நீ நந்தினியவே கல்யாணம் பண்ணிக்கோ மாமா என்று சொல்லிவிட்டுச் சந்தியா கதிரின் பதிலுக்காகக் காத்திருக்க, கதிர் பதில் சொல்லாமலே கைப்பேசியை அணைத்துவிட்டான். சந்தியா சோர்வோடு திரும்ப அங்கே சித்தார்த் கண்களில் கனல் பொங்க நின்று கொண்டிருந்தான்.
சந்தியா “சித்து….” என்று அழைத்ததும், அவள் பேசுவதைக் கேட்க விரும்பாதவன் போல் சித்தார்த் அங்கிருந்து செல்ல, சந்தியா சோர்வோடு அங்கிருந்த இருக்கையில் அப்படியே உட்கார்ந்துவிட்டாள்.
சந்தியா உணவு நேரம் தாண்டியும் வகுப்பிற்கு வராததால், சித்தார்த் அவளைத் தேடிக்கொண்டு வந்தவன், அவள் ஓய்ந்து போய் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அவள் அருகில் சென்று உட்கார்ந்தான்.
சித்தார்த்தை பார்த்ததும் “வேற வழி தெரியாம தான் கதிர் மாமாக் கிட்ட அப்படிப் பேசினேன். பாவம் சித்து அவங்க, என்னால ரொம்பக் கஷ்டப்படுறாங்க. எங்க பெரிய மாமா இப்ப தான் உடம்பு கொஞ்சம் சரி ஆகிருக்கார். அவர் நல்லா இருக்கும் போதே, கதிர் மாமா கல்யாணத்தை எங்க அத்தை செய்திடனும்னு நினைக்கிறது நியாயம் தான….” என்றாள் கண்களில் கண்ணீருடன்.
சித்தார்த் அவள் சொன்னதுக்குப் பதில் சொல்லாமல் “நந்தினின்னு சொன்னியே அது யாரு…?” என்று கேட்டான்.
“அவ என்னோட ஃபரண்ட். உன்கிட்ட நான் முன்னாடியே சொல்லி இருக்கேன்? நானு, சித்ரா, நந்தினி மூன்று பேரும் ஒரே ஸ்கூல்ல தான் படிச்சோம்.” என்றாள்.
“அவளுக்கும், கதிருக்கும் என்ன சம்பந்தம்…?” என்று சித்தார்த் புரியாமல் பார்க்க, சந்தியா ஊரில் நடந்த அனைத்தையும் சொன்னாள்.
அவள் சொன்னதைப் பொறுமையாகக் கேட்ட சித்தார்த் “நந்தினிக்கு நீ கதிரை விரும்புறது தெரியாதா…” என்றான்.
“தெரியும்…” என்று சொன்ன சந்தியாவின் முகம் வெறுப்பைக் காட்டியது.
“நல்ல ஃபரண்ட்…” என்று சித்தார்த் கேலியாகச் சிரிக்க, சந்தியாவுக்கு அவமானமாக இருந்தது. ஆனால் இந்த அவமானம் எல்லாம் நந்தினிக்கு இல்லை. அவள் எப்போதும் போல் இருந்தாள்.
திருமணம் முடிந்த மூன்றாம் நாள் சோலையும், சித்ராவும் சினிமாவுக்குக் கிளம்பினர். சித்ராவின் மாமியார் “முதல் தடவை சேர்ந்து வெளிய போறீங்க. அதனால முதல்ல கோவிலுக்குப் போயிட்டு போங்க…” என்றார்.
அவர் சொல்படி இருவரும் கோவிலுக்குச் சென்றனர். சாமி கும்பிட்டுவிட்டு திரும்பி வரும் போது, நந்தினி கோவிலுக்குள் நுழைந்தாள். இவளை எப்படிப் பார்ப்பது என்று நினைத்துக்கொண்டிருந்த சித்ராவுக்கு, நந்தினியே எதிரில் வந்ததும், இன்னைக்கு இவளை விடுறேன்னா பாரு என்று நினைத்தவள், நந்தினியை பார்த்து புன்னகைத்தாள்.
நந்தினி “எப்படி இருக்கச் சித்ரா?”
“ரொம்ப நல்லா இருக்கேன் நந்தினி. என்னை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்ட என்னோட புருஷன் என்னை நல்லாவே பார்த்துக்கிறார்…”
“அப்படியா ரொம்பச் சந்தோஷம்…” என்று நந்தினி புன்னகைக்க,
நந்தினி எதற்கு என்று புரியாமல் பார்க்க, “நீ என்னை விட அழகு, நல்ல படிப்பு, நிறைய வசதி இருந்தும். உன்னை யாரும் விரும்பி பொண்ணு கேட்டு வரலையே…” என்றாள் பரிதாபப்படுவது போல்.
அவள் சொன்னதைக் கேட்ட நந்தினிக்கு சுருக்கென்று இருக்க, சித்ராவை பார்த்து முறைத்தவள் “என்ன பேச்செல்லாம் ஒரு மாதிரி
இருக்கு. உனக்குத் தெரியுமா என்னை யாரும் பெண் கேட்டு வரலைன்னு…” என்றாள் கோபமாக.
திகைத்து விழித்த நந்தினி “அது, அது வந்து. இப்பத்தான் அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கப் போறது இல்லையே. கதிர் எப்படியும் வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்கப் போறாங்க. ஏன் அது நானா இருக்கக் கூடாது.” என்றாள்.
அவளைப் பார்த்து இகழ்சியாகப் புன்னகைத்த சித்ரா “உன்னைப் பார்த்தா நிஜமாவே பாவமா இருக்கு நந்தினி. உன்னை கதிர் அண்ணன் வீட்ல வேண்டாம்னு சொன்னது உனக்குத் தெரியாதா….” என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டு திடுக்கிட்ட நந்தினி “நீ பொய் சொல்ற.” என்றாள்.
“நான் பொய் சொல்லலை, கதிர் அண்ணனுக்கும், சந்தியாவுக்கும் தான் கல்யாணம் நடக்கும். நீ வீணா உன் மனசுல ஆசைய வளர்த்துக்காத. நம்மை விரும்பி வர்றவங்களைக் கல்யாணம் செஞ்சா தான் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும். நீயும் எனக்குச் சந்தியாவைப் போலத் தான், சொல்லனும்னு தோனுச்சு சொல்லிட்டேன். பிறகு உன்னிஷ்டம்.” என்ற சித்ரா தன் கணவன் சோலையின் கையைப் பற்றியபடி கோவிலை விட்டு வெளியே செல்ல, நந்தினி அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
சித்ரா ஒரு சாதாரணப் புடவை மற்றும் ஒரு மெல்லிய செயின் தான் அணிந்து இருந்தாள். ஆளும் பார்ப்பதற்குச் சுமார் தான். ஆனால் அவள் முகம் பொலிவுடன் இருந்தது. சோலையிடம் எதோ பேசி சிரித்தபடி சென்றாள். அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்று பார்த்ததும் தெரிந்தது.
தனக்கும், கதிருக்கும் திருமணம் நடந்தால். கதிர் தன்னுடன் இப்படிப் பேசி சிரிப்பானா, தானும் இப்படிச் சந்தோஷமாக இருப்போமா என்று நந்தினிக்கே சந்தேகமாக இருந்தது.நந்தினி வீட்டிற்குச் சென்ற போது, அவள் அண்ணனும், அம்மாவும்பேசிக்கொண்டிருந்தனர்.
“என்ன டா இப்படிச் சொல்ற…? நம்ம நந்தினிய போய் யாரவது வேண்டாம்னு சொல்வாங்களா…”
“சொல்லிட்டாங்க ம்மா… கதிரோட அப்பா வாசுக்கிட்ட சொல்லி இருக்கார்.” என்றான் மகேஷ் ஆத்திரமாக.
“சரி விடு அவங்க கொடுத்து வச்சது அவ்வளவு தான்.” என்று அவன் அம்மா சாதாரணமாக எடுத்துக்கொள்ள, மகேஷால் அவ்வளவு எளிதாக விடமுடியவில்லை.
“நான் கதிர் கிட்ட பேசுறேன்.” என்றான்.
அவர்கள் பேசுவதைக் கேட்டபடி உள்ளே வந்த நந்தினி “வேண்டாம் அண்ணா இதை இதோட விட்டுடு…” என்றாள்.
கதிர் தன்னை வேண்டாம் என்று சொன்னால் அவளால் தாங்க முடியாது. அதனால் அவன் சொல்வதற்கு முன் நாமே முந்திக்கொள்வோம் என்று நினைத்தாள்.
“இன்னொரு பெண்ணை விரும்புறவர் எனக்கு வேண்டாம். எனக்கு என்ன குறை…? நாம ஏன் அவர் கிட்ட கெஞ்சனும்?” என்றாள் திமிராக.
மகேஷ் அவளைச் சந்தேகமாகப் பார்க்க “ஆமாம் நிஜமா தான் சொல்றேன். எனக்கு அந்தக் கதிர் வேண்டாம். அதே மாதிரி சந்தியாவுக்கும், கதிருக்கும் கல்யாணம் நடக்கக் கூடாது. எனக்கு கிடைக்காத கதிர் சந்தியாவுக்கும் கிடைக்கக் கூடாது.” என்றாள் ஆத்திரமாக.
மகேஷும், அவன் அம்மாவும் ஏன் என்பது போல் நந்தினியை பார்க்க “சந்தியா எப்பவும் எல்லாத்திலயும் என்னை தோக்க வச்சிகிட்டே இருக்கா. நான் தான் ஸ்டேட் ரேங்க் வாங்க கஷ்டப்பட்டுப் படிச்சேன். ஆனா அவ தான் வாங்கினா. அதே போல நான் படிக்க ஆசைப்பட்ட டாக்டர் படிப்ப. இப்ப அவ தான் படிக்கிறா, எனக்குச் சீட் கிடைக்கலை. எல்லாத்திலையும் அவக்கிட்ட தோத்துட்டேன். இதுலையும் நான் தோத்துர கூடாது.” என்றாள் அழுகையுடன்.
தன் தங்கையின் கண்ணீரை பார்த்த மகேஷ் “நான் உன்னைத் தோக்க விட மாட்டேன்.” என்றான்.
அவன் அம்மா அவர்கள் இருவரையும் மாறி, மாறிக் கலவரமாகப் பார்த்தவர், நந்தினி அவள் அறைக்குச் சென்றதும் “அவ தான் லூசு மாதிரி பேசுறான்னா, நீயும் அவளோட சேர்ந்துட்டு பேசுற. இப்படி மத்தவங்க மேல பகைய வளர்கிறது நல்லது இல்ல. நீ அவளுக்கு வேற மாப்பிள்ளை பார்க்க ஆரம்பி, அப்ப தான் அவ மனசு மாறும்.” என்றார். மகேஷ் அதற்கும் சரி என்றான்.
இரண்டு வாரங்கள் சென்றிருந்தது.
சந்தியா கதிரிடம் நந்தினியை திருமணம் செய்துகொள் என்று சொல்லிவிட்டு, பாவம் அவள் தான் தவித்துப் போனாள். சித்தார்த்துக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது.
“ரொம்பத் தெரிஞ்ச மாதிரி பேசாத சித்து. முதல்ல நான் வாசு சொன்னத நம்பவே இல்ல. ஆனா மேடையில கதிர் மாமாவையும், நந்தினியையும் பார்த்ததும் பொறுக்க முடியலை…”
“பொறாமை…” என்று சித்தார்த் கிண்டலாகச் சிரிக்க,
“ஆமாம் பொறாமை தான். நீ லவ் பண்ணும் போது உனக்கும் அது புரியும்.” என்றாள் சந்தியா.
“சரி அன்னைக்கு அப்படிப் பேசி தான கதிர் கிட்ட அறை வாங்கின. பிறகும் உனக்குப் புத்தி வரலையே, திரும்ப ஏன் கதிரை நந்தினியை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி சொன்ன….?
“அன்னைக்குக் கதிர் மாமா கோவில்ல இருந்து சாப்பிடாமலே போய்ட்டாங்க. அப்ப அத்தை தான் சொன்னாங்க, உங்க மாமா உன்னைக் கதிருக்குக் கல்யாணம் செய்யணும்னு ரொம்ப நம்பிக்கையா இருக்காரு, ஆனா உங்க அப்பா இவ்வளவு பிடிவாதமா இருக்கிறதை பார்த்தா, உங்க கல்யாணம் நடக்குமான்னு தெரியலை…..”
“உங்க மாமா நல்லா இருக்கும் போதே கதிருக்குக் கல்யாணத்தை முடிச்சிட்டா நிம்மதியா இருக்கும்னு பார்த்தேன் அப்படின்னு சொன்னாங்க. அவங்க சொல்றதும் சரின்னு தோனுச்சு, அது தான் அப்படிப் பேசிட்டேன்.”
“அவங்க எதோ பேசினாங்க சரி, அதுக்காக நீ கதிர் கிட்ட இப்படியா பேசுறது. இப்படி எல்லோரும் சேர்ந்து அவருக்கு டென்ஷன் கொடுத்தா அவரும் தான் என்ன பண்ணுவார்.” என்று சித்தார்த் கதிருக்கு பரிந்து பேச,
“ம்ம், ஆமா கதிர் மாமா டென்ஷன் தான் ஆகியிருப்பாங்க. என்னால கதிர் மாமாவை யாருக்கும் விட்டு தர முடியாது”. அதை நான் உணர்ந்திட்டேன். ஆனா கதிர் மாமா கோபமா இருக்காங்க. போன் பண்ணா கூட எடுக்க மாட்டேங்கிறாங்க. இப்ப என்ன பண்றது…?” என்று சந்தியா சித்தாரத்தைப் பார்க்க,
“சந்தியா நீ ஒன்னு புரிஞ்சிக்கோ, இதுல கதிர் செய்ய எதுவுமே இல்லை. அவர் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கத் தயாரா தான் இருக்கார். பிரச்சனை பண்றது உங்க அப்பா. உங்க அப்பா மனசு மாறினா தான் உங்க கல்யாணம் நடக்கும். உங்க அப்பா மனசை எப்படி மாத்துறதுன்னு யோசி…”
சந்தியா எப்படி தன் அப்பாவின் மனதை மாற்றுவதுஎன்று தீவிரமாக யோசித்தாள். அன்று தான் அவர்களுக்கு கடைசி பரிட்சை. பரிட்சை முடிந்து மாணவர்கள் சென்றிருந்தனர். இவர்கள் இருவரும் கல்லூரி வளாகத்திற்குள் இருந்த மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
“இது ஓகேவா பாரு…” என்ற சந்தியா “அப்பா நீங்க என்னைக்கதிர் மாமாவுக்கு கல்யாணம் பண்ணி தரலைன்னா. நான் காலம் முழுவதும் கல்யாணம் பண்ணிக்காம கன்னியாவே இருந்திடுவேன்.” என்று நாடக பாணியில் வசனம் பேச,
சித்தார்த் சுற்றி எதாவது கல் இருக்கிறதா என்று பார்த்தவன் “கொண்டே புடுவேன். வீணா என்னைக் கொலைக்காரன் ஆக்காத. ஒழுங்கா யோசி.” என்றான்.
சந்தியா திரும்ப யோசிக்க ஆரம்பிக்க, “நீ யோசிச்சது போதும், நான் ஒரு யோசனை சொல்றேன்…” என்ற சித்தார்த் “நீ வேற ஜாதி பையனை லவ் பண்றேன்னு உங்க அப்பாக்கிட்ட சொல்லு. உடனே உங்க அப்பா உன்னை வெளி ஆளுக்குச் செய்றதுக்குப்பதில் கதிருக்கே கல்யாணம் செஞ்சுடலாம்னு முடிவு செய்வார். நீ முதல்ல ஒத்துக்க முடியாதுன்னு சொல்லு. அப்புறம் உங்க அப்பாவுக்காக ஒத்துகிற மாதிரி ஒத்துக்கோ. எப்படி என் ஐடியா?” என்று சித்தார்த் கேட்க, சந்தியா தன் நண்பனை பெருமையாகப் பார்த்தாள்.
அப்போது “சூப்பர், சூப்பர் ஐடியா….” என்று குரல் கேட்டு சந்தியாவும், சித்தார்த்தும் திரும்ப. அங்கே கதிர் நின்று கொண்டிருந்தான். கதிருக்கும், சித்தார்த்துக்கும் ஏற்கனவே ஒருவரை ஒருவர் தெரியும் என்றாலும், இவ்வளவு அருகில் பார்ப்பது இன்று தான்.