அவள் செய்கையில் அவனும் உற்சாகமானான். தன்னுடைய மார்பில் இருந்து அவனை விலக்கி அவளுடைய கன்னத்தில் தன்னுடைய முதல் முத்திரையை பதித்தான். அவள் கூச்சத்துடன் அவனிடம் இருந்து விலக நினைக்க அவள் செய்கையை தடுத்தவன் இறுக்கி அணைத்துக் கொண்டான். முதல் முறையாக அவன் கையணைப்பிலே கண்ணயர்ந்தாள் யுக்தா. அவனுக்குள்ளும் சிறிது தயக்கம் விடை பெற்றுச் சென்றிருந்தது.
அவர்கள் லண்டன் கிளம்பும் நாளும் வந்த்து. யுக்தா இங்கே இருப்பாள், அவளை டார்ச்சல் செய்து இங்கே இருந்து ஓட விடலாம் என்று சுந்தரி எதிர்பார்க்க யுக்தாவும் அவனுடன் கிளம்பவும் பக்கென்று இருந்தது.
“அவளையும் எதுக்கு டா கூட்டிட்டு சுத்துற?”, என்று மகனிடம் கேட்டாள்.
“பின்ன உன்னை நம்பியா அவளை விட்டுட்டு போக முடியும்?”, என்று பதில் கொடுத்தான் யுவன்.
“அவ்வளவு கொடுமைக்காரியா டா நான்?”
“இல்லையா பின்னே?”, என்று அவன் அதற்கும் பதில் கொடுக்க “போனா மட்டும் வாழ்ந்து கிழிச்சிருவீங்க? பாரின்லே வாழ வேண்டிய வாழ்க்கையை விட்டுட்டு இப்படி அஞ்சு நாள் வேலை, பத்து நாள் வேலைன்னு போறியே? அதுவும் இவளை வேற எழுத்துட்டு போற?”, என்று திட்டி விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“அவ கிடக்கா, அவளை விடு யுவன். எல்லாம் எடுத்து வச்சிட்டியா? யுக்தா நீயும் எல்லாம் எடுத்து வச்சிடியா டா?”, என்று ஈஸ்வரன் கேட்டதும் பேச்சு வேறு பக்கம் சென்றது.
பிளைட்டில் ஏறி அமர்ந்ததும் சிறிது நேரம் கழித்து அவள் தூக்கத்தில் சரிய தானாகவே அவளை இழுத்து தன் மேல் சாய்த்துக் கொண்டான் யுவன். அதை உணர்ந்த அவளும் அதன் பிறகு அவனை விட்டு விலகவே இல்லை.
அங்கே சென்ற இரண்டு நாட்கள் இருவருக்கும் வெளியே சுற்றுவதிலே கழிந்தது. யுக்தா படபிடிப்புக்கு இங்கு வந்திருந்தாலும் யுவனுடன் சந்தோஷமாக இருந்தாள். அவள் சந்தோஷம் அவனுக்கும் பரவியது.
அதன் பின் கிட்டத்தட்ட ஒரு வாரம் அவனுக்கு வேலையிலே கழிந்தது. ஆனால் மாலை ஐந்து மணியில் இருந்து இரவு ஏழு மணி வரை தினமும் அவளுடன் நேரம் செலவிடுவான். அதன் பின் இரவு உணவை முடித்து விட்டு அறைக்குள் வந்து படுத்து விடுவார்கள்.
இங்கு வந்த முதல் நாள் ஊரில் படுத்திருப்பது போல தனித்தனியாக தான் படுத்திருந்தார்கள். தந்தை சொன்னது நினைவில் வர தானாகவே அவளை இழுத்து தன்னருகே படுக்க வைத்தான் யுவன். அவள் ஏதாவது மறுப்பாளோ என்று சிறிது பயம் இருக்க தான் செய்தது. ஆனால் அவளோ அவனுடன் நன்கு ஒட்டிக் கொண்டாள். அதன் பின் வந்த நாட்கள் இதுவே தொடர்ந்தது.
அவளை அணைத்துக் கொண்டு படுத்தாலும் அதிகமான வேலைப் பளு அதற்கு மேல் யுவனை யோசிக்க விட வில்லை.
அவனுடைய வேலை முடிந்ததும் ரிலாக்ஸாக இருந்தான் யுவன். யுக்தாவை வெளிய அழைத்துக் கொண்டு சென்றவன் அன்று முழுவதும் சுற்றினான். அவள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்தான்.
இருவரும் கை பிடித்த படி ஊர் சுற்றிய போது அன்று இருவரும் மனதால் இன்னும் அதிகமாக நெருங்கி இருந்தார்கள். அதனால் அன்று அறைக்குள் வந்தவர்களுக்கு தடுமாற்றமாக இருந்தது. யுக்தாவின் மன நிலையையும் எதிர்பார்ப்பையும் அவளது கண்கள் அவனைக் காண முடியாமல் வெட்கத்தில் நிலம் நோக்குவதையும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
அதனால் அவளை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் தடுமாறிய யுக்தா “இன்னைக்கு இவனுக்கு என்ன ஆச்சு?”, என்று எண்ணிக் கொண்டு “யுவன் இதை சுஜிக்கு கொடுக்கலாமா? அவ தான் எனக்கு நிறைய கிஃப்ட் வாங்கிக் கொடுத்துருக்கா. நான் ஒண்ணுமே கொடுக்கலை”, என்று கேட்டாள்.
அவனிடம் இருந்து சத்தம் வராததால் அவனை பார்த்தாள். அவன் கண்கள் தாபத்தை பிரதிபலிக்க அவளுக்கு வார்த்தைகள் தொண்டையில் சிக்கியது. அவள் தடுமாறுவதையும் அவள் உடல் நடுங்குவதையும் கண்டவன் நிதானமாக அவளை நெருங்கினான். .
அவன் நெருங்கி வர வர அவள் பின்னே நகர்ந்த படி இருந்தாள். அவனை நிமிர்ந்து பார்க்க வெட்கமாக இருந்தது.
அவளை இன்னும் நெருங்கியவன் அடுத்த நொடி பட்டென அவளைச் சுவரில் சாய்த்து. அவள் முகத்தை வெகு நெருக்கத்தில் பார்த்தான். அவன் நெருக்கமும் அவன் தாபப் பார்வையும் அவளைத் தடுமாறச் செய்ய அவள் கண்கள் தன்னால் மூடிக் கொண்டது.
அவள் இசைவை உணர்ந்தவன் அடுத்த நொடி அவள் மேல் அழுந்தச் சாய்ந்து அவளுடைய இதழ்களை முதல் முறையாக கவ்விக் கொண்டான். அவளிடம் இருந்து எந்த மறுப்பும் வராததால் அவனுக்கு உற்சாகமாகவும் இருந்தது கூடவே அவள் மனதும் அவனுக்கு தெளிவாக புரிந்தது.
அதனால் அவனுடைய கைகள் அவள் மேனியில் எந்த தயக்கமும் இல்லாமல் மெதுவாக தன்னுடைய பயணத்தை துவங்கியது. சிறிது நேரத்தில் அந்த பயணம் தாறுமாறாக மாறிப் போனது.
அவனுடைய கண் பார்வை படக் கூட தயங்கிய இடங்களில் எல்லாம் அவன் கரங்கள் ஊர்வலம் போக அவன் கரங்களை வெட்கத்துடன் தடுக்க முயன்றவளுக்கு பெரிய அளவில் தோல்வி தான் கிடைத்தது.
தேகம் குழைந்து கால்கள் துவண்டு எல்லையில்லா மயக்கத்தில் அவன் கை அணைப்பில் நின்றிருந்தாள் யுக்தா. அவன் செய்கையை தடுக்க முடியாததால் அந்த வேலையை விட்டுவிட்டு அவள் கரங்கள் அவன் முதுகை வளைத்துக் கொண்டது.
அவள் நெருக்கத்தில் அவன் முத்தத்தின் வேகம் கூட, அவள் மூச்சுக் காற்றுக்காக தவிக்க ஆரம்பித்தாள். இவன் இப்படி எல்லாம் செய்வானா என்று உள்ளுக்குள் ஒரு அதிர்ச்சியும் இனி தங்கள் வாழ்க்கை மாறி விடும் என்ற சந்தோசமும் அவளுக்கும் எழுந்தது. கூடவே இப்போது தான் பெண்ணாக பிறந்ததின் பலனை அடைந்தது போலவும் ஒரு உணர்வு. இந்த உணர்வை யுவனைத் தவிர வேறு யாருடனும் பகிர்ந்து கொண்டிருக்க முடியாது என்று இந்த நிமிடம் புரிந்தது. அவன் தன்னுடைய மனதில் எந்த அளவு நிலை பெற்றிருக்கிறான் என்றும் அந்த நிமிடம் புரிந்து கொண்டாள்.
அவள் தன்னுடைய தயக்கம் துறக்க, அவனோ தன்னை மறந்து அவளுக்குள் மூழ்கியிருந்தான். சுற்றுப்புறம் அனைத்தும் மறந்து அவனது உணர்வுகள் அவனை வழி நடத்தும் நிலையில் இருந்தான்.
இருவருக்கும் மூச்சு வாங்க ஆரம்பித்ததும் அவளிடம் இருந்து விலகி அவளை பார்த்தான். கண்களை மூடி இதழ்கள் சிவந்து ஒரு வித நடுக்கத்தில் நின்றிருந்தாள். அவளை இறுக்கி அணைத்தவன் அவளுடைய கழுத்தடியில் தன்னுடைய முகத்தை புதைத்துக் கொண்டான். அவன் கைகள் பயணித்த இடங்களில் அவன் இதழ்கள் ஊர்வலம் போக ஆரம்பித்ததும் யுக்தா வெகுவாக துவண்டு போனாள். அவன் ஏற்படுத்தும் உணர்வுகளை அவ்வளவு எளிதாக அவளால் கடந்து வர முடியவில்லை.
“யுவன்”, என்று உணர்ச்சி வேகத்தில் அவள் உதடுகள் முணுமுணுக்க அந்த உதடுகளில் ஒரு ஆழ்ந்த முத்தம் வைத்தவன் அடுத்த நொடி அவளை தன்னுடைய கைகளில் அள்ளிக் கொண்டு கட்டிலை அடைந்தான்.
அவள் சம்மதத்தைக் கேட்க வேண்டிய அவசியமே இல்லை என்பது போல அவள் கரங்கள் அவனுடைய கழுத்தில் கோர்த்துக் கொண்டன.
அவள் மனது தெளிவாக அவனுக்கு புரிய அவளைக் கட்டிலில் விட்டவன் அவள் மேல் படர்ந்து அவள் கண்களைப் பார்த்து “ஐ லவ் யு”, என்றான்.
அவனை வியப்பாக பார்த்தவள் “இதைச் சொல்ல உனக்கு இவ்வளவு நாளா டா? எங்க கடைசி வரை சொல்லவே மாட்டேயோன்னு நினைச்சேன்?”, என்றாள்.
அவள் கேள்வியில் அதிர்ச்சி அடைந்தவன் “நீயும் என்னை விரும்புறியா டி?”, என்று கேட்டான்.
“அது தான் லவ் அப்படின்னு எல்லாம் யோசிக்கலை. ஆனா நீ எனக்கு வேணும்னு தோணுச்சு. உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க மனசில்லை. அதனால தான் நம்ம கல்யாணம் நடந்தப்ப எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு”
“நான் எங்க வருத்தமாவா இருந்தேன்? நீ என்ன யோசிக்கிறியோன்னு குழப்பத்துல தான் இருந்தேன். இதுல அத்தை வேற உனக்கு வேற பொண்ணு பாக்குறேன்னு வெறுபேத்திட்டு இருந்தாங்க. அவங்க கிட்டயே சொல்லிட்டேன் உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்னு”
“நான் தான் தப்பா ரைட்டான்னு ஒத்தையா ரெட்டையா போட்டுட்டேனா?”
“உன் மேல எந்த தப்பும் இல்லை யுவன். நீ எனக்கு உண்மையான பிரண்டா தான் இருந்த. இப்ப வரைக்கும் இருக்குற. ஆனா நான் தான் உனக்கு உண்மையா இல்லை”, என்று கவலையாக சொன்னாள்.
“அப்படி எல்லாம் இல்லை அம்மு. ஒரு வேளை எனக்குள்ளயும் ஏதாவது பீலிங்க்ஸ் இருந்துருக்கலாம். இப்ப நான் ஐ லவ் யு சொன்னது கூட முழு மனசா சொன்னேனான்னு தெரியலை. ஆனா அந்த வார்த்தையை சொல்லாம நம்ம வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ண மனசில்லை. அதான் சொன்னேன். ஆனா நம்ம உறவு சொல்லி தெரியணும்னு இல்லை டி. என்னால உன்னை எப்பவும் கஷ்டப் படுத்த முடியாது. உன்னை என் கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்கணும்னு தான் எப்பவும் நினைப்பேன். அதை நீ நட்புன்னு எடுத்தாலும் சரி காதல்னு எடுத்தாலும் சரி. சரி பழசை விடு. இதுக்கு மேல மத்த இடத்துல மட்டும் தான் நீ எனக்கு பிரண்டு. நம்ம ரூம்ல நீ என்னோட செல்ல பொண்டாட்டி மட்டும் தான்”, என்றவன் அவள் முகம் நோக்கிக் குனிந்தான்.
அவளும் அவனை வாகாக அணைத்துக் கொள்ள அவனது உணர்வுகள் கரை புரண்டு ஓடியது. அடுத்த நாள் காலை இருவருக்கும் அழகாக விடிந்தது. இன்னும் இரண்டு நாளில் இந்தியா திரும்ப திட்டமிட்டவன் மேலும் ஒரு வார காலத்துக்கு அங்கேயே இருக்க முடிவு செய்தான். ஊரில் உள்ள அனைவரும் அவனுக்கு இங்கே வேலை இருக்கிறது என்று நினைக்க இவனோ மனைவியுடன் திகட்ட திகட்ட தேனிலவைக் கொண்டாடினான்.