“வந்தா வச்சிருக்குற பதிவியை மறந்து அங்க சண்டைக்கு நிப்பானுங்க. அதனால அவங்களுக்கு மரியாதை இல்லாம போகும்னு அவங்களை வர வேண்டாம்னு சொல்லிட்டேன் அம்மா”
“அதுவும் நல்லதுக்கு தான். ரெண்டு பேருக்கும் அவ்வளவு கோபம் வருது”
“உனக்கு மட்டும் என்ன கம்மியாவா வருது? உன் குணம் தானே உன் பேரனுங்களுக்கும் இருக்கும் ஆச்சி”, என்ற படி தந்தை அருகில் வந்து அமர்ந்தாள் இளவரசி.
“சரியா சொன்ன டா”, என்று மகளைக் கண்டு புன்னகைத்தார் சிதம்பரம்.
பார்வதியும் பேத்தியை வாஞ்சையாக பார்த்தார். அதே நேரம் அந்த தாலுகா ஆபீஸில் அமர்ந்து ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் இன்பா.
அப்போது “ஐயா”, என்ற பியூனின் குரலில் திரும்பி பார்த்தான்.
“என்ன மணிண்ணே? யாராவது வந்துருக்காங்களா?”
“ஆமாங்க ஐயா, ஒரு பாட்டி முதியோர் பென்ஷன் கேட்டு வந்துருக்கு”
“ரங்கநாயகி அம்மாவா?”
“ஆமாங்க ஐயா”
“சரி உள்ள வரச் சொல்லுங்க”, என்று சொல்லி சேரில் நேராக அமர்ந்தான்.
அந்த பாட்டி உள்ளே வந்ததும் “உக்காருங்க பாட்டி”, என்றான்.
“பரவால்ல தம்பி, இந்த மாசமாவது பணம் கிடைக்குமாயா?”
“கண்டிப்பா கிடைக்கும் பாட்டி. உங்க பேர்ல ஆர்டர் வந்துருச்சு. நீங்க திங்கள் கிழமை நேரா பேங்க்கு வந்துருங்க. அங்க பணத்தை வாங்கிக்கலாம். வரப்ப ஆதார் கார்ட் போட்டோ எல்லாம் கொண்டு வாங்க சரியா?”
“சரிப்பா, ரொம்ப சந்தோஷம். நேரா பேங்க்கு வந்துறேன்”, என்று சொல்லி விட்டு பாட்டி செல்ல பியுனைப் பார்த்த இன்பன் “பாட்டியைப் பாக்க ரொம்ப பாவமா இருக்கு. அது கிட்ட உங்க வேலையைக் காட்டாதீங்க”, என்றான்.,
“சே சே, நான் இப்ப யார் கிட்டயும் துட்டு வாங்குறது இல்லைங்க ஐயா”, என்றான் மணி.
“யாரு நீங்களாணே? நம்பிட்டேன். அதான் பஞ்சாயத்து ஆஃபிஸ்ல உங்க பேர்ல தான் புகார் போயிருதே. இனி கவனமா இருங்க”, என்று சொல்லும் போதே “மச்சான்”, என்ற குரல் கேட்டது.
வாசலில் கதிர் தான் நின்றிருந்தான். அவனைக் கண்ட இன்பா “வா மாப்பிள்ளை, நேரம் ஆச்சா?”, என்று கேட்டான்.
மணியை முறைத்துக் கொண்டே உள்ளே வந்தான் கதிர். அவனைக் கண்டு அதிர்ந்த மணி “நிஜமாவே நான் இப்ப எல்லாம் யார்க் கிட்டயும் பணம் வாங்குறது இல்லை ஐயா”, என்றான்.
“பொய், ஜாதி சான்றிதழ் பத்தி கேக்க வந்த கனகு கிட்ட அம்பது ரூபாய் வாங்கிருக்கீங்க”, என்றான் கதிர்.
“ஐயையோ அவன் தான் டீ செலவுக்குன்னு வச்சிக்கோங்கன்னு கொடுத்தான்”
“அப்படியா? இது தப்பாச்சே. நீங்க என்ன பண்ணுறீங்க? நாளைக்கு காலைல பஞ்சாயத்து ஆஃபிஸ்க்கு வந்து அந்த கனகு மேல ஒரு புகார் கொடுங்க. நான் பாத்துக்குறேன்”, என்று சொல்ல அரை மனதாக தலையாட்டி விட்டு விட்டால் போதுமென வெளியே சென்றான் மணி.
“இந்த ஒரு தடவை அவனை விட்டுரு டா மாப்பிள்ளை”, என்றான் இன்பா.
“பாக்கலாம் பாக்கலாம். சரி உன் வேலை முடிஞ்சிருச்சா? வீட்டுக்கு போவோமா?”
“போகலாம் கதிர், வேலை அவ்வளவு தான். ஆமா ஏலம் யார் எடுத்தாங்களாம்? நாமளும் போயிருந்தா சும்மா கெத்தா இருந்துருக்கும். இந்த அப்பா தான் சோதப்பிட்டார்”, என்ற படியே தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான்.
“நாம போயிருந்தா சண்டை வந்துரும்னு தான் மாமா வர வேண்டாம்னு சொன்னாங்க. நாம நினைச்ச மாதிரியே அந்த துரை வம்பிழுத்துருக்கான். ஊர்க்காரங்களே அடக்கிட்டாங்க”
“எப்படியோ அவன் அடங்கினா சரி. சரி வா கிளம்பலாம். பாமா கொடுக்குற காப்பிக்கு நாக்கு ஏங்குது”, என்ற படி அந்த தனி அறையை பூட்டி சாவியை பாக்கெட்டில் போட்டு விட்டு கதிருடன் நடந்தான்.
“அத்தையை பேர் சொல்லிக் கூப்பிடாதே டா”, என்று சொன்ன கதிர் வண்டியை எடுக்க கதிரின் பின்னே ஏறி அமர்ந்தான் இன்பா.
வண்டி வீட்டை நோக்கி பறந்தது. “பாமா, ரெண்டு பெரும் வந்துட்டாங்க பார். காபியை சூடு பண்ணு”, என்று சொன்னாள் பார்வதி.
“பாட்டின்னா பாட்டி தான்”, என்ற படி அவள் அருகில் சென்று அமர்ந்தான் இன்பா. பார்வதி அவன் கன்னத்தை ஆசையோடு வருட கதிரும் பாட்டிக்கு அந்த பக்கம் அமர்ந்து “போ ஆச்சி, அவனை தான் கொஞ்சுற, என்னைக் கண்டுக்க மாட்டிக்க? உனக்கு எப்பவும் உன் மகன் பிள்ளை தான் உசத்தி”, என்று வம்பிழுத்தான். இருவரையும் கண்டு விட்டு தலையில் அடித்த படி அமர்ந்திருந்தாள் இளவரசி.
“உன்னைக் கண்டுக்காம இருப்பேனா ராசா? அவன் மகன் பிள்ளை. நீ மக பிள்ளை. எனக்கு ரெண்டு பேரும் ஒண்ணு தான். என்னோட சிங்கக் குட்டீங்க தான், நீங்க ரெண்டு பேரும்”, என்று சொன்னாள் பார்வதி.
“சரி சிங்கம் எங்க இருக்கு?”, என்று இன்பா கேட்க “தெளிவா கேளு மச்சான். பெரிய சிங்கம் தாத்தா. சின்ன சிங்கம் மாமா. நீ எந்த சிங்கத்தைக் கேக்குற?”, என்று கேட்டான் கதிர்.
“உங்க தாத்தா வாக்கிங்க் போனார், இன்னும் வரலை. சிதம்பரம் இப்ப தான் உள்ள போனான். சரி ரெண்டு பேரும் முகம் கழுவிட்டு வாங்க”, என்று பார்வதி சொல்ல இருவரும் எழுந்து கொண்டார்கள்.
வந்ததில் இருந்து இருவரையும் வேடிக்கை பார்த்த படி அமர்ந்திருந்த இளவரசியை இப்போது தான் இருவரும் பார்த்தார்கள்.
“ஏய், புல்டவுசர் நீ இங்க தான் உக்காந்துருக்கியா? இவ்வளவு பெரிய உருவம் என் கண்ணுல தெரியலை பாரேன்”, என்று தங்கையை வம்பிழுத்தான் இன்பா.
கதிர் சிறு சிரிப்புடன் அங்கே நின்றாலும் அவன் இளவரசியைப் பார்க்கவே இல்லை. அந்த கடுப்பில் “அதெல்லாம் உன்னை மாதிரி சுண்டெலிக்கு தெரியாது மிஸ்டர் இன்பநாதன். அதுக்கு நீ இன்னும் வளரனும் டா அண்ணா”, என்று அவனை சீண்டினாள் இளவரசி.
“ஏய் என்னை அப்படிக் கூப்பிடாதே டி”, என்று சண்டைக்கு வந்தான் இன்பா.
“உன் பேர் அதேனே, சண்முகநாதன் பேரன், சிதம்பரநாதன் மகன் இன்பநாதன் தானே நீ. ஸ்டைலா இன்பான்னு வச்சிக்கிட்டாலும் உன் பேர் இன்பநாதன் தானே?”, என்று இளவரசி நக்கலாக கேட்க “அடிங்க”, என்று அவன் அவளை அடிக்க வர அங்கிருந்து ஓடியே போனாள். இந்த காட்சியை சிறு சிரிப்புடன் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த கதிர் தன்னுடைய அறைக்குச் சென்றான். இன்பாவுக்கும் அது தான் அறை. வீட்டில் பல அறைகள் இருந்தாலும் இருவரும் முன்பிருந்தே ஒரே அறையில் தங்கிக் கொண்டார்கள். அது அவர்களுக்கு பிடித்தும் இருந்தது.
தங்கையின் மண்டையில் ஒரு கொட்டு வைத்து விட்டு அவள் கேட்ட பெண்ட்ரைவை அவளிடம் கொடுத்து சமாதானம் செய்து விட்டு இன்பா அறைக்கு வரும் போது கதிர் முகம் கழுவி வேறு உடை மாற்றி இருந்தான். அதன் பின் இன்பாவும் முகம் கழுவி வர இருவருக்கும் சூடான டீயும் பஜ்ஜியும் கொடுத்தாள் பாமா.
சண்முகநாதனும் வாக்கிங் முடித்து விட்டு வந்து பேரன்களுடன் அமர்ந்து விட கதிர் மற்றும் இன்பா இருவரும் பாட்டி மற்றும் தாத்தாவை வம்பிழுத்தார்கள். வீடே அவர்களின் புன்னகையால் மலர்ந்தது. தன்னுடைய அறையில் அமர்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் இளவரசி. அவளுக்கும் அவர்களுடன் கலந்து கொள்ள ஆசை தான். ஆனால் தான் சென்றால் கதிர் இயல்பாக இருக்க மாட்டான் என்பதால் அறைக்குள்ளே அமர்ந்திருந்தாள்.ஆனாலும் வெளியே அவர்கள் அடிக்கும் லூட்டியில் அவள் உதடுகளும் மலர்ந்தே இருந்தது.
இங்கே இவ்வளவு சிரிப்பில் இவர்கள் வீடு நிறைந்திருக்க அந்நேரம் பாத்ரூம் சுவரில் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள் வினோதினி.