யுக்தாவும் சரி யுவனும் சரி இருவருமே சில நிமிடங்கள் பேசாமல் மௌனமாகவே இருந்தார்கள். சிறிது நேரம் கழித்து எப்போதும் போல் யுவனே அவளிடம் பேசினான்.
“அம்மு”, என்று ஆழ்ந்த குரலில் அழைக்க அவன் குரல் கேட்டு அவள் கண்களில் நின்றிருந்த கண்ணீர் மீண்டும் ஆரம்பித்தது. ஆனால் அவளால் ஒரு வார்த்தை கூட பேச முடிய வில்லை.
“என் கிட்ட பேச மாட்டியா அம்மு?”
….
“நான் உனக்கு எந்த விளக்கமும் சொல்ல போறது இல்லை. நான் ஏமாத்திட்டேன்னு தானே நினைக்கிற? அந்த பிரச்சனை நமக்குள்ள அப்படியே இருக்கட்டும்? என்னை நீ நம்பலையான்னு நான் உன் மேல கோபமும் பட மாட்டேன். என்னை நம்பு நம்புன்னு உன் கிட்ட கெஞ்சவும் மாட்டேன். அந்த பிரச்சனை நமக்குள்ள அப்படியே இருக்கட்டும். ஆனா உன்னோட கோபத்தை நம்ம வீட்ல வந்து காட்டு டா”
…..
“நான் சொன்னா கேப்ப தானே? நீ அங்க இருக்குறது நல்லது இல்லை டா. நாளைக்கு கிளம்பி இங்க வந்துரு அம்மு. தனியா வர சங்கடமா இருந்தா சொல்லு. நான் வந்து கூட்டிட்டு வரேன். இல்லை என்னைப் பாக்க பிடிக்கலைன்னா தாமரை அத்தையைக் கொண்டு வந்து விடச் சொல்லு டா. நீ அங்க இருக்க வேண்டாம் அம்மு. நம்ம வீட்டுக்கு வந்து உன்னோட கோபத்தை காட்டு. என்னை திட்டனுமா திட்டு. அடிக்கணுமா அடி. பேச பிடிக்கலைன்னா பேசாம இரு. என் கூட ஒரே ரூம்ல இருக்க பிடிக்கலைன்னா தனி ரூம்ல வேணும்னா இரு டி. இல்லை என் வீடு பிடிக்கலையா? நாம புதுசா வாங்கின வீட்டுக்கு நாம மட்டும் போவோம். இல்லை நீ மட்டுமாவது அங்க போய் இரு அம்மு. ஆனா உன் வீட்ல மட்டும் நீ இருக்க வேண்டாம். அது ரொம்ப ஆபத்து”, என்றான் யுவன்.
“என் ஆபத்தை பத்தி கவலைப் பட நீ யாரு?”, என்று வெகு நேரம் கழித்து வாயைத் திறந்தாள் யுக்தா.
“என்னை உன் எதிரியா வேணும்னாலும் நினைச்சிக்கோ அம்மு. எனக்கு ஒரே ஒரு விஷயம் தான் வேணும். நீ உன் வீட்ல இருக்க கூடாது”, என்று அவனும் பிடிவாதமாக சொன்னான்.
“நீ ஏன் டா நல்லவனா இல்லாம போன? நீ முன்னாடி எல்லாம் அப்படி கிடையாது தானே? எனக்கு இப்ப ரொம்ப கஷ்டமா இருக்கு. நீ உண்மையிலே அங்க போனியா யுவன்? நீ இப்படி பண்ணுவேன்னு நான் நினைக்கவே இல்லை தெரியுமா?”, என்று கேட்கும் போதே அவள் கண்கள் கலங்கியது.
“நான் முன்னாடி மாதிரி தான் டி இப்பவும் இருக்கேன். சாயங்காலம் நீ என் கிட்ட கேக்கும் போது நான் அங்க போகலைன்னு என்னால பொய் சொல்லிருக்க முடியும். நான் சொன்னா அது பொய்யா இருந்தா கூட நீ நம்புவ. ஆனா நான் உன் கிட்ட என்னைக்குமே பொய் சொல்ல மாட்டேன். அதான் உண்மையை சொன்னேன். நான் நிஜமாவே அங்க போனேன் தான். ஆனா எதுக்குன்னு நான் சொல்ல வந்தப்ப அந்த விளக்கத்தைக் கேக்க உனக்கு பொறுமை இல்லை. உன்னை பொறுத்த வரை நான் கெட்டவனாவே இருந்துட்டு போறேன். ஆனா நீ அங்க இருக்க கூடாது. நாளைக்கு ஒழுங்கு மரியாதையா இங்க கிளம்பி வா. இல்ல, நம்ம புது வீட்டுக்கு போ. உன் ஹேன்ட் பேக்ல அதுக்கான சாவி இருக்கு தானே? அங்க போடி. நாளைக்கு தான் உன் வீட்ல நீ இருக்குற கடைசி நாளா இருக்கணும். போவேன்னு நம்புறேன். நான் வைக்கிறேன்”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டான்.
அவன் சொன்னதைப் பற்றி யோசித்துக் கொண்டே அமர்ந்திருந்தாள் யுக்தா. இரவு பதினொரு மணி போல் “யுக்தா கீழே வா”, என்ற செல்வத்தின் கர்ஜனைக் குரல் கேட்டது.
உடலில் எழுந்த ஒரு வித நடுக்கத்துடன் கீழே இறங்கி வந்தாள். அவர் சத்தம் கேட்டு தாமரையும் அங்கே வந்து நின்றாள்.
இருவரையும் ஒரு பார்வை பார்த்தவன் “நாளைல இருந்து நீ திருப்பியும் படத்துல நடிக்கணும்”, என்றார்.
அதிர்ந்து போய் அவரைப் பார்த்த யுக்தா தாமரையின் தோள்களைப் பற்றிக் கொண்டு பாவமாக தாமரையைப் பார்த்தாள்.
“இதுக்கு தான் படிச்சு படிச்சு சொன்னேன்”, என்ற பார்வையை மகளை நோக்கிய வீசிய தாமரை அமைதியாக இருந்தாள்.
“என்ன சொல்றது காதுல விழுதா? நான் இயக்குனர் ரவி கிட்ட எல்லாம் பேசிட்டேன். காலைல ஒன்பது மணிக்கு ரெடியா இரு. படத்துக்கான அக்ரீமன்ட் சைன் பண்ண போகணும்”, என்றார் செல்வம்.
“இல்லைப்பா…. அது வந்து…. வேண்டாம் பா”, என்று தடுமாறிய படியே சொன்னாள் யுக்தா.
“உன் கிட்ட நான் ஒப்பினியன் கேக்கலை யுக்தா. நான் சொல்றதை தான் நீ செய்யணும்”, என்று சொன்னவரின் குரலில் அதிகாரம் அதிகாரம் இருந்தது. முன்பிருந்த யுக்தாவாக இருந்திருந்தால் சரிப்பா என்ற ஒரு வார்த்தையில் பணிந்திருப்பாள்.
ஆனால் இப்போதிருப்பது யுவனின் மனைவியாயிற்றே. அதனால் “இல்லை என்னால முடியாது. மறுபடியும் நான் அந்த சாக்கடைல போய் விழ மாட்டேன்”, என்று தீர்க்கமாக சொன்னாள். என்ன தான் எதுத்து பேசினாலும் அவளுக்குள் ஒரு பயப் பந்து உருளத் தான் செய்தது.
“ஓஹோ என்னையே எதுத்து பேசுற அளவுக்கு வந்துட்டியா? எல்லாம் அவன் குடுக்குற இடம் தானே? அவன் யோக்கியதையை பாத்த தானே? நாளைக்கே அவனுக்கும் உனக்கும் டைவர்ஸ்க்கு அப்ளைப் பண்ண போறேன்”, என்று சொல்லி அவளுடைய வாழ்க்கைக்கும் உலை வைத்தார்.
“எனக்கு டைவர்ஸும் வேண்டாம், நான் படத்துலயும் நடிக்க மாட்டேன்”, என்று பயத்தை மறைத்துக் கொண்டு சொன்னாள் யுக்தா.
“எவ்வளவு தைரியம் இருந்தா என் கிட்டயே இப்படி பேசுவ? நாளைக்கு உன் கையை காலை கட்டியாவது சூட்டிங் நடக்குற இடத்துக்கு கூட்டிட்டு போவேன். நான் எல்லார் கிட்டயும் சொல்லிட்டேன். நீ மறுபடியும் நடிக்க போறதா. அதனால நாளைக்கு பிரஸ் மீட்டும் இருக்கும். ஒழுங்கா கிளம்பி இரு”
“முடியாது”, என்று யுக்தா சொன்ன அடுத்த நொடி தாமரையின் கன்னத்தில் ஒரு அரை அரைந்தார் செல்வம். அதை எதிர்பார்க்காமல் தாமரை கன்னத்தைப் பிடித்துக் கொண்டு கண்களில் நீர் வழிய நிற்க யுக்தா தாமரையை ஆதரவாக பிடித்துக் கொண்டு நின்றாள். அவள் கண்கள் தந்தையை வெறுப்புடன் நோக்கியது.
“நான் சொல்றதைக் கேக்கலைன்னா உன் அம்மா உயிரோட இருக்க மாட்டா யுக்தா. இப்ப நடந்தது சேம்பில் தான். ஒழுங்கா காலைல கிளம்பி இரு”, என்று சொல்லி விட்டு அவர் அறைக்குள் செல்ல தாயும் மகளும் அசையாமல் நின்றார்கள்.
“அம்மா”, என்று அழைத்தாள் யுக்தா.
“நான் நினைச்ச மாதிரியே நடந்துருச்சே? நீ நல்லா இருப்பேன்னு நினைச்சேனே டி? இங்க பாரு யுக்தா. நான் கேவலமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து முடிச்சிட்டேன். என்னை வச்சு அந்த ஆள் மிரட்டுறதை பெருசா எடுத்துக்காத. உன் புருஷன் நல்லவன்னு நான் வாதாடலை. ஆனா அங்க போய் யுவன் கூட சண்டை போடு டி. இல்லைன்னா உன் அப்பா கிட்ட இருந்து உன்னை காப்பாத்த முடியாது. இப்பவே நான் மாப்பிள்ளைக்கு கால் பண்ணுறேன்”, என்று தாமரை சொன்னதும் “வேண்டாம் மா, இந்த பிரச்சனையை நான் பாத்துக்குறேன்”, என்றாள் யுக்தா.
“யுக்தா, நீ திருந்தவே மாட்டியா டி?”, என்று ஆதங்கமாக கேட்டாள் தாமரை.
“அம்மா, எப்பவும் அடுத்தவங்க பின்னாடி ஒழியக் கூடாதுன்னு நீ தானே சொல்வ? அதனால இந்த தடவை முடிவை நானே எடுக்குறேன்”
“நாளைக்கு உன் அப்பா உன்னை நடிக்க கூட்டிட்டு போயிருவார் டி. அப்புறம் என்ன பண்ண முடியும்?”
“கையைக் காலைக் கட்டி அவர் என்னைக் கூட்டிட்டு போகலாம். ஆனா நடிக்கிறது என் கையில தானே இருக்கு. நாளைக்கு எல்லாத்துக்கும் முடிவு கட்டுறேன்”
“எனக்கு பயமா இருக்கு யுக்தா. நீ மாப்பிள்ளை கூட சேந்து வாழனும். அவர் கூட போவ தானே?”
“அது….”
“சே, உன் கிட்ட போய் சொல்ல வந்தேன் பாரு. என்னைச் சொல்லணும்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாள்.
அங்கே கை கால்களை கட்டிலில் குறுக்கே போட்ட படி படுத்துக் கிடந்தார் செல்வம். கூடவே அவருடைய சட்டையில் ஒட்டியிருந்த அந்த ஸ்டிக்கர் பொட்டு அவர் எங்கு சென்று விட்டு வந்திருக்கிறார் என்பதை தாமரைக்கு புரிய வைத்தது.
அதனால் இன்று தான் அவருக்கு தேவையில்லை என்பதை புரிந்து கொண்டவள் தன்னுடைய போனை எடுத்துக் கொண்டு பக்கத்து அறைக்கு வந்து கதவை பூட்டித் தாள் போட்டுக் கொண்டு படுத்து விட்டாள். .