைந்து கொண்டவள் அப்படியே படுத்து விட்டாள். அவளுக்கு மறுநாள் சூர்யா, நவீன் இருவரும் என்ன செய்ய போகிறார்களோ என்று நினைக்கவே பயத்தில் படுத்து இருந்தாள்.
‘காலையில் எழுந்ததும் ஊருக்கு கிளம்பி போயிறனும். விக்கி இங்கயே கிடந்து சாகட்டும். இப்போ நான் பண்ண விக்ஷயம் மட்டும் அம்மாக்கு தெரிஞ்சிச்சு என்னை கொன்னு போட்றுவாங்க. ஏற்கனவே அப்பா சொல் பேச்சு ஆடுறேனு திட்டு விழும்….. இதுவும் தெரிந்தால் எனக்கு சாமாதிதான்’ தனக்குள் சொன்னவள் ஒருவழியாக தூங்கிவிட்டாள்.
இங்கு மருத்துவமனையில், மருத்துவர் வந்து பாட்டிக்கு இப்போ பரவாயில்லை என்றதும் தான் கொஞ்சம் நிம்மதி வந்தது அனைவருக்கும்.
உள்ளே பாட்டியை பார்க்க சென்றவனை ‘இங்கு வா’ சோர்வாக கை அசைத்து அழைத்தார். தன் தந்தையையும், நண்பனையும் பார்த்தவன் மெதுவாக பாட்டியின் அருகில் சென்று அவரின் கையை பற்றி கொண்டு “பாட்டி, இப்போ எதுவும் பேச வேண்டாம். உங்கள் உடம்பு குணமாகட்டும்” கனிவோடு சொன்னான் சூர்யா.
அவனின் பேச்சில் கண்கள் சொருக புன்னகைத்தவர்…. சூர்யாவின் கைகளை அழுத்தமாக பற்றி கொண்டு “உன…க்கும், மலருக்கும் நாளை கோ…விலில் வைத்து திரு….மணம் நடக்க வேண்டும்” திக்கி தினறி சொன்னவரின் பார்வை சங்கரை நோக்கியது,
அவரின் பார்வையை உணர்ந்தவர் “எனக்கு இதில் முழு சம்மதம் பாட்டி. வாழ போறவங்க சம்மதம்தான் இப்போம் முக்கியம்” என்றவர் சூர்யாவையும், நவீனையும் பார்த்தார்.
“எனக்கு டபுள் ஓகே அங்கிள்” மகிழ்ச்சியுடன் சொன்னான் நவீன். அவனுக்கு நன்கு புரிந்தது ‘இந்த மாதிரி இக்கட்டான நிலையில் சூர்யாவை நிறுத்தினால் தான் அவன் இதற்கு சம்மதிப்பான்…. இல்லையென்றால் எனக்கு யோசிக்க நேரம் வேண்டும் என்று பினாத்தி கொண்டு இருப்பான்’ என்று நினைத்தான்.
ஆனால், சூர்யா தான் விழித்துக்கொண்டு இருந்தான்.. அவனின் முகத்தையே பார்த்து கொண்டு இருந்த தன் பாட்டியிடம் இதழோரம் புன்னகை சிந்த “உங்கள் பேத்திக்கு சம்மதம் என்றால்…. எனக்கும் சம்மதம் பாட்டி” என்று அவன் சம்மதத்தை தெரிவித்தான்.
மலரும்…….