“ஹே, இப்படி அழாதடி. என் மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. அப்பா தான் அடிச்சாங்க. அவரை அந்த மகேஷ் வேற எதோ சொல்லி ஏத்தி விட்டிருக்கான் போலிருக்கு. நம்ம ரெண்டு போரையும் சேர்ந்து பார்த்ததும் அவருக்குக் கோபம் வந்துடுச்சு. நீ பொறுமையா இரு சந்தியா. மாமா மேல கோபப்படாதே, அவர் ரொம்ப டென்ஷனா இருக்கார். நீ அவரைப் பார்த்து ஊருக்கு கூட்டிட்டு போ. முதல்ல நீ படிப்பை நல்லபடியா முடிக்கணும் அதுக்கு வழி பார்ப்போம். பிறகு நம்ம கல்யாணத்தைப் பத்தி பார்த்துக்கலாம். தைரியமா போ….” என்ற கதிருக்குமே அப்போது பிரச்சனையின் தீவிரம் தெரியவில்லை.
சந்தியா போன் பேசி முடித்த போது. அனு அவளுடைய பெட்டியை அடுக்கி முடித்திருந்தாள். அவளுக்குப் பயம் எங்கே சந்தியாவின் அப்பா ஏன் தாமதம்…? என்று கேட்டு அதற்கு வேறு சந்தியாவை அடித்தால். அதனால் அவளே சந்தியாவின் பெட்டியை அடுக்கிவிட்டாள். சந்தியா அவளைக் கட்டிக்கொள்ள, அனுவும் கண்ணீருடன் சந்தியாவுக்கு விடை தந்தாள்.
வெளியே வந்து காத்திருந்த தனது தந்தையுடன் ஆட்டோவில் ஏறிய சந்தியா பார்வையைச் சுழல விட, சற்று தள்ளி சித்தார்த்தும், ஸ்ரீஜாவும் மறைவாக நின்றிருந்தனர். சந்தியா அவள் அப்பாவுக்குத் தெரியாமல். அவர்களுக்குக் கை அசைத்து விட்டு சென்றாள்.
கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றவர்கள், அவர்கள் ஊர்க்கு செல்லும் பேருந்துக்குப் பயணச் சீட்டு வாங்கிவிட்டுக் காத்திருக்கும் நேரத்தில். துரை சந்தியாவை அழைத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த ஹோட்டலுக்குச் சென்றவர். மகளுக்கு ஒரு தோசையும், தனக்கு வெறும் ஒரு டீ மட்டும் வாங்கினார்.
கதிர் சொல்லி அனுப்பி இருந்ததால் சந்தியா மறுக்காமல் வாங்கிச் சாப்பிட்டாள். அவள் சாப்பிடும் வேகத்தைப் பார்த்தவர், மகள் ரொம்பவே பசியில் இருக்கிறாள் என்று புரிந்து கொண்டு, அவளுக்கு மேலும் ஒரு தோசையை வாங்கினார். சந்தியா அதையும் மறுக்காமல் சாப்பிட்டாள்.
பஸ்சில் ஜன்னல் ஓரத்தில் சந்தியா அமர்ந்துகொள்ள, அடுத்து துரை அமர்ந்து கொண்டார். பஸ் மெதுவாக நகர ஆரம்பித்த போது. ஒரு கடைக்குப் பக்கத்தில் கதிரும், பாலாவும் நின்றிருந்தனர். கதிரை பார்த்ததும் சந்தியாவின் முகம் மலர. அவள் திரும்பி தன் தந்தையைப் பார்த்தாள்.
துரை அந்தப் பக்கம் அமர்ந்திருந்த ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். சந்தியா நிம்மதியாகக் கதிரை பார்க்க ஆரம்பித்தாள். பேருந்து நிலையத்தில் அதிக வண்டிகள் நின்றதால் பேருந்து மெதுவாகத் தான் நகர்ந்தது.
கதிர் பாலாவுடன் பேசிக்கொண்டே சந்தியாவைப் பார்த்துக் கண் சிமிட்ட, முதலில் தான் சரியாகப் பார்க்கவில்லையோ என்று நினைத்த சந்தியா திரும்பக் கதிரை பார்க்க. அவன் மீண்டும் அவளைப் பார்த்துக் கண் சிமிட்டினான். சந்தியா அவன் குறும்பை பார்த்து புன்னகைத்தாள். அதைப் பார்த்த கதிரின் முகமும் மலர்ந்தது.
அவள் அழுததால் கதிர் மனம் தாங்காமல் பேருந்து நிலையம் வந்திருந்தான். பேருந்து கண்ணை விட்டு மறையும் வரை கதிரும், சந்தியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர். கடைசியாகச் சந்தியா திரும்பி கதிரை பார்த்த போது. அவன் கை அசைத்து அவளுக்கு விடை தந்தான்.
தன்னைச் சுற்றி இருப்பவர்கள் தன் மீது காட்டும் அக்கறையை நினைத்து சந்தியாவிற்குக் கண்கள் கலங்கியது. இதில் யார் மனதையும் தான் நோகடித்துவிடக் கூடாது என்று அவள் கடவுளை வேண்டினாள். அவள் வேண்டுதல் நிறைவேறியதா. சந்தியாவிடம் சொன்னது போல் கதிர் அன்று இரவே தன் தந்தையைச் செல்லில் அழைத்து நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டான்.
“ஏன் கதிரு அவசரப்பட்ட? சந்தியா படிப்பை முடிக்கிற வரை பொறுமையா இருந்திருக்கலாம் இல்லையா. நானே சந்தியா படிப்பு முடிஞ்சதும் துரைக்கிட்ட பேசுறதா தான் இருந்தேன்.”
“இல்லப்பா.வாசு மாமா சந்தியாக்கிட்ட எனக்கும், நந்தினிக்கும் கல்யாணம்னு சொல்லி இருப்பார் போல, அவ அதை நினைச்சே கவலைப்பட்டுக்கிட்டு இருந்தா. அதனால அவளை நேர்ல பார்த்திட்டு அப்படியே அவக்கிட்ட பெங்களூர் போறதையும் சொல்லிடலாம்னு நினைச்சு தான் போனேன். ஆனா இப்படி ஆகும்னு நினைக்கலை….” என்று கதிர் சொன்னதும்,
“என்ன சொன்னாலும் நீ செஞ்சது தப்பு தான் கதிர். துரை கோபப்பட்டதுல தப்பு இல்ல…” என்று பெரியசாமி கதிரை கண்டிக்க, கதிர் மெளனமாக இருந்தான்.
“சரி நடந்தது நடந்திடுச்சு. நான் துரை கிட்ட பக்குவமா பேசி சந்தியாவைக் காலேஜ்க்கு அனுப்ப பார்க்கிறேன். நீ இப்ப ஊருக்கு வர வேண்டாம். நீ நேரா பெங்களூர் போய் வேலையில சேறு….” என்று சொல்லி பெரியசாமி போனை வைத்துவிட்டார்.
ஆனால் அவர் எதிர்ப்பார்த்தது போல் துரை அவரிடம் வந்து கதிரை பற்றி எந்தப் புகாரும் சொல்லவில்லை. மாறாகத் அவர் தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலையில் இறங்கினார்.சந்தியாவோடு வீட்டுக்கு வந்த துரை வேதவல்லியிடம் கதிரையும், அவன் குடும்பத்தையும் பற்றித் திட்டி தீர்த்தார். வேதவல்லியும் துரையின் கோபம் குறையட்டும் பிறகு பேசுவோம் என்று நினைத்து அமைதியாக இருந்தார்.
துரை நினைத்தது போல் சந்தியாவுக்கு மாப்பிள்ளை பார்ப்பது ஒன்றும் அவ்வளவு எளிதாக இல்லை. மாப்பிள்ளை வீட்டினர் முதலில் கேட்ட கேள்வியே ஏன் மருத்துவம் படிக்கும் பெண்ணுக்கு திடீரென்று திருமணம் செய்கிறீர்கள்…? என்பது தான்.
அந்தக் கேள்விக்கே துரையால் பதில் சொல்லமுடியவில்லை. அப்படியே அவர் சமாளித்துச் சொன்ன பதிலை ஏற்றுக் கொண்ட சில மாப்பிள்ளை வீட்டினர், இந்தக் காலத்தில வெறும் MBBS வச்சு ஒன்னும் பண்ண முடியாது. மேல MD படிச்சிருந்தா வேணா யோசிக்கலாம்.
ஆனா, நீங்க இன்னும் உங்க பொண்ணு படிப்பையே முடிக்கலைன்னு சொல்றீங்க. என்று சந்தியாவை மறுக்க. துரை நொந்து போனார்.நொந்த மனதுடன் இருந்தவர் முன்பு மகேஷ் வந்து “என்ன உங்க மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறீங்க போல. நான் சொன்னது உண்மைன்னு தெரிஞ்சுக்கிட்டீங்களா…” என்று நக்காலகக் கேட்க, துரை மெளனமாக இருந்தார்.
மகேஷ்க்கு தன் தங்கை ஆசைப்பட்ட டாக்டர் படிப்பை சந்தியாவும் படிக்கக் கூடாது. அதோடு அவளுக்குக் கதிரோடும் திருமணம் நடக்கக் கூடாது என்று நினைத்தான். துரையை எதார்த்தமாய் பார்ப்பது போல் பார்த்தவன், அவன் சென்னைக்குச் சென்றிருந்த போது கதிரும், சந்தியாவும் ஊர் சுற்றுவதை நேரில் பார்த்தது போல் சொன்னான். அதை நம்பி துரையும் ஏமாந்தார். மகேஷ் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த கர்வத்துடன் நின்றான்.
திடீரென்று துரைக்கு ஒரு யோசனை தோன்றியது, அவர் “நீ ஏன் சந்தியாவைக் கல்யாணம் செஞ்சுக்கக் கூடாது?” என்று மகேஷிடம் கேட்க.
அதைக் கேட்ட மகேஷ்க்கு உள்ளுக்குள் சந்தோஷமாகத் தான் இருந்தது. ஆனால் சந்தியாவை வெறுக்கும் தன் தங்கையின் முன்பு. அவளை எப்படித் திருமணம் செய்து கொண்டு வாழ முடியும் என்று நினைத்தவன், வேண்டுமென்றே துரையின் மனம் நோக வேண்டுமென்பதற்காக “உங்க ஓடுகாலிப் பெண்ணை என் தலையில கட்ட பார்க்குறீங்களா, அதுக்கு வேற ஆளைப்பாருங்க.” என்றான் கிண்டலாக. அதை கேட்டதும் துரைக்குச் சுருக்கென்றது. அவர் விடு, விடுவென்று வீட்டை நோக்கி சென்றார்.
மகேஷின் முகத்தில் மகிழ்ச்சி கூத்தாடியது. அவனுக்குத் தெரியவில்லை அவனுக்கே தெரியாமல் கதிரும், சந்தியாவும் சேர அவன் தான் காரணமாக இருக்கப் போகிறான் என்று.தன் அண்ணனின் மூலம் சந்தியாவிற்குத் தன் கணவர் மாப்பிள்ளை பார்க்கும் விஷயத்தைக் கேள்விப்பட்ட வேதவல்லி கோபத்தின் உச்சியில் இருந்தார்.
வீட்டுக்கு வந்த தன் கணவரிடம் “என்ன உங்க மகளுக்கு மாப்பிள்ளை பாக்குறீங்க போலிருக்கு?” என்று வேதவல்லி கேட்டதும் தான் சந்தியாவுக்கே அந்த விஷயம் தெரியும். அவள் அதிர்ச்சியுடன் தன் தாய், தந்தையைப் பார்த்தாள்.
“ஏன் வர, வர உங்களுக்கு அறிவு தேஞ்சிக்கிட்டே போகுது. படிச்சிட்டு இருக்கிற பொண்ணுக்கு இப்ப எதுக்குக் கல்யாணம்?” என்று வேதவல்லி கோபமாகக் கேட்க,
ஏற்கனவே மகேஷ் செய்த கிண்டலில் கொத்திப்புடன் இருந்த துரை “நான் உன் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்தாலும், எவனும் அவளைக் கட்டிக்கத் தயாரா இல்லை. இவ உன் அண்ணன் மகனோட ஊர் சுத்தினது தான் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கே. அதோட படிக்கிற பொண்ணுக்கு எதுக்குக் கல்யாணம் பண்றீங்கன்னு தான் கேட்கிறாங்க.” என்றார் ஆத்திரமாக.
“கூறு கெட்ட மனுஷா, நீயே உன் பொண்ணை இப்படிக் கேவலப்படுத்துறியே, அவ யார் கூடப் பேசினா…? என் அண்ணன் மகன், அவளுக்கு உரிமைப்பட்ட மாமன் மகனோட தான பேசுனா. அதை நீயே பெருசாக்கி என் பெண்ணைச் சந்தி சிரிக்க வச்சிடுவ போலிருக்கே. நீ இப்படி அவளுக்கு அவசர அவசரமா மாப்பிள்ளை பார்த்தா. ஊர்ல நாலு பேரு நாலுவிதமா பேசுவாங்களே….” என்று வேதவல்லி நெஞ்சில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்க, அதைக் கேட்ட சந்தியாவின் அப்பத்தாவும் அழுதார்.
சிறிது நேரம் சென்று கண்ணைத் துடைத்துக்கொண்டு எழுந்த வேதவல்லி அழுது கொண்டிருந்த சந்தியாவிடம் வந்தவர் “நீ இங்க இருந்து போய்டு சந்தியா….” என்றதும் மற்றவர்கள் அவரை அதிர்ந்து நோக்க,
“நீ இங்க இருந்தா, இன்னும் இந்த ஆளு கோபத்துல என்ன கூத்து பண்ணி வைக்குமோ, நீ உன் பெரிய மாமா வீட்டுக்கு போ. உங்க மாமா பார்த்து எதுனாலும் செய்யட்டும். அவர் எது செஞ்சாலும் யோசிச்சு தான் செய்வார்.” என்று சொல்ல.
சந்தியா “இல்லம்மா. நான் உங்களை விட்டு போகமாட்டேன்.” என்றாள்.
“என் மகளை நீ எப்படி டி வெளிய போகச் சொல்லுவ.” என்று துரை கத்த,
“யாரு உங்க பொண்ணு. இவ உங்க பொண்ணா, அதை நான் சொல்லணும். நான் இப்ப சொல்றேன், இவ உங்க பொண்ணு இல்லை.” என்று வேதவல்லியும் பதிலுக்குக் கோபத்தில் கத்த, துரை அவரை அடிக்கத் தொடங்கினார்.
தாயும், தந்தையும் சண்டையிடுவதைப் பார்த்த சந்தியா “ஐயோ, ரெண்டு பேரும் விடுங்களேன். நான் எங்கயும் போகலை….” என்று கெஞ்சியதை கவனிக்கும் நிலையில் அவர்கள் இருவரும் இல்லை.
துரையைப் பிடித்துத் தள்ளி விட்ட வேதவல்லி சந்தியாவைப் பார்த்து “போ….” என்று ஆங்காரமாகக் கத்தினார்.
அதைக் கேட்ட வேதவல்லி பார்த்தியா என்பது போல் துரையைக் கர்வமாக ஒரு பார்வை பார்க்க, ஒரு தகப்பனாகத் துரை மனதில் அடி வாங்கினார். தன் மகளுக்குத் தன்னை விடக் கதிரே முக்கியம். அவள் அப்பாவை விட்டு போக மாட்டேன் என்று சொல்லவில்லை. கதிர் சம்மதிக்க மாட்டான் என்று தான் சொல்கிறாள் என்று தவறாகப் புரிந்துகொண்டு அவரையும் வதைத்து மற்றவர்களையும் வதைக்க ஆரம்பித்தார்.
சந்தியாவின் தலை முடியை கொத்தாகப் பிடித்து “அவன் வான்னு சொன்னா. அவன் கூடப் போயிடுவியா நீ. போடி பார்க்கலாம். போ, போடி….” என்று சந்தியாவைப் பிடித்துத் தள்ள,
“போ, போன்னு சொன்னா எப்படிப் போறது. கல்யாணம் பண்ணி வைங்க போறேன். நான் ஏன் ஓடிப்போகனும். நீங்க உயிரோட தான இருக்கீங்க. ஏன் நீங்களா கல்யாணம் பண்ணா கை காசு கரைஞ்சுடும்னு பாக்குறீங்களா….” என்று பதிலுக்குச் சந்தியாவும் ஆத்திரமாக கேட்டாள். அவளும் எவ்வளவு நேரம் தான் பொறுப்பாள்.
அவளை முறைத்த துரை, வேதவல்லியிடம் திரும்பி “உங்க அண்ணனை பரிசம் போட வர சொல்லு. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இவ இந்த வீட்ல இருந்து போகணும். என்னை விட இன்னைக்கு வந்த அவ மாமன் முக்கியமா போய்ட்டான் இல்ல. நானும் பார்க்கிறேன் அவன் இவளை எப்படி வச்சிருக்கான்னு.” என்று சீறி விட்டு வெளியே செல்ல, வீடே போர் ஓய்ந்தது போல் அமைதியானது.
வேதவல்லி ஹப்பாடா, என்று நிம்மதியாக உட்கார, அப்பத்தாவும் மகிழ்ந்தார். ஆனால் சந்தியா தான் கதறி அழுதாள். எது நடக்கக் கூடாது என்று அவளும், கதிரும் நினைத்தார்களோ அது தான் இப்போது நடந்தது. தனக்குத் திருமணம் நடக்கப் போகிறது என்று சந்தோஷப்பட முடியாமல். தன் அப்பாவின் முழுச் சம்மதம் இல்லாமல் தங்கள் திருமணம் நடக்கப் போகிறது என்ற வருத்தமே முன் நின்றது. இது கதிருக்கு தெரிந்தால் அவன் வேறு என்ன சொல்வானோ…? என்று பயந்தாள்.