கதிரை அந்த நேரத்தில், அந்த இடத்தில் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை என்பது சந்தியா கண் சிமிட்டாமல் அவனைப் பார்ப்பதிலிருந்தே கதிருக்குப் புரிந்தது. அவளது விரிந்த விழிகளும், நம்பாத பாவனையும் பார்த்தவனின் முகத்தில் புன்னகையை வர வழைக்க,
மலர்ந்த முகத்துடன் சித்தார்த்தின் பக்கம் திரும்பியவன் “நீ எங்க கல்யாணம் நடக்க ஐடியா தர்ற மாதிரி தெரியலை. சந்தியாவை அவங்க அப்பா கிட்ட அடி வாங்க வைக்கப் பார்க்கிற மாதிரி தான் தெரியுது.” என்றான்.
கதிர் சொன்னதைக் கேட்ட சந்தியா “ஆமாம்…” என்று தலை ஆடிக்கொண்டே சித்தார்த்தை பார்க்க,
கதிர் தொடர்ந்து “நீ சொன்னபடி செஞ்சா, சந்தியாவோட தோளை உரிச்சி எங்க மாமா தொங்க விட்டுடுவார் பரவாயில்லையா….” என்றான் புன்னகையுடன். இப்போது சந்தியா சித்தார்த்தை பார்த்து முறைத்தாள்.
அவளின் முகப் பாவனைகளைப் பார்த்த சித்தார்த் “அடிப்பாவி இவ்வளவு நேரம் நான் சொன்னதுக்குச் சரின்னு சொல்லிட்டு. இப்ப உங்க மாமாவை பார்த்ததும் கட்சி மாறிட்ட பார்த்தியா.இந்த லவ் பண்றவங்களுக்கு மட்டும் ஃபரண்டாவே இருக்கக் கூடாது.” என்று புலம்ப. அதைப் பார்த்த சந்தியாவும், கதிரும் சிரித்தனர்.
அவர்கள் இருவரையும் பார்த்த சித்தார்த்தின் முகமும் மலர்ந்தது. அவனே கதிரின் அருகில் சென்று கைநீட்ட, அதை நட்புடன் பற்றிக்கொண்ட கதிர் “என்னைப் பத்தி நான் சொல்லவேண்டியது இல்லைன்னு நினைக்கிறேன்.” என்றான் சந்தியாவைப் பார்த்துக்கொண்டே,
“உண்மை தான் கதிர். சந்தியா உங்களைப் பத்தி பேசிப் பேசி.எனக்கே உங்க மேல லவ் வந்துடுச்சுன்னா பார்த்துக்கோங்களேன்.” என்று சித்தார்த் புன்னகைக்க, அவன் சொன்னதைக் கேட்டு ஒரு நொடி திகைத்த கதிர், மறுநொடி வாய்விட்டுச் சிரித்தான்.
அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதைப் பார்த்த சந்தியாவுக்குப் பொறாமையாக இருந்தது. இவனுங்க ரெண்டு பேரும் அக்னி நட்சத்திரம் பிரபு, கார்த்திக் மாதிரி தான எப்பவும் பார்த்துப்பாங்க. இப்ப என்ன ரொம்ப பாசமா பேசுறாங்க என்று நினைத்த சந்தியா சித்தார்த்தை பார்த்து முறைக்க.
“வந்ததிலிருந்து நீங்க என்கிட்ட மட்டும் பேசுறத பார்த்து, உங்க ஆளுக்குப் புஸு, புஸுன்னு கோபம் ஏறுது…” என்று கதிரின் காதில் சித்தார்த் கிசுகிசுக்க,
சந்தியாவை பார்த்த கதிர், அவளை அலட்சியப்படுத்தி விட்டு தொடர்ந்து சித்தார்த்துடன் மட்டும் பேசினான்.கதிர் தன்னைக் கண்டுகொள்ளாமல் சித்தார்த்துடன் மட்டும் பேசுவதைப் பார்த்த சந்தியா, தான் எதற்கு இங்குத் தேவையில்லாமல் அமர்ந்திருக்க வேண்டும் என்று நினைத்தவள், பொதுவாக “நான் ஹாஸ்டலுக்குப் போறேன்…” என்று சொல்ல. கதிர் அப்போதும் அவளைத் தடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
கதிரை ஆச்சரியமாகப் பார்த்த சித்தார்த் “நீங்க சந்தியாவைப் பார்க்க வரலையா…” என்றான்.
“இல்லை, என் ஃபரண்ட்க்கு கால்ல அடி, அவனை இந்த ஹாஸ்பிடல்ல காமிக்கக் கூட்டிட்டு வந்தேன்.” என்று கதிர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே,
“டேய் கதிர் வண்டிய பார்க் பண்ணிட்டு வர்றதுக்குள்ள எங்கடா போன…?” என்று கேட்டபடி அங்கே ஒருவன் வந்தான்.
அவனைத் தன் நண்பன் பாலா என்று சித்தார்த்திடம் அறிமுகப்படுத்திய கதிர், அவனுக்குக் காலில் அடி என்று சொல்ல. சித்தார்த்தும், சந்தியாவும் பாலாவின் காலைப் பார்க்க, அங்கே பெரிதாக எந்த அடியும் இல்லை. லேசாக விரலில் அடிப்பட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
இது ஹாஸ்பிடலுக்கு வர்ற அளவுக்குக் காயமா என்று நினைத்த சந்தியா கதிரை பார்த்து முறைக்க, கதிர் எதோ விளையாடுகிறான் என்று புரிந்து கொண்ட சித்தார்த் சிரிப்பை அடக்கிக்கொண்டு நின்றான்.
“எனக்கு சின்ன வயசுல இருந்து ஹாஸ்பிடல் போகனும்னாலே பயம். ஜுரம் வந்தா கூட மெடிக்கல் ஷாப்புல மாத்திரை வாங்கித் தான் சாப்பிடுவேன். என்னைப்போய் எதுக்குடா இவ்வளவு பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வந்திருக்க. எனக்கு இந்த ஹாஸ்பிடல்ல பார்த்தாதான் லேசா நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு.” என்ற பாலா புலம்ப,
“சின்னக் காயமுன்னு அலட்சியமா இருந்திட கூடாதுடா, இரு டாக்டர பார்த்திடலாம்…” என்ற கதிர் சித்தார்த்தை பார்த்துக் கண் சிமிட்ட, புரிந்து கொண்ட சித்தார்த் “வாங்க பாலா நான் உங்களுக்கு ட்ரீட்மென்ட் தரேன்.” என்று சொல்லி அங்கிருந்து பாலாவை அழைத்துக்கொண்டு சென்றான்.
“நீ நிஜமாவே டாக்டர் தான போலி டாக்டர் இல்லையே….” என்று கேட்டபடி சித்தார்த்துடன் சென்ற பாலா, சிறிது தூரம் தள்ளி சென்றதும் “இங்க என்ன நடக்குது…? யார் அந்தப் பொண்ணு? கதிருக்கும் அந்தப் பொண்ணுக்கும் என்ன சம்பந்தம்?” என்ற கேட்க.
கதிரின் நண்பன் என்பதால் சித்தார்த்தும் சந்தியாவைப் பற்றிச் சொல்ல, கேட்ட பாலாவுக்கு இப்படியும் காதலர்கள் இருப்பார்களா என்றே நினைக்கத் தோன்றியது.பெற்றவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, ஊர் சுற்றும் காதலர்களைத் தான் அவன் இதுவரை பார்த்திருக்கிறான். ஒரே ஊரில் இருந்தும் பெரியவர்களின் பேச்சை மதித்துக் கதிர் சந்தியாவை விட்டு விலகி இருந்ததைப் பார்க்கும் போது, அவனுக்குத் தன் நண்பனை குறித்துப் பெருமையாகவே இருந்தது.
கதிர் சந்தியாவை நேரில் சந்திக்கத் தான் தன்னை இங்கே அழைத்துக்கொண்டு வந்திருக்கிறான் என்று புரிந்துகொண்ட பாலா சித்தார்த்துடன் செல்ல. சித்தார்த் அவன் காயத்துக்கு மருந்திட்டு விட்டு, அவனை அழைத்துக்கொண்டு அங்கிருந்த உணவகத்திற்கு சென்றான்.
சந்தியா எங்கோ வேடிக்கை பார்க்க. கதிர் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். சிறிது நேரம் சென்று கதிரின் பக்கம் திரும்பிய சந்தியா, இந்தப் பார்வைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்று மனதிற்குள் நினைத்தவள் “நான் போறேன்…” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்ப.
அவள் கைப்பற்றித் தடுத்த கதிர், அவளை அங்கிருந்த பெஞ்சில் உட்காரவைத்தவன், சிறிது இடைவெளி விட்டு தானும் அவள் அருகில் அமர்ந்தான்.
“எதுக்கு இந்த நாடகம்?” என்றாள் சந்தியா கதிரிடம் நேரடியாக.
“உன்னைப் பார்க்க ஒரு காரணம் வேணுமில்லை…”
“எதுக்குப்பார்க்கணும்?”
“மனுஷனை நிம்மதியா இருக்க விடுறியா நீ, சும்மா நைனைன்னு போன்ன பண்ணி உயிரை எடுக்கிற.அதுக்குத் தான் நேர்ல பார்க்க வந்தேன்.”
“பொய் சொல்லாதீங்க. என்னோட போனுக்கு எல்லாம் அசர்ற ஆளா நீங்க. வேற எதாவது காரணம் இருக்கும்…” என்றாள் நன்றாகக் கதிரை பற்றித் தெரிந்த சந்தியா.
“ம்ம் ஆமாம். எனக்குப் பெங்களூர்ல வேலை கிடைச்சிருக்கு. இன்னும் நாலு நாள்ல அங்க போய் வேலையில சேரனும். உனக்குப் பரிட்சை முடிந்து, நீ ஊருக்கு போய்ட்டா உன்னைப் பார்க்க முடியாது இல்ல. அது தான் நேர்ல பார்த்து சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்.” என்றான் கதிர்.
நேரில் சந்திக்கவில்லை என்றாலும் ஒரே ஊரில் இருக்கிறோம் என்ற நிம்மதியும், இனி இல்லை என்று நினைத்த சந்தியாவின் கண்கள் கலங்க. அவள் கையை ஆதரவாக பற்றிய கதிர்.
“இதுக்கெல்லாமா வருத்தப்படுவாங்க, பெங்களூர் என்ன ரொம்பத் தூரமா. இப்ப கிடைச்சிருக்க வேலையில சம்பளம் ஜாஸ்த்தி சந்தியா. நீ படிப்பை முடிகிறதுக்குள்ள நானும் ஓரளவுக்குச் செட்டில் ஆகிடுவேன். நான் நல்லா இருக்கிறதை பார்த்தாவது, உங்க அப்பா மனசு மாறுதான்னு பார்க்கலாம்…” என்றான் கதிர்.
அவன் கையைத் தட்டி விட்ட சந்தியா “உங்களுக்கு எங்க அப்பா தான் முக்கியம், நான் இல்லை. எப்பவும் அவரைப்பத்தி தான் நினைப்பீங்க, என்னைப் பத்தி நினைக்க மாட்டீங்க.” என்று குற்றம் சாட்ட,
சிறிது நேரம் அமைதியாக இருந்த கதிர் “எல்லாப் பையன்களுக்கும் அவங்க அப்பா தான் முதல் ரோல்மாடல். எனக்கும் அப்படித்தான் சந்தியா. எங்க அப்பாவை கம்பீரமாவே பார்த்து பழகின எனக்கு, காவேரி வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ண பார்த்த அன்னைக்கு ராத்திரி, அவர் மொட்டை மாடியில தனியா நின்னு அழுததைப் பார்த்ததும், நெஞ்சே வெடிக்கிற மாதிரி தான் இருந்தது.”
“எங்க அப்பா அழுது நான் அதுவரை பார்த்ததே இல்லை சந்தியா. என்னால இப்ப அதை நினைச்சாலும் தாங்க முடியாது. காவேரி கல்யாணத்தின் போது எங்க அப்பா மத்தவங்களால பட்ட அவமானத்தை நேர்ல பார்த்தவன் நான். அப்படியிருக்கும் போது என்னால எப்படிச் சந்தியா அதே கஷ்டத்தை இன்னொரு தகப்பனுக்குக் கொடுக்க முடியும்?”
“எங்க அப்பா மாதிரி தான உங்க அப்பாவும். அவருக்கு இஷ்டம் இல்லாம நம்ம கல்யாணம் நடக்கிறதுல எனக்கு விருப்பம் இல்லை.” என்ற கதிர் தொடர்ந்து,
“உங்க அப்பா, அம்மாவுக்கு நீ ரொம்ப வருஷம் கழிச்சு தான் பிறந்த. உங்க அப்பா உன்னை எப்படிச் சீராட்டி வளர்த்தார்னு நேர்ல பார்த்தவன் நான்.”
“அப்படி உன்னைப் பார்த்து பார்த்து வளர்த்தவர் மனசு கஷ்டப்படுத்தி நம்ம கல்யாணம் நடக்க வேண்டாம் சந்தியா. அவர் சம்மதிக்கும் வரை நாம பொறுமையா காத்திருப்போம்.” என்று கதிர் சொன்னதும்,
“அப்ப எங்க அப்பா கடைசி வரை பிடிவாதமா இருந்துட்டா, நீங்க என்னை வேண்டாம்னு விட்டுடுவீங்களா மாமா…” என்ற சந்தியா தவிப்பாகக் கதிரின் முகம் பார்க்க,
இல்லை, என்று அழுத்தமாக மறுத்த கதிர் “நாம முடிஞ்சவரை அவர் மனசு கஷ்டபடாம பார்த்துக்கலாம் சந்தியா. எனக்குப் பத்து வயசா இருக்கும் போது, நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ண போறதா நம்ம வீட்ல பேசினாங்க. எனக்கு அப்ப ஒரு விவரமும் தெரியாது. ஆனா, எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து, நீ தான் என்னோட வருங்கால மனைவின்னு என் மனசுல பதிஞ்சு போய்டுச்சு.”
“ஒருத்தன் காதலிக்கிற பொண்ணை வேணா விட்டுகொடுக்க முடியும். ஆனா, பொண்டாட்டிய எப்படி விட்டு கொடுக்க முடியும்? நீ என் பொண்டாட்டி சந்தியா. நான் உன்னை நிச்சயமா விட்டு கொடுக்க மாட்டேன்.” என்று கதிர் உறுதியாகச் சொன்னதும், சந்தியாவின் முகம் தாமரையாக மலர்ந்தது.
“நீங்க எங்க அப்பாவை எவ்வளவு நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க. ஆனா, அவர் உங்க மேல தான் ரொம்பக் கோபத்தில இருக்கார்.” என்று சந்தியா வருத்தப்பட,
“அவருக்கும் எனக்கும் என்ன சொத்துத் தகறாரா, இல்லை வாய்க்கா தகறாரா, அவருக்கு மனசுல பயம். எங்கே அவர் அருமையா வளர்த்த பொண்ணை, நான் தள்ளிட்டு போய்டுவேனோன்னு. அதனால என் மேல கோபமா இருக்கிற மாதிரி காட்டிக்கிறார் வேறொன்னுமில்லை…” என்ற கதிர் சிரிக்க, சந்தியாவும் அவனோடு இணைந்து கொண்டாள்.
“நான் உன்னை ரொம்பக் கஷ்டபடுத்திட்டேன் இல்ல சந்தியா…..” என்று கதிர் கேட்டதும், சந்தியா ஆமாம், இல்லை என்று இரு பக்கமும் தலை ஆட்ட,
அவளின் குறும்பை ரசித்த கதிர் “நந்தினி விஷயத்துல நீ ரொம்ப டென்ஷன் ஆகிட்ட இல்ல. தப்பு என் மேல தான். நான் இன்னைக்கு உன்கிட்ட பேசி புரிய வச்ச மாதிரி, முன்னாடியே பேசி இருக்கணும். சரி இப்ப உன் சந்தேகமெல்லாம் தீர்ந்துடுச்சா, இனிமேலாவது நீ நிம்மதியா இருப்பியா….” என்றான்.
சந்தியா மகிழ்ச்சியுடன் ஆம் என்று தலையாட்ட “அப்ப சரி, நான் கிளம்புறேன்.” என்று கதிர் எழுந்துகொள்ள,
அவன் கைப்பற்றி இழுத்த சந்தியா “ப்ளீஸ் மாமா. இன்னும் கொஞ்ச நேரம் இருங்க. நான் நாளைக்கு ஊருக்கு போய்டுவேன். இனி எப்ப பார்ப்பமோ…” என்றாள் கெஞ்சலாக.