தளர்ந்த நடையுடன் அறைக்குள் வந்த யுக்தா கட்டிலில் அமர்ந்தாள். அவள் கைகள் மெதுவாக தன்னுடைய வயிற்றை வருடியது. ஆரம்பக் கரு என்பதால் அது எந்த அசைவையும் உணர்த்த வில்லை என்றாலும் ஒரு வித சந்தோஷம் வந்தது. கூடவே அவள் முகத்தில் ஒரு பூரிப்பு வந்தது.
இந்த குழந்தைக்கு தகப்பனான யுவனின் நினைவு வந்தது. சற்று நேரத்துக்கு முன் அவன் பேசியதும் நினைவில் வந்தது. அவன் பேசியதில் இருந்தே அவன் மீது தவறு இல்லை என்று புரிந்தது தான். ஆனால் அவன் எப்படி அந்த இடத்துக்கு போகலாம் என்ற கோபம் வந்தது.
“இதே மாதிரி நான் அந்த இடத்துக்கு சும்மா போயிட்டு வந்திருந்தா இவன் என்னைச் சும்மா விடுவானா? இவனைக் கூட விட்டுறலாம். இவன் குடும்பம் என்னைச் சும்மா விடுமா? (rpmtriad.com) ”, என்று எண்ணிக் கொண்டு சிறிது நேரம் யோசித்தவள் அடுத்து என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தாள்.
உடனே மணியைக் கூடப் பார்க்காமல் தன்னுடைய கம்பெனியின் லீகல் அட்வைசரான சிவசுந்தரத்துக்கு போனைப் போட்டாள்.
அதை எடுத்தவர் “என்ன பாப்பா இந்த நேரத்துல கூப்பிட்டுருக்க?”, என்று கேட்டார்.
அப்போது தான் மணியைப் பார்த்தவள் “சாரி மாமா மணியைப் பாக்கலை”, என்றாள்.
“மணியைக் கூட பாக்கலைன்னா விஷயம் பெருசு தான். என்ன ஆச்சு மா?”
“மாமா நான் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”
“சொல்லு மா, என் கிட்ட என்ன தயக்கம்?”, என்றதும் அவள் சில விஷயங்களை சொல்ல அவர் அதிர்ந்து போனார். இதனால் விளைவுகள் எப்படி இருக்கும் என்று எண்ணி அவருக்கு பயமாக இருந்தது. கூடவே சிறு நிம்மதியும் அவருக்குள் எழுந்தது.
பின் அவள் எடுத்திருக்கும் முடிவில் இருக்கும் சாதக பாதகங்களைச் சொன்னதும் அதற்கான தீர்வை அவரிடம் சொன்னாள். அதைக் குறித்துக் கொண்டவர் “நல்ல ஐடியா பாப்பா. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. யுவன் தம்பி உங்களை நல்லா மாத்திருச்சு”, என்று சொல்லி சிரித்தார்.
“உங்க யுவன் தம்பி தான் என்னை அறிவாளியா மாத்தினதுன்னு சொல்ல வறீங்களா மாமா?”, என்று புன்னகையுடன் கேட்டாள்.
“ஐயோ அப்படி இல்லை பாப்பா. முன்ன ரொம்ப பயப்படுவ. இப்ப இருக்குற தைரியம் யுவன் தம்பினால தானே?”
“அது என்னமோ உண்மை தான் மாமா”
“அந்த நியூஸ் விஷயம் உண்மை இல்லை தானே பாப்பா?”
“ஆமா மாமா, யுவன் அப்படி எல்லாம் கிடையாது”
“சரி பாப்பா, நாளைக்கு நேர்ல வரேன்”
“சரி மாமா, எல்லாத்துக்கும் ரெடியா வாங்க. அப்புறம் இதை அவன் கிட்ட நீங்க சொல்லிட்டு இருக்க கூடாது. உங்க விசுவாசத்தை நாளைக்கு ஒரு நாள் எனக்கு கடன் கொடுத்துருங்க”
“ஹா ஹா, கண்டிப்பா சொல்ல மாட்டேன் டா. இதைச் சொன்னா கண்டிப்பா யுவன் தம்பி சம்மதிக்காது. ஆனாலும் நீ இதுக்கு முழு மனசோட தானே சம்மதம் சொன்ன?”
“கண்டிப்பா மாமா. இதை நான் முன்னாடியே செஞ்சிருக்கணும்”
“சரி மா, நான் எல்லாம் ரெடி பண்ணுறேன்”, என்று சொல்லி விட்டு போனை வைத்தார் சிவசுந்தரம்.
“யுவன் அப்படி எல்லாம் கிடையாதுன்னு மாமா கிட்ட நம்பிக்கையுடன் சொன்ன நான் எதுக்கு அவன் மேல சந்தேகப் பட்டு வீட்டை விட்டு வந்தேன்?”, என்று எண்ணிப் பார்த்தாள் யுக்தா.
“அது சந்தேகம் இல்லை யுக்தா. கோபம். அளவுக்கு அதிகமான காதலை அவன் மேல வச்சதுனால வந்த கோபத்துல தான் நீ கிளம்பி வந்த?”, என்று மனசாட்சி எடுத்துரைக்க “காதலா? நான் அவனை லவ் பண்ணுறேனா? இது எப்ப இருந்து?”, என்று சுய அலசலில் இறங்கினாள்.
எவ்வளவு யோசித்தும் அவளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அவனைக் காண வேண்டும் போல் இருக்க தன்னுடைய போனில் பதிந்த யுவனின் போட்டோவை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆறடி உயரத்தில் அகன்ற தோள்களுடன், கோதுமை நிறத்தில் கம்பீரமாக சிரித்துக் கொண்டிருந்தான். அவ்வளவு அழகாக இருந்தவனை அவள் கண்கள் ரசனையாக வருடியது. கூடவே அவன் மீதான கோபமும் மேலே எழுந்தது.
“நீ ஏண்டா அங்க போன? ஒரு மனசு நீ நல்லவன்னு சொல்லுது. இன்னொரு மனசும் நீ நல்லவன்னு தான் சொல்லுது. அதே நேரம் நீ அங்க போனதுக்கு எனக்கு கோபமாவும் வருது. அந்த கோபத்தோட எப்படி உன் கூட நான் வாழுறது. என்னால உன் கிட்ட கோப பட்டு கத்தி சண்டை எல்லாம் போட முடியாது. அதனால தான் டா ஒதுங்கி வந்தேன். ஆனா நீ நினைச்ச மாதிரி அப்பா பிரச்சனையை ஆரம்பிச்சிட்டார்,. ஆனா அவருக்கு ஒண்ணு தெரியலை யுவன். பிரச்சனையை பாத்து பயப்படுறதுக்கு நான் ஒண்ணும் அவர் மகள் யுக்தா இல்லை. உன்னோட பொண்டாட்டி யுக்தா. எந்த பிரச்சனை வந்தாலும் நீ எப்படி யோசிப்பியோ அதே மாதிரி யோசிச்சு பிரச்சனையை சரி பண்ணுவேன்”, என்று எண்ணி உள்ளுக்குள் உறுதி எடுத்துக் கொண்டாள்.
“உனக்கு ஒண்ணு தெரியுமா யுவன்? இப்ப எனக்கு நாள் தள்ளிப் போயிருக்கு. அதைச் சொல்ல தான் இன்னைக்கு ஆசையோட காத்துட்டு இருந்தேன். ஆனா அப்ப போல உன்னைப் பத்தின அந்த நியூஸ் வெளியே வருது. என்னால அதை தாங்கிக்க முடியலை யுவன். ஆனா எனக்கு ஆசையா இருக்கு உன் கிட்ட இந்த விஷயத்தை சொல்லணும்னு. ஆனா இப்போதைக்கு சொல்ல மாட்டேன், போடா”, என்று எண்ணிக் கொண்டே படுத்தாள்.
அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு “யுக்தா யுக்தா”, என்று கத்திய படியே அவளுடைய அறைக் கதவை தட்டினார் செல்வம்.
அவளோ வேண்டும் என்றே கதவை திறக்காமல் ரிலாக்ஸாக அமர்ந்திருந்தாள். அவள் கதவை திறக்காததைக் கண்டு அவருக்கு தான் டென்ஷன் ஏறியது.
ஐந்து நிமிடங்களுக்கு மேலாக அவரை கடுப்பேற்றி விட்டு தான் கதவைத் திறந்தாள்.
அவள் கதவை திறந்ததும் “வர வர உனக்கு திமிர் அதிகமாகிருச்சு யுக்தா?”, என்று அவளை முறைத்துக் கொண்டே சொன்னார்.
“உன்னைக் கிளம்பச் சொன்னேன் தானே? நீ ஆடி அசைஞ்சு எழுந்து வர?”
“ஒன்பது மணிக்கு தானே போகணும்னு சொன்னீங்க? இப்ப மணி எட்டு தானே ஆகுது? அதுக்குள்ளே என்ன அவசரம்? உங்க அவசரத்துக்கு என்னால ஒண்ணும் செய்ய முடியாது”
“இந்த திமிர் பேச்சுக்கு நீ நல்லா அனுபவிப்ப. இப்ப ஒழுங்கா கிளம்பி வா சொல்லிட்டேன்”
“இல்லைன்னா வாயில்லா பூச்சியான என் அம்மாவை அடிப்பீங்க, அப்படி தானே? நான் கிளம்பி வரேன். இப்ப நீங்க போங்க”
“தெரிஞ்சிக்கிட்டா சரி, ஒழுங்கா தயாராகி வா. இந்நேரம் நீ மறுபடியும் நடிக்க போறது தெரிஞ்சு பிரஸ்காரங்க வேற காத்துட்டு இருப்பாங்க. அதனால கொஞ்சம் நல்ல படியா கிளம்பி வா”, என்று சொல்லி விட்டுச் சென்றார்.
அவர் சென்றதும் அறைக் கதவை அடைத்தவள் சிறிது நேரம் யோசித்து விட்டு பின் நிதானமாக குளிக்கச் சென்றாள். சிறிது நேரத்தில் அவள் தயாராகி கீழே வந்த பிறகு தான் செல்வத்துக்கு நிம்மதியாக இருந்தது. இனி அவளை அவருடைய இஷ்டத்துக்கு ஆட்டு விக்கலாம் என்று எண்ணி “வா என் கூட”, என்றார்.
“எந்த இடத்துக்கு வரணும்னு தான் நீங்க சொல்லிட்டீங்களே? அதனால நானே என்னோட கார்ல வரேன். நீங்க முன்னாடி போங்க”
“எத்தனை நாள் இந்த திமிர்னு பாக்குறேன். நான் அங்க போய் சேந்து பத்து நிமிசத்துல நீ அங்க வந்துருக்கணும். இல்லைன்னா நடக்குறதே வேற”, என்று சொல்லி விட்டுக் கிளம்பிச் சென்றார்.
அவர் கிளம்பிச் சென்றதும் தாமரை அருகில் சென்றாள் யுக்தா. தாமரையோ மகள் மீதிருந்த கோபத்தில் முகத்தை திருப்பிக் கொண்டாள். நேற்று செல்வம் அடித்ததின் சாயல் இன்னும் தாமரையின் கன்னத்தில் மிச்சம் இருந்தது. அன்னையின் கன்னத்தை வருடினாள் யுக்தா. தாமரையோ கோபத்துடன் அவள் கையை தட்டி விட்டாள்.
“என் மேல கோபமா மா?”
“இல்லை டி, மனசு குளுகுளுன்னு இருக்கு. பேசாம போய்ரு சொல்லிட்டேன். இல்லைன்னா எனக்கு இருக்குற ஆத்திரத்துக்கு என்ன செய்வேனோ தெரியாது”, என்று படபடவென்று பொரிந்தாள் தாமரை.
“அம்மா, எனக்கு ஒரு உதவி செய்வியா?”
“கண்டிப்பா செய்ய மாட்டேன் போடி”
“அம்மா இன்னும் ஒரு மணி நேரத்துல நீ இந்த அட்ரஸ்க்கு போகணும். நான் வந்து எல்லாம் சொல்றேன். என் பேச்சைக் கேப்பேன்னு நம்புறேன்”, என்று சொல்லி தாமரையின் கையில் ஒரு கவரைத் திணித்து விட்டுச் சென்று விட்டாள் யுக்தா.
அவளுடைய கார் கிளம்பிச் செல்வதை கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்த தாமரை “நான் சொல்றதை இவ கேக்க மாட்டா. இவ சொல்றதை மட்டும் நான் கேக்கணுமா?”, என்று எண்ணிக் கொண்டு அந்த பேப்பரை தூர எறிந்தாள். அப்போது அதில் இருந்து நங்கென்று சத்தம் வந்ததும் குனிந்து அதை எடுத்தாள். அதற்குள் இருந்து ஒரு சாவிக் கொத்து கீழே விழுந்தது.