முதல் வருடம் முடிந்து இரண்டாம் வருடம் நடக்கும் போது காலேஜில் இருந்து டூர் போனார்கள். அப்போதும் யுவன் யுக்தாவை பாதுகாத்துக் கொண்டே தான் திரிந்தான்.
டூரின் முதல் நாள் ஒரு அருவிக்குச் சென்றிருந்தார்கள். ஆண்களுக்கு மட்டும் குளிக்க அனுமதி கொடுத்திருந்தாள் இவர்களின் வகுப்பு ஆசிரியை மங்கை. ஆனால் யுவன் அவர்களுடன் செல்ல வில்லை. யுவனோ யுக்தா தன்னுடைய கண் பார்வையில் இருக்குமாறு ஒரு இடத்தில் அமர்ந்திருந்தான். யுவனுடன் நேரம் செலவழிக்க ஆசை கொண்ட ரேவதி அவனை எங்கே என்று தேடினாள்.
அவன் தனியே இருப்பதால் இது தான் சரியான நேரம் என்று எண்ணி “யுக்தா நீ ஒரு பத்து நிமிஷம் இங்க தனியா உக்காந்துகுறியா? நான் யுவன் கிட்ட கொஞ்சம் பேசணும். பேசிட்டு வரேன்”, என்றாள் ரேவதி.
“சரி”, என்று யுக்தா சொன்னதும் ரேவதி எழுந்து யுவன் அருகே சென்றாள்.
அவளைக் கண்ட யுவன் “ஏய் ரேவதி எதுக்கு அவளை தனியா விட்டுட்டு வந்த? நீ அவ கூட இருப்பேன்னு நம்பி தான் நான் இங்க வந்தேன். நீயும் இங்க வந்துட்டா அவளை யார் பாப்பா? அவளை தனியா விடாதே”
“இல்லை யுவன் அவ பத்திரமா தான் இருக்கா. நம்ம கண்ணு முன்னாடி தானே இருக்கா? அப்புறம் என்ன? அதை விடு. நீ ஏன் மத்த பிரண்ட்ஸ் கூட அருவில குளிக்க போகலை? பொண்ணுங்க எங்களைத் தான் மேடம் விடலை. நீ போயிருக்கலாம்ல?”, என்று கேட்டு பேச்சை ஆரம்பித்தாள்.
“நீ யுக்தா கூட இருந்தாலும் எனக்கு யுக்தா என் கண் முன்னாடியே இருக்கணும். அதுக்கு தான் நான் அவங்க கூட போகலை. சுத்தி எல்லாரும் இருக்கும் போது அவ பத்திரமா தான் இருப்பா. ஆனா அவ தனிமையை உணருவா. அவளை எப்பவும் தனியே விடக் கூடாது. நான் அவ கிட்ட போறேன். நீ வரதுன்னா வா. இல்லைன்னா இங்கயே இரு”, என்று சொன்னவன் யுக்தாவைப் பார்த்து நடந்தான்.
அவன் மட்டும் வந்ததைக் கண்ட யுக்தா மலர்ந்து சிரித்தாள். பின் ‘நீ என்ன வந்துட்ட? உன் கிட்ட பேசணும்னு தானே ரேவதி வந்தா”, என்றாள்.
“என்னது என் கிட்ட பேசணும்னு சொல்லிட்டு வந்தாளா?”, என்று எண்ணி குழப்பம் வந்தாலும் “ஆன் வந்தா யுக்தா. எப்ப ஷாப்பிங் போவோம்னு பேசிட்டு இருந்தா. வேற ஒண்ணும் இல்லை. அவ அதோ அங்க இருக்கா. நீ தனியா இருந்தியா? அதான் நான் உன்னைத் தேடி வந்தேன். நீ இங்க என்ன செய்ற? அதோ நம்ம பிரண்ட்ஸ் எல்லாம் குளிச்சிட்டு வந்துட்டாங்க. அங்க போவோமா?”, என்று கேட்டான்.
“இல்லை வேண்டாம். ஏற்கனவே நீயும் உன் பிரண்ட்ஸ் எல்லாரும் என்னை விட்டு பிரியவே மாட்டுக்கீங்கன்னு மத்த ஸ்டுடண்ட்ஸ் எல்லாம் பேசுறாங்கலாம். அதான் உங்களை விட்டு தள்ளியே இருக்கணும்னு ரேவதி சொன்னா. இங்க டூர் வந்தும் நான் உங்க கூட இருந்தா மத்தவங்க கிண்டல் அடிப்பாங்க”
“கிண்டல் அடிச்சா அடிச்சிட்டு போகட்டும் யுக்தா. நான் எப்பவும் நீ கூப்பிடுற தூரத்துல இருக்கணும். அதான் எனக்கு வேணும். சரி ரேவதி உன் கிட்ட வேற என்ன சொன்னா? உனக்கு நிறைய அட்வைஸ் பண்ணிருக்கா போல?”, என்று போட்டு வாங்கினான்.
“எதுவும் சொல்லலையே. ஆன் உன்னை ரொம்ப பிடிக்கும்னு சொல்லுவா. எப்பவும் உன்னைப் பத்தி தான் பேசுவா”
“என்னைப் பிடிக்கும்னு உன் கிட்ட எப்ப சொன்னா?”
“அவ என் கூட பேச ஆரம்பிச்சதுல இருந்தே உன்னைப் பிடிக்கும்னு சொல்லுவா”
“ஓ அப்படியா? மத்த பிள்ளைங்க உன் கிட்ட பேசுறாங்க தானே?”
“கிளாஸ்ல இருக்குற எல்லாருமே என் கிட்ட பேசுறாங்க யுவன். என் நோட்டெல்லாம் வாங்கி நோட்ஸ் எடுக்குறாங்க.ஆனா எனக்கு தான் யார் கூடவும் அதிகம் ஒட்ட முடியலை. நீயும் அம்மாவும் எவ்வளவு சொன்னாலும் என்னால மாறவே முடியலை”
“ரெண்டு வருஷமா பழகுற எங்க கிட்டயே நீ இன்னும் முழுசா ஒட்டலை. அவங்க கூடவா ஓட்டப் போற?”, என்று கேட்டவன் அவள் தலையில் வலிக்காமல் கொட்டினான்.
“கிண்டல் பண்ணுறியா?”, என்று புன்னகையுடன் கேட்டாள்.
“அடடே இந்த அம்மு கண்டு பிடிச்சிட்டாளே? இப்படி சிரிச்சிட்டு இருந்தா அழகா இருக்க டி யுக்தா”
“போ யுவன், சரி உனக்கு மட்டும் எதுக்கு என் மேல கோபமே வர மாட்டிக்கு. அன்னிக்கு பேப்பர் பிரஸண்டேசன்க்கு பேர் கொடுக்கச் சொன்ன. நான் கொடுக்கவே இல்லை. அதுக்கு கூட நீ என்னைத் திட்டலை ஏன்? ரேவதி கூட என்னை திட்டினா. யுவன் சொல்லிருக்கான் நீ ஏன் கேக்க மாட்டிக்க? நான் அவன் என்ன சொன்னாலும் கேப்பேன்னு சொல்லி என்னைத் திட்டினா”
“உன் மேல எனக்கு எப்பவுமே கோவம் வராது டி அம்மு. அது ஏன்னு தெரியலை. ஆனா அடுத்த தடவை நானே உன் பேரைக் கொடுத்துருவேன்”
“ஐயோ வேண்டாம். எனக்கு பயமா இருக்கும்”
“நான் இருக்கும் போது நீ பயப்படலாமா?”
“நீ கிட்ட இருந்தா பயப்பட மாட்டேன்”
“குட், சரி அங்க பாரு நம்ம பசங்க எல்லாம் நம்மளைக் கையாட்டி கூப்பிடுறாங்க. வா அங்க போகலாம். ரேவதியும் அங்க தான் இருக்கா. அங்க போனா இன்னும் ஜாலியா இருக்கும்”
“ஏன் ஜாய்யா இருக்காது? அந்த வருண் எதுக்கு எடுத்தாலும் என்னையவே கிண்டல் அடிக்கிறான். அதைக் கேட்டு எல்லாரும் சிரிக்கிறீங்க? அதுக்கு தானே என்னைக் கூப்பிடுற?”
“கண்டு பிடிச்சிட்டியே? நீ எப்ப டி இவ்வளவு அறிவாளியா மாறின?”
“யுவன்”
“சரி சரி, அவன் உன்னை கிண்டல் அடிக்கிறது உனக்கு பிடிக்கலையா? நான் வேணும்னா என் அம்முவை கிண்டல் அடிக்காதேன்னு அவன் கிட்ட சொல்லிறவா?”
“சே சே வேண்டாம். அவன் அப்படி பேசுறது தான் எனக்கும் நல்லா இருக்கு”
“அப்புறம் என்ன? வா போகலாம்”, என்று சொல்லி எழுந்து கொண்டான். அவளும் அவனுடன் நடந்தாள். அப்போது ஒரு இடத்தில் அவள் கீழே விழப் பார்க்க அவளை பிடித்துக் கொண்டான் யுவன்.இந்த காட்சியைக் கண்ட ரேவதிக்கு எரிச்சலாக வந்தது.,
அவனுடைய நண்பர்கள் அனைவரும் கூடியிருந்த இடத்துக்கு அவளை அழைத்துச் வந்ததும் “குட்டி பாப்பாவை கூட்டிட்டு வந்துட்டியா? என்ன டா இவ்வளவு நேரம் சரி போரா இருந்துச்சுன்னு நினைச்சேன். இனி ஜாலியா இருக்கும்”, என்று சொல்லி சிரித்தான் வருண். அவனைக் கண்டு போலியாக முறைத்தாள் யுக்தா.
“இங்க பாரு டா இந்த குழந்தை என்னை முறைக்குது. ஐயோ எனக்கு பயமா இருக்கே”, என்று அவன் அதற்கும் கேலி செய்ய யுக்தா முகத்தில் புன்னகை உறைந்தே இருந்தது. அதைக் கண்டு யுவனுக்கு நிம்மதியாக இருந்தது. கூடவே அவன் கண்கள் ரேவதியையும் புதிதாக அளவிட்டது. ரேவதி யுக்தாவை தான் வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளிடம் உள்ள கள்ளத் தன்மை அவனுக்கு புரியவும் செய்தது. அவளிடம் பேச தனிமைக்காக காத்திருந்தான். அந்த தனிமையை ரேவதியே ஏற்படுத்திக் கொடுத்தாள்.
அன்று இரவு அவன் வெளியே உலாவிக் கொண்டிருப்பதைக் கண்டு யுக்தாவை கழட்டி விட்டு வெளியே வந்தாள் ரேவதி.
அவன் அருகே வந்தவள் “இந்நேரம் வாக்கிங் போக நல்லா இருக்குல்ல யுவன்? இந்த யுக்தாவை கூப்பிட்டா குளிருதுன்னு சொல்லிட்டு வர மாட்டேன்னு சொல்லிட்டா”, என்றாள்.
“நான் இதை உன் கிட்ட கேக்கவே இல்லையே?”, என்று பல்ப் கொடுத்தான் யுவன்.
அதில் முகம் சுருங்கிப் போன ரேவதி சிறிது நேரத்தில் சமாளித்துக் கொண்டு “எப்பா உன் கிட்ட எப்பவாது தனியா பேச முடியுதா? இப்ப தான் நேரம் கிடைச்சிருக்கு”, என்றாள்.
“நானே உன் கிட்ட பேசணும்னு நினைச்சேன்”
“நிஜமாவா? நீயும் அப்படி நினைச்சியா? என்ன யுவன்?”, என்று சந்தோஷமாக கேட்டாள்.
“உன் மனசுல நீ என்ன நினைச்சிட்டு இருக்க?”
“என்ன ஆச்சு யுவன்? எனக்கு புரியலை”
“உனக்கா புரியாது? உன் மனசுல வேற ஏதோ ஓடுதுன்னு எனக்கு தோணுது ரேவதி. அது என்னன்னு நீயா சொல்லிட்டா இன்னைக்கே அதுக்கு முற்றுப் புள்ளி வச்சிறலாம்”
“கண்டு பிடிச்சிட்டியா? எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் யுவன்”
“அப்படியா?”
“ஆமா, நான் உன்னை ரொம்ப விரும்புறேன். உன்னை முதல் தடவை பாத்ததுல இருந்து நீ தான் என் மனசுல இருக்க”
“ஆனா என் மனசுல அப்படி ஒரு எண்ணம் இல்லை ரேவதி”
“யுவன்”
“நான் நீஜமா தான் சொல்றேன். நீ யுக்தா கிட்ட பேசின, அதனால தான் நான் உன்னை பிரண்டா ஏத்துகிட்டேன். மத்த படி என் மனசுல வேற எந்த எண்ணமும் இல்லை”
“யுக்தா யுக்தா…. அவளைத் தவிர உனக்கு வேற யாரையும் கண்ணுக்கு தெரியாதா? எப்ப பாத்தாலும் அவ பின்னாடியே திரியுற? என்னை விட அவ கொஞ்சம் ஆழகு தான். ஆனா நம்ம கிளாஸ்ல மத்த எல்லாத்தையும் விட நான் தானே அழகு? அது ஏன் உனக்கு புரிய மாட்டிக்கு?”
“தப்பா பேசாத ரேவதி. அழகுக்கு உன் அகராதில வேற அர்த்தம். ஏன் மனசுல வேற அர்த்தம். சரி இப்ப யுக்தாவை எதுக்கு இழுக்குற?”
“நீ என்னை ஏத்துக்கிடாததுக்கு அவ தானே காரணம்? நீ அவளை விரும்புற? அதான் என் காதல் உனக்கு புரியலை. பாக்க அம்மாஞ்சி மாதிரி இருந்துகிட்டு அவ உன்னை வளைச்சு போட்டுட்டா”
“நீ இப்படி எல்லாம் பேசுவியா? உன் குணம் இப்ப தான் எனக்கு புரியுது. உன் மேல நான் வச்சிருந்த நட்பை பத்தியே உனக்கு புரியலை. உனக்கு எங்க எனக்கும் யுக்தாவுக்கும் இடைல இருக்குற நட்பு புரியும்? இனி என் கூட பேச நினைக்காத ரேவதி. இனி நீ யாரோ நான் யாரோ? உன்னோட சகவாசம் என் யுக்தாவுக்கும் நல்லது இல்லை. இனி அவ கிட்ட ஒதுங்கி இரு”
“உன் கிட்ட பேச தான் நான் அவ கிட்டயே பேசினேன். இனி அவ கிட்ட நான் எதுக்கு பேசாப் போறேன்? எங்க போனாலும் அவ உன் கையைப் பிடிச்சிட்டே சுத்துறா? தனிமை கிடைச்சா உன் தோள்ல சாஞ்சிக்கிறா? இதுல என் யுக்தான்னு இப்ப கூட நீ சொல்ற? கேட்டா பிரண்ட்ஷிப்பாம். ரெண்டு பேரும் கூட்டுக் கலவானிங்க தான்”
“இது தான் உனக்கு லிமிட் ரேவதி. இதுக்கு மேல ஏதாவது பேசின, என் கை தான் பேசும். நாங்க எப்படி இருந்தா உனக்கு என்ன? இனி என்னைப் பத்தியோ யுக்தாவைப் பத்தியோ பேசின அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்”, என்று சொன்ன யுவன் அவளை முறைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
கோபமாக அறைக்குள் வந்தாள் ரேவதி. அங்கே யுக்தாவைத் தவிர மற்ற நான்கு பெண்களும் உறங்கி இருந்தார்கள்.
யுக்தாவைப் பார்த்து ரேவதிக்கு எரிச்சலாக வந்தது. “தூங்கலாமா ரேவதி?”, என்று கேட்டாள் யுக்தா.
“நீ தூக்கம் வந்தா தூங்க வேண்டியது தானே?”, என்று எரிந்து விழுந்தாள்.
“இல்லை பீரியட்ஸ் வரப் போகுது போல? வயிறு ரொம்ப வலிச்சது. அதான் முழிச்சிருந்தேன். உன்னையும் வேற காணுமாம். அதான்…. உன் கிட்ட ஏதாவது டேப்லெட் இருக்கா?”
“இருக்கு இருக்கு தரேன்”, என்று சொன்ன ரேவதி வயிறு வலி மாத்திரையுடன் இரண்டு தூக்க மாத்திரையையும் கொடுத்தாள். “நாளைக்கு எப்படி நீ எங்க கூட சுத்திப் பாக்க வறேன்னு பாக்குறேன்”, என்று எண்ணிக் கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டாள்.
ஒரு மாத்திரை மட்டும் கீழே விழுந்து விட அதை தேடிப் பார்த்து கிடைக்காததால் மற்ற இரண்டையும் போட்டுக் கொண்டு படுத்தாள் யுக்தா. அடுத்த நாள் காலை அனைவரும் எழுந்து குளித்துக் கிளம்ப யுக்தா மட்டும் தூங்கிக் கொண்டிருந்தாள்.
“ரேவதி என்ன உன் ஃபிரண்ட் மட்டும் இன்னும் தூங்குறா? ஒன்பது மணிக்கு நாம வெளிய கிளம்பனும்ல?”, என்று கேட்டாள் கோகிலா.
“அவ கடைசியா எழுந்து கிளம்புவா. நீங்க போங்க. நான் அவளைக் கூட்டிட்டு வரேன்”, என்று சொன்ன ரேவதி கடைசியாக கிளம்பி வெளியே வந்தாள். அந்த அறையை வெளிப் பக்கமாக பூட்டி விட்டு மற்றவர்களுடன் கலந்து கொண்டாள்.
இங்கே தூக்கம் கலைந்த யுக்தாவுக்கு மற்ற யாரையும் காண வில்லை என்றதும் பதட்டம் வந்தது. ஒரு வேளை வெளியே இருப்பார்களா என்று எண்ணி கதவைத் திறக்க நினைக்க கதவும் திறக்க வில்லை. வெகு நாட்கள் மறைந்து இருந்த பயம் தலை தூக்கியது. கதவை தட்டு தட்டு என்று தட்டினாலும் யாரும் திறக்க வில்லை என்றதும் அழ ஆரம்பித்தாள்.
காலை உணவு உண்ணும் போது தான் யுவன் அவளைத் தேடினான். ரேவதியிடம் கேட்க அவனுக்கு மனதில்லை என்றதும் என்ன செய்ய என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
வேறு ஒரு பெண்ணிடம் யுக்தா எங்க என்று கேட்டான். “நான் அந்த ரூம் இல்லை யுவன். யுக்தா எப்பவும் ரேவதி கூட தானே இருப்பா. அவ கிட்ட கேளு”, என்று சொல்லி விட்டாள் அந்த பெண்.
அவளிடம் கேட்க மனதில்லாமல் நேராக யுக்தா தங்கி இருந்த அறைக்கு தான் சென்றான். அங்கே இருந்த எல்லா அறையிலும் வெளிப் பக்கமாக பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. “எங்க போனா?”, என்று குழப்பமாக இருந்தது அவனுக்கு. மீண்டும் ரேவதி அருகில் வந்தவன் “யுக்தா எங்க?”, என்று அடி குரலில் கேட்டான்.
“உன் ஆளை எங்கன்னு என் கிட்ட கேட்டா எனக்கு எப்படி தெரியும்?”, என்று நக்கலாக சொன்னாள் ரேவதி,.
அவளைக் கன்னம் கன்னமாக அறையும் ஆவல் வந்தாலும் அதை அடக்கியவன் “உன் முகரையே சொல்லுது, அவ இருக்குற இடம் உனக்கு தெரியும்னு. ஒழுங்கு மரியாதையா சொல்லு. இல்லைனான நான் மேடம் கிட்ட சொல்லி போலீஷ்ல சொல்ல வேண்டியது இருக்கும். அதுக்கு நீ தான் காரணம்னு தெரிஞ்சது, கம்பி தான் எண்ணனும்”, என்று சொன்னதும் பயந்து போனாள்.
“அவ ரூம்ல தான் இருக்கா”
“ரூம்லயா? அங்க பூட்டுத் தொங்குச்சே”, என்றவன் ஒரு நொடி யோசித்து விட்டு “சீ நீயெல்லாம் ஒரு பொண்ணா? சாவியைக் கொடு டி”, என்று அடி குரலில் சீறினான்.
சாவியை எடுத்து அவனிடம் நீட்ட “இன்னொரு தடவை என் கைல சிக்கிறாத. செத்துருவ”, என்று சொன்னவன் வேகமாக அந்த அறைக்கு ஓடினான்.
அவசர அவசரமாக அந்த அறையின் கதவை திறந்ததும் அவன் கண்கள் அந்த அறையை அலசியது. கட்டிலுக்கும் சுவருக்கும் இடையே இருந்த ஒரு மூலையில் உடலைக் குறுக்கி கண்களை மூடி அமர்ந்திருந்தாள் யுக்தா.
“அம்மு”, என்று அவன் அழைத்தது தான் தாமதம் “யுவன்”, என்று கதறிய படி ஓடி வந்தவள் அவன் மார்பில் சாய்ந்து ஏங்கி ஏங்கி அழுதாள்.