கதிரின் வீடே விழாக்கோலம் கொண்டிருந்தது. அன்று சந்தியாவிற்கு வளைகாப்பு. தன் திருமணப் புடவையில், தாய்மையின் பொழிவால் சந்தியா ஜொலிக்க, கதிர் அவளை விழி எடுக்காமல் பார்த்து ரசித்தான்.
லக்ஷ்மியும், வேதவல்லியும் முகத்தில் பூரிப்போடு விருந்தினரை வரவேற்க, பெரியசாமியும், துரையும் தங்கள் குலம் தழைக்க வாரிசு வருவதை எண்ணி மகிழ்ந்தனர். கதிருக்கு வேலை பார்க்க விருப்பம் இல்லை. ஒரு வீட்டையும், காரையும் வாங்கி விட்டு, அதற்கு லோன் கட்டியே காலம் முழுவதும் கழிக்கும் வாழ்க்கையை அவன் விரும்பவில்லை.
சொந்த ஊரில் தன் சொந்த பந்தத்துடன் இருக்கவே விருப்பட்டான். அதனால் மதுரையில் அவனே சொந்த தொழில் ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்தி வருகிறான். மேற்கொண்டு அவர்கள் கிராமத்தில் விவசாயமும் பார்க்கிறான்.
சந்தியா தாய்மை அடைந்ததால் இந்த வருடம் மேற்படிப்புக்கு சேரவில்லை. அடுத்த வருடம் மதுரையிலேயே மேற்படிப்பு படிக்க முடிவு செய்திருக்கிறாள்.அனுவிற்கு திருமணம் ஆகி மும்பையில் இருந்தாள். ஸ்ரீஜா கடைசி வருடத்தில் இருப்பதால் வர முடியவில்லை. பாலா இப்போது குடும்பத்துடன் லண்டனில் இருக்கிறான். அதனால் சித்தார்த் மட்டுமே வளைகாப்பிற்கு வந்தான்.
பெண்கள் சந்தியாவிற்கு வளை அடுக்க, ஆண்கள் சுற்றி நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது சித்தார்த்துக்குப் பின்புறம் இருந்து ஒரு குரல் “ஹலோ மிஸ்டர் பனைமரம் கொஞ்சம் நகர்ந்து நிக்கிறீங்களா…” என்று.
“யாருடா… இது நம்மளையே இவ்வளவு தையரியமா பனை மரம்னு சொல்றது…” என்பது போல் சித்துத் திரும்ப, அங்கே அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை.
மூன்று வருடங்களுக்கு முன்பு, அவன் கோவிலில் சில நிமிடங்களே பார்த்த பெண் கையில் வளையல் தட்டுடன் நின்று கொண்டிருந்தாள். இவ எங்கே இங்கே? என்பது போல் சித்தார்த் பார்க்க, அவனை அலட்சியமாக பார்த்த அந்தப் பெண் அவனைத் தாண்டிச் சென்றாள்.
அவள் நேராகச் சென்று சந்தியாவின் அருகில் உரிமையாக உட்கார்ந்தவள், சந்தியாவோடு சிரித்துப் பேச, சித்தார்த் அவளை ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.டிசைனர் சுடிதார் அணிந்து ஷாம்பூ போட்டு அலசிய கூந்தலை சென்டர் க்ளிப்பால் அடக்கி, பார்த்ததும் மனதில் பதிவது போல் பளிச்சென்று இருந்தாள். அவளுக்கும் சந்தியாவிற்கும் உருவ ஒற்றுமை இருந்தது. சித்தார்த் இது எப்படி என்று ஆச்சரயப்பட்டவன் அவளையே பார்க்க, அவளும் அடிக்கடி சித்தார்த்தைபார்த்தாள். அவள் பார்வையில் இருந்து அவளுக்குத் தன்னை ஏற்கனவே தெரியும் என்று சித்தார்த் புரிந்து கொண்டான்.
சித்தார்த்துக்கு அவளைப்பற்றி உடனே தெரிந்து கொள்ள வேண்டும் போல் இருந்தது. இல்லையென்றால் மண்டையே வெடித்து விடும். வளைகாப்பு முடிந்ததும் சந்தியாவைக் கேட்ப்போம் என்று இருந்தான்.எல்லோரும் வளையல் போட்டதும், கதிர் சென்று தன் மனைவிக்குத் தான் வாங்கிருந்த பச்சை கற்கள் பதித்த தங்க வளையல்களை அணிவிக்க, சந்தியாவின் விழிகள் சந்தோஷத்தில் கலங்கியது. அதைத் தன் செல்லில் சித்தார்த் படம் எடுத்தான்.
வளைக்காப்பு முடிந்ததும் முதலில் சந்தியா தான் சாப்பிட வேண்டும் என்று அவளை அழைத்துக்கொண்டு சென்று விட்டனர். சித்து யாரிடம் கேட்பது என்று நினைக்கும் போது அங்கே வெங்கி வந்தான்.பந்தி பரிமாறச் சென்றவன் சித்தார்த்தை பார்த்ததும் நிற்க, சித்தார்த் அந்தப் பெண்ணைக் காட்டி யார் என்று விசாரிக்க,
யார் என்று பார்த்த வெங்கி முகம் மலர்ந்தவன் “சந்தியாவோட அத்தை பொண்ணு. பேரு கார்த்திகா. இன்ஜினியரிங் படிக்கிறா.” என்றவன் மேலும் எதோ சொல்ல வர, அப்போது கார்த்திகா அவர்கள் அருகில் வருவதைப் பார்த்தவன், வேண்டுமென்றே அவள் காதில் விழும்படி,
“அவ ஒரு சரியான அப்பாடக்கர்டா சித்து. மனசுல மதுரைக்கே இந்த அம்மா தான் ராணின்னு நினைப்பு. ஆ ஊன்னா மதுரையோட பெருமைய சொல்ல கிளம்பிடுவா. இவளுக்கு ஒரு தங்கச்சி இருக்கு பேரு தயான்னு. ரெண்டும் சேர்ந்து பண்ற ரௌசு இருக்கே, மதுரையே குலுங்குதுப்பா. இவங்களுக்கு ஒரு தம்பி இருக்கான் பாரு. அவன் தங்க கம்பி…” என்று கார்த்தியின் வரலாறையே அவன் படிக்க,
அவன் சொன்னதைக் கேட்டபடி வந்த கார்த்திகா, பொங்கி விட்டாள் “ஹே…! இப்ப நீ யாரை பத்தி சொல்ற…” என்று ஆங்கிலத்தில் பேசி சண்டைக்கு வர,
“நீ எதோ மதுரை பொண்ணுன்னு சொன்ன இல்ல போலிருக்கே. இவங்க லண்டன் ரிடர்ன் மாதிரி இல்ல தெரியுது… வாயத் தொறந்தா இங்கிலீஷ் தான் வருது…” என்று சித்தார்த் அவன் பங்குக்குக் கார்த்திகாவை வார,
“செந்தமிழ் தான் எப்பவும் பேசுவாங்க. டென்ஷன் ஆனா மட்டும் தான் இங்கிலீஷ். இல்ல கார்த்தி….” என்று வெங்கி சிரிக்க, கார்த்திகா இருவரையும் முறைத்தாள்.
“ஆமாம் உங்களை எங்கையோ பார்த்திருக்கேனே…” என்று கார்த்தி சொன்னதும், சித்தார்த் தன் தலையை ஸ்டைலாக கோத,
“சந்தியா கல்யாணத்தில, நீங்க தான பஞ்சு மிட்டாய் வித்தது.” என்று கார்த்திகா, சித்தார்த்தின் கற்பனையில் மண்ணைப் போட, சித்துவுக்குத் தெரியும் அவள் வேண்டுமென்றே சொல்கிறாள் என்று.
இருந்தாலும் விடாமல் “நான் பஞ்சு மிட்டாய் வித்தத நீ பார்த்த…” என்றான் ஒரு மாதிரிக் குரலில்.
“பின்ன நீங்க தான பச்சைக்கலர் சட்டையும் வெள்ளை வேட்டியும் கட்டிட்டு, அந்த இருட்டுளையும் கூலிங்கிளாஸ் போட்டுட்டு நின்னது. அதைப் பார்த்து நான் பஞ்சு மிட்டாய் விக்கிறவருன்னு இல்ல நினைச்சேன் இல்லையா…” என்று கார்த்திகா போலியாக வியக்க,
“ஆமாம் மச்சான். அப்ப கூட ஒரு பொண்ணு வந்து பஞ்சு மிட்டாய் வேணும்னு திரும்ப திரும்ப வந்து தொல்லை பண்ணல… நாம கூடப் போன்னு விரட்டினோமே, அது தான் இந்தப் பொண்ணு..” என்று வெங்கி விடாமல் வம்பிழுக்க,
“ஆமாம்டா இப்ப தான் நியாபகம் வருது…” என்று சித்து வெங்கிக்கு ஹை பை கொடுக்க, கார்த்திகா பொறுமை இழந்து பல்லை கடித்துக்கொண்டு “ஹி….” என்று கத்த, வெங்கியும், சித்தார்த்தும் ஆளுக்கு ஒரு பக்கம் தெறித்து ஓடினர்.
‘நான் எப்படி இவளை சந்தியா கல்யாணத்தில பார்க்காம மிஸ் பண்ணேன். பக்கத்தில இருக்கும் போது பார்க்கல ஆனா கோவில்ல, தூரத்தில இருந்து பார்த்தேன். இவளை இனி பார்க்கவே மாட்டோம்னு நினைச்சா, இவளே இப்ப கண்ணு முன்னாடி நிற்கிறா. நம்மக்கிட்ட தான் மாட்டிகிடனும்னு அவளுக்கு விதி இருந்தா என்ன செய்றது?; என்று சித்து நினைக்க, ‘மண்ணாங்கட்டி மாட்டிக்கிட்டது அவ இல்லடா… நீ தான்…’ என்று நமக்குத் தெரியுமே
அது தெரியாத சித்து “போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி…” என்று உல்லாசமாக பாடிக்கொண்டிருந்தான்.
சித்து வெங்கி கார்த்திகா மூவருமே பந்தி பரிமாறினர். சித்துவும் கார்த்திகாவும் அடிக்கடி ஓரக்கண்ணில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, யாரும் இல்லாத பொழுது கார்த்திகாவின் அருகில் வந்த சித்து “மூன்னு வருஷம் முன்னாடி நான் போட்டிருந்த டிரஸ் கலர் வரை சொல்ற. நீ என்னை அப்பவே சைட் அடிச்சியா….” என்று கண் சிமிட்டி கேட்க, கார்த்திகா மாட்டிக்கொண்ட பார்வை பார்த்தாள். சித்தார்த் புன்னகையுடன் அங்கிருந்து சென்றான்.
அன்று மாலை வரை கார்த்திகாவின் விழிகளும், சித்துவின் விழிகளும் தழுவியபடி இருந்தது. இவர்கள் இருவரையும் பார்த்த வெங்கி சுபாஷிடம் போட்டுக்கொடுக்க, அவன் இவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து ஓட்டினான்.சந்தியாவும் கார்த்தியும் பேசிக்கொண்டிருந்த போது அங்கே வந்த சித்து “நான் கிளம்புறேன் சந்தியா…” என்றதும் கார்த்தியின் முகம் வாடி விட்டது.
அதைப் பார்க்காது போல் பார்த்த சித்தார்த் “அம்மா உனக்கு வளையல் கொடுத்து விட்டாங்க சந்தியா. அப்ப கொடுக்க ஒரு மாதிரி இருந்துச்சு…” என்றவன், இரு தங்க வளையல்களை எடுத்துகார்த்திகாவிடம் கொடுத்து சந்தியாவிற்குப் போட்டு விடச் சொல்ல, கார்த்தியின் முகம் நொடியில் தாமரையாக மலர்ந்தது.
சித்தார்த், கார்த்தி இருவரின் முகத்தையும் பார்த்த சந்தியாவிற்கு எதோ புரிந்தது. ஆனால் அவள் எதையும் கேட்கவில்லை. கார்த்திகாசித்தார்த்திடமிருந்து வளையலை வாங்கிச் சந்தியாவிற்குப் போட்டு விட,
“ம்ம் அப்படியா?!யாருன்னு தெரியாம தான் வளையல் கொடுத்து போட சொன்னியா. இந்தக் கதையெல்லாம் உன்னைப் பத்தி தெரியாதவங்கக்கிட்ட வேணா சொல்லு. என்கிட்ட வேண்டாம்.” என்று சந்தியா சிரிக்க,
“MD – Neurology படிக்கிறவனைப் பார்த்து பஞ்சு மிட்டாய் விக்கிறவன்னு சொல்லிட்டா உன் அத்தை பொண்ணு…” என்று சித்தார்த் புகார் சொல்ல, கார்த்தி சங்கடமாகச் சந்தியாவைப் பார்க்க,
“சும்மா விளையாட்டுக்கு சொல்லியிருப்பா. விளையாட்டு தனமா இருந்தாலும் ரொம்பப் பொறுப்பான. புத்திசாலியான பொண்ணு. இவளுக்கு உன்னைப் பத்தி எல்லாமே தெரியும். மதுரையில நாங்க இவ வீட்டு பக்கத்தில தான் இருக்கோம்…”
“அப்படியா…” என்றவன் “எப்படியும் அடுத்த மாசம் வருவேன் மதுரைக்கு…” என்று சித்தார்த் சொல்ல,
“இனி நீ அடிக்கடி வருவேன்னு தெரியும்.” என்ற சந்தியா அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுத்து விலகி செல்ல, சித்தார்த் கார்த்தி இருவரும் தங்கள் மனம் திறந்து பேசினர்.
அன்று இரவு கதிரின் தோளில் சாய்ந்திருந்த சந்தியா… சித்தார்த் கார்த்திப் பற்றிக் கதிரிடம் சொன்னவள் “எனக்கு ரொம்பச் சந்தோஷம் மாமா. நீங்க என்னையும் சித்தார்த்தையும் புரிஞ்சிக்கிட்ட மாதிரி கார்த்தியும் எங்களைப் புரிஞ்சிக்கணும். ஆண் பெண் நட்பு திருமணத்திருக்கு பின்னாடியும் எல்லோருக்கும் தொடர்றது இல்ல….” என்றாள்.
“அது நாம எப்படி நடந்துக்கிறோம் அப்படிங்கிறதை பொறுத்து. நீயும் சித்தார்த்தும் எப்பவும் ரொம்ப விழுந்து பழக மாட்டீங்க. பாரு இன்னைக்குச் சித்தார்த் உனக்கு வளையல் கூடக் கார்த்தி மூலமா தான் கொடுத்தான். நட்புனாலும் ஒரு எல்லையோட இருக்கணும். தோள்ள கைபோட்டுச் சுத்தினா தான் நட்பா?! இல்லை, இன்பத்திலும், துன்பத்திலும் தோள் கொடுக்கிறது தான் நட்பு.”
“அது புரிஞ்சு நீங்க ரெண்டு பேரும் நடந்துக்கிறதுனால தான் உங்க நட்பு உங்களையும் தாண்டி நம்ம குடும்பம் வரை தொடருது.” என்ற கதிரின் புரிதலை எண்ணி சந்தியா சந்தோஷத்தில் அவனை இறுக அணைக்க,
“விடுடி என் பொண்ணுக்கு வலிக்கப் போகுது…” என்று கதிரும், “பொண்ணு இல்லை பையன் தான்…” என்று சந்தியாவும் எப்போதும் தங்களுக்குள் நடக்கும் செல்ல சண்டையை ஆரம்பித்தனர்.
மறுநாள் கதிரை வற்புறுத்தி அழைத்துக்கொண்டு சந்தியா கடை வீதிக்கு சென்றாள். அவர்கள் சாமான்கள் வாங்கிக்கொண்டு திரும்ப வரும் போது, எதிரில் நந்தினியும், ராஜ்குமாரும் வந்தனர்.ராஜ்குமார் கதிரை பார்த்ததும் ஆவலாக நின்று பேச, கதிர் வேறு வழியில்லாமல் நின்றான்.
ராஜ்குமார் அவனாகவே “உன்னைப் பஸ் ஸ்டாண்ட்ல பார்த்த அன்னைக்கு எங்க பாட்டி இறந்துட்டாங்கடா. நான் அதனால உடனே கிளம்பிட்டேன்…” என்றான்.
கதிர் ஒன்றும் தெரியாதவன் போல் “அப்படியா….” என்றான்.
பின் அவர்கள் இருவரும் தங்கள் வேலையைப் பற்றிச் சிறிது நேரம் பேசினார்.
“சரிடா நான் கிளம்புறேன் சந்தியாவுக்குக் கால் வலிக்கும்.” கதிர் சொல்ல,
“உன் மனைவியும், என் மனைவியும் ஒரே ஸ்கூல் தான படிச்சாங்க ஆனா பேசிக்கவே மாட்டேங்கிறாங்க…” என்று ராஜ்குமார் சந்தேகமாகக் கேட்க,
“லேடீஸ்னா அப்படித்தான் ஸ்கூல் படிக்கும் போது எதாவது சண்டை போட்டிருப்பாங்களா இருக்கும்.” என்ற கதிர் சந்தியாவைப் பார்த்துக்கொண்டே “உன் மனைவி தான் எப்பவும் நல்லா படிப்பாங்க. இவ பிட் அடிச்சு டிஸ்ரிக்ட் ஃபர்ஸ்ட் வந்துட்டா. அதுல இருந்து ரெண்டு பேருக்கும் லடாய்…” என்று விளையாட்டாகச் சொல்ல,
“இப்படியெல்லாம் கூடவா சண்டை போடுவாங்க…” என்று ராஜ்குமார் சிரித்துக்கொண்டே அவர்களை வழி அனுப்பினான்.
நந்தினி நிமிர்ந்து சந்தியாவைப் பார்க்க, சந்தியா ஒப்புக்குக் கூட அவளைப் பார்க்கவில்லை. நந்தினிக்கு இப்போது நன்றாகவே புரிந்தது. இழக்கக் கூடாத நட்பை இழந்து விட்டோம். இனி என்றும் அது தனக்குக் கிடைக்காது என்று.
அவர்களைத் தாண்டி வந்ததும் இடுப்பில் கைவைத்து கதிரை பார்த்து முறைத்த சந்தியா “நான் பிட் அடிச்சு டிஸ்ரிக்ட் ஃபர்ஸ்ட் வந்தேனா?! அப்ப ஸ்டேட் தேர்ட் வந்ததும் பிட் அடிச்சா…” என்று கோபமாகக் கேட்க,
“சும்மாடா… எதாவது காரணம் சொல்லலைன்னா அவனுக்கு வீணா சந்தேகம் வரும். அப்புறம் என்ன விஷயம்னு நோன்டுவான். ஒரு பெண்ணோட வாழ்க்கைடா.. ப்ளீஸ் விடு…” என்றதும் சந்தியா சுற்றி பார்க்க,
“என்ன பார்க்கிற?” என்றான் கதிர் புரியாமல்,
“ம்ம் உங்களுக்குச் சிலை வைக்க. நல்ல இடமா தேடுறேன்.” என்று சந்தியா சிரிக்காமல் சொல்ல, கதிர் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான்.
கதிர் சிரிப்பதை பார்த்து சந்தியாவிர்க்கும் சிரிப்பு வர, வயிற்றில் குழந்தை இருந்ததால் அவளால் சிரிக்கக் கூட முடியவில்லை. அவள் கஷ்டப்பட்டுச் சிரிப்பதை பார்த்து “என் பொண்ணு உன்னைப் படுத்துறாளா…” என்று கதிர் ஆரம்பிக்க,
“பொண்ணு இல்ல என் பையன்…” என்று சந்தியாவும் சண்டைக்குக் கொடி பிடிக்க,
அவர்களுக்கு என்ன குழந்தை? என்பதை உங்கள் விருப்பத்திற்கே விட்டு, அவர்கள் என்றும் இன்று போல் சந்தோஷமாக வாழ வாழ்த்திவிடைபெறுகிறேன்.