“எங்க போகணும்? ஆஃபிஸ்ல நிறைய வேலை இருக்கே?”, என்று தயக்கத்துடன் சொன்னாள் யுக்தா.
“நீ வேலை பாத்து கிழிச்சது போதும். இனி நான் சொல்றதை மட்டும் கேளு. வந்து என் கார்ல ஏறு”, என்று கடுமையான முக பாவத்துடன் சொன்னதும் கொஞ்சம் பயத்துடன் அதில் ஏறி அமர்ந்தாள். டிரைவர் சீட்டில் அமர்ந்த செல்வம் காரை எடுத்தார்.
சிறிது தூரம் சென்றதும் ஒரு இடத்தில் காரை நிறுத்தியவர் “நாம இப்ப போக போறது ஒரு படம் எடுக்குற இயக்குனரைப் பாக்க. உன்னை எங்கயோ வச்சு பாத்தாராம். ரொம்ப பிடிச்சிருச்சாம். அதனால அவர் படத்துல நீ தான் கதாநாயகியா நடிக்கணும்னு கேட்டுகிட்டார். நானும் சரின்னு சொல்லிட்டேன். நாளைல இருந்து நீ படம் நடிக்க போற”, என்று சொன்னார். அதைக் கேட்டு அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“அதெல்லாம் எனக்கு தெரியாது. நான் ஆபீஸ் போகணும்”, என்று தயக்கத்துடன், அதே நேரம் உறுதியாக சொன்னாள் யுக்தா.
“அப்ப நான் சொன்னதைக் கேக்க மாட்ட. அப்படித் தானே?”
“ஆமா”
“சரி, நீ சந்தோஷமா ஆபீஸ் போ. படம் எல்லாம் நடிக்க வேண்டாம். ஆனா நீ ஆபீஸ் போயிட்டு திரும்பி வரும் போது உன் அம்மா உயிரோட இருக்க மாட்டா. இருக்க விட மாட்டேன். எனக்கு உபயோகம் இல்லாத யாரும் இருக்க தேவையில்லை. அந்த யுவனையும் நான் உயிரோட இருக்க விட மாட்டேன்”, என்று அவர் சொன்னதும் அவரை மிரட்சியாக பார்த்தவள் “என்ன மிரட்டுறீங்களா?”, என்று நாடுகத்துடன் கேட்டாள். (eyesolutions.in)
“என்னை எதுத்து கேள்வி கேக்குற அளவுக்கு தைரியமா மாறிட்ட போல? எல்லாம் அவன் சொல்லிக் கொடுத்ததா? இனி அவன் உனக்கு எப்படி துணைக்கு வரான்னு பாப்போம்? அப்புறம் நான் ஒண்ணும் பேருக்கு மிரட்ட மாட்டேன்னு உனக்கே தெரியும். இப்ப கூட என்னால உன் அம்மாவைக் கொல்ல முடியும்? என்ன நம்ப முடியலையா? இப்ப உன் அம்மா எங்க இருக்கான்னு போன் பண்ணிக் கேளு. உன் அம்மா இப்ப பெருமாள் கோவில்ல நிக்குறா. அவ வெளிய வந்த உடனே அவளை ஏத்த கார் ரெடியா இருக்கும். எல்லாம் என் ஆள் தான். வேணும்னா எங்க இருக்கான்னு கேளு”, என்று அவர் சொன்னதும் உடனே தாமரைக்கு அழைத்தாள் யுக்தா.
அதை தாமரை எடுத்ததும் “அம்மா எங்க இருக்க?”, என்று படபடப்பாக கேட்டாள்.
“வீட்டுக்கு வந்து சொல்றேன் மா. இப்ப வைக்கிறேன்”, என்று சொல்லி போனை வைத்த யுக்தா செல்வத்தை பயப் பார்வை பார்த்தாள்.
“என்ன இப்ப நம்புறியா? என் ஆள் கிட்ட சொல்லவா?”
“ஐயோ வேண்டாம். எங்களை எதுக்கு இப்படி சித்தரவதை பண்ணுறீங்க? உங்களை எதுக்குறதுக்கு எங்களுக்கு தெம்பு இல்லை. என்னையும் அம்மாவையும் விட்டுருங்க பா”
“உங்களை விட்டுட்டா எனக்கு சொத்து எப்படிக் கிடைக்கும்?”
“சொத்து தானே வேணும்? அதை நானே எழுதி தரேன். எங்களை விட்டுருங்க”
“ஹா ஹா, இப்ப கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் உன்னை மிரட்டி சொத்தை எழுதி வாங்க தான் நினைச்சேன். ஆனா உன் சொத்துல ஏதோ வில்லங்கம் இருக்கு. அந்த வக்கீல் தெளிவா சொல்ல மாட்டிக்கான். எனக்கு தெரிஞ்ச ஒரு லாயர் தான் விசாரிச்சு சொன்னார். உன்னோட சொத்து எல்லாம் உனக்கு மட்டும் சொந்தம் இல்லையாம். உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவனுக்கும் சொந்தமாம். ரெண்டு பேரும் கையெழுத்துப் போட்டா தான் அதை மாத்த முடியும். அதனால என் பேச்சை கேக்குற மாதிரி ஒரு மாப்பிள்ளையை பாக்குற வரைக்கும் நீ என் கஷ்டடில இருக்கணும்னு தான் உன்னை ஆபீஸ் வர வச்சேன். ஆனா அந்த யுவன் இடைல வந்துட்டான். அதனால தான் இப்ப உன்னை சினிமா துறைல இறக்குறேன். இனி அவன் உன்னை எப்படி நெருங்குறான்னு பாப்போம். இனி நீ என் பேச்சைத் தான் கேக்கணும். இனி யுவன் உன் கிட்ட நெருங்க கூடாது. அவனை விரட்ட வேண்டியது உன் பொறுப்பு. என் பேச்சைக் கேக்கலைன்னா உன் அம்மா இந்த உலகத்தை விட்டே போயிருவா”, என்று அவர் மிரட்டியதும் அரை மனதாக சம்மதித்தாள்.
யுக்தாவை அழைத்துக் கொண்டு இயக்குனர் ரவியைக் காணச் சென்றார். அவருக்கோ அவளைப் பார்த்ததும் அவ்வளவு சந்தோஷம்.
படுத்துக்கான அக்ரிமெண்ட் சைன் செய்து முன் தொகையையும் வாங்கிக் கொண்டு அவளை வீட்டுக்கு அழைத்து வந்தார் செல்வம். களை இழந்த முகத்துடன் வீட்டுக்கு வந்த மகளிடம் தாமரை கேள்வி கேட்க நடந்த அத்தனையையும் சொல்லி அழுதாள் யுக்தா.
அவளை அறைக்கு போகச் சொல்லி விட்டு கணவரின் சட்டையை பிடித்து கேள்வி கேட்டாள் தாமரை.
அவளை ஒரு தள்ளாக தள்ளி விட்ட செல்வம் “இந்த சொத்து எல்லாம் எனக்கு எந்த வில்லங்கமும் இல்லாம வரணும். அதனால அவ வாழ்க்கை என் விருப்ப படி தான் இருக்கும். நீ அந்த யுவனுக்கு இவளை கட்டி வைக்க நினைச்சு தானே அவன் கூட பழக வச்ச. அதை முறியடிக்க தான் நான் இப்படி பண்ணினேன். இப்ப அவன் எப்படி உன் மக கூட இருக்கான்னு பாப்போம்”, என்று எகத்தாளமாக கேட்டார் செல்வம்.
“யுவன் யுக்தாவை விட்டு போக மாட்டான்”
“அப்படியா? நான் போக வைப்பேன் டி”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார்.
உடனே தாமரை யுவனை அழைத்து விஷயத்தைச் சொல்ல அவனுக்கு என்ன செய்ய என்றே தெரிய வில்லை. உடனே யுக்தாவுக்கு அழைத்து விஷயத்தைக் கேட்டால் அவளோ “இனி நாம பாக்க வேண்டாம் யுவன். உன்னைப் பாத்தா அப்பாவுக்கு பிடிக்காது. அது அம்மாவுக்கு நல்லது இல்லை”, என்று பயத்துடன் சொன்னாள்.
“போலீஷ்ல கம்ப்லைண்ட் கொடுப்போம் யுக்தா”, என்று அவன் சொன்னதற்கும் “உனக்கு அப்பா பத்தி தெரியாது. அப்படி ஏதாவது செஞ்சா அம்மா உயிரோட இருக்க மாட்டாங்க. உன்னையும் ஏதாவது செய்வார். இது தான் என் விதி. என்னை விட்டுரு. இனி எனக்கு கால் பண்ணி பேசாத”, என்று சொல்லி போனை வைத்து விட்டாள்.
ஒரு நாள் முழுக்க மண்டையை உடைத்தவன் அடுத்த இரண்டு நாளில் மிகவும் கஷ்டப் பட்டு இயக்குனர் ரவியை சந்தித்து நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லி சூட்டிங் நடக்கும் இடத்தில் யுக்தாவுக்கு துணைக்கு இருக்க அனுமதி வாங்கினான்.
ரவி சொன்னதால் செல்வத்தால் எதுவும் செய்ய முடியவில்லை. யுவன் அங்கிருப்பதைக் கண்ட யுக்தா “அவனை நான் வரச் சொல்லலைப்பா. அம்மாவை எதுவும் செய்யாதீங்க”, என்று மிரட்சியுடன் செல்வத்திடம் சொன்னாள்.
“இப்ப அவனை வர வச்சது இந்த டேரெக்டர் தான். அவரே சொன்னதுனால என்னால எதுவும் செய்ய முடியலை. ஆனா உனக்கு இந்த பயம் இருக்கணும் யுக்தா. அவன் ஏதாவது வேலையைக் காட்டினா உன் அம்மா உயிரோட இருக்க மாட்டா”, என்று மிரட்டி வைத்தார்.
அதன் பின் வந்த நாட்களில் யுவனைக் கண்ட போதெல்லாம் செல்வத்தை நினைத்து பயந்தாலும் அவன் தன் கண்ணெதிரே இருப்பது கொஞ்சம் ஆறுதலாகவும் இருந்தது. செல்வம் அங்கிருக்க வில்லை என்றால் அவனிடம் பேசுவாள். செல்வம் இருந்தால் அவனைக் கண்டு கொள்ளவே மாட்டாள். அவளுடைய பயத்தை எப்படி விரட்ட என்று தெரியாமல் தடுமாறினான் யுவன். கூடவே நடிப்பு அவளுக்கு இயல்பிலே வந்ததால் அவள் இந்த துறையிலாவது சாதிக்க வேண்டும் என்று எண்ணி அவளை ஊக்குவித்தான்.
அதற்கு பின்னர் அவளது நாட்கள் முழுக்க படம் நடிப்பதில் கழிந்தது என்றால் செல்வத்தால் அவளுக்கு என்ன ஆபத்து வரும் என்று கண்காணிப்பதிலே அவனுக்கு கழிந்தது. யுக்தாவுடன் நடித்த கிஷோர் என்ற நடிகர் அவளுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தான். அதனால் அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
ஆனால் வீட்டில் யுவனுக்கு பிரச்சனை குவிந்திருந்தது. சுந்தரி யுக்தா என்ற பெயரையே வெறுத்தாள். அதுவும் அவள் படம் நடிப்பதை அறிந்து அவளை திட்டித் தீர்த்தாள். மகனின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கிய அவளை எண்ணி சுந்தரிக்கு எரிச்சலாக இருந்தது. யுவன் இப்படி இருப்பது ஈஸ்வரனுக்குமே பிடிக்க வில்லை. ஆனால் ஏதாவது கேட்டால் மௌனமாக தலைகுனியும் மகனிடம் அவரால் கடுமை காட்ட முடியவில்லை.
யுக்தா முதல் படம் நடித்து முடித்து அது வெற்றியடைந்ததும் அவளுக்கு பேரும் புகழும் கிடைத்தது. அந்த வருடத்தில் சிறந்த நாயகி பட்டத்தையும் இளைஞர்களின் கனவுக் கண்ணி என்ற பட்டத்தையும் பெற்றாள். அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவளுக்கு குவிந்தது. அவளைப் பற்றி பேசும் போது அவளுடன் நடிக்கும் நடிகர்களுடன் அவளைப் பற்றி தவறான வதந்திகளும் வெளியே வந்தது.
அதையெல்லாம் யுவன் பெரிதாக எடுக்க வில்லை. அதே நேரம் யுவனும் யுக்தாவும் நண்பர்கள் என்று தெரிந்து கொண்ட சில பெண்கள் யுக்தாவிடமே யுவனை விரும்புதாக சொல்வார்கள். அதை யுக்தாவும் வந்து அப்படியே அவனிடம் சொல்வாள். அந்த நிமிடம் அவள் மனதில் எந்த பொறாமை எண்ணங்களும் வரவில்லை.
சில நேரம் யுக்தா யுவன் பற்றி கூட தவறான பேச்சு பரவியது. அந்த பேச்சு யுவன் குடும்பத்துக்கு கசந்தது. எப்படி வர வேண்டியவன் இப்படி ஒரு நடிகை பின்னாடி சுத்துறானே என்று பேச ஆரம்பித்தார்கள்.