திகைப்பாக அந்த சாவியையும் அந்த கவரையும் கையில் எடுத்த தாமரை அந்த கவரைப் பிரித்துப் பார்த்தாள்.
ஒரு வீட்டின் அட்ரஸ் அந்த பேப்பரில் இருக்க அது யுக்தாவும் யுவனும் கட்டிய புது வீடு என்று புரிந்தது தாமரைக்கு. அந்த வீட்டுக்கு இன்னும் பால்காய்ப்பு கூட வைக்க வில்லை. அங்கே சில சில்லறை வேலைகள் இருந்ததால் இன்னும் அந்த வீட்டுக்கு யாரையும் அவர்கள் அழைத்துச் செல்லவும் வில்லை. இரண்டு வீட்டினருக்கும் வீடு கட்டும் விஷயம் மட்டுமே தெரியும்.
பால்காய்ப்பு அன்று தான் அனைவருக்கும் அந்த வீட்டைக் காட்ட வேண்டும் என்று யுவனும் யுக்தாவும் எண்ணியிருந்தார்கள். அப்படி இருக்க மகள் இன்று சாவியைக் கொடுத்து விட்டுச் செல்லவும் “சரி அவளுடைய புருஷன் வீட்டுக்கு போக சம்மதிக்கலைன்னாலும் இங்கயாவது போறாளே? இனி எல்லாத்தையும் மாப்பிள்ளை பாத்துக்குவார்”, என்று எண்ணிய தாமரைக்கு சிறிது நேரம் கழித்து தான் “நம்மளை எதுக்கு அங்க வரச் சொன்னா?”, என்ற கேள்வி எழுந்தது.
அந்த கேள்விக்குய் விடையாய் அந்த கவரில் இன்னொரு பேப்பரும் இருந்தது.
“இது என்ன பேப்பர்?”, என்று எண்ணி அதை விரித்துப் படித்தாள்.
“அம்மா இன்னும் ஒரு மணி நேரத்துல நீ நம்ம புது வீட்ல இருக்கணும். அதுவும் ஆரத்தியோட. முதல் தடவையா அப்பா, யுவனைத் தாண்டி நானே ஒரு முடிவு எடுத்து அதை செயலாற்றிட்டு அங்க வருவேன். நீ தான் எனக்கும் என் குழந்தைக்கும் ஆரத்தி எடுக்கணும்”, என்று எழுதி இருக்க “என்ன குழந்தையா? கடவுளே நிஜமா?”, என்று ஆனந்தமாக அதிர்ந்து போனாள் தாமரை.
அவள் கண்களில் இருந்து சந்தோசத்தில் கண்ணீர் வந்தது. “கழுதை ஒரு வார்த்தை சொன்னாளா பாரு? என் கிட்டயே இப்பத் தான் சொல்றா. அப்படின்னா கண்டிப்பா மாப்பிள்ளை கிட்ட சொல்லிருக்க மாட்டா”, என்று எண்ணிய தாமரை உடனே யுவனை அழைத்தாள்.
குளித்து முடித்து வெளியே செல்ல தயாராகிக் கொண்டிருந்தான் யுவன். அப்போது போன் அடிக்கவும் எடுத்துப் பார்த்தான்.
அழைப்பது தாமரை எனத் தெரிந்ததும் அவசரமாக அதை எடுத்தவன் “அத்தை ஏதாவது பிரச்சனையா? யுக்தா எப்படி இருக்கா?”, என்று கேட்டான்.
“உங்க மாமா யுக்தாவை இன்னைக்கு நடிக்க வைக்க போறேன்னு சொல்லி அவளை வரச் சொல்லிட்டு போய்ட்டார். இவளும் வழக்கம் போல கிளம்பிட்டா”
“ஏன் அத்தை இவ இப்படி இருக்கா? நேத்து கூட படிச்சு படிச்சு அவ கிட்ட சொன்னேன். சரி நான் உடனே அங்க போறேன்”
“இல்லை மாப்பிள்ளை, அவ இந்த விசயத்துக்கு சம்மதிக்க மாட்டான்னு தான் நினைக்கிறேன். அப்புறம் இன்னொரு விஷயம்… என்னை …”
“என்ன அத்தை/”
“யுக்தா உங்க புது வீட்டு சாவியை என் கிட்ட கொடுத்து அங்க வரச் சொல்லிருக்கா, அதுவும் ஒரு மணி நேரத்துல. இனி அவ அங்க தான் இருப்பா போல? அவளும் நேரா அங்க வந்துறேன்னு சொன்னா”
“அப்படியா? ரொம்ப சந்தோஷம் அத்தை. அங்க வந்துட்டான்னா அவளை நான் பாத்துக்குவேன்”
“சரி மாப்பிள்ளை. நீங்களும் இங்க கிளம்பி வாங்க”
“இல்லை அத்தை, நான் அவளை முதல்ல பாக்குறேன். அவ கிட்ட இருந்தா தான் எனக்கு நிம்மதியா இருக்கும். அங்க என்ன நடந்தாலும் நான் பாத்துக்குறேன். அவ கூடவே வீட்டுக்கு வரேன்”, என்று சொல்லி போனை வைத்தான்.
புன்னகையுடன் அறைக்குள் வந்த தாமரை மகள் சொல்லியிருந்த குழந்தை விசயத்தை அவனிடம் சொல்ல வில்லை. அதை அவளே சொல்லிக் கொள்ளட்டும் என்று எண்ணிக் கொண்டாள்,.
பின் ஒரு பேகை எடுத்து வைத்தவள் தனக்கு தேவையான உடைகள், தன்னுடைய நகைகள், யுக்தாவின் நகைகள் அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு வெளியே வந்தவள் செக்யூரிட்டியிடம் வீட்டுச் சாவியைக் கொடுத்து “ஐயா வந்தா கொடுத்துருப்பா”, என்று சொல்லி விட்டு ஒரு ஆட்டோவைப் பிடித்து சென்று விட்டாள்.
அங்கே இயக்குனர் ரவி, செல்வத்திடம் “என்ன செல்வம் சார், நீங்க மட்டும் வந்துருக்கீங்க? யுக்தா எங்க? படத்துக்கான அக்ரீமன்ட் இன்னைக்கு சைன் பண்ணலாம்னு சொன்னீங்களே? இன்னும் ஒரு மணி நேரம் தான் நல்ல நேரம் இருக்கு. அதுக்குள்ள வந்துருவாங்களா?”, என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
“யுக்தா வந்துட்டே இருக்கா சார். நீங்க எல்லாம் ரெடி பண்ணுங்க. அவ இப்ப வந்துருவா”, என்று செல்வம் சொல்லும் போதே அங்கே பத்திரிக்கையாளர்கள் கூடி விட்டார்கள்.
“சார், மறுபடியும் யுக்தா மேடம் நடிக்க போறாங்களா? அவங்க கணவரும் அவங்களும் பிரிஞ்சிட்டாங்களா? அதனால தான் மேடம் மறுபடியும் நடிக்க வராங்களா? உண்மைலே அவங்க கணவர் யுவன் தப்பானவர் தானா?”, என்ற கேள்விகளை பத்திரிக்கையாளர்கள் கேட்டுக் கொண்டிருக்க “ஏன் இந்த யுக்தா இன்னும் வரலை?”, என்று மனதினுள் எரிச்சல் பட்டார் செல்வம்.
அப்போது யுக்தாவின் கார் அங்கே வர அனைவரும் அவள் பக்கம் திரும்பி ஓடினார்கள். அவள் வந்ததும் செல்வம் நிம்மதியாக மூச்சு விட அங்கே ஒரு ஓரத்தில் யாரும் பார்க்கவாதவாறு மறைந்து நின்ற யுவன் முகத்தில் டென்ஷன் நிறைந்திருந்தது.
“கடவுளே என் மேல உள்ள கோபத்துல நடிக்கிறேன்னு இவ சொல்லிறக் கூடாது. அப்படி அவ நடிக்க ஆரம்பிச்சா என்னை அவ அப்பன் அவ கிட்டயே விட மாட்டான்”, என்று எண்ணி டென்சனில் நகத்தைக் கடித்து துப்பிக் கொண்டிருந்தான்.
“மேடம் நீங்க மறுபடியும் நடிக்க போறீங்களாமே? புது படம் சைன் பண்ண தான் இப்ப வந்துருக்கீங்களா?”, என்று ஒரு பத்திரிக்கையாளர் கேட்க “இல்லை, நான் இப்ப நடிக்க போறேன்னு சொல்ல வரலை. இனி என் வாழ்க்கைல நடிக்கவே மாட்டேன்னும், சினிமா துறையில் இருந்து ஒட்டு மொத்தமா விலகுறேன்னும் சொல்லத் தான் இங்க வந்தேன். எனக்கே தெரியாம எங்க அப்பா இந்த ஏற்பாடு பண்ணிட்டார். இந்த டேரெக்டர் சார் என்னோட மரியாதைக்குரியவர். அதனால அவர் கிட்ட நேர்ல வந்து மன்னிப்பு கேக்கணும்னு தான் நான் வந்தேன்”, என்று நிறுத்தி நிதானமாக யுக்தா சொல்ல செல்வம் முகம் இருண்டது என்றால் யுவன் முகம் ஒளிர்ந்தது.
“சமத்து டி நீ”, என்று மனதுக்குள் மனைவியை செல்லம் கொஞ்சிக் கொண்டான்.
“யுக்தா நீ என்ன பேசுற? சொன்னது எல்லாம் மறந்துருச்சா?”, என்று கடுமையாக அவளுக்கு மட்டும் கேட்குமாறு கேட்டார் செல்வம்.
“இருங்கப்பா, பேசிட்டு இருக்கேன்ல?”, என்று அவரிடம் சொன்னவள் “கல்யாணம் பண்ணினப்பவே இனிமே சினிமால நான் நடிக்க மாட்டேன்னு முடிவு பண்ணிட்டேன்”, என்று அனைவரிடமும் சொன்னாள்.
“என்ன மேடம் நீங்க? கணவரையும் வேண்டாம்னு சொல்லிட்டீங்க? சினிமாவும் வேண்டாம்னு சொல்லிட்டீங்க? அப்புறம் என்ன தான் பண்ணப் போறீங்க?”, என்று கேட்டார் ஒரு ஆள்.
“வாட், நான் என் கணவனை வேண்டாம்னு சொன்னேனா? இது என்ன புதுக்கதை? இவ்வளவு பெரிய புரளியைக் கிளப்பினது யாரு? அவர் என் உயிர். அப்படி இருக்க அவரை நான் ஏன் வேண்டாம்னு சொல்லணும்?”, என்று நக்கலாக கேட்க அதைக் கேட்டுக் கொண்டிருந்த யுவனுக்கோ அவளை ஓடிச் சென்று அணைத்துக் கொள்ள கைகள் பரபரத்தது. செல்வமோ வந்த கோபத்தை கட்டுப் படுத்த முடியாமல் நின்றார்.
“என்ன மேடம் சொல்றீங்க? சாதாரண ஒரு பொண்ணா இருந்தா கூட தங்களோட கணவன் விபசார விடுதிக்கு போயிட்டு வந்தால் அவரை விவாகரத்து பண்ணிருவாங்க. நீங்க எவ்வளவு பெரிய ஆள். அப்படி இருக்க அந்த இடத்துக்கு போன உங்க கணவரை நீங்க உங்க உயிருனு சொல்றீங்க?”
“வார்த்தையை அளந்து பேசுங்க சார். என் கணவர் நெருப்பு மாதிரி. அவர் என்னைத் தவிர எந்த பொண்ணையும் நெருங்க மாட்டார். பொண்ணுங்களுக்கு மட்டும் கற்பு இல்லை. ஆண்களுக்கும் கற்பு உண்டுன்னு நினைக்கிறவர் தான் என் கணவர். அப்படித் தான் என் மாமியார் அவரை வளத்துருக்காங்க”, என்று சுந்தரிக்கும் ஒரு ஐஸ் வைத்தாள்.
“வாயாடி என்னா போடு போடுறா? இந்த காட்சியை அம்மா பாக்கணும். எப்படி டி நீ இப்படி எல்லாம் மாறின?”, என்று மானசீகமாக அவளிடம் உரையாடினான் யுவன். கூடவே அவள் தன்னை சந்தேகிக்கவில்லை என்று அவனுக்கு நிம்மதியாகவும் இருந்தது.
“அப்ப வெளி வந்த செய்தி பொய்ன்னு சொல்றீங்களா?”, என்று கேட்டார் ஒரு பத்திரிக்கையாளர்.
“ஆமா பொய் தான்”, என்று அடித்துச் சொன்னாள் யுக்தா.
தான் பற்ற வைத்த நெருப்பு பெரிதாக வெடிக்கும் என்று நினைத்தால் அது பற்றி எரியாமல் நமத்துப் போனதைத் தாங்க முடியாமல் நின்றிருந்தார் செல்வம்.
“நம்புற மாதிரி இல்லையே. நீங்க அந்த விடியோவையும் நியூசையும் உண்மைன்னு நம்பி தான் உங்க வீட்டுக்கு போய்ட்டீங்களாமே?”, என்று ஒரு கேட்டாள் ஒரு பெண்.
“உங்களுக்கு கற்பனை வளம் ஜாஸ்தி மேடம். எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு தான் நான் என் வீட்டுக்கு போனேன். அதுவும் என் கணவர் கூட தான். இதுல இப்படி எல்லாம் புரளி கிளம்பினா நான் என்ன செய்ய?”, என்று சிறு புன்னகையுடன் யுக்தா கேட்க “அடப்பாவி அத்தை நல்லா தானே டி இருக்காங்க? நீ என்ன இப்படி ஒரு புழுகு மூட்டையா இருக்க?”, என்று எண்ணி சிரித்தான் யுவன்,
“அப்ப அன்னைக்கு வந்த செய்தி பொய்யா”? வீடியோ ஆதாரம் எல்லாம் பொய்யா? அந்த அளவுக்கு நாங்க ஒண்ணும் கூமுட்டைங்க இல்லை மேடம்”, என்று துடுக்காக கேட்டான் ஒரு ஆள்.
“நான் உங்களை வச்சு அந்த மாதிரி, இல்லை இல்லை அதை விட மோசமா ஒரு ஆதாரம் ரெடி பண்ணவா? அதுவும் உண்மை மாதிரியே ரெடி பண்ணி உங்க வீட்டுக்கு அனுப்பவா?”, என்று அவனிடம் அசராமல் கேட்டாள் யுக்தா.