சந்தியா கண் கலங்குவதைப் பார்த்த சித்தார்த் புன்னகையுடன், சற்று தள்ளி நின்ற அனுவையும், ஸ்ரீஜாவையும் அவளுக்குக் காண்பித்தான். பின்பு சந்தியாவிடம் திரும்பி சாமி கும்பிடும்படி ஜாடை செய்தான்.
சந்தியாவும் புன்னகையுடன் முன்புறம் திரும்பினாள். அப்போது தான் அவளையே பார்த்துக்கொண்டிருந்த துரையைப் பார்த்தாள். துரை அவளைப்பார்த்து முறைத்துக்கொண்டிருந்தார். ஐயோ! கடவுளே! இவர் வேற பார்த்துட்டாரா என்று நினைத்த சந்தியா, சாமி கும்பிடுவது போல் கண்களை மூடிக்கொண்டாள்.
“டேய் மெயின் பிச்சரை மறைச்சுட்டு, நீ என்னடா சைட்ல ட்ரைலர் ஓட்ற…”பாலா சித்தார்த்தை பார்த்து கேட்க,
“பின்ன என்ன பாலாண்ணா, நாங்க வந்திருக்கிறதை சொல்லாம. இவர் மட்டும் சந்தியாவை நல்லா சைட் அடிக்கிறார்.” என்றான் சித்தார்த் கடுப்புடன். அவன் சொன்ன தினுசில் பாலாவும், கதிரும் வாய்விட்டு சிரித்தனர்.
அவர்கள் சிரிப்புச் சத்தத்தில் திரும்பி பார்த்த உறவினர்களிடம், அவன் நண்பர்கள் என்று பாலாவையும், சித்தார்த்தையும் காட்டி சொன்னவன். அனுவையும், ஸ்ரீஜாவையும் சந்தியாவின் தோழிகள் என்று அறிமுகம் செய்தான்.
அனுவும், ஸ்ரீஜாவும் சென்று சந்தியாவுடன் நின்று கொண்டனர். சந்தியா அவர்களை நலம் விசாரித்தாள். ஆனால் அப்போதும் வெளிப்படையாகத் தன் மகிழ்ச்சியைக் காண்பிக்காமல் அமைதியாக நின்றாள்.
கோவிலில் பூஜை முடிந்ததும், கதிர் சந்தியாவிற்குப் பாலாவின் மனைவி ராஜியை அறிமுகம் செய்தான். சந்தியாவோடு அவள் வீட்டுக்கு அனு, ஸ்ரீஜா, மற்றும் பாலாவின் மனைவியும் குழந்தையும் செல்ல, கதிர் தன்னோடு பாலாவையும், சித்தார்த்தையும் அழைத்துக்கொண்டு சென்றான்.
கதிரின் அறை என்பது மிகவும் பெரிதாக இருந்தது. நல்ல வெளிச்சத்தோடு, காற்றோட்டமாக இருந்தது. அந்த அறையிலேயே சித்தார்த், பாலா மற்றும் கதிர் மூவரும் தங்கிக்கொண்டனர்.
உறவினர்களுக்கு அவர்களுடைய இன்னொரு வீட்டை காலி செய்து ஒதுக்கி இருந்தனர். அதில் உறவினர்கள் தங்கிக்கொள்ள, கீழே இருந்த அறையில் சுபாஷும், காவேரியும் இருந்தனர். கதிர் விரும்பி அழைத்ததால் சுபாஷின் பெற்றோரும் வந்திருந்தனர்.
அதோடு பெரியசாமி சுபாஷின் உறவினர்களுக்கும் முறைப்படி பத்திரிக்கை வைத்திருந்தார். அது வேறு துரையின் கோபத்தை மேலும் அதிகரித்து இருந்தது. துரை முகத்தைக் கடு கடுவென்று வைத்துக்கொண்டே சுற்றிக்கொண்டு இருந்தார்.
அங்கே வீட்டுக்கு வந்ததும், சந்தியா தன் தோழிகளைக் கட்டிக்கொண்டு உற்சாகமாக சத்தமிட்டபடி ஆட்டம் போட, ஹப்பாடா, நம்ம சந்தியா வந்தாச்சு என்பது போல் அனுவும், ஸ்ரீஜாவும் அவளைப் பார்க்க. அப்போது சமையல் அறையில் இருந்து குழம்பு கரண்டி பறந்து வந்தது.
“நாளன்னிக்குக் கல்யாணம் ஆகப்போற பொண்ணு மாதிரியா இருக்க. இப்படிச் சத்தம் போட்டு ஆடினா, வீட்டுக்கு வந்திரிக்கிற சொந்தமெல்லாம் என்ன நினைப்பாங்க…? நான் பொண்ணை சரியா வளர்க்கலைன்னு தான் சொல்வாங்க.” என்று வேதவல்லி திட்டிக்கொண்டே அங்கே வந்தார்.
சந்தியா தன் இடுப்பில் கை வைத்து நின்று கொண்டு “போ மா, நீ போ….” என்று ஜெயம் சதா போல் பேசிக்காட்ட. அவள் குறும்பை பார்த்து உறவினர்கள் சிரிக்க, வேதவல்லி “அடி செருப்பாலா…” என்று அடிக்க வர, சந்தியா அங்கிருந்து தன் தோழிகளை அழைத்துக்கொண்டு சிட்டாகப் பறந்தாள்.
அதைப் பார்த்து வேதவல்லியும், அவள் மாமியாரும் மனம் நிறையச் சிரித்தனர். அவர்களுக்கு இப்போது தான் பழைய சந்தியாவைப் பார்ப்பது போல் இருந்தது. சந்தியாவின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்த்ததும் தான் வீட்டிற்க்கே ஒரு கல்யாணக் கலை வந்தது போல் இருந்தது. வீட்டில் துரை எப்போதும் உர்ரென்று இருப்பதால் சந்தியாவும் மெளனமாக ஒதுங்கி சென்று விடுவாள்.
மாடிக்கு வந்ததும் “ஹப்பா, என்னோட ரூமுக்கு வந்தாச்சு. இனி இங்க என்ன ஆட்டம் வேணா போடலாம்.” என்றவளுக்கு, அப்போது தான் பாலாவின் மனைவி ராஜி நினைவுக்கு வர. அனுவையும், ஸ்ரீஜவையும் அவள் அறையில் இருக்கச் சொல்லிவிட்டு பாலாவின் மனைவியைத் தேடி கீழே சென்றாள்.
அதற்குள் வேதவல்லி ராஜிக்கும், அவள் மகளுக்கும் குடிக்க எதோ கொடுத்துக்கொண்டிருந்தார். சந்தியாவைப் பார்த்ததும் முறைத்த வேதவல்லி “கதிரு உன்னை நம்பி தான் இவங்களை இங்க அனுப்பி வச்சது. இது தான் நீ பார்த்துக்கிற லட்சனமா…” என்றதும்,
சந்தியா தவறு செய்த குழந்தையைப் போல் ராஜியை பார்க்க, “விடுங்கம்மா கல்யாணத்துக்கு முன்னாடி தான் இப்படி எல்லாம் ஆட்டம் போட முடியும். இதைப் போய் பெரிசு பண்ணிக்கிட்டு…” என்று சந்தியாவுக்கு ராஜி பரிந்து பேச, சந்தியாவின் முகம் மலர்ந்தது.
“அப்படிச் சொல்லுங்க…” என்ற சந்தியா ராஜியின் மகளைத் தூக்கியவள் “பாப்பாவோட பேரு என்ன…?” என்று கேட்டபடி அவர்களை அழைத்துக்கொண்டு மாடியில் இருக்கும் அவள் அறைக்குச் சென்றாள்.
சந்தியாவின் அறைக் குளிர் சாதனம் பொருத்தப்பட்டது, அதனால் குளிர்ச்சியாக இருந்தது. காலையில் மதுரை ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்த ஹோட்டலில் குளித்து, காலை உணவை அருந்திவிட்டே வந்திருந்ததால். இப்போது சந்தியாவின் அறையில் முகம் மட்டும் கழுவி கொண்டனர். வெயிலுக்கு இதமாக எல்லோருக்கும் இளநீர் வந்தது.
சிறிது நேரம் எல்லோரும் உட்கார்ந்து அரட்டை அடித்தனர். அப்போது மதிய உணவுக்கு அழைப்பு வர.
“நாங்க திடீர்னு சொல்லாம வந்திருக்கோமே. சாப்பாடு பத்துமா….” என்று ஸ்ரீஜா கவலைப்பட,
அவளை லூசாப்பா நீ என்பது போல் ஒரு பார்வை பார்த்த சந்தியா “இது உங்க ஊர்ன்னு நினைச்சியா, இங்க எல்லாம் வீட்டுக்கு வந்தவங்களைச் சாப்பிடாம அனுப்ப மாட்டாங்க. அது எந்நேரம் வந்தாலும் சரி. எப்பவும் வீட்ல கூட ரெண்டு ஆளுக்குச் சேர்த்து தான் சமைப்பாங்க. அதுவும் வீட்ல இப்ப விசேஷம். ஊரே இங்க வந்து தான் சாப்பிடும்.” என்று விளக்கியபடி அவர்களைச் சாப்பிட அழைத்துக்கொண்டு சென்றாள்.
மதிய விருந்து தடபுடலாக இருந்தது. எல்லோரும் ஒரு வெட்டு வெட்டிவிட்டு அறைக்கு வந்தனர். உண்ட களைப்பில் மற்றவர்கள் தூங்கி விட, சித்து என்ன செய்கிறானோ என்று கவலைப்பட்ட சந்தியா அவனைச் செல்லில் அழைத்தாள். அவன் எடுக்கவில்லை என்றதும் கதிரை அழைத்தாள்.
“என்ன உன் ஃபரண்ட் எப்படி இருக்கான்னு விசாரிக்கப் போன் பண்ணியா…..” என்று கதிர் சரியான காரணம் சொல்லிவிட,
அவனிடம் உண்மையை ஒப்புக்கொள்ளாமல் “இல்லையே, நான் உங்க கூடப் பேச தான் போன் பண்ணேன்.” என்றாள் சந்தியா வீம்பாக.
“அப்படியா சரி…” என்ற கதிரும் சித்தார்த்தை பற்றிப் பேசாமல் வேறு விஷயம் பேச, சிறிது நேரம் பொறுத்த சந்தியா அதற்குமேல் முடியாமல் “சித்து எங்க…? சாப்பிட்டானா…” என்று கேட்டாள்.
“யாருக்கு தெரியும்…” என்று கதிர் அலட்சியமாக பதில் சொல்ல,
“என்ன இப்படிச் சொல்றீங்க…? நான் அவனை உங்களை நம்பி தான அங்க விட்டேன். வீட்டுக்கு வந்த விருந்தாளிய கவனிக்காம அப்படி என்ன பண்றீங்க?” என்றாள் சந்தியா கோபமாக.
“என்னது நீ அவனை இங்க விட்டியா….” என்று அதிர்ந்த கதிர் “நான் அவனுக்கு நேர்ல போய்ப் பத்திரிகை கொடுத்து. அவனை மதுரை வரை ட்ரைன்ல வர வச்சு, நானே ரயில்வே ஸ்டேஷன் போய், அங்கிருந்து கார் பிடிச்சு, எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்தா, பத்திரிக்கையைப் போஸ்ட்ல மட்டும் அனுப்பி வச்சிட்டு, அவன் வந்தா வரட்டும்னு இருந்த நீ சொல்ற, என்னை நம்பிட்டேன்னு. இது உனக்கே அநியாயமா தெரியலை….” என்று சொன்னதும்,
“சாரி, சாரி, சாரி… நான் ஒரு ப்லோல சொல்லிட்டேன்.” என்று சந்தியா கதிரிடம் சரணடைய,
கதிர் “அது! அந்தப் பயம் இருக்கட்டும்…” என்றான் புன்னகையுடன்.
அவன் சொன்னதை ரசித்த சந்தியா முழு மனதுடன் “தேங்க்ஸ் மாமா…” என்றாள்.
“சித்தார்த் எங்களோட தான் வந்தான் சந்தியா. மேல என்னோட ரூமுக்கு வந்து அவன் பெட்டியை வச்சிட்டு, முகம் கழுவிட்டு வந்தான். அப்ப சாப்பிட கூப்பிட்டாங்க, கீழே போனோம். அவனும் எங்களோட தான் சாப்பிட உட்கார்ந்தான்.”
“அப்ப நம்ம வெங்கடேஷ் இல்ல (கதிரின் சித்தப்பா மகன்) அவன் வந்தான். வந்தவன் இவனைப் பார்த்து இதையா நீங்க சாப்பிட போறீங்க. வேண்டாம் வாங்க வேற இருக்குன்னு சொல்லி கூடிட்டுப் போனான். அப்ப போனவன் தான் இன்னும் வரலை….” என்று கதிர் சொன்னதும்,
சந்தியா சித்தார்த்தை நினைத்து பயப்பட “அதெல்லாம் நல்லா பார்த்துப்பான். நான் சொல்லி தான் அனுப்பியிருக்கேன். நீ கவலைப்படாதே” என்று கதிர் சந்தியாவைச் சமாதானம் செய்ய,
“அவங்களோட பாலா அண்ணா போகலயா….” என்று சந்தியா கேட்க,
வாய்விட்டு சிரித்த கதிர் “இதையே தான் பாலாவும் கேட்டான். நானும் வரட்டுமான்னு. ஆனா கல்யாணம் ஆனவங்க இல்லைன்னு சொல்லி அவனை இங்கயே விட்டுட்டு போய்ட்டான்…” என்றதும், அந்தப் பக்கம் சந்தியாவும் சிரிக்க,
“டேய் புதுசா கல்யாணம் பண்ணப்போறவங்க பேசுற பேச்சா இது. ஒரு சின்னப் பையனை வச்சு காமெடி பண்ணிக்கிட்டு. பேச்சை மாத்து….” என்று பாலா கட்டிலில் திரும்பி படுக்க, தரையில் படுத்திருந்த கதிர் “சரி பிறகு பேசுறேன்.” என்று போனை வைத்தான்.
கதிர் போனை வைத்ததும் “டேய் நீ கல்யாணம் பண்ணப்போற பொண்ணுக்கிட்ட பேசுற மாதிரியா பேசுற. நீ எப்பவும் சந்தியாவோட இப்படித்தான் பேசுவியா. இல்லை. நான் இருக்கேன்னு இன்னைக்கு இப்படிப் பேசுறியா….” என்று பாலா கேட்டதும், கதிர் எதுவும் சொல்லாமல் சமாளிக்கத்தான் பார்த்தான். ஆனால் பாலா விடவில்லை.
ஒரு ஆழ்ந்த பெருமூச்சை விட்ட கதிர் “என்ன பேச சொல்ற…? எனக்கும் நீ சொல்றது புரியத்தான் செய்யுது. ஆனா சில விஷயங்கள் அந்தந்த காலகட்டத்தில நடந்தா தான் நல்லாயிருக்கும்.”
“இதே சந்தியா அவ படிப்பை முடிச்ச பிறகு எங்க கல்யாணம் நடந்தா. நானும் நீ சொல்றபடி தான் இருந்திருப்பேன். சந்தியாவுக்குக் காலேஜ் திறந்தாச்சு. கல்யாணம் முடிஞ்ச நாலு நாள்ல, நான் அவளைக் காலேஜ்ல விட்டுட்டு பெங்களூர் போய்டுவேன். படிக்கிற பொண்ணுக்கிட்ட காதல் வசனம் பேசி மனசை கலைக்கச் சொல்றியா…” என்று கதிர் வருத்ததுடன் கேட்டபோது. பாலாவுக்கு கதிரின் நிலை நன்றாகவே புரிந்தது.
அவனும் திருமணமானவன் தான். அவனுக்குத் திருமணம் முடிந்த பிறகு மனைவியைப் பிரிந்து இருப்பது எவ்வளவு கஷ்டம் என்று தெரியும். கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரின்னு இதைத் தான் சொல்வாங்களோ என்று மனதில் நினைத்தான்.