சந்தியா வீட்டிற்குள் வரும் போதே அவளின் அழுது சிவந்திருந்த விழிகளைக் கதிர் கவனித்தான். வேதவல்லி தான் கொண்டு வந்த பலகாரத்தை எல்லோருக்கும் அவரே தட்டில் வைத்து கொடுக்க, சந்தியா மாடிக்கு சென்று விட்டாள்.
சந்தியா மேலே சென்றதும், இன்று வீட்டில் சந்தியா துரையிடம் பேசியதை சொல்லி கண்கலங்கிய வேதவல்லி “எங்களுக்கும் அவ ஒரு பொண்ணு தானே அண்ணி. அவளுக்குச் செய்யாம வேற யாருக்குச் செய்யப் போறோம். அவங்க அப்பா தான் வீம்புக்குன்னு எல்லாத்தையும் செய்றார். நானும், சந்தியாவும் என்ன தப்பு பண்ணோம். நான் எங்க வீட்டுக்கு சந்தியா வரும்போது போட பாதி நகையை எடுத்து வச்சிட்டேன். மீதி இங்க இருக்கட்டும். அவ இங்க வரும் போது போட்டுக்கட்டும்…” என்று லக்ஷ்மியிடம் நகைகளைக் கொடுக்க,
பெரியசாமியும், கதிரும் அமைதியாக இருந்ததால், லக்ஷ்மியும் நகைகளை வாங்கி உள்ளே வைத்துக்கொண்டார். சந்தியா இன்னும் பலகாரம் சாப்பிடவில்லை என்றதும் கதிர் அவளுக்கு அவனே எடுத்துக்கொண்டு மேலே சென்றான்.
கதிர் அவர்கள் அறைக்குச் சென்ற போது, சந்தியா பெட்டி அடுக்கிக் கொண்டிருந்தாள். சந்தியா கதிரை கண்டுகொள்ளவே இல்லை. சந்தியாவின் முகத்தைப் பார்த்த கதிர் ‘ரொம்பக் கோபமா இருக்கா போலிருக்கே. இவளை எப்படிச் சமாளிக்கிறது…’ என்று யோசிக்க ஆரம்பித்தான்.
சந்தியா ஊருக்கு செல்ல, ஒவ்வொன்றாகப் பார்த்து எடுத்து வைக்க, கதிர் அவள் பின்னாடியே சுற்றிக்கொண்டிருந்தான். சிறிது நேரம் அவன் சேட்டையைப் பொறுத்தவள் “என்னை இப்படிச் சுத்துறதுக்குப் பதிலா. கோவிலை சுத்தினாவாவது, புண்ணியம் கிடைக்கும்..” என்றாள்.
கதிர் “எனக்குப் பொண்டாட்டி தான்பா தெய்வம்…” என்று கை எடுத்து கும்பிட,
“இந்தப் பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. போதும் எனக்குச் சாம்பராணி போட்டது. போய் உங்க பெட்டிய அடுக்குங்க…” என்று சந்தியா சொன்னதும்,
கட்டிலில் ஏறி நன்றாகச் சாய்ந்து படுத்து, கால் மேல் கால் போட்டுக்கொண்ட கதிர் “நான் ஏன் அடுக்கனும்…? எனக்குப் பொண்டாட்டி வந்தாச்சுப்பா. இனி இதெல்லாம் அவள் வேலை…” என்றான்.
சந்தியா கதிரை பார்த்து முறைக்க, கதிர் ‘ப்ளீஸ்…’ என்று பார்வையால் கெஞ்ச, சந்தியா போனால் போகிறது என்று அவன் பெட்டியை எடுத்து அடுக்க ஆரம்பித்தாள்.
சந்தியாவுக்கே இதற்கு முன்பு வரை வேதவல்லி தான் பெட்டி அடுக்கிக்கொடுப்பார். அதனால் அவளுக்கே சரியாக அடுக்க வரவில்லை. அதைக் கவனித்த கதிர். எழுந்து வந்து அவளுக்கு உதவி செய்தவன் “இப்படித் தான் உன் பெட்டியையும் அடுக்கினியா…” என்றவன், அவளுடைய பெட்டியையும் திறந்து ஒழுங்காக அடுக்க ஆரம்பிக்க,
சந்தியா அதில் உள்ளாடைகள் எல்லாம் வைத்திருந்ததால் “வேண்டாம் மாமா. இருக்கட்டும் பரவாயில்லை…” என்று சொன்னதைக் கதிர் கண்டுகொள்ளவே இல்லை.
கதிர் அடுக்கி முடித்த போது. அதில் இன்னும் துணிகள் வைக்க நிறைய இடம் இருந்தது. அவ்வளவு நேர்த்தியாக அடுக்கியிருந்தான்.இருவரின் பெட்டிகளையும் கொண்டு போய் ஓரமாக வைத்து விட்டு வந்த கதிர், சந்தியாவை இழுத்து தன் மடிமேல் உட்கார வைத்துக் கொண்டான்.
“ஊருக்கு போறத சொல்லிக்கத்தான் உங்க வீட்டுக்கு போன. அதைப் பண்ணாம எதுக்குடி உங்க அப்பாக்கிட்ட சண்டைக்குப் போன…” என்று கதிர் சொன்னதும், சிலிர்த்து எழுந்த சந்தியாவை விடாமல் இறுக்கி பிடித்த கதிர் “உதை பிச்சிடுவேன், ஒழுங்கா இங்கயே உட்காரு…” என்றான் அதட்டலாக.
“அவர் தான் என்னை வம்பிழுத்தார், நான் என்ன பண்றது..?” என்று சந்தியா கேட்க,
“சந்தியா நீ ஒன்னு புரிஞ்சிக்கோ. எனக்கும், உங்க அப்பாவுக்கும் தான் பிரச்சனை. அதை நாங்க சரி பண்ணிக்கிறோம். உனக்கு அவர் நல்ல அப்பா. நீ எப்பவும் போல அவர்கிட்ட இரு. அதை விட்டுட்டு நீ எனக்காக அவர் கிட்ட சண்டை போட்டா, அவருக்கும் எனக்கும் இருக்கிற விரிசல் இன்னும் அதிகம் தான் ஆகும்.” என்று கதிர் சொல்லிவிட்டு சந்தியாவின் முகத்தைப் பார்க்க, அவள் கதிரின் மார்பில் சாய்ந்து தூங்குவது போல் நடித்தாள்.
அவளின் நடிப்பை புரிந்து கொண்ட கதிர், அவள் இடையில் விரல்களால் கிச்சு கிச்சு மூட்ட, சந்தியா துள்ளி எழுந்தாள்.
“போதும் உங்க அட்வைஸ்…” என்ற சந்தியா அங்கிருந்த பலகார தட்டை கையில் எடுத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்தவள், அதை உள்ளே தள்ளும் வேலையைச் செவ்வனே பார்க்க, கதிர் கட்டிலில் படுத்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஏன் டி புருஷனுக்கு வேணுமான்னு ஒரு பேச்சுக்காவது கேட்கிறியா…” என்றதும், சந்தியா பாதி கடித்த வடையுடன் கதிரை பார்க்க, அவன் அவளை வா என்று அருகில் அழைத்தான்.
சந்தியா வாயில் பாதி வடையும், கையில் பாதி வடையுமாகக் குழந்தை போல் தவிழ்ந்து கதிரின் அருகில் செல்ல, அவளை இழுத்துத் தன் மேல் போட்ட கதிர், அவள் கையிலிருந்த வடையை வாங்காமல், அவள் வாய்க்குள் வைத்திருந்த வடையைச் சுவைக்க, அங்கே ஒரு முத்த யுத்தம் அரங்கேற்றம் ஆனது.
புதிதாகத் திருமணம் ஆனவர்கள், அதோடு இன்று ஊருக்கும் செல்வதால். கதிரும், சந்தியாவும் தங்கள் பிரிவு உபச்சார விழாவை எல்லையைக் கடக்காமல் கொண்டாடி மகிழ்ந்தனர். ஊருக்குச் செல்ல நேரமாகி விட்டதால். கீழேயிருந்து லக்ஷ்மியும், வேதவல்லியும் மாற்றி மாற்றி அழைத்தும். கதிரும், சந்தியாவும் கீழே இறங்கி வரும் வழியைக் காணோம். அவர்கள் வேறு உலகத்தில் இருந்தனர்.
“இதுக்கு மேல நீங்க வரலைன்னா. பஸ் போய்டும்….” என்றதும் தான், இருவரும் அடித்துப் பிடித்து வேகமாகக் கிளம்பி வந்தனர். இருவரும் வேகமாக உணவை அள்ளி வாய்க்குள் போட்டுவிட்டு. எல்லோரிடம் சொல்லிக்கொண்டு விடைபெற்றனர்.
வெங்கி தான் அவர்கள் இருவரையும் காரில் பேருந்து நிலையம் அழைத்துக்கொண்டு சென்றான். காரில் சென்று கொண்டிருந்த போது, காரை துரையின் கடையின் எதிரே நிறுத்தச் சொன்னான் கதிர்.
வெங்கி காரிலிருந்து இறங்கியதும் சந்தியாவிடம் திரும்பிய கதிர் “போய் உங்க அப்பாக்கிட்ட சொல்லிட்டு வா. அவர் நீ இந்தப் பக்கம் வருவேன்னு தெரிஞ்சு. இங்க தான் இருப்பார்…” என்றான்.
சந்தியா கதிரை பார்த்து முறைக்க “ப்ளீஸ் சந்தியா என்னால நீயும், உங்க அப்பாவும் சண்டை போடுறது, எனக்குக் கஷ்டமாயிருக்கு. நம்மைப் பெத்தவங்கக்கிட்ட கௌரவம் பார்க்க கூடாது….” என்றதும் சந்தியா காரிலிருந்து இறங்கி அவள் அப்பாவின் கடையை நோக்கி சென்றாள். கதிரும் காரிலிருந்து இறங்கி வெளியே நின்றான்.
துரைக்குச் சந்தியா இந்தப் பக்கம் தான் போவாள் என்று தெரியும். அதனால் அவர் வாசலை தான் பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் அவள் கடைக்கு வருவாள் என்று எல்லாம் அவர் எதிர்ப்பார்க்கவில்லை. எதிர்பாராமல் மகளைச் சந்தித்ததும், அவர் கோபம் எங்கே போனது என்றே தெரியவில்லை.
“சரி பாப்பா. பார்த்து போங்க. அடிக்கடி ஊருக்கும் வாங்க…” என்று துரை சொன்னபோது, அவர் குரலும் நெகிழ்ந்து தான் இருந்தது. துரை கதிரையும் சேர்த்துப் பன்மையில் தான் பேசினார். ஆனால் சந்தியா அதைக் கவனிக்கவில்லை.
சந்தியா காரை நோக்கி செல்ல, துரையும் அவளோடு சென்றவர் “சாப்பிட்டீங்களா…” என்று கேட்க,
சந்தியா சாப்பிட்டோம் என்றாள். அப்போது மணி ஏழு தான். “இப்போவேவா இவ்வளவு சீக்கிரம் சாப்பிட்டா நைட் பசிக்குமே….” என்றவர் “இரு வரேன்…” என்று அருகில் இருந்த கடைக்குச் சென்று எதோ வாங்கி வந்தார்.
துரை சந்தியாவிடம் ஒரு கவரை கொடுத்து “பஸ்ல சாப்பிடுங்க…” என்றதும் “எதுக்குப்பா இதெல்லாம். ஏற்கனவே அம்மாவும், அத்தையுமே நிறையக் கொடுத்திருக்காங்க.” என்று சந்தியா மறுக்க,
“இருக்கட்டும் வச்சிக்கோ…” என்றவர் மகளோடு காரை நோக்கி செல்ல, கதிர் அங்கே நின்று கொண்டிருப்பதைப் பார்த்த சந்தியா “அப்பா நீங்க இங்கயே இருங்க. நான் போய்க்குறேன்…” என்றாள் மெதுவாக. துரை நின்று சந்தியாவை ஏன் என்பது போல் பார்க்க,
“நீங்க அங்க வந்துட்டு மாமாவோட பேசலைன்னா. அவங்க ரொம்ப வருத்தப்படுவாங்கப்பா. உங்களுக்குக் கதிர் மாமா மேல எதாவது வருத்தம் இருந்தா. அதுக்குக் காரணம் நான் தான். கதிர் மாமா இல்லை. அவங்க என்னை விட்டு விலகி தான் இருந்தாங்க. நான் தான் அவங்களுக்குப் போன் பண்ணிட்டே இருந்தேன். அதனால் தான் அன்னைக்கு அவங்க காலேஜ்க்கு வந்தாங்க.”
“ஆனா. நீங்க கதிர் மாமாவை தப்பா நினைச்சு பேசிட்டீங்க. எனக்கு நீங்க ரெண்டு பேருமே முக்கியம். நீங்க ஒருத்தருக்கு ஒருத்தர் பேசாம முறைச்சிட்டு இருந்தா. நான் எப்படிப்பா சந்தோஷமா இருக்க முடியும். உங்களுக்குக் கதிர் மாமாவோட பேச பிடிக்கலைன்னா அமைதியா இருங்க. ஆனா அவங்க வருத்தப்படுற மாதிரி எதுவும் செஞ்சிடாதீங்கப்பா. அதை என்னால தாங்க முடியாது.” என்ற சந்தியா வேகமாகச் சென்று காரில் ஏற, துரை அதே இடத்தில் திகைத்து போய் நின்றுவிட்டார்.
வெங்கியோடு பேசிக்கொண்டிருந்த கதிர் சந்தியா காரில் ஏறியதும். திரும்பி அவன் மாமனாரை பார்த்துவிட்டு, அவனும் காரில் ஏறினான். கார் கிளம்பியதும் சந்தியா துரையைப் பார்த்துக் கை அசைக்க, அவரும் பதிலுக்குக் கை அசைத்தார். அதைப் பார்த்த கதிர் நிம்மதி அடைந்தான்.
இவர்கள் பேருந்து நிலையம் வந்த போது, இவர்கள் செல்ல வேண்டிய பேருந்து கிளம்பிக் கொண்டிருந்தது. கதிரும், சந்தியாவும் ஓடிச் சென்று அதில் ஏறினர்.இருவரும் சென்று அவர்கள் இருக்கையில் அமர்ந்ததும் “சந்தியா நான் கூடிய சீக்கிரம் சென்னை வருவேன்.” என்று வெங்கி சொல்ல,
“அப்படியா! நீ யாரு…? உன்னை எனக்குத் தெரியாதே…” என்றாள் சந்தியா முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு. அதைப் பார்த்து கதிர் சிரிக்க,
“ஹே! போயும் போயும் உன்னையா பார்க்க வருவேன். உனக்கு ரொம்பத் தான் ஆசை. நானே எங்க அண்ணன் உன்கிட்ட மாட்டிக்கிட்டாறேன்னு வருத்தத்துல இருக்கேன். இதுல இந்த அம்மாவை பார்க்க வேற வர்றாங்களாம். நான் உன்னைப் பார்க்க வரல. என்னோட ஃபரண்ட் சித்துவை பார்க்க வரேன். அவன் என்னை வர சொல்லியிருக்கான். ஒரு நாலு நாள் வந்து தங்குற மாதிரி ப்ளான்.” என்று வெங்கி நன்றாகச் சந்தியாவை வெறுப்பேற்ற, சந்தியா கதிரை பாவமாகப் பார்த்தாள்.
“அவன் கிடக்கிறான் லூசு. மாமா உன்னைப் பார்க்க வரேன்.” என்று கதிர் அவளைச் சமாதானம் செய்ய, சந்தியா வெங்கிக்கு நாக்கை துருத்தி அழகு காட்டினாள்.
அது படுக்கை வசதி கொண்ட பஸ் என்பதால் கதிரும், சந்தியாவும் வசதியாகப் படுத்துக்கொண்டனர். நடைப்பாதை பக்கம் இருந்த திரையை இழுத்து விட்டு. ஜன்னல் பக்கம் இருந்த திரையைத் திறந்து விட, வானில் ஜொலித்த பால் நிலவும் அவர்களோடு தொடர்ந்து பயணம் செய்தது.
காற்றுக்காக ஜன்னலை திறந்து வைத்தவர்கள், மற்றவர்களுக்குக் கேட்க கூடாது என்பதற்காக நெருங்கி படுத்து, மெதுவாகப் பேசிக்கொண்டே வந்தனர். இருவருக்கும் இந்தப் பயணம் முடியாமல். தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது.
விடியற்காலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தவர்கள், ஒரு ஆட்டோ பிடித்து, சந்தியாவின் ஹாஸ்டலுக்குச் சென்றனர். சந்தியாவை அங்கே இறக்கி விட்ட கதிர் “சரிடா. பார்த்து இருந்துக்கோ. நான் இப்படியே சென்ட்ரல் போய் அங்கிருந்து ட்ரைன்ல பெங்களூர் போறேன்.” என்றான்.
முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் குழந்தை, அம்மாவை பிரிந்து இருக்க அழுமே. அது போல் சந்தியாவும் அழ, கதிர் அவளைச் சமாதானம் செய்தான். அவனுமே அந்த நிலையில் தான் இருந்தான். என்ன ஒன்று சந்தியா அழுதாள். கதிர் அழவில்லை அது தான் வித்தாயசம்.
“சந்தியா நீ இப்படி அழுதா நான் எப்படிப் போறது. எனக்கு ஆறே காலுக்கு ட்ரைன்.” என்றதும். சந்தியா “சரி மாமா நீங்க போயிட்டு வாங்க.” என்றாள் அழுகையை அடக்கிக்கொண்டு.
கதிருக்கும் அவளைப் பிரிந்து செல்லும் தவிப்பு இருந்தாலும். ரயிலுக்கு நேரமாவதால். அவளிடம் சொல்லிக்கொண்டு ஆட்டோவில் ஏறினான். சந்தியா கண்ணில் நீரோடு அவன் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்திருந்தாள்.சந்தியா வந்தது விடியற்காலை நேரம் என்பதால். ஹாஸ்டலில் இன்னும் யாரும் எழுந்து கொள்ளவில்லை.