“இப்படி எல்லாம் நடக்கும்னு எனக்கு தெரியாதுங்க. அன்னைக்கு உங்க பையனைப் பாத்ததும் ரொம்ப பொறுப்பானவனா தெரிஞ்சது. அதனால தான் அவன் கிட்ட என் மகளைப் பாத்துக்கோப்பான்னு சொல்லிட்டு வந்தேன். இப்பவும் அவனை இங்க வரச் சொன்னதுக்கு காரணம் எப்படியாவது என் மக வாழ்க்கையை மாத்தணும்னு நினைச்சு தான்”, என்று சுந்தரி மற்றும் ஈஸ்வரனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் தாமரை.
“நீங்க சொல்றதை வச்சுப் பாத்தா முதல்ல மாற வேண்டியது நீங்க தான் தாமரை”, என்றாள் சுந்தரி.
“ஆமா, நீங்க உங்க பயத்தை முதல்ல விடுங்க. நீங்க பயந்து பயந்து உங்களுக்குள்ளே ஒடுங்கிப் போனீங்கன்னா யுக்தாவும் அப்படி தான் இருப்பா. நீங்க உங்க கணவரை தைரியமா எதிர்க் கொள்ளனும். அப்ப தான் யுக்தாவும் தைரியமா இருப்பா”
“அதெல்லாம் ஒரு நாள்ல மாறாது சுந்தரி. இவங்க எவ்வளவு நாள் அவர் கிட்ட கஷ்டத்தை அனுபவிச்சிருப்பாங்க? அதை எல்லாம் ஒரு நிமிசத்துல கடந்து வந்துற முடியாது. யுக்தாவோட அப்பா மனசாட்சி கூட இல்லாதவரா இருக்கார். அவரை இவங்க கோபம் பாதிக்கும்மான்னு கூட சந்தேகம் தான். இதையெல்லாம் அப்புறம் பேசலாம்.. முதல்ல யுக்தாவை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும். வீட்லே வச்சிருந்தா அவ காயம் ஆறாது”, என்றார் ஈஸ்வரன்.
“நானும் நேத்துல இருந்து கூப்பிட்டுப் பாத்துட்டேன். ஆனா யுக்தா அசையவே மாட்டிக்கா. சின்ன வயசுல இருந்தே அவ அப்படி தான். எதுக்கு எடுத்தாலும் பயம். அப்படி மாத்தி வச்சிருக்கார் அவ அப்பா. ஹாஸ்பிட்டலுக்கு போகணும்னாலே அழ ஆரம்பிச்சிடுவா”
“நாங்க அவ கிட்ட பேசுறோம்”, என்று சொன்ன சுந்தரி மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு யுக்தா அறைக்குள் சென்றாள். அங்கே யுக்தாவும் யுவனும் பேசிக் கொண்டிருக்க “யுக்தா வா மா ஹாஸ்பிட்டால் போகலாம். இப்படியே விட்டா எப்படி காலேஜ் போக முடியும்? நான் கைத் தாங்களா பிடிச்சிக்கிறேன். நம்ம கார்லே போயிறலாம் என்ன?”, என்றாள்.
அதைக் கேட்டு ஒரு மிரண்ட பார்வையை தாயை நோக்கி வீசினாள் யுக்தா.
“பயப்படாத யுக்தா. உன் கூட நாங்க எல்லாம் இருக்கோம். வா போகலாம்”, என்று யுவன் சொன்னதும் அரை மனதாக தலையாட்டினாள்.
அடுத்த அரை மணி நேரத்தில் ஒரு பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாள் யுக்தா. சிகிச்சை முடிந்து யுக்தா மற்றும் தாமரை இருவரையும் வீட்டில் விட்டுவிட்டு அவர்களுக்கு ஆறுதல் சொல்லி விட்டே சுந்தரி மற்றும் ஈஸ்வரன் இருவரும் கிளம்பினார்கள். யுவனை யுக்தாவிடம் சொல்லி விட்டு அவர்களுடன் கிளம்பினான்.
அடுத்த நாள் ஊரில் இருந்து வந்த செல்வம் செக்யூரிட்டி மூலம் அவர்கள் வரவை அறிந்து கோபமாக வீட்டுக்குள் வந்தார்.
அப்போது யுக்தாவின் காலுக்கு மருந்து போட்டுக் கொண்டிருந்தாள் தாமரை. வேகமாக அந்த அறைக்குள் வந்தவர் கட்டிலில் அமர்ந்திருந்த தாமரையின் கையைப் பற்றி இழுத்து நிற்க வைக்க அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை வைத்தார். யுக்தா பயத்துடன் கட்டிளின் ஒரு ஓரத்தில் பதுங்கினாள்.
தாமரை குழப்பமாக செல்வத்தைக் காண “ஆத்தாவும் மகளும் சேர்ந்து என் காதுல பூ சுத்த நினைக்கிறீங்களா? இந்த வீட்டுக்கு யாரும் வரக் கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல? இப்ப எதுக்கு டி அந்த குடும்பம் இங்க வந்தது? அதுவும் அந்த பையனும் வந்துருந்தானாமே? நான் இல்லாதப்ப இது என்ன டி கூத்து? “
“இல்லைங்க, அது வந்து…”
“என்ன வந்து போயின்னு இழுத்துட்டு இருக்க? முதல்ல யாரு டி அவங்க? புதுசா உறவு கொண்டாட வீடு வரைக்கும் வந்திருக்காங்க? இதுக்கெல்லாம் காரணம் இவ தானே?”, என்று சொல்லிய படி அவர் யுக்தாவை நெருங்க “இதுக்கு மேல என் மகளை ஏதாவது செஞ்சீங்க நான் சும்மா இருக்க மாட்டேன்”, என்று தைரியத்தை கூட்டிச் சொன்னாள் தாமரை.
இத்தனை நாள் தாமரை அப்படி எல்லாம் பேசியதில்லை என்பதால் அவளை திகைப்பாக பார்த்தார் செல்வம்.
“என்ன டி செய்வ? இல்ல என்ன செய்வன்னு கேக்குறேன்? பேச்சு எல்லாம் ஒரு மாதிரி இருக்கு”, என்று கேட்ட செல்வம் அவளை கூர்மையாக பார்த்தார்.
“நீங்க பண்ணுறது எதுவும் சரியில்லை. என் பொண்ணு என்ன பாவம் பண்ணினான்னு தெரியலை. என் வயித்துல வந்து பிறந்துருக்கா. நானும் அவ நல்லா இருக்கணும்னு தான் இத்தனை நாள் உங்களை எடுத்து பேசாம வாயை மூடிட்டு இருந்தேன். ஆனா நீங்க அவளை எப்பவும் காயப் படுத்திட்டே இருக்கீங்க? இனி இப்படி நடக்க நான் விட மாட்டேன்”, என்று செல்வத்திடம் சொன்ன தாமரை யுக்தா புறம் திரும்பி “பாப்பா, தைரியமா இரு டா. உனக்கு அம்மா இருக்கேன். இப்ப நல்லா தூங்கு”, என்று சொல்லி விட்டு அந்த அறையை விட்டு வெளியே சென்று விட்டாள்.
மகளை முறைத்து விட்டு செல்வமும் தாமரையின் பின்னே வந்தார். “என்ன டி பேசிட்டு இருக்கும் போதே போயிட்டு இருக்க? இத்தனை நாள் நீ இப்படி இல்லையே? இன்னைக்கு பேச்செல்லாம் புது தினுசா இருக்கு? எல்லாம் அவனுங்க கொடுத்த தைரியமா? அந்த பையன் கூட அப்பனும் வந்தானாமே? என்ன கூத்து நடந்துச்சு இங்க? யார் கொடுத்த தைரியத்தால நீ என்னை எதுத்து பேசுற? எனக்கு இப்ப தெரிஞ்சாகனும்”
“சீ உங்க கேவலமான புத்தி எப்ப தான் உங்களை விட்டுப் போகுமோ? கூடவே அந்த பையனோட அம்மாவும் தானே வந்தாங்க? அது ஏன் உங்க கண்ணுக்கு தெரியலை?”
“முதல்ல அவங்க எதுக்கு இங்க வந்தாங்க? அதை சொல்லு. அவங்களுக்கு எப்படி இந்த வீடு தெரியும்? உன் மக தான் அட்ரஸ் கொடுத்து வரச் சொன்னாளா?”
“அவங்களை இங்க வரச் சொன்னது நான் தான்”
“தாமரை”
“கத்தாதீங்க. அவங்க கூடவே என் மகளை அனுப்பி வைக்க தான் நினைச்சேன். ஆனா அது முறை இல்லைன்னு தான் விட்டுட்டேன். நீங்க எல்லாம் மனுசனா? ஒரு சின்னப் பிள்ளையை போய் இப்படி ஆக்கி வச்சிருக்கீங்க? அவளைப் பாத்த டாக்டர் கூட உங்க கணவர் மனுசனா மிருகமான்னு கேக்குறார். இனி நான் பொறுமையா இருக்க மாட்டேன். இனி யுக்தா மேல உங்க நிழல் கூட படக் கூடாது”
“ஓஹோ? என்னையே மிரட்டுறியா? சரி அப்படி நிழல் பட்டா என்ன பண்ணுவ? அதையும் சொல்லிரு”
“எல்லா சொத்தும், யுக்தா பேர்ல தான் என் அப்பா எழுதி வச்சிருக்கார். அதை உங்க பேர்ல மாத்தி எழுத நீங்க என்ன தில்லாலங்கடி வேலை செஞ்சாலும் அது நடக்காது. ஏன்னா என் பேச்சை மீறி யுக்தா எதுலயும் கையெழுத்துப் போட மாட்டா. இதுக்கு மேல நீங்க யுக்தா மேல கையை வச்சா, சொத்துக்காக என்னையும் என் மகளையும் சாகடிக்க பாக்குறீங்கன்னு போலீஷ்ல கம்ப்லைண்ட் பண்ணுவேன்”
“தாமரை”
“என்ன போலிஸ்ன்னு சொன்னதும் பயமா இருக்கா? நான் உண்மையா தான் சொல்றேன். எனக்கு என் பொண்ணு முக்கியம். கண்டிப்பா நான் செய்வேன். அப்படி நீங்க ஜெயில்ல கலி திங்கும் போது உங்களைக் காப்பாத்த உங்க இன்னொரு குடும்பமும் வர முடியாது, ஏன்னா இன்னொரு குடும்பத்துக்கு லைசன்சையும் நான் பிச்சை போட்டா தான் உண்டு. பாத்து நடந்துக்கோங்க”, என்று சொல்லி விட்டு தன்னுடைய அறைக்குள் சென்று விட்டாள் தாமரை.
போலீஸ் என்று மிரட்டியதும் இல்லாமல் அவருடைய இன்னொரு குடும்பத்தைப் பற்றி தனக்கு தெரியும் என்றும் சொல்லாமல் சொல்லி விட்டுச் சென்று விட்டாள்.
“வீட்டுக்குள்ளே இருக்கான்னு பாத்தா எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கா. என்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சும் இது வரை ஒரு கேள்வி கூட கேக்காம இருக்கான்னா அதுக்கு காரணம் யுக்தாவா தான் இருக்கும். இனி நாம உசாரா இருக்கணும். உன் மகளுக்காக நீ பொறுமையா இருக்கியா தாமரை? அதே மகளை வச்சு அந்த சொத்தை அடையுறேனா இல்லையான்னு பாரு? நான் செல்வம் டி”, என்று அகங்காரமாக எண்ணிக் கொண்டு அவருடைய அறைக்குள் சென்று விட்டார் செல்வம்.
அடுத்து வந்த நாட்கள் அமைதியாக கழிந்தது. அதற்கு பிறகு யுவனோ அவன் குடும்பமோ இங்கே வரவில்லை. ஆனால் சுந்தரியும் யுவனும் தாமரைக்கு கால் செய்து விசாரித்துக் கொள்வார்கள். சில நேரம் யுவன் யுக்தாவிடமும் பேசுவான்.
காயம் எல்லாம் ஆறியதும் மகளை கல்லூரிக்கு போகச் சொன்னாள் தாமரை. செல்வத்தை நினைத்து பயந்து யுக்தா அழ ஆரம்பிக்க அவளுக்கு தைரியம் சொல்லி கல்லூரிக்கு கிளப்புவதுக்குள் தாமரை சோர்ந்து போனாள்.
தன்னுடைய கல்லூரி பேகை எடுத்துக் கொண்டு வெளியே வந்த யுக்தா டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த செல்வத்தை பார்த்து பயத்துடன் தேங்கி நின்றாள்.
மகளின் பயத்தைக் கண்ட தாமரை கணவரை முறைத்து விட்டு “யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க யுக்தா. நீ காலேஜ்க்கு போயே ஆகணும். நாளைக்கு நான் உன் கூட இல்லாம போனாலும் உன் படிப்பு உன்னைக் காப்பாத்தும். யார் என்ன சொன்னாலும் அம்மா பாத்துக்குறேன். நீ கிளம்பு. இனி நம்ம வீட்டு கார்ல எல்லாம் நீ காலேஜ் போக வேண்டாம். தெரு முனைல இன்னும் கால் மணி நேரத்துல உங்க காலேஜ் பஸ் வரும். நான் பஸ் பீஸ் கட்டிட்டேன். அதுல போ. அப்ப தான் உனக்கு தன்னம்பிக்கை வரும்”, என்று சொன்னாள்.
இருவரையும் பயப் பார்வை பார்த்துக் கொண்டே அங்கிருந்து சென்றாள் யுக்தா. முதல் முறையாக காலேஜ் பஸ்ஸில் போவது ஒரு மாதிரியாக இருந்தாலும் அதற்கும் பழகிக் கொண்டாள். காலேஜ் சென்றதும் யுவன் மற்றும் அவனுடைய நண்பர்கள் நலம் விசாரித்தார்கள். அதற்கு சிறு தயக்கத்துடன் பதில் சொன்னாள். சில பெண்களும் அவளிடம் பேசினார்கள். அப்படி அவளிடம் பேசிய பெண் தான் ரேவதி.
யுக்தாவுக்கு பின் பெஞ்சில் அமர்ந்திருந்த ரேவதி “எப்படி இருக்க யுக்தா? உனக்கு டைபாய்ட் காச்சல்ன்னு சொன்னாங்க. இப்ப சரியாகிருச்சா?”, என்று கேட்டாள்.
தாமரை அப்படிச் சொல்லி தான் அவளுக்கு மெடிக்கல் செர்டிபிகேட் கொடுத்திருந்தாள். அதனால் “இப்ப சரியாகிருச்சு”, என்று ரேவதிக்கு பதில் கொடுத்தாள் யுக்தா.
அதன் பின்னும் ரேவதி சில விஷயங்கள் பேச யுக்தாவும் அவளிடம் பதில் பேசிக் கொண்டிருந்தாள். இதையெல்லாம் யுவன் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
அன்று மாலை “தேங்க்ஸ் ரேவதி, மத்த பொண்ணுங்க எல்லாம் அவ கிட்ட பேசாம ஒதுங்கி இருக்காங்க. ஆனா நீ அவ கிட்ட பிரண்ட்லியா பேசுற. அவ கொஞ்சம் பயப்படுவா. நீ தினமும் அவ கிட்ட இப்படி பேசினா அவ கொஞ்சம் சகஜமா மாறுவா”, என்று ரேவதியிடம் நன்றி சொன்னான் யுவன்.
“நான் அவ கிட்ட பேசுறதே உனக்காக தான் டா. அவ கிட்ட நான் பேசினா நீ என் கிட்ட இப்படி வந்து பேசுவேன்னு தெரிஞ்சு தான் பேசுனேன். நான் நினைச்சது வீண் போகலை. எனக்கு நீ வேணும். அதான் அவ கிட்ட பேசினேன். இல்லைன்னா அவ கிட்ட நான் எதுக்கு பேசப் போறேன்?”, என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட ரேவதி “சரி யுவன், யுக்தா இனி உனக்கு மட்டும் ஃபிரண்ட் இல்லை. எனக்கும் ஃபிரண்ட் தான். அதனால என்னையும் உங்க கேங்க்ல சேத்துக்கொங்க”, என்று புன்னகையுடன் பதில் கொடுத்தாள்.
யுக்தாவை ஃபிரண்ட் என்று சொன்னதாலே அவளை தோழியாக ஏற்றுக் கொண்டான் யுவன். அவளுடைய மனதில் இருப்பது அறிந்தால் என்ன செய்வானோ?
கல்லூரி வாழ்க்கை அப்படியே நகர்ந்தது. காலேஜில் ரேவதி, யுவன், யுவனின் நண்பர்கள் என்று யுக்தா வாழ்க்கை நகர்ந்தது. என்ன உதவி வேண்டும் என்றாலும் யுவனிடம் கேட்கும் அளவுக்கு யுக்தா முன்னேறியிருந்தாள். அந்த அளவுக்கு அவளை மாற்றி இருந்தான். தினமும் நேரம் ஒதுக்கி அவளிடம் பேசுவான். எந்த நோட்ஸ் என்றாலும் அவளுக்கு தான் முதலில் கொடுப்பான். அவளுக்கு தெரியாத பாடம் எது என்று கேட்டு அவளுக்கு சொல்லிக் கொடுப்பான்.
சுந்தரி ஏதாவது செய்து கொடுத்தால் முதலில் அவளுக்கு என்று எடுத்து வைத்து விட்டு தான் மற்றவர்களுக்கே கொடுப்பான். அவனுடைய அக்கறை எல்லாம் முதலில் புதுசாக இருந்தாலும் இப்போதெல்லாம் யுக்தாவும் அதை எதிர் பார்க்க ஆரம்பித்தாள்.
அவன் உடல் நிலை சரியில்லாமல் காலேஜ் வரவில்லை என்றால் தாமரை எண்ணில் இருந்து அவனுக்கு அழைத்துப் பேசும் அளவுக்கு முன்னேறி இருந்தாள். அவனுடைய நண்பர்கள் என்பதற்காகவே அவர்களுடன் இன்முகமாக பேசுவாள். ஆனாலும் மற்ற பெண்கள் போல இருக்காமல் சிறு தயக்கமும் பயமும் அவளிடம் இருந்து கொண்டே தான் இருக்கும். அதை உடனடியாக அவளிடம் இருந்து விரட்ட முடியாது என்று யுவனும் புரிந்து கொண்டான்.
காலேஜில் இப்படி என்றால் வீட்டில் செல்வத்தின் மீது பயம் இருந்தாலும் இப்போதெல்லாம் அவளை அவர் அதிகம் தொல்லை செய்ய வில்லை என்பதால் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்றது.
யுவனுடைய நண்பர்கள் பட்டியலில் ரேவதி மற்றும் யுக்தா இருப்பது அந்த கிளாசில் இருந்த அனைவரும் அறிந்ததே. ஆனால் யாரும் அறியாததை யுக்தா மட்டும் அறிந்திருந்தாள். அது ரேவதிக்கு இருக்கும் யுவனின் மீதான காதல்.
வேண்டும் என்றே தான் ரேவதி யுக்தாவிடம் அடிக்கடி யுவனைப் பற்றி பேசி அவனை தனக்கு அதிகம் பிடிக்கும் என்று பதிய வைத்திருந்தாள்.
யுக்தாவும் ரேவதியின் காதலை அறிந்து சாதாரணமாக தான் இருந்தாள். அவளுக்கு வேறு எந்த உணர்வும் வர வில்லை. பொறாமை எண்ணம் கூட அவளுக்கு வரவில்லை. ஆனால் அதே நேரம் யுவன் ரேவதிக்கு தான். இனி தான் அவனிடம் பேசக் கூடாது என்றெல்லாம் எண்ணி ஒதுங்கியும் இருக்க வில்லை. எப்போதும் எந்த உதவி வேண்டும் என்றாலும் யுவன் என்று தான் அழைப்பாள்.
அது சில நேரம் ரேவதிக்கு எரிச்சலாக இருக்கும். யுவன் யுக்தா ரேவதி மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் வேளையில் ரேவதி யுவனிடம் தனித்து பேச விரும்புவாள். ஆனால் யுக்தா யுவனை விட்டு விலக அதிகம் யோசிப்பாள்.
ஒரு நாள் மூவரும் கேண்டீனில் அமர்ந்திருந்தார்கள். அப்போது “யுக்தா எனக்கு கூல்டிரிங்க்ஸ் வாங்கிட்டு வரியா?’, என்று கேட்டு அவளை அங்கிருந்து அப்புறப் படுத்த எண்ணினாள் ரேவதி.
“சரி ரேவதி, யுவன் நீ என் கூட வரியா? தனியா போக பயமா இருக்கு”, என்றாள் யுக்தா.
“அவன் எதுக்கு? நீ மட்டும் போ”, என்றாள் ரேவதி.
“நீ இரு யுக்தா”, என்று சொன்ன யுவன் “ரேவதி அவளை எதுக்கு அனுப்புற? நான் வாங்கிட்டு வரேன்”, என்றான்.
“நாலு இடத்துக்கு போனா தானே அவளுக்கு தைரியம் வரும்”, என்றாள் ரேவதி.
“அதுக்காக அவ கூட்டத்துல நின்னு பசங்க கிட்ட இடி வாங்கி கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி தான் தைரியம் வரணும்னு இல்லை”
“இல்லை யுவன் நான் என்ன சொல்றேன்னா?”
“இப்ப என்ன, அவளே போய் வாங்கணும் அப்படி தானே? சரி யுக்தா நீ போய் வாங்கு. நான் உனக்கு துணைக்கு வரேன்”, என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டு சென்றான். யுக்தா சந்தோஷமாக செல்ல யுவனும் அவளுக்கு பாதுகாப்பாக சென்றான். ரேவதி தான் புகைச்சலுடன் அமர்ந்திருந்தாள். அதற்கு பின்னரும் பல முறை இப்படி தான் நடந்தது.