சென்னையில், அந்த புகழ் பெற்ற கல்லூரி அமைதியாக இருந்தது. வசதியான வீட்டுப் பிள்ளைகள் அதிக பேர் படிக்கும் கல்லூரி. மாணவர்கள் ஆங்காங்கே தென்பட, நிறைய பேர் கர்ம சிரத்தையாக தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். அன்று யுஜி மாணவர்களுக்கு மாடல் எக்ஸாம் நடந்து கொண்டிருக்க, பிஜி மாணவர்கள் ஹாயாக சுற்றிக் கொண்டிருந்தனர்.
எக்ஸாம் ஹாலின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தாள் வந்தனா. மீண்டும் பார்க்கத் தூண்டும் அழகி. அவளின் உதட்டின் மேல் இருந்த மச்சம் கூடுதல் அழகாய் அவளைக் காட்ட, கண்கள் மட்டுமே அந்த தேர்வு தாளில் இருந்தது. ஆனால் அவள் எழுதவில்லை. அவள் அழுது கொண்டிருப்பதைப் போல் இருந்தது. கைகளை வைத்து கண்ணீரைத் துடைக்கவும், இரண்டு வரி எழுதவுமாய் இருந்தாள்.
ஹாலின் நேர் எதிர் மரத்தின் அடியில் இருந்த அந்த மேடையில், எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான் விஜய். அவனுக்கு அருகில் அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர் பிரவீனும், கண்ணனும்.
“இவன் என்னடா இப்படி யோசிச்சுட்டு இருக்கான்..?” என்றான் கண்ணன்.
“அதை அவனையே கேட்க வேண்டியது தான..? என்ற பிரவீன் அவனை முறைக்க,
“என்ன மாப்ள யோசிக்கிற..? மேல பார்க்குற..? கீழ பார்க்குற ..? இது ஆப்பிள் மரம் கூட இல்லையேடா..?” என்றான் கண்ணன்.
“என்னடா கிண்டலா…? ஒரு மெக்கானிசம் பத்தி யோசிச்சுட்டு இருந்தேன்..!” என்றான் விஜய்.
“டேய்..! இதெல்லாம் உனக்கு ஓவரா தெரியலை..? படிக்கலாம் விஜய், ரொம்ப படிக்கக் கூடாது..! என்கூட சேர்ந்தும் நீ இப்படிப் படிக்கிறதுல தான் எனக்கு ஆச்சர்யமே..?” என்று கண்ணன் சிரிக்காமல் சொல்ல,
“உண்மையை சொல்லிட்டாண்டா..!” என்றான் பிரவீன்.
“பின்ன என்னடா..? இந்த வயசுல எப்படி பிகரை பார்க்குறது, கரெக்ட் பண்றது இப்படித்தான் தோணனும். இவன் என்னடான்னா..? நட்டு கலட்டுறது, மாட்டுறதுன்னு யோசிச்சுட்டு இருக்கான். இந்த வருஷத்துக்கு அப்பறம், வாழ்க்கை முழுசுக்கும் அதைத்தான பண்ணப் போறோம்..! நான் தெரியாமத் தான் கேட்குறேன்.. இந்த ஹீரோ எல்லாம் ரொம்ப படிச்சவனாத்தான் இருக்கனுமா என்ன..?” என்றான் கண்ணன்.
“டேய்..!!!” என்று பல்லைக் கடித்தான் விஜய்.
“இல்லை..! காலேஜ்ல நிறைய பொண்ணுங்களுக்கு நீதானடா ஹீரோ. அதை வச்சு சொன்னேன்..!” என்று சமாளித்துக் கொண்டிருந்தான் கண்ணன்.
விஜய், பிரவீன், கண்ணன் மூவரும் பிஜி பைனல் இயர் ஸ்டூடண்ட்ஸ். மூவரும் நல்ல நண்பர்கள். பிரவீன் சொந்தம் என்பதைக் காட்டிலும் விஜய்க்கு நல்ல நண்பன்.
இவர்களுடன் பேசிக் கொண்டிருந்தவன், எதேச்சையாக எதிர்புறம் பார்க்க, விஜய்யின் கண்களில் விழுந்தாள் வந்தனா. கண்களைத் துடைத்துக் கொண்டே, அவள் எழுதிக் கொண்டிருப்பது தெரிந்தது விஜய்க்கு. அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவன் பார்வை போன திசையில் பார்த்தனர், பிரவீனும், கண்ணனும்.
“யாருடா இது..?” என்றான் கண்ணன்.
“யாருக்குத் தெரியும்..?” என்ற விஜய் கண்களை எடுக்கவேயில்லை.
“தெரியலைன்னா, ஏண்டா பார்த்துட்டே இருக்க..?” என்றான் கண்ணன்.
“இல்ல, இந்த பொண்ணு எதுக்கு அழுதுகிட்டே எக்ஸாம் எழுதுறா..?” என்றான் விஜய்.
“அந்த பொண்ணு எப்படி எக்ஸாம் எழுதுனா நமக்கென்ன விஜய்..? ஹெச்ஓடி உன்னை வர சொன்னாரே, அவரைப் போய் பார்த்தியா..?” என்று பிரவீன் கேட்க, அவனிடம் இருந்து பதில் இல்லை.
“சரித்தாண்டா..! நீ நடத்து..!” என்று கண்ணன் கிண்டல் அடிக்க,
“டேய்..! நீ வாடா..! தலைவர் பதறாம பார்த்துட்டு வரட்டும்..!” என்று அவன் பிரவீனை அழைத்துக் கொண்டு போக, அவர்கள் கிளம்பிய சிறிது நேரத்தில் எக்ஸாம் முடிந்து அனைவரும் வெளியே வந்து கொண்டிருந்தனர். அவளின் முகம் விஜய்க்கு தெளிவாக தெரியாததால், சற்று ஊன்றி கவனிக்க, அவளோ கூட இருந்த ஒரு பெண்ணுடன், அவன் இருக்கும் இடத்திற்கு அருகே வந்தாள். விஜய் அவர்களைப் பார்த்தும், பார்க்காததைப் போல் கவனித்துக் கொண்டான்.
அந்த அடர் பச்சை நிற சல்வார், அவள் நிறத்தை மேலும் தூக்கிக் காட்ட, அவள் மேலே போட்டிருந்த பிங்க் நிற துப்பட்டா, அடங்காமல் காற்றுக்கு பறந்து கொண்டிருந்தது. முகமோ அழுததில் வீங்கியிருக்க, உதட்டின் மேல் இருந்த மச்சம் அவளுக்கு தனி அழகைக் கொடுத்தது.
“என்ன சிம்ரன் இதெல்லாம்..?” என்று அவளுக்கு அருகில் இருந்தவள் கேட்ட கேள்வியில், விஜய்க்கு தானாக சிரிப்பு வந்தது. அவளின் கேள்விக்கு அவள் பதில் பேசாமல் இருக்க,
“என்னாச்சு சிம்ரன்..? ஹால்ல ஏன் அழுதுட்டே இருந்த..? அப்பா, அம்மா நியாபகம் வந்துடுச்சா..?” என்றாள் அவள்.
“அப்பா, அம்மா” என்ற வார்த்தையைக் கேட்டவுடன், வந்தனாவின் முகம் விளக்கெண்ணையை குடித்தது போல் ஆனது.
“எதுக்கு அழுத..?” என்றாள் மீண்டும்.
“ப்ரீத்தி.. ப்ரீத்தி..!” என்று அவள் மீண்டும் ஆரம்பிக்க,
“நிறுத்து..! முதல்ல விஷயத்தை சொல்லிட்டு அழு..!” என்றாள் ப்ரீத்தி.
“கொஸ்டின் பேப்பர்ல எனக்கு ஒண்ணுமே தெரியலை கீர்த்தி. நான் படிச்ச எதையுமே அவங்க கேட்கலை..! மாடல் எக்ஸாம்லையே நான் தேற மாட்டேன் போல..!” என்று அவள் தீவிரமாய் சொல்லிக் கொண்டிருக்க, அதைக் கேட்ட ப்ரீத்தி விழுந்து விழுந்து சிரித்தாள் என்றால், விஜய்க்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“இதுக்காடி அப்படி அழுத..?” என்றாள் ப்ரீத்தி.
“அப்பறம் அழ மாட்டாங்களா..? ஏற்கனவே எனக்கு விவரம் பத்தலைன்னு எங்க அப்பாவுக்கு கோபம். எப்படியோ அரியர் கிளியர் பண்ணி பண்ணி.. தேர்ட் இயர் வரைக்கும் வந்துட்டேன். எப்படித்தான் இந்த இஞ்சினியரிங்க முடிக்கப் போறேனோ..!” என்று அவள் புலம்ப,
“சிம்ரன்..! என்னை சோதிக்காத..! நான் கூட நீ அழறதைப் பார்த்துட்டு, ஏதோ பெரிய பிரச்சனைன்னு வந்து கேட்டா, இப்படி ஒரு சப்பை காரணத்துக்குத் தான், அப்படித் தேம்பித் தேம்பி அழுதுட்டு இருந்தியா..?” என்றாள் ப்ரீத்தி.
“அச்சோ ப்ரீத்தி..! என்னை வந்தனான்னு கூப்பிடு. எதுக்கு சிம்ரன் சிம்ரன்னு கூப்பிடுற..?” என்று அவள் குறைபட,
“அதெல்லாம் முடியாது. உனக்கு சிம்ரன் மாதிரி மச்சம் இருக்கு. அதனால உன்னை அப்படித்தான் கூப்பிடுவேன்..! சரி,சரி.. இந்த கவலையெல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு, நல்ல பிள்ளையா கேண்டீன்ல வந்து பப்ஸ் வாங்கிக் குடு பார்க்கலாம்..!” என்றாள் ப்ரீத்தி.
“பப்ஸ் எதுக்குடி..?”
“நீ, எக்ஸாம் ஒழுங்கா எழுதலைல. அதுக்கு ட்ரீட் குடு..!” என்றாள் ப்ரீத்தி போன போக்கில்.
“இதுக்கெல்லாம ட்ரீட் குடுப்பாங்க.. போடி..!” என்று வந்தனா சொல்ல,
“சிம்ரன்… இதுக்கெல்லாம் அழும் போது, ட்ரீட்டும் கண்டிப்பா குடுக்கலாம்…” என்றாள் ப்ரீத்தி.
“போகலாம்..!” என்று வந்தனா பல்லைக் கடித்துக் கொண்டு அவளுடன் செல்ல, ஏனோ விஜய்க்கு அவளின் முகம் அப்படியே மனதில் பதிந்து போனது. அவனும் அந்த இடத்தை விட்டு நகர,
“சிம்ரன்.. அந்த விஜய் உன்னையே பார்த்துட்டு இருந்தான்..!” என்று பிரீத்தி சொல்ல,
“அது யாருடி..?” என்றாள் வந்தனா.
“நம்ம காலேஜ் செஸ் சேம்பியன் தான். நீ கூட அன்னைக்கு அவனைப் பார்த்து, செம்மையா இருக்கான்னு சொன்னியே அவன்தான்..!” என்றாள் பிரீத்தி.
“எங்கடி..?” என்று வந்தனா வேகமாக திரும்பிப் பார்க்க,
“நாம கிளம்புன உடனே, அவன் போய்ட்டான்..!” என்றாள் பிரீத்தி.
“என்னடி நீ..? முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல..? நானும் பார்த்திருப்பேன்..!” என்று குறைபட்டுக் கொண்டாள் வந்தனா.
“இன்னேர வரைக்கும் நீ கவலைப் பட்ட விஷயம் என்ன..? இப்போ நீ கவலைப் படுற விஷயம் என்ன..? உன்னைப் போய் நல்லவன்னு நினச்சேனே சிம்ரன்..!” என்று ப்ரீத்தி டயலாக் பேச,
“சத்தியமா முடியலை..! அவர் இருந்ததை சொல்லாம விட்டதுக்காக, உனக்கு பப்சும் கிடையாது. ஒன்னும் கிடையாது..! நான் ஹாஸ்ட்டல் போறேன்..!” என்று வந்தனா சிலுப்பிக் கொண்டு போக,
“ரொம்ப பண்ணாத சிம்ரன்..!” என்று அவள் பின்னாடியே ஓடினாள் பிரீத்தி.
வந்தனா- இவளைத் தெரிந்தவர்கள், இவள் கனகவேலின் மகள் என்று சொன்னால் நிச்சயமாக நம்பமாட்டார்கள். அந்த அளவிற்கு நல்லவள், கொஞ்சம் வெகுளி. திவ்யாவுடன் ஒப்பிடும் போது இவளுக்கு படிப்பும் அறைகுறையாய் வர, கனகவேல் எப்பொழுதும் வந்தனாவை வசை பாடிக் கொண்டு தான் இருப்பார்.
திவ்யா படிப்பில் கெட்டி. வெளிநாடு சென்று தான் படிப்பேன் என்று அடம்பிடித்து அவள் சென்று விட, வந்தனாவோ சென்னையில் இந்த கல்லூரியில், விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருக்கிறாள். இவளைப் பார்க்க எப்போதும் ராதிகா மட்டும் தான் வருவார். வந்தாலும் அவளுடன் மட்டும் பேசிவிட்டு சென்று விடுவார். பிரீத்தியாக அவரிடம் பேசினால், பேசிவிட்டு செல்வார்.
வந்தனா, எந்த சூழ்நிலையிலும் தான் யார் என்கிற விபரத்தை அங்கு யாரிடமும் பகிர்ந்து கொண்டிருக்கவில்லை, பிரீத்தியைத் தவிர. அதற்கு காரணம் கூட கனகவேல் தான். நண்பர்களை கூட ஜாதி பார்த்து தான் அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ரகம் அவர். அதனால் தானோ என்னவோ, அவரிடம் இருந்து ஒதுங்கியே இருந்தாள் வந்தனா. எந்த அளவிற்கு வெகுளிப் பெண்ணோ, அதே அளவிற்கு கொஞ்சம் அழுத்தமானவளும் கூட. ஆனால், அது பழகிப் பார்த்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
அவள் மனதிலும் ஒரு ரகசிய காதல் இருந்தது. வெளியே சொல்லாத காதல். அது விஜய்யின் மீதான காதல் தான். விஜய்க்கு தான் இவள் யாரென்று தெரியாது. ஆனால் வந்தனாவிற்கு அவனுடைய அனைத்து விஷயங்களும் அத்துப்படி.
அவன் தனக்கு அருகில் இருந்தும் பார்க்காமல் விட்டு விட்டதை நினைத்து, ஹாஸ்ட்டல் அறையில் சோகமாக அமர்ந்திருந்தாள் வந்தனா.
“இப்ப என்ன நடந்திடுச்சுன்னு இப்படி சோகமா இருக்க..?” என்றாள் பிரீத்தி.
“உன்னைக் கொன்னுடுவேன்டி..! விஜய் இருந்ததை நீ ஏன் சொல்லலை..! பார்த்தே ஒரு வாரம் இருக்கும்..! நான் வேற அழுதுகிட்டே வந்ததுல கவனிக்காம விட்டுட்டேன்” என்று எரிச்சலுடன் சொன்னாள் வந்தனா.
“இதென்னடி வம்பா போய்டுச்சு..! அவன் என்ன உனக்கு லவ்வரா..?ஏதோ பார்க்காம வந்ததுக்கு இப்படி உட்கார்ந்து ஒப்பாரி வைக்கிற..?” என்று பிரீத்தி சொல்ல,
“வேண்டாம், என் வாயைப் பிடுங்காத..? ஏன், லவ்வரா இருந்தாத்தான் பார்க்கனுமா..?” என்ற வந்தனாவின் முகத்தில் எரிச்சல் ரேகைகள்.
“உங்க ரெண்டு பேருக்கும் சொந்த ஊர் ஈரோடு தான..? பேசாம, நீயே போய் பேச வேண்டியது தான..? நீ யார்ன்னு சொன்னா, அவனே வந்து பேசுவான்..!” என்றாள் ப்ரீத்தி, விஜய்யின் குணத்தை அறியாது.
“விஜய்யைப் பத்தி உனக்கு சரியா தெரியாது ப்ரீத்தி. எங்கப்பா பேரை சொன்னா, என் மூஞ்சியிலேயே முழிக்க மாட்டான். அந்த அளவுக்கு எங்கப்பா ஒன்னும் நல்ல அரசியல்வாதி கிடையாது..!” என்ற வந்தனாவின் முகம் ஒரு மாதிரி ஆக,
“ஹேய்..! நான் சும்மா சொன்னேன் வந்தனா. அதுக்கு ஏன் இப்படி பீல் பண்ற..? அரசியல்ல இருக்க எல்லாரும் நல்லவங்க கிடையாது..! விதிவிலக்கா, ஒருத்தர் ரெண்டு பேர் இருக்கலாம். நீ ஏன் உங்கப்பாவை மட்டும் இப்படி சொல்ற..? இதெல்லாம் சகஜம்..!” என்றாள் ப்ரீத்தி.
“எது சகஜம்..? ஜாதி மாறி கல்யாணம் பண்ணா, வெட்டி கொலை பண்றதா..? காலம் இப்போ ரொம்பவே மாறிடுச்சு ப்ரீத்தி. ஆனா, அந்த ஜாதில ஊறிப் போனவங்க மட்டும் இன்னும் அப்படியே தான் இருக்காங்க..! எங்கப்பாவும் அதுக்கு விதி விலக்கு இல்ல. எத்தனை சம்பவத்தை என் கண்ணால பார்த்திருப்பேன். ஜாதிக்காரங்களுக்கு சப்போர்ட் பண்ணாத்தான் ஜாதி ஓட்டு பிரியாது அப்படிங்கிறது… எங்கப்பாவோட அசைக்க முடியாத நம்பிக்கை. இதையெல்லாம் பார்க்க முடியாமத்தான், நான் ஹாஸ்ட்டல் வந்ததே. அது மட்டுமில்லாம, எங்கப்பாவுக்கு என் சிஸ்டர் திவ்யாவைத் தான் ரொம்ப பிடிக்கும். அவ தான் அவருக்கு ஏத்த வாரிசுன்னு அடிக்கடி சொல்லுவாரு..!” என்றாள் வந்தனா.
“விடு..! இப்போ ஏன் இந்த பேச்செல்லாம் பேசிட்டு. நீ என்ன அவர் கூடவேவா இருக்கப் போற..? எப்படியும் கல்யாணம் முடிச்சுட்டு போய்டுவ..? அப்பறம் எதுக்காக இதையெல்லாம் யோசிச்சு, மனசை காயப்படுத்திக்கிற..? நான் வேணும்ன்னா நாளைக்கு அந்த விஜய்கிட்ட கூட்டிட்டு போகவா..?” என்று சிரித்தாள் ப்ரீத்தி.
விஜய்யின் பேரைக் கேட்டதுமே வந்தனாவிற்கு கவலை அனைத்தும் மறந்து போனது. அவனின் முகத்தை மனதிற்குள் கொண்டு வந்தவளின் மனம் அப்படியே லேசாக, அதைப் பார்த்த ப்ரீத்தி,
“சிம்ரன், உனக்கு முத்திப் போய்டுச்சு..! இப்படியே போனா, ஒரு நாள் அந்த விஜயை லவ் பண்றேன்னு சொல்லுவ போலயே..?” என்று கிண்டல் அடித்தாள். அந்த வார்த்தைகள் விரைவில் பலிக்கப் போவது தெரியாமல்.
“ஒரு நாள் என்ன..? இப்போவே சொல்றேன், நான் விஜயை லவ் பண்றேன். இதை அவன்கிட்ட சொல்லிட்டு தான் உன்கிட்ட சொல்லுவேன் ப்ரீத்தி..!” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் வந்தனா.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, அங்கே வெளியே சில மாணவிகள் பதட்டத்துடன் சென்று கொண்டிருக்க,
“என்ன சத்தம்..?” என்று இருவரும் அறையை விட்டு வெளியே வந்தனர். அங்கே போன ஒரு பெண்ணை நிறுத்திய ப்ரீத்தி,
“ஹேய் சரண்..? என்னாச்சு..? எதுக்காக இப்படி ஒரு சத்தம்..?” என்று கேட்க,
“இன்னைக்கு நைட் சாப்பாடு குஸ்கால பல்லி செத்து கிடந்துச்சாம். அதைப் பார்க்காம ஒரு பொண்ணு, சாப்பிட்டாளாம். அவளுக்கு மயக்கம் வர மாதிரி இருக்குன்னு வேற சொல்லிட்டு இருக்கா. நானும் சாப்பிட்டேன். அப்போ எனக்கும் என்னமோ ஆகப் போகுது..!” என்று சொல்லிக் கொண்டே அவள் செல்ல,
“என்னது..? குஸ்கால பல்லியா..? என்று அதிர்ந்த இருவரும் அந்த சாப்பாட்டுக் கூடத்தை நோக்கி ஓடினர்.
அங்கே மாணவிகள் பலர், பீதியில் உறைந்திருக்க, நடுநாயகமாக அவள் சோர்ந்து அமர்ந்திருந்தாள். அவளுக்கு லேசாக மயக்கம் வருவதைப் போல் இருக்க, விலகுங்க, காத்து வரட்டும் என்று கத்திக் கொண்டிருந்தாள் ரோஸ்லின்.
இரவு உடையாக, கருநீல நிற பேன்ட் சட்டை அணிந்திருந்த துளசி, அவசரத்தில் அள்ளி முடிந்த தலைமுடி,கன்னத்தில் படர்ந்திக்க, ரோஸ்லின் மேல் சாய்ந்திருந்தாள்.
“விஷ்வாக்கு என்ன ஆச்சு..?” என்று அங்கே பலர் கேட்டுக் கொண்டிருக்க,
“இதென்னாடி ஆம்பிளைப் பையன் பேரு மாதிரி இருக்கு..?” என்றாள் ப்ரீத்தி.
“அவ முழு பேர்.. விஷ்வ துளசி..! விஜய்யோட கசின் இவ..!” என்றாள் வந்தனா. அவள் அப்படி சொல்லவும், அவளை மேலும் கீழும் பார்த்தாள் ப்ரீத்தி.
“ஏண்டி அப்படிப் பார்க்குற..?” என்று கேட்டாள் வந்தனா.
“விஜய் சம்பந்தப்பட்ட தகவல் எல்லாம் விரல் நுனில வச்சிருப்ப போல, உன்னை அப்பறம் கவனிச்சுக்கிறேன் சிம்ரன்..!” என்ற ப்ரீத்தி, அங்கே நடக்கும் கூத்தை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினாள்.
“இதை சும்மா விடக் கூடாது விஷ்வா..! வார்டன் மேல கம்ப்ளைன்ட் குடுக்கலாம். சாப்பாடு சரியில்லை, ஒன்னும் சரியில்லை..!” என்று ஒருத்தி சொல்லிக் கொண்டிருக்க,
“அடி எவடி இவ..? பள்ளி விழுந்த சாப்பாட்டை சாப்பிட்டிருக்கா..? அவளை முதல்ல ஹாஸ்ப்பிட்டலுக்கு தூக்கிட்டுப் போறதை விட்டுட்டு, இப்போ இந்த பேச்சு ரொம்ப முக்கியமா..? யாரெல்லாம் சாப்பிட்டிங்களோ, அவங்க எல்லாருமே கிளம்புங்க..!” என்று ஒருத்தி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வார்டனின் சத்தம் கேட்டது.
“என்ன இங்க சத்தம்..?” என்றபடி வந்த வார்டன், அங்கே விஷ்வ துளசியை பார்த்து அதிர்ந்து நின்றார்.
“இவளுக்கு இதே வேலையா போச்சு..!” என்று மனதில் நினைத்தவர்,
“இப்ப எதுக்காக கூட்டத்தை கூட்டி வச்சிருக்க விஷ்வா..?” என்று எரிச்சலுடன் கேட்க,
“இங்க பாருங்க மேடம்.. அவ சாப்பிட்ட சாப்பாட்ல இருந்த பல்லியை. லேட் பண்ண பண்ண.. என்ன ஆகுமோன்னு நாங்க பதறிக்கிட்டு இருக்கோம். கால்வாசிப் பேர் சாப்பிட்டாச்சு. நாங்க எல்லாருமே ஹாஸ்பிட்டல் போயாகனும்..!” என்று ஒருத்தி தைரியமாக சொல்ல,
“பல்லியா..?” என்ற வார்டன் அதிர்ந்தார்.
“ஆமா..! சாப்பிட்ட பொண்ணுங்கல்ல, யாராவது ஒருத்தருக்கு பிரச்சனைன்னாலும் நீங்க தான் கம்பி என்ன வேண்டியிருக்கும்..?” என்றாள் ஒருத்தி.
“பாருங்க விஷ்வாக்கு இப்போவே மயக்கம் வந்திடுச்சு..!” என்று சொல்லிக் கொண்டிருக்க,
“ரோசு..!” என்றாள் துளசி.
“சொல்லுடி..!” என்றாள் ரோஸ்லின்.
“வார்டு வந்திருச்சா..?” என்று அவள் நக்கலுடன் அமைதியாக கேட்க, அவள் கேட்டது வார்டனின் காதில் விழுந்து விட்டது.
“என்னது..???” என்று அவர் முறைக்க,
“அவ, அவசர வார்டு வந்திருச்சான்னு கேட்குறா மேடம்..!” என்றாள் ரோஸ்லின் அறியாத பிள்ளை போல்.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். வெளிய போனா, பிரச்சனை பெரிசாகும். நான் டாக்டரை இங்கயே வர சொல்றேன்..!” என்று வார்டன் சொல்ல,
“இல்ல மேடம்..! அவளுக்கு ரொம்ப முடியலை. ஹாஸ்பிட்டல் தான் கொண்டு போகணும்..!” என்றாள் ரோஸ்லின்.
அவர்கள் சாப்பாட்டில் கிடந்ததாக சொன்ன பல்லியைப் பார்த்த வார்டனுக்கு, எதுவோ உதைத்தது.
“என்ன விழுந்த பல்லி, வேகமாக பிரஷா இருக்கு..?” என்று அதை ஊன்றிப் பார்த்தவருக்கு புரிந்து போனது, இது துளசியின் நாடகம் என்று.
“விஷ்வ துளசிக்கு மட்டும் தான, மயக்கம் வந்திருக்கு. அவளை மட்டும் ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டு, அவங்க தாத்தாக்கு தகவல் சொல்லிடுறேன். நீங்க எல்லாம் போங்க..!” என்றார்.
“மேடம், நாங்களும் தான் சாப்பிட்டோம்..!” என்றாள் ஒருத்தி.
“குருப்பா பிளான் பண்ணியிருக்கிங்களா..?” என்று மனதில் நினைத்தவர்,
“உங்களுக்கு ஏதாவது ஆனா அப்பறம் பார்த்துக்கலாம்..! இப்போ போங்க..!” என்று அவர்களை விரட்டினார் வார்டன்.
அனைவரும் கலைந்து செல்லவும்,
“விஷ்வா..!!” என்ற அவரின் வார்த்தைகளில் பட்டென்று எழுந்தாள் விஷ்வ துளசி.
“உன்னோட விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லையா..? இது தான் உனக்கு முதலும் கடைசியும். இனி இது மாதிரி ஏதாவது பண்ணா, உங்க வீட்ல ரிப்போர்ட் பன்றதைத் தவிர வேற வழியில்லை, மைண்ட் இட்..!” என்று அவர் கத்தி விட்டு செல்ல முற்பட,
“மேடம்..! இதை எப்படி டூப்புன்னு கண்டு பிடிச்சிங்க..?” என்றாள் ரோஸ்லின்.
“ம்ம்..! சோத்துல விழுந்த பல்லி, கலர் மாறாம அப்படியே இருக்குமா..கழுவி வச்ச மாதிரி பளிச்சுன்னு..!” என்று முறைத்து விட்டு சென்றார்.
“என்னடி ரோசு..? ஒரிஜினல் பல்லியைப் போட்டும், இந்த வார்ட ஏமாத்த முடியலை..!” என்று துளசி குறைபட,
“நிஜப் பல்லியை போடத் தெரிஞ்ச நமக்கு, அதை எப்படிப் போடணும்ன்னு தெரியலையே. ஆறின சோத்துல போட்டா, அப்படியே தாண்டி இருக்கும். நல்ல வேலை, வார்டு நம்பலை வார்னிங்கோட விட்டுச்சு..!” என்றாள் ரோசிலின்.
“அப்போ, இன்னைக்கு வெளிய போகவே முடியாதா..?” என்று துளசி கேட்க,
“வாய்ப்பே இல்லை..! வந்துடு..!” என்று ரோஸ்லின் அவளை இழுத்துக் கொண்டு போனாள். இவர்களின் பேச்சை சற்று தூரத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த வந்தனாவிற்கும், ப்ரீத்திக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“இந்த பொண்ணுக்கு ரொம்ப தைரியம் தான் சிம்ரன்..!!” என்றாள் ப்ரீத்தி.
“விஜய்யோட கசின் ஆச்சே..! அப்படித்தான் இருப்பா..!” என்று வந்தனா சொல்ல,
“யப்பா சாமி.. என்னால முடியலைடி..! என்னடி இன்னைக்கு எதுக்கெடுத்தாலும் விஜய் புராணமா பாடிட்டு இருக்க..?” என்ற ப்ரீத்திக்கு, நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
“இந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்கால்ல..! அப்படியே அப்சரஸ் மாதிரி..!” என்று வந்தனா ஆரம்பிக்க,
“நீயும் அப்சரஸ் மாதிரி தான் இருக்க சிம்ரன். வா போகலாம்! இவங்களை வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது..!” என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றாள் ப்ரீத்தி.
துளசியும், ரோஸ்லினும் அதே கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தனர். முதல் வருடம்.. விஜய், பிரவீனுக்கு பயந்து கொஞ்சம் அடக்கியே வாசித்தாள் துளசி. ஆனால், இப்போது அந்த பயமெல்லாம் அவளுக்கு இல்லை. ஏனென்றால் விஜய், பிரவீன் குடுமி துளசியின் கையில் இருந்தது.
அவர்கள் பீர் அடித்ததை, அவள் வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு, தாத்தாவிடம் காட்டி விடுவேன் என்று அவர்களை மிரட்டிக் கொண்டிருந்தாள். அவர்கள் பாய்ஸ் ஹாஸ்ட்டலில் இருக்க, இவள் இங்கிருந்தாள். எதுவாக இருந்தாலும் காலேஜில் பேசிக் கொள்வாள்.
“ரோசு..! இந்த குமாருக்கும், பிரவீனுக்கும் என் மேல இருந்த பயம் விட்டுப் போய்டுச்சு..!” என்றாள் துளசி.
“ஏண்டி அப்படி சொல்ற..?”
“நான் கேட்டதை ரெண்டு பேருமே வாங்கித் தரலை. நாளைக்கு இவனுகளை காலேஜில வச்சுக்கிறேன். இந்த வார்டும் இன்னைக்கு நம்ம பிளானை கெடுத்துடுச்சு..!” என்ற துளசி, எரிச்சலுடன் சென்றாள்.
“அப்படி இவ என்னத்த கேட்டா..? அவங்க ஏன் வாங்கித் தரலை..?” என்ற ரோஸ்லின் முழித்துக் கொண்டு நின்றாள்.