கதிருக்கும் அவளை விட்டு செல்ல மனமில்லை. அதனால் சந்தியாவின் அருகில் அமர்ந்தான்.அங்கே கேன்டீன்னில் இருந்த ஸ்ரீஜா, அனுவுடன் சித்தார்த்தும், பாலாவும் இணைந்து கொண்டனர். சித்தார்த் பாலாவை அவர்கள் இருவருக்கும் அறிமுகம் செய்ய,
“கதிர் வந்திருக்காங்களா எனக்கு அவங்களைப் பார்க்கணும்.” என்று ஸ்ரீஜா துள்ள, அவளை அடக்கி உட்கார வைத்த சித்தார்த் “அவ ஆள பார்க்க, நீ ஏன் தவிக்கிற…?” என்று சந்தேகமாக இழுக்க,
“ச்ச, என்னை சந்தேகப்படுறியா நீ. சந்தியா கதிரை பத்தி பேசிப் பேசி, கதிர் மேல எனக்கு ஒரு ப்ரதர் பீலிங் வந்துடுச்சு.” என்று ஸ்ரீஜா சொல்ல,
“அப்பன்னா ஓகே. ஆனா அவர் இப்ப தான் வந்தார். சந்தியாவோட கொஞ்ச நேரம் பேசட்டும். நாம மெதுவா போவோம்…” என்று சித்தார்த் சொன்னதும்,
“ஏன்மா உன் முன்னாடி ஸ்மார்ட்டா ஒருத்தன் உட்கார்ந்திருக்கேனே உனக்குத் தெரியலையா….” என்று பாலா ஸ்ரீஜாவை வம்பிழுக்க,
“யாரு அங்கிள் அது…” என்று பதிலுக்கு ஸ்ரீஜா பாலாவை வார,
பாலாவின் முகம் போன போக்கை பார்த்து சித்தார்த்தும், அனுவும் சிரிப்பை அடக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தனர். பாலா ஸ்ரீஜா பேசியதை சகஜமாக எடுத்துக்கொண்டான். தனக்குத் திருமணம் ஆகி இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்று தன்னைப் பற்றிச் சொன்னவன், தன்னுடைய கலகலப்பான பேச்சால் வெகு சீக்கிரத்தில் அவர்கள் நட்பு வட்டத்திற்குள் நுழைந்தும் விட்டான்.
சிறிது நேரம் பேசி சிரித்தபடி ஸ்னாக்ஸ் வாங்கிச் சாப்பிட்டவர்கள், சாப்பிட்டு முடித்ததும் கதிர், சந்தியா இருந்த இடம் நோக்கி சென்றனர்.கதிரும், சந்தியாவும் இன்னும் பேசிக்கொண்டு இருப்பதைப் பார்த்தவர்கள், சற்று தள்ளியே நின்றனர். பாலா அவர்களைத் தன் வீட்டுக்கு ஒரு நாள் வரும்படி அழைத்தான்.
சித்தார்த் பாலாவுடன் பேசிக்கொண்டே எதேச்சையாகப் பார்வையைச் சுழல விட, அங்கே சந்தியாவின் அப்பா துரை கோபமாகக் கதிர், சந்தியா அமர்ந்திருந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தான்.
சித்தார்த் அதிர்ந்து நிற்க, பாலாவுக்கும் மற்றவர்களுக்கும் அவன் ஏன் அப்படி நிற்க்கிறான் என்று புரியவில்லை. ஒரு நொடி அதிர்ந்து நின்ற சித்தார்த், மறு நொடியே சுதாரித்தவன் கதிர், சந்தியாவை நோக்கி வேகமாகச் செல்ல. மற்றவர்களும் அவனைப் பின் தொடர்ந்தனர்.
ஆனால் சித்தார்த் அங்கே செல்வதற்கு முன்பே துரை கதிர், சந்தியா அருகில் சென்றிருந்தார். தங்கள் உலகில் இருந்த கதிரும், சந்தியாவும் துரையைக் கவனிக்கவில்லை. அருகில் யாரோ வருவதை உணர்ந்த சந்தியா திரும்பி பார்க்க, அங்கே ருத்ரமூர்த்தியாக நின்றிருந்த தன் அப்பாவைப் பார்த்ததும், தன்னை அறியாமல் எழுந்து நின்றாள்.
சந்தியா “அப்பா…” என்று அழைக்க, அவள் அந்த வார்த்தையை முடிக்கும் முன்பே துரையின் கை சந்தியாவை அறைந்து கீழே தள்ளி இருந்தது.
கதிர் “மாமா…” என்று அலற, சித்தார்த்தும் மற்றவர்களும் சந்தியா என்று அழைத்தபடி ஓடி வந்தனர்.
கீழே விழுந்த சந்தியாவைச் சித்தார்த் தூக்கி விட, துரை மீண்டும் அவளை அடிக்க முயல, கதிர் தன் மாமனை தடுத்து நிறுத்தினான். கதிரை பார்த்த துரையின் முகத்தில் ரௌத்திரம் தாண்டவம் ஆடியது.
“உன்னைப் பற்றி நான் உயர்வா நினைச்சிருந்தேன். இந்த மாதிரி சில்லறைத்தனமான வேலையெல்லாம் நீ பண்ண மாட்டேன்னு நம்பி தான், என் பெண்ணை இங்க படிக்க அனுப்பி வச்சேன். என்னோட நம்பிக்கையை இப்படி வேரோட சாச்சிட்டியே….” என்று துரை கதிரை குற்றம் சொல்ல, கதிர் மறுத்துப் பேசாமல் அமைதியாக இருந்தான். எதோ சொல்ல வந்த சந்தியாவையும் பார்வையால் தடுத்து விட்டான்.
அதைப் பார்த்த துரைக்கு மேலும் ஆத்திரம் வந்தது. “உங்க அப்பா அன்னைக்கு உனக்கு ரொம்பப் பரிஞ்சு பேசினாரு.ஆனா, நீயும் மத்தவங்க மாதிரின்னு காட்டிட்ட இல்ல…”
“நீங்க நினைக்கிற மாதிரி இல்ல மாமா, நான் இன்னைக்குத் தான் சந்தியாவைப் பார்க்க வந்தேன்…” கதிர் சொல்ல, அதைக் காதில் வாங்கும் நிலையில துரை இல்லை. ஆத்திரம் அவர் கண்ணையும், அறிவையும் மறைத்தது.
சந்தியாவிடம் திரும்பிய துரை “பொம்பள பிள்ளைங்களைப் படிக்க வச்சா என்ன நடக்கும்னு காட்டிட்ட இல்ல. படிக்க அனுப்பி வச்சா ஒழுங்கா படிக்கிற வேலைய மட்டும் பார்க்கணும். மாப்பிள்ளை பார்க்கும் வேலைய பார்க்கக்கூடாது. அதுக்குத் தான் பெத்தவங்கன்னு நாங்க உயிரோட இருக்கோம்.” என்றார் கடுமையாக.
சந்தியாவுக்கு ஏற்கனவே மற்றவர்கள் முன்பு அடிவாங்கியது. இப்போது அவள் அப்பா அவளைக் குற்றவாளி போல் நிற்கவைத்துக் கேள்வி கேட்பது, எல்லாம் சேர்ந்து அழுகையை வரவழைக்க, அவள் தலை குனிந்தபடி நின்று கொண்டிருந்தாள்.
“போதும் நீ படிச்சு கிழிச்சது. கிளம்பு…” என்றவர் ஒரு நொடி தாமதித்து “நீ என்னோட வருவியா. இல்லை உன் மாமன் தான் முக்கியம்னு அவன் கூடப் போகப்போறியா…” என்று இளக்காரமாகச் சந்தியாவைப் பார்க்க, சந்தியாவிற்கு நெஞ்சில் சுறுக்கென்று வலித்தது. தன் கண்களை ஒரு முறை அழுந்த மூடி திறந்தவள், வேகமாக வாயிலை நோக்கி செல்ல, துரையும் அவள் பின்னே சென்றார்.
இதெல்லாம் ஐந்து நிமிடத்திற்குள் நடந்து முடிந்திருந்தது. அதுவரை அதிர்ச்சியில் நடந்ததைப் பார்த்துக்கொண்டு இருந்த சித்தார்த், சந்தியா அவள் அப்பாவிடம் மறுத்துப் பேசாமல் அவருடன் கிளம்புவதைப் பார்த்தவன்,
“ஒரு நிமிஷம் நில்லுங்க சார்.” என்றான் அழுத்தமான குரலில். துரை நின்று திரும்பி பார்க்க, சந்தியாவும் நின்றாள்.
“நீங்க பாட்டுக்கு வந்தீங்க. எதோ பேசினீங்க இப்ப கிளம்புறீங்க. உங்களுக்கு இங்க என்ன நடந்துச்சுன்னு தெரியுமா. இன்னைக்குப் பார்த்ததை வச்சு நீங்களா ஒரு முடிவுக்கு வராதீங்க. வீணா தப்பா புரிஞ்சிக்கிட்டு சந்தியாவோட படிப்பை நிறுத்திடாதீங்க. கதிர் இன்னைக்குத் தான் முதல் தடவை எங்க காலேஜுக்கு வந்தார்.” என்றான் துரைக்குத் தெளிவு படுத்தி விடும் நோக்கத்தோடு.
சித்தார்த்தை பார்த்து முறைத்த துரை “உன்கிட்ட நான் விளக்கமெல்லாம் கேட்டேனா, நீ யாரு முதல்ல…?” என்றார் கோபமாக.
“நான் சந்தியாவோட ஃபரண்ட்” என்றதும் திரும்பி சந்தியாவைப் பார்த்த துரை, அவளை அடிக்கக் கை நீட்ட, சந்தியா சற்று தள்ளி நின்றதால் அவருக்கு எட்டவில்லை.
“உன்னைப் படிக்க அனுப்பினா, ஆம்பிளை பயல்களை ஃபரண்ட் பிடிக்கிறியோ. உன் பொண்ணு படிக்காம, அவ மாமன் மகனோட ஊர் சுத்துறான்னு, அந்த மகேஷ் பையன் என்கிட்ட வந்து சொன்னபோது கூட நான் நம்பலை. இப்ப நேர்லயே பார்த்துட்டேன். இல்லப்பா சித்தார்த் என் கிளாஸ் தான்ப்பா. கதிர் மாமாவோட நான் எங்கயும் சுத்தல….” என்று சந்தியா சொல்ல,
“பொய் சொல்லாத…” என்ற துரை அவளை ஆத்திரமாக மீண்டும் அடித்தார். அதற்கு மேல் கதிரால் பொறுக்க முடியவில்லை.
“மாமா நீங்க உங்க பெண்ணை விசாரிக்கிறதுன்னா. உங்க வீட்ல வச்சு விசாரிங்க. இது என்ன பழக்கம்…? வெளி இடத்தில வச்சு, நாலு பேரு முன்னாடி சும்மா கை நீட்றது…” என்றான்.
அப்போது பாலாவும் “சார் இப்ப அவனவன் கையில செல் போனை வச்சிக்கிட்டு, எப்படா எதாவது நடக்கும் அதை வீடியோ எடுத்து பத்து பேருக்கு அனுப்புவோம்னு திரியிறானுங்க. அவங்களுக்கு அடுத்தவன் விஷயத்தைல தலையிடுறோமேன்னு அறிவு கூட இல்லை. இப்படி இருக்கிறவனுங்க மத்தியில நாம தான் சார் ஜாக்கிரதையா இருக்கணும்.” என்றான்.
பாலா சொன்னதைக் கேட்டதும் சிறிது அமைதியான துரை “இதுக்கு முன்னே நான் இவளை அடிச்சிருக்கேனா. இதெல்லாம் உன்னால, இதோட என் பொண்ணை விட்டுடு.” என்று கதிரின் பக்கம் கை நீட்டி எச்சரித்துவிட்டு சந்தியாவை இழுத்துக்கொண்டு அங்கிருந்து வேகமாகச் சென்றார்.
துரையும், சந்தியாவும் சென்றதும் “நீங்க ஏன் கதிர் அமைதியா இருந்தீங்க…? சந்தியாவை ஏன் அவங்க அப்பாவோட போக விட்டீங்க…? அவர் இப்பவே இப்படி அடிக்கிறார். இன்னும் சந்தியா அவரோட போனா என்ன நடக்குமோ….” என்று சித்தார்த் வருந்த,
“அவ யாரோ தெரியாதவர் கூடப் போகலை. அவளோட அப்பாவோட தான் போறா. நான் சந்தியாவுக்குப் பரிந்து பேசினா. இன்னும் அவர் ஆத்திரம் அதிகம் ஆகும். அதையும் சந்தியா கிட்ட தான் காமிப்பார். நீ கவலைப்படாதே இன்னும் கொஞ்ச நேரத்தில அவர் தானே அமைதியாகிடுவார்.”
நடந்தையெல்லாம் ஒரு திகில் படம் பார்ப்பது போல் ஸ்ரீஜா பார்த்திருக்க. “அவ அப்பா ரொம்பக் கோபமா இருக்காரே. சந்தியாவை இனிமே காலேஜ் அனுப்புவாரா…” என்று அனு கேட்டாள்.
அவள் பக்கம் திரும்பிய கதிர் “நான் பெங்களூர்ல வேலை கிடைச்சு அங்க போறேன். அதைச் சொல்லி நான் அவரைச் சம்மதிக்க வைக்கிறேன். இப்ப உடனே அவர் கிட்ட பேச முடியாது. நான் எங்க அப்பா மூலமா பேசி புரியவைக்கிறேன்.” என்றவன், சித்தார்த்திடம் விடைபெற்று பாலாவை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான்.
கதிர் சென்றதும் சித்தார்த் மனம் கேட்காமல் அனுவை ஹாஸ்டலுக்கு அனுப்பி வைத்தான். அனு சென்ற போது சந்தியாவின் அப்பா ஹாஸ்டல் வராண்டாவில் உட்கார்ந்திருக்க, சந்தியா அவள் அறையில் பெட்டியில் துணிகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள்.
அனுவை பார்த்ததும் சந்தியா அவளை “வா அனு…” என்று சாதரணமாக வரவேற்றாள்.
“உனக்கு பயமா இல்லையா சந்தியா. உங்க அப்பா உன்னைத் திரும்பக் காலேஜ் அனுப்பலைன்னா நீ என்ன பண்ணுவ…?”
“தெரியலை… என்னால இப்ப எதுவும் யோசிக்க முடியாது. ஊருக்குப் போய்த் தான் பார்க்கணும்…” என்றவளின் செல்லை அவள் அப்பா வாங்கிக் கொண்டதால், அனுசெல்லில் இருந்து சித்தார்த்தை அழைத்தாள்.
சந்தியாவின் குரலை கேட்டதும் தான் சித்தார்த்துக்குஇயல்பாக மூச்சு வந்தது. “சந்தியா உனக்கு ஒன்னும் இல்லையே.நீ நல்லா தான இருக்க…” என்று கேட்டவனின் குரலில் அவ்வளவு பதட்டம்.
“அதெல்லாம் நல்லா தான் இருக்கேன். நீ தான் டென்ஷனா இருந்த, அது தான் உனக்கு முதல்ல போன் பண்ணேன்..”
“என்ன உங்க அப்பா இப்படிப் பேசுறார். ஆனா நீயும், கதிரும் சாதாரணமா இருக்கீங்க.” என்று சித்தார்த் ஆதங்கம் தாங்காமல் கேட்டு விட.
“நீ இப்ப தான அவரைப் பார்க்கிற, அது தான் அப்படி. நாங்க சின்ன வயசுல இருந்து அவரைப் பார்க்கிறோம். அதனால அவர் கோபம் எங்களுக்கு அத்துப்படி.”
“இருந்தாலும் சந்தியா உங்க அப்பா உன்னைக் காலேஜ் அனுப்பலைன்னா என்ன பண்றது?” என்று சித்தார்த் கேட்க,
சந்தியாவுக்கும் அந்தப் பயம் மனதில் இருக்கத் தான் செய்தது. ஆனால் அதை மறைத்து “அதெல்லாம் அனுப்புவார். நான் எங்க வீட்டுக்கு போய் அவருக்குக் கொடுக்கிற டார்ச்சருல, என்னைப் பத்தி விட்டுட்டு தான் மறு வேலை பார்ப்பார்.
அதனால நான் காலேஜ்க்கு வரமாட்டேன்னு நினைச்சு நீ சந்தோஷமா இருக்காத, உன்னைத் தொல்லைப் பண்ண நான் கண்டிப்பா காலேஜ்க்கு வருவேன்…” என்றாள்.
அதைக் கேட்டு சித்தார்த் சிரித்தான்.சித்தார்த்திடம் கேலியாகப் பேசி போன்னை வைத்த சந்தியா அடுத்து கதிரை அழைத்தாள். கதிர் போனை எடுத்ததும் “மாமா….” என்றாள்.
சந்தியாவின் குரலை கேட்டதும் பாலாவிடம் பைக்கை ஓரமாக நிறுத்த சொன்ன கதிர், “நானே உன்கிட்ட எப்படிப் பேசுறதுன்னு நினைச்சிட்டிருந்தேன், நல்ல வேளை நீயே போன் பண்ணிட்ட. நான் இன்னைக்கே ஊருக்கு வந்தா. மாமாவோட கோபம் இன்னும் அதிகம் ஆகும். அதனால ரெண்டு நாள் கழிச்சு வரேன். அப்பாக்கிட்ட பேசுறேன் அவர் பார்த்துப்பார். சரியா….” என்ற சமாதானம் செய்ய. சந்தியா அரைமனதாகச் சரி என்றாள்.
அதை உணர்ந்த கதிர் “என்னடா…” என்றதும், சித்தார்த்திடம் மனதை மறைத்து பேசியது போல், கதிரிடம் அவளால் மறைக்க முடியவில்லை. சந்தியா உடைந்து அழுதாள்.