“சரி மண்டையை ஆட்ட வேண்டாம்னு சொல்லிறேன் பாட்டி”, என்று வினோதினி சொல்ல அடுத்து என்ன சொல்ல என்று தெரியாமல் திணறினான் கதிர். இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த பாமா, இன்பா, கதிர், இளவரசிக்கு பி. பி எகிறியது. சண்முகநாதன் கூட குழப்பத்தில் தான் இருந்தார். அங்கே நிதானமாக இருந்தது பார்வதி மற்றும் சிதம்பரம் மட்டுமே.
கதிர் ஏதோ சொல்ல வார “என்ன டா அந்த பிள்ளை கிட்ட பதிலுக்கு பதில் பேசிட்டு இருக்க? அவ தான் அந்த அளவுக்கு சொல்றால்ல? ஏமா வினோதினி அவங்க நம்பர் கொடு. நான் அவங்க வீட்ல பேசுறேன்”, என்று இடையில் புகுந்து பேசினார் சிதம்பரம்.
அவர் அப்படிச் சொன்னதும் யாரும் எதுவும் பேச வில்லை. கதிருக்கோ பயங்கர அதிர்ச்சி. இளவரசியோ கதிர் தனக்கு இல்லை என்று ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்து விட்டாள். அவளுடைய கண்ணீர் குரல் வேறு யாருக்கும் கேட்க வில்லை என்றாலும் சிதம்பரத்துக்கு நன்கு கேட்டது.
“இவ நல்லத்துக்கு இவளை இங்க கூட்டிட்டு வந்தா இவ என் குடும்பத்தையே சிதைச்சிருவா போல?”, என்று கோபத்துடன் எண்ணினான் இன்பா.
“கொஞ்சம் இருங்க அங்கிள். முதல்ல நான் போய் அவ போட்டோவை எடுத்துட்டு வரேன். பாருங்க. அப்புறம் அவங்க அப்பா நம்பர் தரேன்”, என்று சொல்லி விட்டு வினோதினி வெளியே சென்று விட்டாள்.
“மாமா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்”, என்றான் கதிர்.
“நான் உனக்கு ஒரு நல்லது செய்யணும். நான் பெத்தது தான் சரி இல்லை. என் பேச்சைக் கேக்கலை. நீயும் கேக்க மாட்டேன்னு சொல்லு. நான் எதுவும் சொல்லலை”, என்று சொல்ல அவன் அமைதியாகி விட்டான்.
சிதம்பரத்துக்கு மகனை மிகவும் பிடிக்கும் தான். ஆனால் அவனை ஒரு வருடமாக திருமணம் செய்யச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவனுக்கு முதலில் முடித்து விட்டு அதன் பின் கதிர் இளவரசிக்கு முடிக்க வேண்டும் என்பது தான் அவர் பிளான். ஆனால் அவன் கேட்க வில்லை என்று அவருக்கு கோபம். அதனால் தான் அப்படிச் சொன்னார்.
அப்பா தன்னைத் திட்டியதும் கோபத்தில் எழுந்து செல்வது போல அங்கிருந்து வெளியே வந்த இன்பா நேராக வினோதினி தங்கி இருக்கும் வீட்டுக்கு தான் சென்றான்.
அங்கே அவள் தன்னுடைய கையில் ஒரு ஆல்பம் வைத்திருக்க அவசரமாக அவளை நெருங்கினான். ஆல்பத்தை எடுத்து விட்டு திரும்பியவள் அருகில் வந்து நின்றவன் மீது மோதி பின் நேராக நின்றாள்.
திடீரென்று அவ்வளவு நெருக்கத்தில் அவனை எதிர்பாராதவள் திகைத்து அவனைப் பார்க்க “முதல்ல அந்த போட்டோவை உள்ள வை”, என்றான்.
அவனுடைய ஒருமை அழைப்பு திகைப்பு என்றால் அவன் முகத்தில் இருந்த கோபம் அதை விட திகைப்பைக் கொடுத்தது.
“உன்னை தான் சொல்றேன் வினோதினி. அதை உள்ள வை”, என்று கத்தினான் இன்பா.
அவன் கத்தலில் சமாளித்துக் கொண்டவள் “நான் என்ன உங்களுக்கா பொண்ணு பாத்தேன்? கதிருக்கு தானே பாத்தேன்?”, என்று கேட்டாள்.
“அவனுக்கு பொண்ணு பாக்க நீ யாரு?”, என்று கடுப்புடன் கேட்டான்.
அவன் கேள்வி அவளுடைய தன்மானத்தை சீண்டி விட்டாலும் “ஒரு நல்லது நடக்கணும்னு நினைச்சு செஞ்சது தப்பா?”, என்று கேட்டவள் வெளியே செல்லப் பார்க்க அவள் கையைப் பற்றி நிறுத்தினான்.
அவன் அப்படிச் செய்ததும் அதிர்ந்து போனவள் “என்ன பண்ணுறீங்க? விடுங்க என் கையை”, என்று அவள் கையை உதற முயல “இங்க பாரு, நீ நல்லா இருக்கணும்னு தான் நான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன். ஆனா நீயே என் குடும்பத்துக்கு சாபமா இருப்பேன்னு நினைக்கலை. இந்த கல்யாணம் நடக்க கூடாது. கதிருக்கு நீ பாத்திருக்க பொண்ணு கூட கல்யாணம் நடந்தா எங்க வீட்ல யாரும் நிம்மதியா இருக்க மாட்டாங்க”, என்றான்.
“இந்த கல்யாணம் நடந்தா தான் சில பேர் நிம்மதியா இருப்பாங்க. முதல்ல என் கையை விடுங்க”
“நீ யார் டி என் குடும்பத்து மேல அக்கறைப் பட?”, என்று கேட்டவன் அவள் கையை இறுக்கிப் பற்ற “ஆ”, என்று வலியில் முணங்கியவள் “பொண்ணு மாப்பிள்ளை இருந்தா யார் வேணும்னாலும் தகவல் சொல்லலாம்”, என்றாள்.
“என் வீட்டுக்கு வந்து புரோக்கர் வேலை பாக்கலைன்னு யார் அழுதா?”, என்று அவன் கேட்டதும் கொதித்து போனவள் “சீ, மரியாதையா பேசுங்க. சொல்லிட்டேன்”, என்று மிரட்டினாள்.
“உனக்கு எதுக்கு மரியாதை? ஒழுங்கு மரியாதையா அந்த போட்டோவை உள்ள வை”
“முடியாது, நான் அங்கிள் கிட்ட காட்ட தான் போறேன்?”
“அவர் எப்படி டி உனக்கு அங்கிள் ஆவார்? உங்க அம்மா எங்க அப்பா கூட பிறந்தாங்களா? இல்லை நீ அவர் மகனைக் கட்டிருக்கியா?”, என்று அவன் நக்கலாக கேட்க “இன்பா”, என்று சீறினாள்.
“சும்மா காத்தாதே. உனக்கு எல்லாம் இவ்வளவு தான் மரியாதை. உன்னை என் உயிரைக் காப்பாத்தின சாமின்னு நினைச்சேன் டி. ஆனா நீ என் குடும்பத்தை அழிக்க வந்த கோடாரின்னு தெரியாம போச்சு. இந்த போட்டோ வெளிய வரக் கூடாது அவ்வளவு தான்”
“வந்தா என்ன பண்ணுவீங்க? என்னை இந்த அளவுக்கு பேசின பிறகு நான் அதை செய்யாம போனா என்னையே என்னால மன்னிக்க முடியாது. நான் இப்பவே அந்த பொண்ணோட போட்டோவை உங்க அப்பா கிட்ட காட்ட தான் போறேன்”, என்று சொல்லி விட்டு அவள் ஒரு எட்டு எடுத்து வைக்க அவள் கையை பிடித்து முறுக்கி அவளை சுவரோடு சாய்த்து நிற்க வைத்தான்.
“அடம் பிடிக்காத வினோதினி. என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு டி”
“முதல்ல என்னை விடுங்க. உங்களை பாத்தாலே எனக்கு எரிச்சலா இருக்கு. என்னை டி போட்டுக் கூப்பிட யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது?”
“உன்னை பொண்டாட்டின்னு நினைச்சு டி போட்டுக் கூப்பிட எனக்கு ஒண்ணும் ஆசை இல்லை. வந்தோமா வேலையைப் பாத்தோமா, போனோமான்னு இல்லாம தேவையில்லாத வேலையை செஞ்சா இப்படி தான் வாங்கிக் கட்டிக்கணும்”
“ஆம்பளைத் திமிரா? உங்க திமிரை எல்லாம் என் கிட்ட காட்டாதீங்க? விடுங்க என்னை”
“அப்படின்னா இந்த போட்டோவை எங்க அப்பா கிட்ட காட்ட தான் போற? அப்படித் தானே?”
“ஆமா, காட்டுவேன். கதிருக்கு கல்யாணத்தையும் முடிச்சு வைப்பேன். உங்களால ஆனதைப் பாத்துக்கோங்க”, என்று அவள் தெனாவெட்டாக சொல்ல “சொல்லிட்டே இருக்கேன். ராங்கித் தனம் பண்ணிட்டு இருக்கியா? அதை எப்படி அடக்கணும்னு எனக்கு தெரியும் டி”, என்றவன் அவள் முகம் நோக்கி குனிந்தான்.
அவள் அதிர்ச்சியாக அவனைப் பார்க்கும் போதே அவளுடைய இதழ்களை தன்னுடைய இதழ்களால் சிறை செய்திருந்தான். ஒரு நொடி அவன் செய்கையால் அதிர்ச்சியில் உறைந்தவள் அடுத்த நொடி தலையை சிலுப்பி அவனிடம் இருந்து இதழ்களை விலக்க நினைத்தாள்.
ஆனால் அவனிடம் இருந்து அவளால் விலக முடியவில்லை. அந்த அளவுக்கு அவளை இறுக்கிப் பிடித்திருந்தான். அவள் கையை வைத்து அவனை தள்ளி விட முயல அவள் கைகளையும் இறுக்கி பிடித்துக் கொண்டான். எதுவும் செய்ய முடியாத இயலாமையில் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. ஒரு வித வெறியோடு அவன் முத்தமிட்டுக் கொண்டிருக்க அவளால் எதுவுமே செய்ய முடியவில்லை. அவள் கையில் இருந்த ஆல்பம் கூட இந்த போராட்டத்தில் கீழே விழுந்திருந்தது.
அவனோ அவளுடைய உதடுகளை மென்று தின்று கொண்டிருந்தான். நிச்சயம் இந்த முத்தத்தில் ஒரு சதவீதம் கூட காதல் இல்லை. கோபம் அவன் காதலை மழுங்கடித்திருந்தது.
சிறிது நேரம் கழித்து அவளிடம் இருந்து விலகினான். கண்களை மூடி கண்ணீர் வாழிய நின்று கொண்டிருந்தாள் வினோதினி. அவளுடைய அந்த தோற்றம் கூட அவனை பாதிக்க வில்லை. அவனுடைய செய்கையால் அவள் உதடுகள் சிவந்து தடித்து லேசான ரத்தக் கரையுடன் பெரியதாக மாறி இருந்தது. அது கூட அவனை அசைக்க வில்லை.
கோபம் என்னும் அரக்கன் அவனை சுழற்றி அடிக்க எதிரில் நிற்பது தான் உயிராய் விரும்பும் பெண் என்று கூட மறந்திருந்தான்.
“என்னமோ பேசின? இப்ப பேசு டி. என் கிட்ட வச்சிக்கிட்டா இது தான் கதி. இப்ப நடந்தது சேம்பிள் தான் டி. இனி கதிர் கல்யாண விஷயம் பேசின நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. இனி நீ என்ன செய்றேன்னு பாக்குறேன்”, என்றவன் கீழே குனிந்து அந்த ஆல்பத்தை எடுத்து “உன்னை நம்ப முடியாது. இது என் கிட்டயே இருக்கட்டும்”, என்று சொல்லி தன்னுடைய சட்டைக்குள் வைத்துக் கொண்டு சென்று விட்டான்.