சந்தியா கதிரை நேரில் சென்று பார்க்க முடியாமல் போனதால் மனதிற்குள் மருகிக் கொண்டு தான் இருந்தாள். ஆனால். அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் உற்சாகமாக இருப்பது போல் நடித்தாள். சித்தார்த் அதைக் கண்டும் காணாமல் இருந்தான். அவனால் வேறு என்ன செய்ய முடியும்? தவறு செய்தது சந்தியா. கதிராக மனமிறங்கினால் தான் உண்டு என்று நினைத்தான்.
ஒரு நாள் கல்லூரியில் சந்தியா எப்போதும் போல் அனுவுடன் சேர்ந்து சித்தார்த்தை வம்பிழுத்துக் கொண்டு இருந்தாள். மதிய உணவுக்குச் செல்லும் போது வழியில். மீன் குழம்பு வாசம் ஆளைத் தூக்க,
“ஹா ஹா..! யாரோ மீன் குழம்பு கொண்டு வந்திருக்காங்க…” என்ற சந்தியா அந்த வாசத்தை மோப்பம் பிடித்துக் கொண்டே செல்ல, அவள் கூடவே அனுவும், சித்தார்த்தும் சென்றனர்.
சந்தியா ஸ்ரீஜாவின் அருகே சென்று அமர்ந்தவள் “ஹாய் ஸ்ரீஜா எப்படி இருக்க?” என்று பாசமாக விசாரிக்க,
“நல்லா இருக்கேன் சந்தியாக்கா. நீங்க எப்படி இருக்கீங்க?” என்று பதிலுக்கு ஸ்ரீஜாவும் விசாரிக்க,
“நல்லா இருக்கேன். இப்ப அனாடமி க்ளாஸ்க்கு எல்லாம் பயப்படாம போறியா, இல்ல இன்னும் பயம் தானா..?” என்றாள் சந்தியா கிண்டலாக,
அவள் சொன்னதைக் கேட்டதும், ஸ்ரீஜா வெட்கப்பட்டு கொண்டே சித்தார்த்தை பார்க்க, அவனும் அவளைப் பார்த்துப் புன்னகத்தான்.
“உன்னோட முடி கருப்பா. பட்டு போல இருக்கு…” என்று சொல்லியபடி சந்தியா ஸ்ரீஜாவின் எண்ணெய் தேய்த்து குளித்து விரித்து விட்டிருந்த நீள கூந்தளில் கைவிட்டு அளந்தவள்,
“நீ டெய்லி மீன் சாப்பிடுவியா, அதனால தான் உன்னோட முகம் பள பளன்னு ஜொலிக்குதா…” என்று அடுத்த அஸ்த்திரத்தை எய்தாள்.
“நான் டெய்லி மீன் சாப்பிடுவேன். ஆனா, அதனால தான் முகம் ஷைனிங்கா இருக்கான்னு தெரியாது…” என்றாள் ஸ்ரீஜா அப்பாவியாக,
“அப்படின்னா உனக்கு மீன் ரொம்பப் பிடிக்குமா, எனக்கும் பிடிக்கும்…” என்று சந்தியா சொன்னதும், ஸ்ரீஜா வேகமாக “உங்களுக்கும் மீன் பிடிக்குமாக்கா, நான் இன்னைக்கு மீன் குழம்பு தான் கொண்டு வந்திருக்கேன். நீங்க சாப்பிடனும்…” என்றாள் பாசமாக.
சித்தார்த்தும், அனுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். சந்தியா சுத்தி வளைத்து பேசியது இதற்கு தானே என்று அவர்களுக்கா புரியாது.
சந்தியா இப்படித்தான் சித்தார்த்திடமும் அல்பத்தனமாக அடித்து, பிடித்து அவன் கொண்டு வரும் மதிய உணவை பிடுங்கி சாப்பிடுவாள். ஆனால் ஆள் என்னவோ தேய்ந்து கொண்டே தான் சென்றாள். காலையும், இரவும் ஹாஸ்டலில் ஒழுங்காக சாப்பிடமாட்டாள்.
“இல்ல இல்ல வேண்டாம், நீ சாப்பிடு…” என்று சந்தியா மறுப்பது போல் நடிக்க,
“ப்ளீஸ்க்கா, நீங்க பிடிக்கும்னு சொல்லிட்டு சாப்பிடலைன்னா, எனக்கு மனசு கஷ்டப்படும். எனக்காகச் சாப்பிடுங்க…” என்றவள், தன் டிபன் பாக்சை மூடி சந்தியாவிடம் கொடுக்க,
“சமத்து, இனி ரெண்டு பாக்ஸ் கொண்டு வா. வீணா கேன்டீன்ல சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காத….” என்று அவளைக் கொஞ்சிய சந்தியா, வந்த வேலை முடிந்த சந்தோஷத்தில் சித்தார்த்தையும், அனுவையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றவள்,
செல்லும் வழியில் “ஆளும் அழகு, குணமும் நல்லா இருக்கு சித்து. பேசாம நீ ஸ்ரீஜாவை லவ் பண்ணேன்…” என்று யோசனை சொல்ல,
“டேய் இவ தூண்டில் போட்டு மீன் பிடிக்கிற மாதிரி, உன்னை போட்டு ஸ்ரீஜாவை பிடிக்கப் பார்க்கிறாடா. இவளை நம்பாத, மீன் குழம்புக்காக உன்னை லவ் பண்ண சொல்றாடா….” என்று அனு சந்தியாவைப் போட்டுக் கொடுக்க,
“எதுக்கு எனக்கு வேற ஆளு, என்னோட செல்லம் நீ இருக்கும் போது…” என்ற சித்தார்த் அனுவின் தோளில் கை போட்டவன் “குண்டூஸ், நீ ஒரு பதினைந்து கிலோ மட்டும் வெயிட் குறைஞ்சிட்டேன்னு வை. நான் உன்னையே கல்யாணம் பண்ணிக்கிறேன்டா…..” என்றான் கண்சிமிட்டி.
“பதினைந்து கிலோ! நானு?! அதுக்கு வேற ஆளைப்பாரு. எனக்கு அப்படி உன்னைக் கல்யாணம் பண்ணனும்னு அவசியம் இல்லை. எனக்குன்னு ஒரு அமுல் பேபி வரும்…” என்ற அனு சித்தார்த்தை தள்ளிவிட்டு செல்ல, அவன் கீழே விழுவது போல் நடித்தான்.
“போடி, உனக்கு வாழ்க்கை தரளாம்னு பார்த்தா வேண்டாம்னு சொல்ற….” என்றவன் அருகில் நின்ற சந்தியாவைப் பார்த்து “நீ ஒருத்தி லவ் பண்ணி கஷ்டப்படுறது பத்தாதா? உனக்கு ஏன் என் மேல இவ்வளவு காண்டு.
சீரியஸா. எனக்கு ஸ்ரீஜாவை பார்க்கும் போது அப்படி எதுவும் தோணல. அவ கள்ளமில்லாத முகத்தைப் பார்க்கும் போது, ஒரு சிஸ்டர் பீலிங் தான் வருது. நீ பாட்டுக்கு அவ மனசுல எதாவது ஆசைய விதச்சிடாத…” என்றான் சித்தார்த் கடுமையாக.
சந்தியா சரி என்று தலை ஆட்டிவிட்டு நடக்க, சந்தியாவிடம் மீன் வறுவலை கொடுக்க வந்த ஸ்ரீஜா அவர்கள் பேசியதை கேட்டுவிட்டு புன்னகையுடன் திரும்பி சென்றாள். ஸ்ரீஜாவுக்கு ஏற்கனவே சித்தார்த்தை ரொம்பப் பிடிக்கும். இப்போது இன்னும் பிடித்தது அண்ணனாக. கல்லூரியில் படித்தால் காதலிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. கல்லூரியில் நண்பர்களோடு இருக்கும் நாட்களே அழகானது.
இரண்டு மாதங்கள் கழித்து சந்தியா ஒரு ஞாயிறு அன்று தாம்பரம் தாண்டி இருக்கும் கதிரின் வீட்டிற்கு சென்றாள். நகரத்தை விட்டு தள்ளி இருந்ததால், அங்கே செல்வதற்கே இரண்டு மணி நேரம் ஆனது. அவள் சென்ற போது மதிய நேரம்.
திட்டினாலும் பரவாயில்லை என்று வந்தவள், வாயில் மணி அடித்துவிட்டு வெளியே காத்திருக்க, கதவை திறந்த கதிர் சத்தியமாகச் சந்தியாவை எதிர்ப்பார்க்கவில்லை. திட்டிவிடுவானோ என்று சந்தியா பயத்தில் பார்க்க, திடீரென்று பார்த்ததும் என்ன பேசுவது என்று தெரியாமல் கதிர் அப்படியே நிற்க, உள்ளே இருந்து அவன் அம்மா லக்ஷ்மி யாரென்று கேட்டபடி வந்தவர், சந்தியாவைப் பார்த்துவிட்டு முகம் மாறினார்.
தன் அம்மா பேச ஆரம்பிக்கும் முன், சந்தியா உள்ளே வர வழி விட்ட கதிர், அவள் உள்ளே வந்ததும், கதவை சாற்றிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டான்.
“நீ எதுக்கு இப்ப இங்க வந்த? இன்னும் எதாவது பாக்கி இருக்கா? அது தான் நீயும், இந்த வீட்ல பொறந்த எருமையும் சேர்ந்து எங்க மானத்தை வாங்கிட்டீங்களே. அன்னைக்கு உன்னோட அம்மாவும், அப்பாவும் உனக்கு வரிஞ்சு கட்டிட்டு பேசினாங்க. தப்பு என் மேல தான். என் பொண்ணு மேல தப்ப வச்சிக்கிட்டு உன்னைப் பேச நான் யாரு?” என்ற லக்ஷ்மிக்கு அழுகையில் குரல் அடைக்க,
அவரிடம் வேகமாக வந்த சந்தியா “உங்களுக்கு என்னைப் பேச உரிமை இருக்கு அத்தை. அப்பாவும், அம்மாவும் பேசினதுக்கு நான் உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்…” என்றாள் கண்கலங்க,
“யாருக்கு வேணும் உன் மன்னிப்பு. சும்மாவே உன்னோட அம்மாவும், அப்பாவும் உன்னைத் தலையில தூக்கி வச்சிக்கிட்டு ஆடுவாங்க. நீ இப்ப டாக்டருக்கு வேற படிக்கிற, நீ எங்க வீட்டுக்கு வந்தது தெரிஞ்சா அவ்வளவு தான்! இன்னும் பிரச்சனை ஆகும். நீ முதல்ல கிளம்பு…” என்றார் கறாராக,
“அத்தை பெரிய மாமாவை மட்டும் ஒரு தரம் பார்த்துட்டு போய்டுறேன் ப்ளீஸ்…” என்று சந்தியா கெஞ்ச,
“அவரு இப்படி ஆனதுக்குக் காரணமே காவேரியும், நீயும் தான. எப்படி கம்பீரமா இருந்த மனுஷன். இன்னைக்கு அவரு இருக்கிற நிலைமைய பார்த்தா நெஞ்சுல ரத்தம் வடியுது…” என்றார் அழுகையுடன்.
அதுவரை உள்ளே இருந்த சந்தியாவின் ஆச்சியும், தாத்தாவும் வெளியே வந்தனர். சந்தியா அவர்களைப் பார்த்ததும் அருகில் செல்ல, பாட்டி அவளை ஆவலாகப் பார்க்க, தாத்தா முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்று சோபாவில் அமர்ந்தார்.
“நீங்களாவது அத்தைக்கிட்ட சொல்லுங்க ஆச்சி. நான் வேணும்ன்னு பண்ணலை. நான் ஒரே ஒரு தடவை மாமாவை பார்த்துட்டு போறேன்…” என்றாள் சந்தியா அழுகையுடன்.
அவர் என்ன சொல்வது என்று தெரியாமல் தவிப்புடன் நிற்க, மாமாவை பார்க்காமல் நான் போகமாட்டேன் என்பது போல் சந்தியா உறுதியாக நின்றாள். அறையில் படுத்திருந்த பெரியசாமி, “யா… ருருரு…… வந்திருக்கா…சந்தி… யா.. வா…” என்று தட்டுத்தடுமாறிப் பேச, தன் மாமாவின் குரல் கேட்டு, சந்தியா வேகமாக அந்த அறைக்குள் ஓடினாள்.
வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக ராஜ நடை நடந்த தன் மாமா, இன்று ஒரு கையும், காலும் வராமல், கட்டிலில் ஒடுங்கி போய்ப் படுத்திருப்பதைப் பார்த்து அவளுக்கு நெஞ்சை அடைத்தது. சந்தியா அவரின் அருகே அமர்ந்து, அவரின் கையைப் பிடித்துக் கொண்டு கதற, அதே அறையில் ஒரு ஓரத்தில் நெற்றியில் கைவைத்து தன் முகத்தை மறைத்துக்கொண்டு அமர்ந்திருந்த கதிரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.
சந்தியா அழுவதைப் பார்த்த பெரியசாமி “அழா… த… சந்… தியா…. சரி… ரி ஆ…கிடும்…” என்று தன் மருமகளைத் தேற்ற, சந்தியா அழுவதை நிறுத்தினாள்.
கதிர் தன் கண்களை அழுந்த துடைத்துக்கொண்டு எழுந்தவன், தன் அப்பாவை தூக்கி சாய்வாக உட்கார வைத்துவிட்டு “அம்மா…. அப்பாவுக்குச் சாப்பாடு கொண்டு வாங்க…” என்றவன், மறந்தும் சந்தியாவின் பக்கம் திரும்பவில்லை.
உணவு கொண்டு வந்த லக்ஷ்மி சந்தியாவைப் பார்த்து முறைக்க, அவள் எழுந்து சென்று ஓரமாக நின்றாள். லக்ஷ்மி தட்டில் சாதம் போட்டுக் கொண்டு வந்தவர், அவரே சென்று தன் கணவருக்கு ஊட்டிவிட்டார்.
பெரியசாமி சாப்பிட்டதும் அவருக்கு மருந்து மாத்திரை கொடுத்த கதிர் “அம்மா சீக்கிரம் சாப்பிட்டிட்டு வாங்க, அப்பாவுக்குத் தேவையானது எல்லாம் வாங்கிட்டு வந்துடலாம்…” என்றவன், அந்த அறையில் இருந்து வெளியே செல்ல, அவனோடு லக்ஷ்மியும் சென்றார்.
சந்தியா தன் மாமா இருந்த கட்டிலிலேயே அவரின் எதிரில் அவர் கையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தாள்.
“நீ… யும் போ…. ய்ய் சாப்…. பிடு சந்தி… யா…” என்று பெரியசாமி சொல்ல, சந்தியாவின் கண்கள் கண்ணீரால் நிரம்பியது.
பெரியசாமி மனதால் கூடப் பிறருக்கு தீங்கு நினைக்காதவர். யார் உதவி என்று வந்தாலும் தன்னால் முடிந்த மட்டும் செய்து கொடுப்பார். வயதில் சிறியவர்கள் என்றாலும் அவர்களையும் மரியாதையாகத் தான் அழைத்துப் பேசுவார். எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாதவர். அப்படிப்பட்டவருக்கு இப்படி ஏன் ஆகவேண்டும் என்று சந்தியா மனதிற்க்குள் வருந்தியபடி இருந்தாள்.
சிறிது நேரம் சென்று உள்ளே வந்த கதிர் தன் அப்பாவை படுக்க வைத்துவிட்டு வெளியே சென்றான். சந்தியா உறங்கும் தன் மாமனின் முகத்தையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க, அவள் தோளில் ஒரு கரம் விழுந்தது. சந்தியா திரும்பி பார்க்க, அங்கே அவள் ஆச்சி நின்று கொண்டிருந்தார்.
சந்தியா அவரைப் பார்த்ததும் முகம் மலர, வெளியே வா என்று ஜாடை காட்டிய ஆச்சி வெளியே செல்ல, சந்தியாவும் எழுந்து அவர் பின்னே சென்றாள். வீடே அமைதியாக இருந்தது. சந்தியா மற்றவர்கள் எங்கே என்பது போல் பார்க்க,
“உன் தாத்தா அந்த அறையில படுத்துத் தூங்குறார். உன் அத்தையும், கதிரும் வெளிய போய் இருக்காங்க…” என்றார் ஆச்சி.
தன்னைச் சாப்பிட கூடச் சொல்லவில்லை என்று நினைத்த சந்தியா முகம் வாட, அவளையே பார்த்துக் கொண்டிருந்த அவளின் ஆச்சி “கதிர் இன்னும் சாப்பிடலை. அவங்க திரும்பி வர்றதுக்குள்ள உன்னைச் சாப்பிட வச்சு அனுப்ப சொன்னான்…” என்றவர் சந்தியாவிற்கும், அவருக்கும் தட்டு வைத்து பரிமாற,
ரொம்பத் தான் அக்கறை என்று கதிரை மனதிற்குள் திட்டியபடி சந்தியா சாப்பிட அமர்ந்தாள். சாப்பிட்டபடி சந்தியா அவளின் ஆச்சியிடம் பேச்சு கொடுக்க,
“என்னன்னு சொல்றது எல்லாம் நேரம். எப்படி இருந்தவன் இப்படிப் படுக்கையில இருக்கானே. பாவம் கதிர் தான் கிடந்து பாடுபடுறான். அவன் ஆபீஸ் இங்க இருந்து ரொம்பத் தூரம். அவன் ஆபீஸ் பக்கத்தில வீட்டு வாடகை ஜாஸ்தின்னு, இங்க வீடு பார்த்திருக்கான். அதனால அவனுக்குத் தான் ரொம்ப அலைச்சல்.
வீட்ல அவங்க அப்பாவையும் பார்த்துக்கிட்டு, வேலைக்கும் போயிட்டு வர்றான். அதோட மாசம் உன் மாமனோட வைத்தியத்துக்கு, பிசியோதெரபிக்கு, வீட்டு வாடகை, அப்புறம் நாங்க எல்லாம் சாப்பிடுற சாப்பாட்டுக்கு எல்லாம் அவன் சம்பளம் தான். பிள்ளை எப்படிச் சமாளிக்கிறனோ தெரியலை…” என்றார் ஆச்சி கவலையாக.
“ஏன் ஆச்சி ஊர்ல இருந்து கடை வாடகை, வீட்டு வாடகை எல்லாம் வருமே…”
“இப்பவும் வருது தான். ஆனா, இங்க வர மாட்டேங்குதே…. உன் சின்ன அத்தைய பத்தி உனக்குத் தெரியும்ல. ரொம்ப ஊதாரி. இப்ப அவ தன் புருஷனையும் கைகுள்ள போட்டுக்கிட்டா. அவங்களே எல்லா வாடகையும் வாங்குறாங்க. இங்க ஒன்னும் அனுப்புறது இல்ல. கேட்டா, விவசாயத்துல நட்டம் ஆகிடுச்சுன்னு சொல்லுதுங்க…” என,
கதிர் ஒரு மணி நேரம் கழித்துத் தன் அம்மாவுடன் வீட்டுக்கு வந்தவன், அவரை உள்ளே சென்று படுக்கும்படி சொல்லிவிட்டு, அவனே சென்று தனக்குத் தட்டில் பரிமாறிக்கொண்டு சாப்பிட அமர்ந்தான். டிவி பார்த்துக்கொண்டே சாப்பிட்டவன், சாப்பிட்டதும் தலையணை எடுக்க அவன் தாத்தா, பாட்டி இருந்த அறைக்குள் செல்ல, அங்கே தரையில் பாய் விரித்துச் சந்தியா அவன் அப்பத்தாவை கட்டிக்கொண்டு தூங்குவதைப் பார்த்தான்.
‘இவ இன்னும் போகலையா. அம்மா பார்த்தா கத்த போறாங்க…’ என்று நினைத்தவன், அவளையே பார்த்துக்கொண்டு சிறிது நேரம் நின்றான். சிறிது நேரம் சென்று வெளியே வந்தவன், அவனும் சோபாவில் படுத்து உறங்கினான்.