சந்தியா குளித்து முடித்து வெளியே வந்த போது, கதிர் மெத்தையில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தான். கதிர் சந்தியாவைக் கண்டுகொள்ளவேயில்லை. பேப்பர் படிப்பதிலேயே கவனமாக இருந்தான்.சந்தியா ஈராமான கூந்தலை விரித்து விட்டவள், முகத்திற்கு ஒப்பனை செய்து நெற்றியில் பொட்டை வைத்துக்கொண்டே கதிரை பார்க்க, அவன் அப்போதும் பேப்பர் தான் படித்துக்கொண்டிருந்தான்.
சந்தியா நைட்டியில் இருந்தாள். புடவை மாற்ற வேண்டும். கதிர் இருந்ததால், கீழே சென்று மாற்றுவோம் என்று நினைத்துக் கையில் புடவையை எடுத்துக்கொண்டு திரும்ப ஒரு அடி எடுத்து வைத்தவள், அடுத்த அடி வைப்பதற்குள் கட்டிலில் கிடந்தாள். அவளைத்தான் கதிர்இழுத்துக் கட்டிலில் போட்டிருந்தானே. சந்தியா என்ன நடந்தது என்று யோசிப்பதற்குள், கதிர் அவள் எழ முடியாதபடி அவளின் இரண்டு பக்கமும் கையூன்றி, அவள் மேல் கவிழ்ந்தது போல் படுக்க,
சந்தியாவிற்கு வெட்கமாக இருந்தது. அவள் கதிரை பிடித்து விலக்க…. விலக மறுத்தவன், சந்தியாவின் தோள் வளைவில் முகம் புத்தைத்து “எவ்வளவு நேரம்டி வெயிட் பண்றது. மூணு மாசம் கழிச்சுப் புருஷனை பார்க்கிறோமே, அவனைக் கவனிப்போம்னு நினைக்காம மெதுவா ஆடி அசைஞ்சு வர…” என்று கேட்டபடி கதிர் மேலும் முன்னேற, சந்தியாவிற்கும் அவனின் வெப்பம்தொற்றிக்கொண்டது.
கதிர் சந்தியாவின் முகம் எங்கும் முத்தமிட்டவன், அவள் இதழ்களில் கவி எழுத ஆரம்பித்தான். அவனுக்கு அந்த முத்தமெல்லாம்பத்தவே இல்லை, சந்தியாவிடமிருந்து விலகியவன், அவள் நைட்டியை கழட்ட பார்க்க,
சந்தியா அவன் கைகளைப் பிடித்து “வேண்டாம் மாமா… இல்லை கதிரு… பயமா இருக்கு…” என்று உளறிக்கொண்டிருந்தாள்.
கதிர் அவள் சொல்வதைக் காதில் விழுந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் அவன் வேலையில் தீவிரமாக இருக்க, அப்போது கீழே இருந்து லக்ஷ்மி இருவரையும் சாப்பிட அழைத்தார்.வேகமாக ஓடிக்கொண்டிருந்தவன் திடிரென்று நின்றால் எப்படி இருக்கும், கதிரும் அந்த நிலையில் தான் இருந்தான். கதிர் சந்தியாவிடமிருந்து விலகி படுக்க, சந்தியாவிற்கு அவனின் ஏமாற்றம் நன்றாகவே புரிந்தது.
புடவையைக் கையில் எடுத்த சந்தியா குளியல் அறையில் நின்று புடவையைக் கட்டிக்கொண்டு வந்தாள். அவள் திரும்பி வந்த போது கதிர் அதே நிலையில் தான் இருந்தான்.
“சாப்பிட போலாமா மாமா…” என்று சந்தியா மெதுவாகக் கேட்க
“நீ போ எனக்குப் பசி இல்லை… நான் பிறகு சாப்பிட்ட்டுக்கிறேன்….” என்று கண்ணைத் திறக்காமலே சொன்ன கதிரின் குரலில் அவ்வளவு கோபம் இருந்தது.
“சாப்பிட்டதும் எங்க வீட்டுக்கு போகலாமா…” என்ற சந்தியா கதிரின் முகம் பார்க்க, அவன் திரும்பி அவளை முறைத்தான். அவன் கோபத்திற்குப் பயந்து சந்தியாவும் மேலே எதுவும் பேசாமல் சென்றாள்.
சந்தியா மட்டும் வருவதைப் பார்த்த லக்ஷ்மி “கதிர் வரலையா…” என்று கேட்க “அவங்களுக்குப் பசி இல்லையாம் பிறகு சாப்பிடுறாங்களாம்….” என்றாள்.
வீட்டு பெண்களோடு சந்தியாவும் சேர்ந்து சாப்பிட்டாள். சாப்பிட்டதும் அவள் அம்மாவோடு தங்கள் வீட்டிற்குச் சென்றாள். மூன்று மணி போல் எழுந்து வந்த கதிர். அவன் அம்மா பரிமாறச் சாப்பிட்டான். சிறிது நேரம் பெரியசாமியோடு உட்கார்ந்து பேசியவன், அவர் ஒய்வு எடுக்கச் சென்றதும், அவனும் அவன் அறைக்குச் சென்று கட்டிலில் படுத்தான்.
கதிருக்கே தான் இன்று சந்தியாவிடம் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது என்று புரிந்தது. அவள் படித்துக்கொண்டிருக்கிறாள் அதைத் தான் அடிக்கடி மறந்துவிடுகிறோம், இனி கவனமாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன் சோலையைப் பார்க்க சென்றான்.
கதிர் சோலையோடு அதிக நேரம் இருந்து விட்டு, இரவு உணவை அவனுடனே வெளியே ஹோட்டலில் முடித்துக்கொண்டு, இரவு பத்து மணிக்கு மேல் தங்கள் வீட்டிற்கு வந்தவன், அவன் அறையில் சென்று பார்த்தபோது சந்தியா அங்கே இல்லை.
கதிர் சென்று தன் அம்மாவிடம் விசாரிக்க “அவ அவங்க அம்மாவோட போனவ திரும்பி வரலையே கதிரு. ஒருவேளை இன்னைக்கு அங்க தங்குவோம்னு நினைச்சாளோ என்னவோ..” என்றார்.
கதிர் அவரிடம் பதில் சொல்லாமல் தங்கள் அறைக்கு வந்தவன், சந்தியாவைக் கைப்பேசியில் அழைக்க,
“சொல்லுங்க மாமா எதுக்குக் கூப்பிட்டீங்க?” என்று சந்தியா தூக்க கலக்கத்தில் பேச, கதிருக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை.
“இங்க இல்லாம எங்க போன நீ?” என்றான் அடக்கிய கோபத்துடன்.
“அம்மா வீட்ல இருக்கேன்.” என்று சந்தியா சொல்லி முடிக்கும் முன் “நீ அங்க தங்க போறேன்னு என்கிட்ட சொல்லிட்டு போனியா..”என்று அவன் அடுத்தக் கேள்வி கேட்க,
அவளின் பதில் கதிருக்கு மேலும் கோபத்தைத் தூண்ட, கண்களை அழுந்த மூடித் திறந்தவன் “நான் ஏன் அங்க வர மாட்டேன்னு உனக்கு நல்லா தெரியும். அப்படித் தெரிஞ்சும் கேட்கிற. என்கிட்ட சொல்லாமத்தான போன நீ. இனி திரும்பி வராத,உங்க அம்மா வீட்லயே இருந்துக்கோ…” என்று சீற்றமாகச் சொல்லிவிட்டுப் போன்னை வைத்துவிட்டான்.
அவனே சந்தியாவிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்று தான் நினைத்தான், ஆனால் அவளே விலகி சென்றது மனதில் மிகவும் வலித்தது.சந்தியாவிற்கே தான் செய்தது தவறு என்று தெரியும். அவளுக்கு எங்கே எல்லை மீறி விடுவோமோ என்று பயம். ஹாஸ்டலில் சும்மாவே கேலி செய்கிறார்கள், இதில் கர்ப்பம் எதுவும் ஆகிவிட்டால் அவளைக் கேலி செய்தே ஒரு வழி ஆக்கிவிடுவார்கள். படிக்கும் போது இதெல்லாம் வேண்டாமே என்று நினைத்தாள்.
இன்னொன்று அவளுக்கு அவளிடமே நம்பிக்கை இல்லை. கதிரின் அருகில் இருந்தால். அவள் மற்றதை மறந்து அவனை மட்டும் தான் நினைக்கிறாள். அவனோடு சேரத்தான் அவள் மனமும், உடலும் விரும்புகிறது. அதனால் தான் அவள் அம்மா வீட்டிலேயே இருந்துவிட்டாள்.
திருமணம் செய்து கொண்டு தான் ரொம்பவும் கதிரை கஷ்டப்படுத்துகிறோம் என்று அவளுக்குப் புரிந்தது. தூங்காமல் சந்தியா நடைபயில, அப்போது அங்கே வந்த துரை “இன்னும் தூங்கலையா….” என்று சந்தியாவைப் பார்த்துக் கேட்க,
“ம்ம்…. தூங்கணும்..” என்றவள் மேலே துரை எதுவும் கேள்வி கேட்கும் முன் உள்ளே சென்றுவிட்டாள். இன்னும் அப்பாவும், மகளும் முன் போல் பேச ஆரம்பிக்கவில்லை.
தங்கள் அறைக்கு வந்த துரை வேதவல்லியிடம் “கதிரும் தான வந்திருக்கான், பிறகு ஏன் சந்தியா இங்க தங்கினா? அவங்க வீட்ல தான இருந்திருக்கணும்.” என்றவர்
“என்னன்னு தெரியலை தூங்காம இருக்கு… நீ போய் அதோட பேசிட்டு அங்கயே படு..” என்று தன் மனைவியை மகளுக்குத் துணைக்கு அனுப்பிவிட்டு படுத்தார். சந்தியாவின் கவலை படிந்த முகம் அவரைத் தூங்க விடவில்லை.
“இனிமே நீ அங்கேயே இரு. இங்க வராத…” என்று கதிர் சொன்னதே காதில் கேட்க… சந்தியா தூங்க முயன்று தோற்றவள் “அம்மா என்னை மாமா வீட்ல கொண்டு போய் விடுறீங்களா…” என்று எங்கே அவள் அம்மா திட்டப் போகிறார்களோ என்று பயந்து கொண்டே கேட்க,
வேதவல்லி உடனே எழுந்தவர் “நான் அப்பவே கொண்டு போய் விடுறேன்னு சொன்னேன், நீ தான் கேட்கலை…” என்றவர், துரையிடம் சென்று “சந்தியா அங்க போறேன்னு சொல்றா…” என்றதும்,
“ஏன் எதற்கு?” இப்படி எந்தக் கேள்வியும் கேட்காமல் துரையும் அவர்களுடன் துணைக்குச் சென்றார்.
அங்கே தூக்கம் வராமல் கதிரும் மேல் மாடியில் உலாவிக்கொண்டு தான் இருந்தான். சந்தியா அவள் பெற்றோருடன் வருவதைப் பார்த்த கதிர் வேகமாகக் கீழே இறங்கி சென்றான். துரை வெளி வாசலில் நிற்க, வேதவல்லி சந்தியாவோடு உள்ளே வந்தவர், கதவைத் தட்ட செல்லும் முன் கதிரே கதவை திறந்து விட்டான்.
கதிரை பார்த்ததும் வேதவல்லி “ரொம்ப நாள் கழிச்சு பார்த்தோம்ல, அதுதான் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்திட்டோம்.” என்று அவராகவே ஒரு காரணம் சொல்ல,
“பரவாயில்லை அத்தை உள்ளே வாங்க…” என்று வீட்டுக்குறியவனாக கதிர் அழைக்க
“காலையில வரேன்….” என்று விடைபெற்று வேதவல்லி கிளம்ப, சந்தியா உள்ளே வந்ததும், கதிர் கதவை சாற்றிவிட்டு வந்தான்.
கதிரும், சந்தியாவும் மாடிக்கு செல்வதை லக்ஷ்மியும், பெரியசாமியும் பார்த்துக்கொண்டு தான் இருந்தனர். அறைக்கு வந்த சந்தியா தூங்குவது போல் கண் மூடி படுத்துக்கொள்ள. அவளைத் தட்டி எழுப்பிய கதிர் “உன் கிட்ட கொஞ்சம் பேசணும் எழுந்து உட்காரு…” என்றான்.
என்ன கேட்கப்போகிறானோ என்று பயந்து கொண்டே சந்தியா எழுந்து உட்கார்ந்தாள்.
“ஏன் உங்க வீட்டுக்கு போயிட்டு நீ நைட் திரும்பி வரலை?….” என்று கதிர் நேரடியாக அவள் முகத்தைப் பார்த்துக் கேட்க சந்தியாவிற்கு உண்மையான காரணம் சொல்ல விருப்பம் இல்லை.
அதனால் “சும்மாதான் ரொம்ப நாள் கழிச்சு போனேன் இல்லை… அதுதான்..” என்று சமாளிக்கப் பார்க்க,
அவளையே பார்த்த கதிர் “பொய் சொல்லாத சந்தியா… உனக்கு நான் மதியம் உன்கிட்ட அப்படி நடந்துக்கிட்டது பிடிக்கலை. நீ வேண்டாம்னு சொன்னா நான் என்ன உன்னை வற்புறுத்தவா போறேன். எனக்கே நான் அப்படி நடந்துக்கிட்டது தப்புன்னு தெரியும்தான். உன்னை ரொம்ப நாள் கழிச்சுப் பார்த்ததும் என்னைக் கட்டுப்படுத்த முடியலை.
அதுக்காக நீ என்னை இப்படிக் கேவலப்படுத்தியிருக்க வேண்டாம். நான் எதுவும் செஞ்சிடுவேன்னு பயந்து தான, நீ உங்க வீட்லயே இருந்துட்ட…” என்று கதிர் கேட்ட போது, சந்தியாவிற்கு அவனுக்கு எப்படி விளக்கி புரியவைப்பது என்று எல்லாம் தெரியவில்லை.
அதனால் அவள் அழுதாள்…!
அவள் மறுக்காமல் அழுததும், தான் சொன்னது தான் உண்மை என்று நினைத்துக்கொண்ட கதிர் “நீ என்னைப் பார்த்து பயந்து ஓட வேண்டாம். இனி என் விரல் கூட உன் மீது படாது…” என்றவன் தரையில் தலையணை போட்டு படுத்துவிட்டான்.
“ஓரே ரூம்ல இருந்தாலும்… எனக்கு உன் மேல இனி எந்த ஆசையும் வராது. அதனால பயப்படாம தூங்கு…” என்றவன் குப்புற படுத்துவிட, சந்தியாவும் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாகப் படுத்துவிட்டாள்.
மறுநாள் காலை சந்தியா எழுந்தபோது கதிர் அங்கே இல்லை. அதன் பிறகு சந்தியா அறையில் இருக்கும் வேளையில், கதிர் அந்த அறைக்கு வரவேயில்லை. மாலை அவளை அழைத்துக்கொண்டு சோலையின் வீட்டிற்குச் சென்றான். சித்ரா கர்ப்பமாக இருப்பதால் அவளைச் சென்று இருவரும் பார்த்துவிட்டு வந்தனர். கதிரும் சந்தியாவும் சோலை சித்ராவிடம் எதையும் காட்டிக்கொள்ளாமல் நடந்து கொண்டனர்.
துரை வேதவல்லி இருவருமே வந்து, சீர் கொடுத்து தலை தீபாவளிக்கு அழைக்க, கதிர் நாளை காலை வருகிறோம் என்றான்.அதன்படியே தீபாவளி அன்று காலை சந்தியாவுடன் அவள் வீட்டிற்குச் சென்றவன், அங்கே பேருக்கு சாப்பிட்டுவிட்டு, சந்தியாவை அங்கேயே விட்டுவிட்டு, அவன் மட்டும் உடனே கிளம்பி விட்டான்.
வேதவல்லிக்கு கதிரின் செயல் கவலையை அளித்தது. சந்தியாவும் அவரிடம் எதுவும் சொல்ல மறுத்தாள். இன்னும் துரை மீது இருந்த கோபம் கதிருக்கு போகவில்லை என்று நினைத்துக்கொண்டார்.இரவு கதிரும் சந்தியாவும் ஒன்றாகத்தான் ஊருக்குக் கிளம்பினார்கள். சந்தியாவைச் சென்னை செல்லும் பஸ்சில் ஏற்றிவிட்டவன், இறங்கும் முன் அவள் முகம் பார்க்க, எப்போதும் கதிர் அவளை விட்டு பிரியும் போது இருப்பாளே, இப்போதும் அது போலத்தான் இருந்தாள்.
அதைப் பார்த்ததும் கதிரின் மனம் இளக “பார்த்து போ சந்தியா, ஹாஸ்டல் சாப்பாடு பிடிக்கலைன்னா, வெளிய வாங்கிச் சாப்பிடு. செலவ பத்தி கவலைப்படாதே. நான் தேவையான அளவு பணம் உன் கணக்குல போட்டிருக்கேன். நீ அதை எடுத்துச் செலவு செய்றியான்னு நான் பார்ப்பேன்.” என்றவன், பேருந்தை விட்டு கீழே இறங்க, சந்தியாவிற்குக் கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது.
சந்தியாவிற்குத் தெரியும் கதிர் அவளிடம் பேசினாலும், அவன் கோபம் இன்னும் போகவில்லை என்று. இனி ஒரு நாளும் அவனாக அவளைத் தேடி வரமாட்டான் என்றும் தெரியும்.