அவனுடைய சொத்தில் இருந்து வரும் லாபத்தை கதிரின் பெயரிலே சிதம்பரம் போட்டு விடுவார். அது அவனுக்கு தெரிந்தாலும் அதை கண்டு கொள்ளவே மாட்டான். மாமாவின் மீது அவனுக்கு பாசம் என்பதை விட பக்தியே உண்டு என்று சொல்லலாம். சிதம்பரம் அப்படி என்றால் பாமா அவனிடம் அன்பு காட்டுவதில் வேறு மாதிரி. அடுத்த தெருவில் இருக்கும் கதிருடைய வீட்டில் இப்போது யாரும் இல்லாமல் போனாலும் தினமும் விளக்கு போட்டு விட்டு வருவாள் பாமா. அது மட்டுமில்லாமல் எப்போதாவது இன்பாவுக்கு உணவு ஊட்டி விட்டால் கதிருக்கும் சேர்த்தே ஊட்டி விடுவாள். அவனுக்கு அம்மா இல்லாத குறை தெரியாமல் பார்த்துக் கொண்டாள் பாமா.
அத்தகைய அவர்களின் அன்புக்கு துரோகம் செய்யக் கூடாது என்பதற்காக தான் இளவரசியைக் கண்டாலே கதிர் விலகி ஓடுகிறான். ஆனால் மீண்டும் மீண்டும் அவனுடனே அவளை சேர்த்து வைக்கும் விதியை என்ன செய்ய?
ஆல மரத்தின் அடியில் கூடியிருந்த மக்கள் அனைவரும் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டிருக்க சிதம்பரமோ ஏதோ யோசனையில் இருந்தார். அவர் அருகே இன்னும் நான்கு பெரியவர்கள் அமர்ந்திருந்தார்கள்.
“பையனும், மருமகனும் வரலையா சிதம்பரம்? இந்த கூட்டத்துக்கு வி. ஏ. ஓவும் ஊர் பிரஸிடெண்ட்டும் இல்லாம இருந்தா எப்படி? (eurohoops.net) ”, என்று சிதம்பரத்திடம் கேட்டார் ஒரு பெரியவர்.
“அவனுங்களை வர வேண்டாம்னு நான் தான் சொல்லிட்டேன் பெரியப்பா. வந்தா கண்டிப்பா ஏதாவது ஏட்டிக்கு போட்டி நடக்கும். நம்ம ஊரோட நல்லதுக்காக கூடியிருக்கோம். எந்த பிரச்சனையும் வேண்டாமே”, என்றார் சிதம்பரம்.
அந்த ஊரில் உள்ள குளத்தை மீன் பிடிப்பதற்காக குத்தகைக்கு விடுவதற்காக தான் இந்த கூட்டம் கூடியிருந்தது. “எல்லாரும் அமைதியா இருந்தா எப்படி? ஏலத்தை ஆரம்பிக்கலாமா?”, என்று கேட்டார் சிதம்பரம்.
“இதுல ஆரம்பிக்க என்ன இருக்கு? வருஷம் வருஷம் நானும் என் மச்சினங்களும் தான் ஏலம் எடுத்துட்டு இருக்கோம். இப்பவும் நாங்க தான் எடுக்கப் போறோம். எங்களை எதுத்து யார் கேப்பா? சட்டுப் பூட்டுட்டுனு ஏலத் தொகையைச் சொன்னா நாங்க கட்டிட்டு போய்ட்டே இருப்போம்”, என்றான் துரை. அவனும் அந்த ஊரைச் சேர்ந்தவன் தான். அவனுடைய மச்சினன்களும் “ஆமா எங்களுக்கு தான்”, என்று குரல் கொடுத்தனர்.
“எல்லா வருஷம் மாதிரி இந்த வருஷம் செய்ய முடியாது துரை. அடுத்தவங்களுக்கும் வாய்ப்பு கொடுக்கணும்ல”, என்று தன்மையாக தான் சொன்னார் சிதம்பரம்.
“என்ன யா, ஊர்த் தலைவர் ஆயிட்டோம்னு மிதப்புல பேசுறியா? போன வருஷம் வரைக்கும் என் அப்பா தான் ஊர்த் தலைவர். அவர் இறந்ததுனால தான் நீ தலைவராகிருக்க. உடனே உன் பேச்சைக் நாங்க கேட்டுருனுமோ?”, என்று கேட்டான் துரை. வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு அவனைப் பார்த்தார் சிதம்பரம்.
“என்னப்பா மட்டு மரியாதை இல்லாம பேசிட்டு இருக்க? இது ஊர்த் தலைவர் மட்டும் எடுத்த முடிவு இல்லை. நாங்க எல்லாரும் சேர்ந்து பேசினது தான். இந்த தடவை எல்லாருக்கும் பொது ஏலம் தான். நாங்க முடிவு பண்ணிட்டோம். சிதம்பரமாவது உன் தப்பை வெளிய சொல்லாம மரியாதையா சொல்றார். ஆனா நாங்க கேள்வி கேட்டோம்னு வை, உன் முகத்தைக் கொண்டு போய் எங்க வச்சிக்குவியோ?”, என்று கேட்டார் ஒரு பெரியவர்.
“அவன் கிட்ட என்ன பேச்சு? ஏலம் கேக்குறவங்க கேளுங்க”, என்று மற்றொரு பெரியவர் சொல்ல துரை அமைதியாகி விட்டான். ஆனாலும் அவன் முகம் கோபத்தில் சிவந்து போனது. தந்தைக்கு அடுத்து அவனுக்கு தான் அந்த வாய்ப்பு வரும் என்று நினைத்தான். அது நடக்க வில்லை. அவனால் ஊர் பிரஸிடெண்ட்டும் ஆக முடியவில்லை என்று சிதம்பரம் குடும்பத்தின் மீது கோபமாக இருந்தான்.
ஏலம் ஆரம்பித்தது. துறையை எதிர்த்து மருது என்பவர் ஏலம் கேட்டார். அவர் ராணுவத்தில் இருந்து ரிட்டயர்ட் ஆனவர். அதனால் அவருக்கு ஊர் மத்தியில் மிகுந்த மதிப்பு உண்டு. அனைவரும் அவருக்கு தான் கிடைக்க வேண்டும் என்று ஆசைப் பட்டார்கள். ஆனால் துரையோ வேண்டும் என்றே ஏலத் தொகையை ஏத்தி விட்டுக் கொண்டே இருந்தான். அவனுக்கு எடுத்தே ஆக வேண்டும் என்று வெறி.
“போதும்பா துரை. குளத்தை குத்தகைக்கு விட்டா நீ ஊருக்கே விலை சொல்லுவ போல? அந்த அளவுக்கு எல்லாம் போக வேண்டாம். எப்பவும் அம்பதாயிரத்துக்கு விடுவோம். இந்த தடவி எழுபத்தாஞ்சாயிரம். அது மருதுக்கே கொடுக்குறோம்”, என்று சொன்னார் சிதம்பரம்.
இந்த முறை ஏலம் கை விட்டுப் போக துரை காட்டுக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தான். அவனை எல்லாம் கவனிக்காத சிதம்பரம் “அதான் ஏலம் முடிஞ்சிருச்சே. எல்லாரும் கலையலாம். மருது, ஏலத் தொகையை பஞ்சாயத்துல கட்டிருங்க. இந்த வருஷம் நீங்க மக்களுக்கு செய்யுறதை வச்சித் தான் அடுத்த வருஷமும் உங்களுக்கு கொடுக்கலாமா வேண்டாமான்னு நாங்க யோசிக்கணும்”, என்று சொல்லி விட்டுக் கிளம்பினார் சிதம்பரம்.
அவர் சென்றதும் “என்னங்கயா நடக்குது இங்க? இத்தனை வருஷம் எங்க அப்பாவை பாத்து பயந்த எல்லாரும் இப்ப அந்த ஆள் பக்கம் சாஞ்சிட்டீங்க? து, இதெல்லாம் ஒரு பொழைப்பு”, என்று கத்தினான் துரை.
”வார்த்தையை அளந்து பேசு துரை. உன் அப்பா இருந்த வரைக்கும் நியாயமா தான் இருந்தார். ஊருக்கு நிறைய நல்லது செஞ்சார். அதனால தான் குளத்தை உனக்கே விட்டோம். ஆனா நீ உங்க அப்பா இருந்த மாதிரி இல்லை. உன் மச்சினன்கள் கூட சேந்துட்டு நிறைய தப்பு பண்ணுற? எப்பவும் உனக்கு தான் குளம் ஏலம் வரும். ஆனா நீ மீனை வளத்து அசுலூருக்கு விலை அதிகம் வச்சி வித்து நீ லாபம் பாத்த. அது மட்டுமில்லாம நம்ம ஊர் ஆளுங்க ஒரு கிலோ மீன் பிடிக்க கூட அனுமதிக்க மாட்ட. அதனால தான் எல்லாரும் பேசி முடிவு பண்ணினோம்”, என்றார் ஒருவர்.
“சும்மா கதை விடாதீங்க. அந்த ஆள் ஊர்த் தலைவர். அவர் மகன் வி. ஏ. ஓ, அவரோட மருமகன் பிரஸிடெண்ட். எல்லா பதவியையும் அவங்க ஆக்ரமிச்சதுனால தானே எல்லாரும் பயப்படுறீங்க. நீங்க இப்படியே அவங்களுக்கு பயந்துட்டு இருந்தா அவனுங்க குடும்பம் நம்ம ஊரையே ஒண்ணும் இல்லாம பண்ணிரும்”, என்றான் துரை.
“அட நிறுத்துப்பா. ஊரை ஒண்ணும் இல்லாம பண்ணுறது யாருன்னு நாங்க இத்தனை நாள் பாக்காமலா இருந்தோம். உங்க அப்பா ஊர்த் தலைவரா இருக்கும் போது நீ கூட தான் பிரஸிடெண்ட்டா இருந்த. அப்ப ஊருக்கு என்ன நல்லது செஞ்ச? ஆனா அவங்க குடும்பம் எல்லா பொறுப்பையும் ஏத்து கிட்ட உடனே ஊருக்கு எவ்வளவு நல்லது செஞ்சிருக்காங்க தெரியுமா? கவர்ன்மெண்ட் கொடுக்குற நிதியை கணக்கு போட்டு அது அதுக்குன்னு செலவழிக்கிறாங்க. மாசம் ஒரு நாள் கூட்டம் போட்டு அந்த கதிர் தம்பி எல்லாருக்கும் கணக்கு சொல்லுது. ஊருக்கு ஒண்ணுன்னா முன்னாடி வந்து நிக்குறாங்க. யாருக்கு என்ன வேணும்னாலும் நேரடியா அவங்க கிட்ட சொன்னா போதும். உடனே கலெக்டர் வரைக்கும் பிரச்சனையைக் கொண்டு போய் சரி பண்ணுறாங்க. ஆனா நீ கவர்ன்மெண்ட் கொடுத்த பணத்தைக் கூட உன் வயித்துல தானே போட்ட? எத்தனை வருஷமா சவர் தண்ணியை குடிச்சீட்டு இருந்தோம்? அதையாவது மாத்துனியா? ஆனா இப்ப உன் குடும்பமும் சேந்து தானே ஆத்துத் தண்ணி குடிக்குது. அது யாரால?”, என்று கேட்டார் ஒருவர்.
“இவன் கிட்ட என்ன பேச்சு. வாங்க நாம போகலாம்”, என்று சொல்லி ஒருவர் எழ மற்றவர்களும் எழுந்து சென்று விட்டார்கள்.
அனைவரும் சென்றதும் துரை மற்றும் அவனது மச்சினன்கள் இருவரும் அங்கே அமர்ந்திருந்தார்கள். அவர்கள் மனதில் வஞ்சம் வந்தது. சிதம்பரம் குடும்பத்தை பழி வாங்க காத்திருந்தார்கள்.
வீட்டுக்கு சென்ற சிதம்பரம் கை கால் அலம்பி விட்டு அமரும் போது அவருக்கு சூடாக டீயைக் கொடுத்தாள் அவரது மனைவி பாமா.
அதை வாங்கிக் குடித்தவர் தனக்கு அருகில் அமர்ந்திருந்த தன்னுடைய அன்னை பார்வதியைப் பார்த்து “நீ டீ குடிச்சிட்டியா மா?”, என்று கேட்டார்.