“நீங்க என்னை எப்படி பாத்தீங்களோ தெரியாது. நான் எப்பவுமே உங்களை கூடப்பிறந்த அண்ணனை பார்ப்பது போல தான் பார்த்தேன். நீங்க மனம் மாறி என்னை உங்க தங்கச்சியா ஏத்துக்கணும்னு
ஆசைப்பட்டேனே, தவிர நீங்க கெட்டு போகணும்னு நான் எப்பவுமே நெனைச்சது கிடையாது.” என்றாள் வெண்மதி.
“அது எனக்கு நல்லாவே தெரியும் வெண்மதி. அதனாலதான் நீ முன்னேறி இருக்க. நான் விழுந்திருக்கிறேன்.” என்றான் வருத்தமாக.
“சரி , இப்ப கூட எதுவும் கெட்டுப் போய்டல உங்களுக்கு வேலை போனது கூட ஒரு நல்லதுக்கு தான். எங்க கம்பெனியை விற்பதாக இருக்காங்க. அதை நீங்க வாங்கிடுங்க. பெரியப்பா பேர்ல இருக்கிற நிலத்தின் மேல லோன் போட்டு இந்த கம்பெனியை நீங்க வாங்கலாம். வாங்கினதுக்கு அப்புறம் உங்களுக்கு ஓகேன்னா, நாம ரெண்டு பேரும் சேர்ந்து அந்த கம்பெனியை நடத்தலாம். இப்போ அந்த கம்பெனி நல்ல நிலைமையில இருக்கு. நாம ரெண்டு பேரும் சேர்ந்து உழைச்சா அந்த கம்பெனியை நாம இந்த ஊர்ல ஒரு பெரிய கம்பெனியா கொண்டுவரமுடியும். என்ன சொல்றீங்க? “ என்று கேட்டபடி அவன் முகத்தை பார்த்தாள்.
அவன் சற்று தெளிந்தவனாக. “இப்ப கூட என்னோட நல்லதுக்காக யோசிக்கிற. உன்னோட மனசு யாருக்கும் வராது. சரி. அப்பாகிட்ட பேசி அந்த கம்பெனியை வாங்கலாம். ஆனா ஒரு கண்டிஷன். அதை நான் உன் பேர்ல வாங்க போறேன். ‘மதி சாப்ட்வேர்’ எப்படி இருக்கு பெயர்? நீ சொன்னபடியே நாம ரெண்டு பேரும் சேர்ந்து நடத்தலாம். ஓகேவா?” என்றான் மலர்ந்த முகத்துடன்.
“அண்ணா” என்று நம்பமுடியாமல் பார்த்தாள் வெண்மதி.
“நீங்களா பேசுறீங்க? ஆமாம் நான் தான் பேசுறேன். உண்மைய தான் சொல்றேன். இந்த வயசுல உனக்கு இருக்கிற தன்னம்பிக்கை, விடா முயற்சி பக்குவம், திறமை எல்லாம் என்கிட்ட கூட இல்லை. அதனால உன் பேர்ல வாங்குறது தான் சரியா இருக்கும். உன் கூட நான் இந்த கம்பெனியை நடத்த போறேன்னு சொன்னா, அப்பா இந்த கம்பெனியை வாங்க ஒத்துக் கொள்வார். ஏன்னா அவருக்கு உன் திறமை மேல நம்பிக்கை இருக்கு.” என்றான்.
“அது சரி அண்ணா. ஆனா அந்த போட்டோ லெட்டர் அனுப்பினது யாருன்னு தெரியலையே” என்று சத்தமாக யோசித்தாள் வெண்மதி.
“அந்த போட்டோஸ், லெட்டர் உங்க ஆபீஸ்க்கு அனுப்பினது நான்தான்.” என்ற குரல் கேட்க இருவரும் திரும்பினர்.
அங்கு லலிதாவின் அண்ணன் ராகவன் நின்று கொண்டிருந்தார். கதிர்வேலனுக்கு புரிந்துவிட்டது.
வெண்மதிக்கு தான் ஆச்சரியமாக இருந்தது.
ராகவன் அவர்களிடம் வந்தார். “என்னை மன்னிச்சிடு மா நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன். எனக்கு இந்த வீட்டு மேல இருந்து பேராசை தான்எல்லாத்துக்கும் காரணம். நாளைக்கு என் பொண்ணு வைஷ்ணவி இங்கே ராணி மாதிரி வாழனும்னு பேராசை பட்டு இதையெல்லாம் பண்ணிட்டேன். மத்தபடி அந்த லெட்டருக்கும் கதிர்வேலனுக்கும் லலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை மன்னிச்சிடு மா.” என்று கெஞ்சும் குரலில் கேட்டார் அவர்.
“நீங்களா இப்படி பண்ணீங்க? உங்க பொண்ணை பத்தி இந்த மாதிரி யாராவது பேசினாங்கனா உங்களுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்?”
“தப்புதான். தப்புதான் வெண்மதி. நான் பண்ணது தப்புதான். இதையெல்லாம் யோசிக்காம பண்ணிட்டேன்.
என் தங்கச்சி மேல இருந்த பாசத்தாலதான் நான் இவ்வளவும் பண்ணிட்டேன். லலிதாவுக்கு லட்சுமி மேலே இருந்த பொறாமையால் லட்சுமியை தனக்கு கீழே வச்சுக்கணும்னு ஆசைப்பட்டா. அவளின் ஆசையை நிறைவேத்த நான் இந்த மாதிரி தப்பா யோசிச்சி தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடு மா.” என்றார் மீண்டும் கெஞ்சும் குரலில்.
“நீங்களும் சரி கதிர்வேலனும் சரி. பெரியம்மா மேல இருந்த பாசத்தால் தான் இதை எல்லாத்தையும் செஞ்சன்னு சொல்றீங்க.
கதிரை பொருத்தவரை பெரியம்மா அவனுக்கு அம்மா. சின்ன வயசுல இருந்தே அவனுக்கு தப்பு தப்பா அட்வைஸ் பண்ணி அவன் மனசை அவங்க மாத்தி இருக்காங்க. அதனால அவன் மேல பெருசா தப்பு சொல்ல முடியாது. அவனுக்கு அம்மா மேல இருந்த பாசத்தால் அம்மா சொன்னதை எல்லாத்தையும் அப்படியே நம்பி அம்மா சொல்றதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு எல்லாத்தையும் பண்ணியிருக்கான். இப்போகூட அவன் அதே அம்மாவை நான் காப்பாற்றியதால் மட்டும்தான் என் மேலே இருந்த வெறுப்பு, கோபம், பழி உணர்ச்சி எல்லாம் மாறிப் போய் என்னை ஒரு மனுஷியாய் பார்க்கிறான். அதுவுமில்லாம கதிரும் சரி பெரியம்மாவும் சரி என்னை வளர விடாம பண்ணினார்களே தவிர அழிக்க நினைத்தது கிடையாது. அவங்களுக்கு தேவையெல்லாம் இந்த வீடும் இந்த வீட்டின் அதிகாரமும் தான்.ஆனால் நீங்க அப்படி கிடையாது. என்னோட கேரக்டரை ஸ்பாயில் பண்ண நினைச்சு இருக்கீங்க.
உண்மையாவே உங்களுக்கு அவங்க மேல பாசம் இருந்து இருந்தா அவங்க தப்பா யோசிக்கும்போது அவங்களை கரெக்ட் பண்ணியிருக்கணும். அதை விட்டுட்டு அவங்க பண்ற தப்புக்கு சப்போர்ட் பண்ணி அவங்கள இன்னும் மேல மேல தப்பு பண்ண வச்சு அவங்களுக்கு கெட்ட வழி காமிச்சு இருக்கக்கூடாது.
ஒரு பொறுப்பான அண்ணன், தங்கச்சி தப்பா யோசிச்சா அவங்களுக்கு நல்ல புத்தி சொல்லி நல்ல வழியை காட்டணும். ஆனா நீங்க உங்களுக்கு இருந்த சொத்து ஆசையால உங்க தங்கச்சி மூலமா இந்த வீட்டை உங்க பொண்ணுக்கு சொந்தமாக்கிக்க நினைச்சு இருக்கீங்க. இது எல்லாத்துக்குமே மூல காரணம் உங்க சொத்து ஆசைதான்.”
“ஆமாம் நீ சொல்றது உண்மைதான் வெண்மதி. எல்லாத்துக்கும் மூல காரணம் நான்தான். ஓரகத்தி மீது போட்டி, பொறாமை வருவது சகஜம்தான். அதை என் தங்கச்சி என்கிட்ட வந்து சொன்ன போது அவளுக்கு நல்ல புத்தி சொல்லி திருத்தி நல்ல வழி காமிச்சி இருக்கணும். அதை விட்டுட்டு எனக்கு இந்த சொத்து மேல இருந்த ஆசையால லலிதாவுக்கு லட்சுமி மீது இருந்து போட்டி பொறாமையை தூண்டிவிட்டு இந்த சொத்தை அடைய நினைச்சது என் கெட்ட எண்ணம் தான். எப்பவுமே இந்த வீட்டு மேல எனக்கு ஒரு கண் இருந்தது. இந்த வீடு மொத்தமும் என் மகளுக்கு வேணும்னு எனக்கு இருந்த கெட்ட புத்தியால இப்படி எல்லாம் பண்ணிட்டேன். உனக்கு இந்த வயசுல இருக்கிற பக்குவமும் பெரிய மனசும் எனக்கு இல்லாமல் போயிடுச்சு. அதனால வந்ததுதான் எல்லா பிரச்சனையும். ஆனா நான் உனக்கு ஒரு உறுதி கொடுக்கிறேன். இனிமேல் நான் இந்த வீட்டு மேல ஆசை பட்டு உனக்கு மட்டும் இல்லை யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டேன். இனிமேலும் எல்லாமே எனக்கு வேணும்னு சுயநலமா இருக்கமாட்டேன். என்னை நம்பு என் தங்கையை தாண்டி எனக்கு எதுவும் பெரிதில்லை.” என்றார் தாழ்ந்த குரலில்.
காலை எழுந்த ராகவன் சைலன்ட் மோடில் இருந்த செல்போனில் கிருஷ்ணனின் மிஸ்டு காலை பார்த்து கிருஷ்ணனை தொடர்புக்கொண்டு லலிதாவுக்கு நேர இருந்த ஆபத்தையும் அந்த ஆபத்திலிருந்து வெண்மதி அவளுடைய உயிரை பணயம் வைத்து காப்பாற்றியதையும் தெரிந்துகொண்டு
லலிதாவை நேரில் பார்க்க அங்கு விரைந்து வந்தார். லலிதா உறங்கிக் கொண்டிருந்ததால் கதிர்வேலனை தேடி வந்த அவர் கதிர்வேலன், வெண்மதி பேசிக்கொண்டிருந்ததை கேட்டார்.
அவர்களது பேச்சிலிருந்து லலிதா கதிர்வேலன் மனம் மாறி வெண்மதியை மனதார ஏற்றுக் கொண்டதை புரிந்துகொண்டார். இனிமேலும் தன்னுடைய சொத்து ஆசையினால் தங்கையின் வாழ்க்கையை வீணாக்க கூடாது என்று முடிவுக்கு வந்தார்.
வெண்மதி மீது இருந்த பகை உணர்ச்சியை மறந்து அவளை வீழ்த்த நினைத்து தீட்டியிருந்த திட்டங்களை கைவிட்டார். தவறை உணர்ந்தார். வெண்மதியிடம் மனதார மன்னிப்பு கேட்டு எல்லா பிரச்சனையையும் முடிக்க நினைத்தார்..
இவையெல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த கிருஷ்ணன் அங்கு வந்தார். ஆவேசமாக கதிர்வேலனின் கன்னத்தில் அறைந்தார்
“அப்பா என்னை மன்னிச்சிடுங்க. நான் நிறைய தப்பு பண்ணிட்டேன்.” என்று அனைத்தையும் கூறி மன்னிப்பு கேட்டான். எல்லாவற்றையும் கேட்ட கிருஷ்ணன் ராகவன் பக்கம் திரும்பி “நீயெல்லாம் ஒரு மனுஷனா? மரியாதையா போயிடு.” என்று கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையாக வெளியே போக சொன்னார்.
இராகவன் கூனிக் குறுகிப் போய் நின்றுகொண்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார்.
கதிர்வேலனை கிருஷ்ணன் மேலும் அடிக்க….
வெண்மதி அவரை தடுத்து
“ரெண்டு பேரும் இப்போ மாறிட்டாங்க. ப்ளீஸ் எனக்காக அவங்களை மன்னிச்சு விடுங்க பெரியப்பா.” என்று வெண்மதி கேட்டுக்கொண்டதற்கு இறங்கி அவர்களை எச்சரித்து விட்டார்.
தன் தந்தையை ஒத்த வயதுடைய ராகவன், அவளிடம் மனதார மன்னிப்பு கேட்டு நிற்பதை பார்த்த வெண்மதி மனம் இறங்கினாள். இனிமேலும் இவரால் அவளை எதுவும் செய்துவிட முடியாது என்று புரிந்து கொண்ட அவள் அவரை மன்னிக்க முடிவெடுத்தாள்.
“சரிங்க மாமா நான் எல்லாத்தையும் மறந்து விடுகிறேன். நாம இனிமே ஒத்துமையா சந்தோஷமா இருக்கலாம்.” என்றாள் புன்னகைத்தபடி.
இதைக்கேட்ட ராகவன் “ரொம்ப தேங்க்ஸ் வெண்மதி. உனக்கும் உங்க அப்பா அம்மா மாதிரியே பெரிய மனசு.” என்றார் மனதார.
“நீயும் கதிர்வேலனும் பேசிக்கொண்டிருந்ததை நான் கேட்டேன். உனக்கு நான் செஞ்ச பாவத்துக்கு பிராயச்சித்தமாக அந்த கம்பெனியை நானே உன் பேர்ல வாங்கி தரேன். இதை நீ ஏத்துக்கணும். அப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கும்.” என்று கெஞ்சியபடி அவளைப் பார்த்தார் ராகவன்.
கதிர்வேலன் “சரின்னு சொல்லு வெண்மதி” என்று இறங்கிய குரலில் கேட்க வெண்மதி “சரி. ஆனால் கடனா தான். நாங்க கூடிய சீக்கிரம் கடனை அடைத்து விடுவோம்.” என்றாள். இதனை கேட்ட ஆண்களின் முகம் மலர்ந்தது.
Epi 34
“சரி. நாம லலிதாவை பார்க்கலாம்.” என்று ராகவன் கூற
அவர் அறைக்கு சென்றனர்.
லலிதா அப்பொழுதுதான் எழுந்து குளித்து விட்டு வந்தார் .
முதலில் நுழைந்த கதிர்வேலன்
“அப்பாவுக்கு எல்லாமே தெரிஞ்சு போச்சு.” என்று லலிதாவின் அருகினில் சென்று கூற லலிதா நடு நடுங்கிக்கொண்டு கிருஷ்ணனை பார்த்தார்.
ஏற்கனவே பலகீனமாக இருந்த மனைவியை எதுவும் செய்யமுடியாமல் கிருஷ்ணன் லலிதாவை முறைத்தார்.
“ மன்னிச்சிடுங்க. இனிமேல் வெண்மதிக்கு மட்டுமில்லை யாருக்கும் எந்த கெடுதலும் செய்ய மாட்டேன். நான் எவ்வளவோ அவளையும் அவள் அம்மாவையும் கஷ்டப்படுத்தி இருந்தாலும் அதை எல்லாம் மனசுல வச்சிக்காம என்னை அவங்க கிட்ட இருந்து காப்பாத்திட்டா. உண்மையாவே உனக்கு பெரிய மனசு வெண்மதி.” என்று கைகூப்பி கிருஷ்ணன், வெண்மதி இருவரிடமும் மன்னிப்பு கேட்டார் லலிதா.
“சரி விடுங்க பெரியம்மா. நீங்க நல்லதும் பண்ணி இருக்கீங்க. ஸ்கூல் படிக்கும்போது என் படிப்புக்காக பண உதவி பண்ணி இருக்கீங்க. எப்போ நான் கேம்பஸ் இன்டர்வியவில் செலக்ட் ஆகிட்டேன்னு தெரிந்ததோ அப்போ இருந்து மாறிட்டீங்க. அதுவரைக்கும், அம்மாவை அதிகாரமா வேலை வாங்குவீர்களே தவிர வேற எந்த தொந்தரவும் எனக்கும் சரி அம்மாவுக்கும் சரி கொடுத்தது கிடையாது.
எல்லாத்துக்கும் மேல, அந்த ரெண்டு தடி பசங்க கிட்ட இருந்து என்னை காப்பாத்த அவங்களை அடிச்சிங்களே. நான் உங்களை இவ்வளவு நாளா தப்பா நினைச்சிட்டு இருந்தேன். நீங்க அடிப்படையில் நல்லவங்க. அதை நான் அங்க பார்த்தேன்.” என்றாள் வெண்மதி அவர் மீது இருந்த கோபம் தணிந்து.
கிருஷ்ணனும் வேறுவழியின்றி லலிதாவை மன்னித்தார்.
“லலிதா அடிப்படையில் நல்லவர்தான். வீட்டின் மீது இருந்த பேராசையும் அதிகார ஆசையும் அவரை இப்படி மாற்றி இருக்கு.” என்று மனைவிக்காக பரிந்து பேசினார்.
“ வெண்மதி கிட்ட மன்னிப்பு கேட்டீங்களா?” என்று லலிதா ராகவனை பார்த்து கேட்டார்.
“கேட்டுட்டேன்மா. எல்லாத்தையும் சொல்லி மன்னிப்பு கேட்டேன். அவளும் பெரிய மனசு பண்ணி . இனிமேலாவது நாம அவளை சந்தோஷப்படுத்தி பார்க்கலாம்.”
“கண்டிப்பா பண்ணலாம் அண்ணா.” என்றார் லலிதா உறுதியாக.