“நான் சமையல் கத்துக்கிட்டா, நீங்க உடனே சென்னைக்கு மாத்திட்டு வந்துடுவீங்களா….” என்று சந்தியா கேட்டதிலேயே, விட்டால் இவள் இன்னும் ஒரு வாரத்தில் சமையல் கற்றுக் கொண்டு விடுவாள் என்பதை உணர்ந்த கதிர், இவளிடம் என்ன சொல்வது என்பது போல் பார்க்க, சந்தியா அவனையே குறுகுறுவென்று பார்த்திருந்தாள்.
“சந்தியா பாலா என்னைவிட நாலு வருஷம் சீனியர். நீ அவங்களையும் நம்மையும் கம்பேர் பண்ணாத. நான் இன்னும் ரெண்டு வருஷத்துக்குக் கல்யாணம் பண்றதாவே இல்லை. உங்கப்பா பிரச்சனை பண்ணதுனால, கோபத்தில உன்னை வேற யாருக்காவது கல்யாணம் பண்ணிடுவரோன்னு நினைச்சுதான் கல்யாணத்துக்குச் சரின்னு சொன்னேன்.
அதோட நான் இப்பதான் வேற வேலையில சேர்ந்தேன். இன்னும் ரெண்டு வருஷத்துக்கு நான் கம்பெனி மாறுறதா இல்லை. அதனால் நீ இப்ப வேற எதைப் பத்தியும் யோசிக்காம, படிக்கிறத மட்டும் பாரு…” என்ற கதிர் அவளை மடியிலிருந்து எழுப்பியவன், அங்கு ஓரமாக இருந்த பாயை விரித்துப் படுத்துவிட்டான்.
சந்தியா கோபமாக இருந்தாள். சிறிது நேரம் சென்று கதிர் கண் திறந்து பார்த்த போது… சந்தியா கலங்கிய கண்களோடு அதே இடத்தில் அமர்ந்திருந்தாள். அவளை அப்படிப் பார்க்கவே கதிருக்கு வருத்தமாக இருந்தது.அவளை இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டு “இன்னும் கொஞ்ச நாள் தான்டா. பிறகு நாமளும் ஒரே வீட்ல சந்தோஷமா இருக்கலாம்….” என்று சமாதானம் செய்தவன், அவள் முதுகை வருடி கொடுக்க, சிறிது நேரத்தில் சந்தியாவின் கண்கள் தூக்கத்திற்குச் சென்றது, கதிரும் கண் அசந்தான்.
பாலா தன் மனைவிக்குச் சமையலில் உதவி விட்டு, கீழே சென்று மகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். ராஜி சமையல் முடிந்தது என்றதும்தான் மேலே வந்தான்.
“அந்த அக்கா எங்க?” என்று கேட்ட ரியாவிடம் “தூங்குறாங்க டா. பாப்பாவும் சமத்தா சாப்பிட்டிட்டு தூங்குங்க. சாயங்காலம் அவங்களோட விளையாடலாம்.” என்றதும், ரியாவும் சமத்தாகச் சாப்பிட்டுவிட்டு விளையாடிய களைப்பில் உறங்கிவிட்டது.
பால்கனி கதவு காற்றுக்கு மூடிய சத்தத்தில்தான் கதிர் கண் விழித்தான். அவன் தோளில் சந்தியா தலை வைத்து உறங்கி கொண்டிருந்தாள்.அவளை முத்தமிட எழுந்த ஆவலை, அவளிடம் அப்படிப் பேசிவிட்டு தானே அவள் ஆசையைத் தூண்டி விடுவது போல் நடந்து கொள்வது சரியில்லை என்று தோன்றியதால், முத்தமிடும் எண்ணத்தைக் கைவிட்டவன், செல்லை எடுத்து நேரத்தை பார்க்க, அப்போது மணி இரண்டு.
பாலாவும், ராஜியும் தங்களுக்காகச் சாப்பிடாமல் காத்திருப்பார்களே என்று அவன் தூங்கி கொண்டிருந்த சந்தியாவை எழுப்ப, சந்தியா இன்னும் கதிரை இறுக்க அணைத்துக்கொண்டு உறங்கினாள்.
இது வேலைக்காது என்று உணர்ந்தவன், எழுந்து உட்கார்ந்து சந்தியாவைப் பிடித்து உலுக்க, சந்தியா மெதுவாகக் கண் திறந்தாள். அவளிடம் பாலாவும், ராஜியும் காத்திருப்பாங்க என்றதும், அவளும் வேகமாக எழுந்து முகம் கழுவி வர, இருவரும் வெளியே வந்தனர்.
வெளியே டைனிங் டேபிளில் ராஜியும், பாலாவும் சாப்பிட எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டிருக்க, சந்தியாவும் அவர்களோடு சேர்ந்து கொண்டாள். நாலு பேரு தான எதுக்கு இத்தனை தட்டு என்று சந்தியா யோசிக்கும் போதே, வீட்டின் அழைப்பு மணி அடித்தது. ஒரு தடவை இல்லை மூன்று முறை.
“வந்துடுச்சுங்கடா வானரங்க…” என்று சொல்லிக்கொண்டே பாலா சென்று கதவை திறக்க, அவனைத் தள்ளியபடி சித்தார்த், அனு மற்றும் ஸ்ரீஜா உள்ளே வந்தனர்
“ஹாய்…! ஹாய்…!” என்று மூவரும் ஆர்ப்பாட்டமாக உள்ளே நுழைய, தன் நண்பர்களைப் பார்த்ததும், சந்தியாவிற்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ள, அவளும் அந்த வானரக் கூட்டத்தோடு ஐக்கியமானாள்.
பாலாவின் வீட்டில் மதிய உணவு பெரும் ஆர்ப்பாட்டத்துடன் நடந்தது. அவரவருக்கு வேண்டியதை அவர்களே பரிமாறிக்கொண்டு சாப்பிட்டனர். பேசிக்கொண்டே சாப்பிட்டதால் உணவு நேரம் முடிய தாமதம் ஆனது. உணவு அருந்தியதும், கீழே இருந்த பார்க்கில் சென்று அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். சிறிது நேரம் சென்று அங்கிருந்த ஷட்டில் கோர்ட்டில் கதிரும், சித்தார்த்தும் ஷட்டில் விளையாட, மற்றவர்கள் அமர்ந்து வேடிக்கை பார்த்தனர்.
நண்பர்களைப் பார்த்ததும் சந்தியாவும் மகிழ்ச்சியாகத் தான் இருந்தாள். ஆனால் நேரம் செல்ல, செல்ல கையில் இருந்த செல்லில் நேரம் பார்ப்பதும், கதிரை பார்ப்பதுமாக இருந்தாள். இன்று இரவு அவன் பெங்களூர் கிளம்பி விடுவான் என்பதால் அவள் மனம் வேறு எதிலும் ஈடுபட மறுத்தது.
விளையாட்டில் கவனமாக இருந்த கதிர், முதலில் இதைக் கவனிக்கவில்லை. சிறிது நேரம் சென்று சந்தியாவின் முகத்தைப் பார்த்த கதிருக்கு, அதில் இருந்த சோர்வு நன்றாகவே தெரிந்தது. அதனால் அந்த ஆட்டத்தோடு விளையாட்டை முடித்துக்கொண்டவன், மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டு சந்தியாவோடு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
முதலில் அவன் நண்பர்கள் தங்கி இருந்த வீட்டிற்குச் சென்றவன், நண்பனிடம் வாங்கிய வண்டியின் சாவியைக் கொடுத்துவிட்டு, அங்கிருந்த அவனுடைய தோள் பையை எடுத்துக்கொண்டு அவர்களிடம் விடைபெற்று வெளியே வந்து, அங்கே காத்திருந்த சந்தியாவின் கையேடு தன் கையைக் கோர்த்துக்கொண்டு நடந்தான்.
“சாரி சந்தியா உன்னை உள்ளே கூட்டிட்டு போகலைன்னு நினைக்காத. பேச்சுலர்ஸ் இல்லையா, கொஞ்சம் அப்படி, இப்படி இருப்பாங்க அதனால தான்…”
“பரவாயில்லை மாமா எனக்குத் தெரியும்.”
“பாரு சந்தியா, நாம மட்டும் இருக்கும் போது என்னை இனி மாமான்னு கூப்பிடாத. கதிர்னே கூப்பிடு….” என்று கதிர் சொல்ல, சந்தியா பதில் சொல்லாமல் புன்னகைக்க, கதிர் விழிகளால் ப்ளீஸ் என்று கெஞ்ச, சந்தியா சம்மதமாகத் தலை அசைத்தாள்.
இருவரும் அப்போது வந்த பேருந்தில் ஏறி கடற்கரைக்குச் சென்று, கூட்டம் அதிகம் இல்லாத இடத்தில் அமர்ந்தனர். இருவருக்கும் பேச நிறைய விஷயம் இருந்தாலும், இன்னும் சிறிது நேரத்தில் பிரிய வேண்டும் என்பதைப் பற்றியே மனம் நினைக்க, அந்தத் தவிப்பில் அமைதியாக இருந்தனர்.
சந்தியா கதிரின் தோளில் சாய்ந்து கடலை பார்த்தபடி இருந்தாள். கதிர் அவளை அணைத்தபடி அமர்ந்திருந்தான். இரவு எட்டு மணி வரை அங்கே இருந்துவிட்டுப் பின் இருவரும் உணவகத்திற்குச் சென்றனர். சந்தியா சரியாகவே சாப்பிடவில்லை, கதிர் அவளைக் கெஞ்சி கொஞ்சி சாப்பிட வைத்தான்.
சந்தியாவின் விழிகள் எப்போது வேண்டுமானாலும் அணையை உடைத்து கரையைக் கடக்கும் நிலையில் இருந்தது, கதிருக்கு அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது. சந்தியாவை ஹாஸ்டலில் விட்டுவிட்டு கதிர் கிளம்ப, சந்தியா அவனைப் போகவே விடவில்லை,
“ட்ரைன் பதினோரு மணிக்கு தான… ப்ளீஸ் கதிர் இன்னும் கொஞ்சம் நேரம் இருங்க…” என்று சந்தியா அழுகையை அடக்கிய குரலில் சொல்ல, கதிரும் சந்தியாவோடு பேசியபடி ஹாஸ்டலின் வெளியே நின்றான்.
ஹாஸ்டலில் இருக்கும் பெண்கள் சிலர் சந்தியாவையும், கதிரையும் ஆர்வமாகப் பார்ப்பதை சந்தியா கவனித்தாலும், அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. அரை மணி நேரம் போல் பேசிக்கொண்டிருந்த கதிர் “இப்ப கிளம்பினா சரியா இருக்கும். கிளம்பட்டுமா…” என்று சந்தியாவின் முகம் பார்க்க, அவள் விழிகள் கண்ணீரை பொழிந்தது.
சந்தியாவின் முகத்தைத் தன் கரங்களால் அழுந்த பற்றிய கதிர், தன் இரு பெரு விரல்களால் அவள் விழிநீரை துடைத்தபடி “அழக் கூடாது சீக்கிரம் திரும்ப வரேன்….” என்றவன், அவள் நெற்றியில் லேசாக முட்ட,
“ஒரு தடவை முட்டிட்டு விட்டா கொம்பு வரும்… இன்னொரு தடவை முட்டுங்க….” என்று சந்தியா குறும்பு புன்னகையுடன் சொல்ல, கதிர் அவள் சொன்னபடி செய்துவிட்டு அவளிடம் விடைபெற்றுச் சென்றான்.
சந்தியா கதிர் சென்ற பின்னரும் அங்கேயே சிறிது நேரம் நின்று, தன் மனதை நிலைபடுத்திய பின்னர் ஹாஸ்டலின் உள்ளே சென்றாள்.அங்கே உள்ளே சந்தியாவின் வருகைக்காக அவள் தோழிகள் ஆவலுடன் காத்திருந்தனர்.
ஆளாளுக்கு ஒன்று பேசி கேலி செய்ய, அவளுமே சந்தோசமாகத்தான் இருந்தாள்.எல்லாம் நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது.
அப்போது அங்கே வந்த சீனியர் மாணவிகளில் சிலர் “என்ன உன் ஆளோட ஒரே ரொமான்ஸ் போலிருக்கு…” என்று ஆரம்பிக்க,
அது அங்கிருந்த மற்ற மாணவிகளின் கவனத்தையும் கவர, எல்லோரும் சேர்ந்து சந்தியாவைப் பயங்கரமாகக் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். சாதாரணக் கேள்விகளில் ஆரம்பித்து அந்தரங்கமான கேள்விகள் வர, சந்தியாவிற்குக் கோபம் வந்து விட்டது. அவள் முகத்தில் தெரிந்த கோபத்தைக் கவனித்துவிட்டு, இன்னும் அவளை அதிகமாகக் கிண்டல் செய்தனர்.
“நம்ம காலேஜ் ஹாஸ்பிடல்ல சந்தியாவுக்கும் ஒரு பெட் இப்பவே அட்வான்ஸ் புக்கிங் பண்ணி வச்சிடலாமா….” என்று ஒருத்தி சொல்ல, மற்றவள் எதற்கு என்று தெரியாதது போல் கேட்க,
“சந்தியாவும் அவங்க ஆத்துக்காரரும் இருக்கிற வேகத்தைப் பார்த்தா…. இன்னும் பத்து மாசத்துல டெலிவரி இருக்காது அதுக்குத்தான்.” என்ற போது அங்கிருந்த அனைவருமே சிரித்தனர்.
மேலும் அவர்கள் எதுவும் பேசும் முன் சந்தியா அங்கிருந்து வேகமாக அவள் அறைக்குச் சென்றுவிட்டாள். அனு அங்கே இல்லை. அதனால் சந்தியா சிறிது நேரம் மனம் விட்டு அழுதாள்.
அவளின் தனிப்பட்ட விஷயத்தை மற்றவர்கள் பேசியது அவளுக்குப் பிடிக்கவில்லை. அவள் இதற்கு முன் இவ்வளவு அந்தரங்கமான பேச்சுக்களைக் கேட்டதும் இல்லை. அதனால் வந்த அழுகை. அந்த நேரம் பார்த்து கதிர் அழைக்க,
“ஹாய் சந்தியா ஸ்டேஷன் வந்துட்டேன். நீ என்ன பண்ற?”
“ரூம்ல இருக்கேன் மாமா.”
“மாமா இல்லை கதிர்….” என்று அவன் திருத்திய போது… சந்தியா “சரி…” என்றாள்.
அவள் குரலில் இருந்தே அழுதிருக்கிறாள் என்று புரிந்து கொண்ட கதிர், அவன் பிரிவால் அழுகிறாள் என்று நினைத்தவன், இனி சந்தியாவை முடிந்த அளவு சென்று பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று நினைத்தான். தான் ஒவ்வொரு முறை சென்று விட்டு வரும் போது… அவள் வருத்தம் மேலும் அதிகம் தான் ஆகும். அதற்கு சில மாதங்கள் பார்க்காமல் இருப்பதே மேல் என்று நினைத்தான்.
சந்தியாவும் அந்த முடிவிற்குத் தான் வந்திருந்தாள். இந்த மாதிரியான பேச்சுக்களைக் கேட்பதற்குக் கதிரை பார்க்காமல் இருப்பதே பரவாயில்லை என்று நினைத்தாள். கதிர் தினமும் சந்தியாவை அழைத்துப் பேசுவான். ஆனால் பெரும்பாலும் அவன் பேசுவது அவள் நலனை பற்றியும் படிப்பை பற்றியும் மட்டும் தான் இருக்கும். அவள் மனதில் ஆசை வளர்க்கும் விதமாக எதுவும் அவன் பேசுவதில்லை.
கதிர் சந்தியாவைப் பார்க்க வருகிறேன் என்று சொல்லவுமில்லை. சந்தியா அவனை அழைக்கவுமில்லை. கதிர் ஏனென்று அதைப் பற்றி யோசிக்கவும் இல்லை.
நாட்கள் வேகமாகச் சென்றது, பெரியசாமி கதிரையும் சந்தியாவையும் ஒருமுறை ஊருக்கு வந்துவிட்டு செல்லும்படி அழைத்துக்கொண்டே இருந்தார். திருமணம் முடிந்து சென்ற பின்னர் இருவரும் இன்னும் ஊர் செல்லவில்லை.
முதல் முறை மட்டும் இருவரும் சேர்ந்து வந்துவிட்டு பிறகு அவரவர் வசதிப்படி வந்து போகட்டும் என்று பெரியசாமி நினைத்தார். சந்தியாவுக்கு விடுமுறை இல்லாததால் கதிரும் ஊருக்கு வராமல் இருந்தான்.
சந்தியாவிற்குத் தீபாவளிக்கு தான் மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்தது. கதிரும் சந்தியாவும் மதுரை ரயில் நிலையத்தில் சந்தித்து அங்கிருந்து ஒன்றாக ஊருக்கு சென்றனர்.இருவரும் ரொம்ப நாள் கழித்து மீண்டும் சந்தித்த மகிழ்ச்சியில், பஸ்சில் ஊருக்குச் செல்லும் வரை பேசிக்கொண்டே வந்தனர்.
கதிரின் வீட்டிற்கு சென்ற போது, அவன் பெற்றோர்கள் இருவரும் இவர்கள் வருகையை எதிர்பார்த்து வாசலிலேயே நின்றிருந்தனர். இவர்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக வரவேற்று பேசினர்.
லக்ஷ்மி விதவிதமாகக் காலை பலகாரம் செய்திருந்தார். இவர்கள் வந்து சேரவே பத்து மணி ஆனதால். முதலில் சாப்பிட்டுவிட்டு குளிக்கும்படி சொல்ல, சந்தியாவும், கதிரும் சரி என்று சாப்பிட அமர்ந்தனர்.இவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வேளையில் வேதவல்லி வந்துவிட, சந்தியா தன் அம்மாவை பார்த்த மகிழ்ச்சியில் அவருடன் பேச அமர்ந்துவிட்டாள்.
கதிர் சந்தியாவைப் பார்த்தபடி மாடிக்கு சென்றுவிட்டான். வீட்டுப் பெண்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பேச, லக்ஷ்மி பேசியபடி மதிய சமையல் முடித்து விட்டார்.
“மதியம் சாப்பிடும் முன்னாடி போய்க் குளிச்சிட்டு வந்திடு சந்தியா…” என்று லக்ஷ்மி அவளை விரட்ட “இதோ போறேன் அத்தை.” என்ற சந்தியா மேலும் அரை மணி நேரம் இருந்து அரட்டை அடித்து விட்டே சென்றாள்.
சந்தியா அவர்கள் அறைக்கு வந்த போது கதிர் அங்கே இல்லை. மேல் மாடிக்குச் சென்றிருந்தான் போல, மேல் மாடிக்கதவு திறந்திருந்தது. சந்தியா குளித்து முடித்து அவனைப் பார்ப்போம் என்று நினைத்தவள், தன் பெட்டியை திறந்து அதிலிருந்து உடைகளை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றாள்.
கதிர் குளித்து முடித்திருந்தவன், தன் உள்ளாடைகளை உலர்த்தவே மாடிக்குச் சென்றிருந்தான். கதிர் திரும்பி வந்த போது குளியல் அறையில் இருந்து நீர் விழும் சத்தம் கேட்க, சந்தியா உள்ளே இருப்பதைத் தெரிந்து கொண்டான்.