அதே இடத்தில் சரிந்து அமர்ந்தாள் வினோதினி. நடந்த நிகழ்வுகளில் இருந்து அவளால் சட்டென்று வெளியே வர முடியவில்லை. நடந்தது ஒன்றும் சாதாரண நிகழ்வல்லவே. அவளுடைய உணர்வுகளுடன் கபடி ஆடி விட்டுச் சென்றிருந்தான் அவன். உதடுகள் எரிந்தது. விரலால் வருடிப் பார்த்தாள். அது மேலும் எரிச்சலைத் தான் தந்தது.
“இந்த விசயத்துக்கு பதிலடி அப்புறம் கொடுக்கலாம் வினோதினி. இப்ப நடக்க வேண்டியதைப் பாரு. ஆரம்பிச்ச வேலையை பாதியில விடக் கூடாது. இன்பா செஞ்சிட்டு போனதுக்கு பதிலடி எப்ப வேணா கொடுக்கலாம். ஆனா இப்ப ஆரம்பிச்ச வேலையை முடிக்கணும்”, என்று அவளது மனசாட்சி குரல் கொடுக்க எழுந்து கொண்டாள்.
கண்ணாடி முன்பு நின்று தன்னைப் பார்த்தாள். உதடு லேசாக வீங்கி இருந்தது. அதை தன் நாக்கால் வருட அவனுடைய எச்சில் அங்கே மீதம் இருப்பது போல ஒரு பிரம்மை ஏற்பட தலையை உதறிக் கொண்டாள். கண்களில் கண்ணீர் நிற்காமல் பெருக வீட்டின் பின் பக்கம் சென்றவள் தண்ணீரால் முகத்தைக் கழுவினாள். பின் முகத்தை துடைத்து விட்டு தன்னுடைய போனை எடுத்துக் கொண்டு இன்பா வீட்டுக்கு கிளம்பி விட்டாள்.
அவள் போகும் போது எதிரே வந்த கதிர் “எங்க போறீங்க?”, என்று சற்று கோபத்துடன் தான் கேட்டான்.
“உன்னால தான் டா நான் கண்ட பேச்செல்லாம் கேக்க வேண்டியது இருக்கு. அதுக்கும் மேல அவன் என்னை என்ன செஞ்சான் தெரியுமா?”, என்று மனதில் எண்ணிக் கொண்டு “அங்கிள் கிட்ட போட்டோ காட்ட போறேன்”, என்று திமிராகவே சொன்னாள்.
“எனக்கு கல்யாணம் பண்ணி வைன்னு நான் உன் கிட்ட கெஞ்சினேனா?”, என்று அவனும் ஏக வசனத்தில் பேசினான்.
“அடுத்து இவனா?”, என்று எண்ணிக் கொண்டு “மரியாதையா பேசுங்க கதிர்”, என்றாள்.
“உனக்கு என்ன மரியாதை? இன்பா விரும்புற பொண்ணா போயிட்ட. இல்லைன்னா உன்னை கொன்னு புதைச்சிருப்பேன். உன்னை யாரு தேவையில்லாத வேலையை பாக்கச் சொன்னா? என் நிம்மதியைக் குழி தொண்டி புதைக்க தான் இங்க வந்தியா?”, என்று அவன் கோபத்தில் உளற அவன் சொன்ன விஷயம் அவள் மூளையில் பதிந்தது.
அதைக் கேட்டு அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது வரை அவளுக்கு இருந்த வேகம் கூட அவன் சொன்னதைக் கேட்டு குறைந்திருந்தது.
“உங்களுக்கு கல்யாணம் பண்ண நினைச்சது தப்பா கதிர்?”, என்று தளர்ந்து போய்க் கேட்டாள்.
“அதை செய்ய நீ யார்? என் கூட பிறந்தவளா? என் சொந்தமா? எதுவும் இல்லை தானே? தங்க வீடு இல்லாம அடைக்கலமா எங்க வீட்ல தங்க வந்தவ தானே? இருந்தோமா, கொடுத்த சாப்பாடை தின்னோமா, வேலையைப் பாத்தோமான்னு போய்க் கிட்டே இருக்கணும். சும்மா எனக்கு பொண்ணு பாக்குறேன் மண்ணு பாக்குறேன்னு சொன்னா உன்னைக் கொன்னு போட்டுருவேன். இப்ப உள்ள போய் மாமா கிட்ட ஏதாவது சொல்லி சமாளி. அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகிட்டுன்னு சொல்லு, எவனையோ இழுத்துட்டு போய்ட்டான்னு சொல்லு”
“நான் ஏன் பொய் சொல்லணும்?”
“ஏன்னா என்னால எவளையும் காட்டிக்க முடியாது?”
“ஏன் உங்களுக்கு கல்யாணம் பண்ண தகுதியே இல்லையா?”
“ஏய்”
“இந்த மிரட்டல் எல்லாம் என் கிட்ட வேண்டாம். நான் போய் அங்கிள் கிட்ட சொல்ல தான் போறேன். அவர் முடிவு பண்ணட்டும். ஒரு பொண்ணு இருக்குதுன்னு சொல்றது என்னோட உரிமை. அது உங்களுக்கு பிடிக்கலைன்னா நீங்க அங்கிள் கிட்ட பேசுங்க. ஆம்பளையா லட்சணமா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லுங்க. அதை விட்டுட்டு திருட்டுத் தனமா என்னை மிரட்டுற வேலை எல்லாம் வேண்டாம்”, என்று அவனுக்கு கொம்பு சீவி விட்டு சென்றாள்.
அவள் முன் வாசலில் ஏறிச் செல்வதற்கு முன் கதிர் பின் வாசல் வழியாக வீட்டுக்குள் சென்று விட்டான். வினோதினி உள்ளே போனது கதிர் அவளை கொலை வெறியுடன் முறைத்த படி இருக்க இன்பாவோ அவளை நக்கலாக பார்த்த படி இருந்தான்.
“என்னமா போட்டோ இல்லையா?”, என்று கேட்டார் சிதம்பரம்.
“அது அங்கிள்…”, என்று இழுத்தவள் இன்பாவைப் பார்க்க அவன் அவளைக் கண்டு அதே நக்கல் சிரிப்பு சிரித்தான்.
“என்ன மா?”
“போட்டோவை ஊர்ல வச்சிட்டு வந்துட்டேன் போல அங்கிள்”, என்றாள். அதைக் கேட்டு இன்பா மற்றும் கதிர் இருவரும் நிம்மதி அடைந்தார்கள்.
“ஐயோ, பொண்ணைப் பாக்க முடியாதா?”, என்று சிதம்பரம் கேட்க “டெக்னாலஜி இருக்க எதுக்கு அங்கிள் கவலைப் படணும்? வாட்சப்ல போட்டோ இருக்கு”, என்று சொல்லி அவரை நெருங்க கதிர் இன்பா இருவரும் திகைத்து போனார்கள்.
இருவருக்கும் அவள் மேல் கொலைவெறியாக வந்தது. இளவரசியோ உள்ளுக்குள் செத்துக் கொண்டிருந்தாள். கதிர் அவளைப் பார்த்தான். அவளது கண்ணீர் முகம் அவனை அதிகம் பாதித்தது. சத்தம் இல்லாமல் அவள் அழும் அழுகை அவனுக்கானது என்று அவன் உயிர் துடித்தது.
“ஏதாவது செய், ஏதாவது செய்”, என்று அவன் மூளை கட்டளை இட தன்னுடைய நிலையை அவனே வெறுத்தான். இன்பாவோ வினோதினியை வெறுப்பின் உச்சத்தில் பார்த்தான். “இவளையா காதலித்தோம்?”, என்று எண்ணி அவனுக்கு வெறுப்பாக வந்தது. அவனுக்கு அவனுடைய தங்கை முக்கியம் அல்லவா? காதலை விட பாசமே அந்த இடத்தில் ஜெயித்தது.
பாமாவோ “இந்த பொண்ணு எதுக்கு இப்படி குட்டையைக் குழப்புது?”, என்று பார்த்தாள். சண்முகநாதன் திகைப்புடன் பார்வதியைப் பார்க்க பாட்டியோ நிதானமாக அவரைப் பார்த்து கண் சிமிட்டினார். அதைப் பார்த்து ஜெர்க் ஆகிப் போனார்.
“இங்கே ஒரு பேத்தி, பேரனின் வாழ்க்கை கேள்வி குறியா இருக்கு. இந்த நேரத்துல இந்த கிழவிக்கு லொல்லைப் பாத்தியா?”, என்று தான் அவருக்கு தோன்றியது.
“ஏன் டி கண்ணடிக்கிற வயசா இது?”, என்று மெதுவாக கேட்டார்.
“ஏன் கண்ணடிச்சா என்ன? நான் என்ன ஊரானையா பாத்து கண்ணடிச்சேன்? என் புருசனைப் பாத்து தானே கண் அடிச்சேன்”, என்று பார்வதியும் ரகசியம் பேசினார்.
“இங்க என்ன நடக்குதுன்னு தெரியுதா டி? வீடே கொந்தளிச்சிட்டு இருக்கு”
“எனக்கு கண்ணு நல்லா தெரியுது?’
“நம்ம பேத்தி பேரன் வாழ்க்கை டி. உனக்கு கவலை இல்லையா? பாதிக்கப் படப் போறது நம்ம இளவரசி டி”
“அது நம்ம மகனுக்கு தெரியாதா?”
“என்ன டி சொல்ற?”
“பொறுமையா இருங்க. எல்லாம் சிதம்பரம் பாத்துக்குவான். அவன் பொண்ணு மேல அவனுக்கு இல்லாத அக்கறையா நமக்கு?”
“அந்த பொண்ணு ஏன் டி இந்த வேலை பாக்குது? அவளுக்கு இது தேவையா?”
“அவ நம்ம குலதெய்வத்தோட அம்ஸம்ங்க. அவளாள நம்ம குடும்பம் வாழ மட்டும் தான் செய்யும். ஒரு நாளும் வீழாது”, என்று சொல்ல சண்முகநாதனுக்கு மண்டையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது.
சிதம்பரம் அருகில் சென்று தன்னுடைய போனைக் காண்பித்தாள் வினோதினி. போனில் இருந்த புகைப்படத்தைப் பார்த்ததும் அவர் திகைப்பாக அவளைப் பார்த்தார். இங்கே மற்ற அனைவருக்கும் ரத்த அழுத்தம் உயர்ந்தது.
அவரைப் பார்த்து சிரித்த வினோதினி “என்ன அங்கிள்? பொண்ணு அழகா இருக்கா தானே? உங்க கதிருக்கு பொருத்தமா இருப்பான்னு உங்களுக்கு தோனுதா? இல்லை இதை விட பெஸ்ட் சாய்ஸ் இருக்க முடியுமா? கதிர் நீங்க வளர்த்த பிள்ளை. அப்படின்னா அவருக்கு பெஸ்ட்டை நீங்க தானே கொடுக்கணும்? இதை விட பெஸ்ட் இருக்காது அங்கிள். நீங்க என்ன சொல்றீங்க?”, என்று கேட்டாள்.
“அதான் நீயே சொல்லிட்டியே மா? இது அவனுக்கு கடவுள் போட்ட முடிச்சு போல? எனக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. பொண்ணைப் பெத்தவங்க கிட்ட பேசிறலாம். அதுக்கு முன்னாடி….”, என்றவர் பார்வதியைப் பார்த்தார்.
“என்ன சிதம்பரம்?”
“பொண்ணு கதிருக்கு பொருத்தமா இருக்கா மா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உடனே பேசி முடிச்சிறலாம்”
“நீ சொன்னா சரியா தன் பா இருக்கும். அவங்க வீட்ல வினோதினி கிட்ட நம்பர் வாங்கி பேசு. நாளைக்கே போய் நேர்ல பாத்துட்டு வந்துருவோம்”
“இருக்கு அங்கிள், இதோ, இந்த நம்பர் தான். என் போன்ல இருந்தே பேசுங்க”, என்று சொல்லி அவள் போனைக் கொடுக்க “மாமா வேண்டாம். நீங்க யாருக்கும் பேச வேண்டாம்”, என்றான் கதிர்.
“ஆமா பா, கண்டவங்க எல்லாம் வந்து நம்ம கதிருக்கு பொண்ணு பாக்கணுமா என்ன? கொஞ்ச நாள்ல அவனுக்கு நல்ல பொண்ணு கிடைக்கும். இதை இப்படியே விட்டுருங்க. எனக்கு பிடிக்கலை”, என்றான் இன்பா.
“உன் அபிப்ராயாத்தை யாரும் கேக்கலை. இவ்வளவு நாளா உன் கிட்ட கல்யாணம் பண்ணுன்னு கெஞ்சிட்டோம். நீ வாயைத் திறந்தியா? இப்பவும் அதே மாதிரி வாயை மூடிட்டு இரு”, என்று சொன்ன சிதம்பரம் கதிரைப் பார்த்து “நீ என்ன சொன்ன கதிர்?”, என்று கேட்டார்.
மாமனை எதிர்த்து பேசுகிறோமே என்ற குற்ற உணர்வுடன் “எனக்கு அந்த பொண்ணு வேண்டாம் மாமா”, என்றான். அவன் அப்படிச் சொன்னதும் இளவரசி கண்களில் ஒரு உயிர் வந்தது. அவள் மெதுவாக வெளியே வந்து அன்னையின் அருகில் நின்று கொண்டாள்.