என்ன செய்ய என்று தெரியாமல் கதிர் டிரைவர் சீட்டில் ஏறி அமர சிதம்பரமும் பாமாவும் வினோதினி தங்கி இருக்கும் வீட்டை நோக்கிச் சென்றார்கள்.
“அப்பா, நில்லு பா. நில்லுன்னு சொல்றேன்ல? நான் சொல்றதைக் கேளுங்க பா”, என்று புலம்பிக் கொண்டே சிதம்பரம் பின்னே சென்றான் இன்பா. அவன் கை பிடியில் இருந்த வினோதினியும் அவன் பின்னே சென்றாள்.
அவர்களுக்கு பின்னே பார்வதியும் சண்முகநாதனும் செல்ல இளவரசி மட்டும் என்ன செய்ய என்று தெரியாமல் கார் அருகே நின்றாள்.
“என்னைக் காரை எடுக்கச் சொல்லிட்டு எல்லாரும் அங்க பாத்து போறாங்க?”, என்று எண்ணிய கதிர் இளவரசியைப் பார்த்து “என்ன டி, எல்லாரும் அங்க பாத்து போறாங்க?”, என்று கேட்டான்.
“தெரியலையே அத்தான். ஆனா உங்க மேல எனக்கு கோபம்”
“இப்ப போல நீ வேற? எதுக்கு டி கோபம்?”
“நீங்க எதுக்கு அண்ணன் காதலை என் கிட்ட சொல்லலை?”
“ஆமா நீ என் கிட்ட நின்னு கிளுகிளுன்னு பேசிட்ட? கிட்ட வந்தாலே தெரிச்சு ஓடுற? இதுல எங்க கதை பேச?”
“கிட்ட நின்னா மட்டும் பேசிக் கிழிச்சிருவீங்க? கன்னத்துல முத்தம் கொடுக்கவே அப்படி பயப்படுறீங்க?”, என்று உளறி நாக்கைக் கடித்துக் கொண்டாள். அவள் சொன்னதும் கண்கள் மின்ன நின்றான் கதிர்.
“நீங்க ரெண்டு பேரும் ஏன் அங்க நிக்குறீங்க? வாங்க”, என்று பார்வதி அவர்களை அழைக்க “இந்த கிழவிக்கு நான் உன் கிட்ட பேசினா மூக்கு வேத்துருமே”, என்று சொல்லிக் கொண்டு இளவரசியுடன் சென்றான்.
அப்பாவைக் கெஞ்சிக் கொண்டே சென்ற இன்பா அவர் வினோதினியின் வீட்டுக்குள் செல்லவும் அதைக் கூட உணராமல் அவர் பின்னே சென்றான். அங்கே ஜமுக்காளம் விரிக்கப் பட்டு அதில் பூ, பழம் அடுக்கப் பட்டு தாம்பூழத் தட்டுக்கள் இருக்க சுற்றி இன்பாவின் உறவினர்கள் இருந்தார்கள்.
“என்ன நடக்குது இங்க?”, என்று எண்ணி அவன் பேய் முழி முழிக்க உள்ளே வந்த கதிர் மற்றும் இளவரசிக்கும் அதே நிலை தான்.
“என்னப்பா இதெல்லாம்?”, என்று கேட்டான் இன்பா.
“பாத்தா தெரியலை? உனக்கு நிச்சயதார்த்தம் பண்ணப் போறோம். போய் அங்க உக்காரு”, என்று சிதம்பரம் சொன்னதும் திகைத்து போனான்.
“பொண்ணு?”, என்று அவன் குழப்பமாக கேட்க “வேற யாரு? நம்ம வினோதினி தான்”, என்று அவர் சொன்னதும் அவன் முகம் மலர்ந்தது.
“ரொம்ப தேங்க்ஸ் பா. நான் சொன்னேனு உடனே அந்த நிச்சயத்தை நிறுத்தி வினோதினியை எனக்கு கட்டி வைக்க முடிவு பண்ணினதுக்கு? எப்படி பா அவசரமா எல்லாம் ஏற்பாடு பண்ணினீங்க?”
“லூசு பயலே, எதுவும் அவசர ஏற்பாடு இல்லை. ஒரு மாசத்துக்கு முன்னாடியே பிளான் பண்ணினது மாதிரி தான் நடக்குது. உனக்கு நான் பாத்த பொண்ணே வினோதினி தான்”, என்று சொல்ல அதிர்ச்சியில் செயலற்று நின்றான் இன்பா.
அவர் சொன்னதைக் கேட்டு கதிர் அதிர்ச்சியில் வாயைப் பிளந்த படி நிற்க அவன் வாயை தன்னுடைய கரத்தால் மூடினாள் இளவரசி.
“என்ன டா முழிக்கிற? போய் உக்காரு”, என்று சிதம்பரம் சொன்னதும் அவரை முறைத்து விட்டு மற்றவர்களைப் பார்த்தான். அனைவரும் அவனைக் கண்டு சிரிக்க கடுப்பானவன் “ஏன் பா இதை நீ என் கிட்ட சொல்லலை? நான் எவ்வளவு அழுதேன்னு தெரியுமா?”, என்று கேட்டான்.
“நீ எங்க டா என்னை பேச விட்ட? சரி படட்டும்னு விட்டுட்டேன்”
“அப்பாவா நீ?”
“இப்ப அதை ஆராய்ச்சி பண்ணப் போறியா? இல்லை அங்க போய் வினோதினி பக்கத்துல உக்காருறியா?”
“எல்லாரும் என்னை ஏமாத்திட்டீங்கல்ல?”, என்று அவன் கடுப்புடன் கேட்க “ஏமா வினோதினி, என் மகன் உன்னை கட்டிக்க சரிப்பட்டு வர மாட்டான். நான் உனக்கு வேற மாப்பிள்ளை பாக்குறேன்”, என்றார்.
“வேண்டாம் மாமா, என்னால உங்க மகனைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ண முடியாது”, என்று வெட்கத்துடன் பதில் கொடுத்தாள் வினோதினி.
இன்பா அவளையே பார்த்துக் கொண்டிருக்க “மாப்பிள்ளை, வந்து உக்காருங்க. நல்ல நேரம் ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆகிருச்சு”, என்றார் கிருஷ்ணன்.
அவர் சொன்னதற்கு பிறகு தான் வினோதினி அருகில் சென்று அமர்ந்தான். ஆனால் அவள் புறம் திரும்பவே இல்லை. “கோபமா?”, என்று கேட்டாள் வினோதினி.
“கொலை வெறில இருக்கேன் டி. பேசாம போயிரு. நீ கூட மறைச்சிட்டல்ல? என்னை நீயும் தோக்கடிச்சிருக்க?”
அவள் சொன்னது உண்மை என்பதால் சகஜமானான். “நீ என்ன டா அங்க நின்னுட்டு இருக்க? இன்பா பக்கத்துல போய் உக்காரு. நீ தானே துணை மாப்பிள்ளை”, என்று கதிரைப் பார்த்துச் சொன்னார் பார்வதி.
“அப்ப துணைப் பொண்ணையும் வரச் சொல்லு அம்மாச்சி. அப்ப தான் போவேன்”, என்றான் கதிர்.
அதற்கு பார்வதி கண்டிப்பாக ஏதாவது திட்டுவாள் என்று அவன் எதிர் பார்க்க “இளவரசி அதான் அவன் கூப்பிடுறான்ல மா? அங்க போய் உக்காரு”, என்றார் பார்வதி.
“சரி ஆச்சி”, என்று சொல்லி விட்டு இளவரசி அண்ணன் அருகில் சென்று அமர கதிரோ பார்வதியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன டா?”
“நீயாப் பேசியது?”, என்று கதிர் ராகமிழுக்க “இல்லை, பேய் பேசுச்சு. இப்ப போகப் போறியா இல்லையா? போய் இளவரசி பக்கத்துல உக்காரு”, என்று சொன்னதும் புன்னகையுடன் சென்று இளவரசி அருகில் அமர்ந்து கொண்டான்.
கதிரும் இளவரசியும் மணமக்களுக்கு துணைக்கு அமர்ந்திருக்கிறோம் என்று எண்ணி தான் அமர்ந்திருந்தார்கள்.
ஆனால் நிச்சயப் பத்திரிக்கையில் இன்பா வினோதினி பெயரோடு கதிர் இளவரசி பேரும் படிக்கப் பட இருவரும் அதிர்ந்து போனார்கள். இன்பா வினோதினி முகம் கூட சந்தோசத்தில் மலர்ந்தது.
“என்ன முழிக்கிறீங்க? உங்களுக்கும் தான் இன்னைக்கு நிச்சயதார்த்தம்”, என்றாள் பாமா.
“அத்தை”, என்று கதிர் ஆனந்தமாக அழைக்க “எல்லாம் அத்தை தான் ஏற்பாடு பண்ணச் சொன்னாங்க”, என்றாள் பாமா.
“அம்மாச்சி”, என்று அழைத்த கதிரின் கண்கள் கலங்கி விட்டது. தன்னுடைய அன்னையை பாட்டியின் வடிவில் கண்டான். அமைதியாக இரு என்னும் விதமாய் பார்வதி செய்ய தன்னை மீட்டுக் கொண்டான்.
இதற்காக தான் அம்மா தன்னை இப்படி அலங்கரித்தார்களோ என்று எண்ணிக் கொண்டு வெட்கத்துடன் அமர்ந்திருந்தாள் இளவரசி.
அடுத்து வரும் முதல் முகூர்த்தத்தில் இன்பா வினோதினி திருமணமும் இளவரசிக்கு கல்லூரி முடிய இரண்டு மாதங்கள் இருப்பதால் அவள் கல்லூரி முடிந்து வரும் முதல் முகூர்த்தத்தில் கதிர் இளவரசி திருமணமும் நிச்சயிக்கப் பட்டது.
“நல்லா இருக்கு டி பேரன் பேத்திகளின் முகத்துல இருக்குற சந்தோசத்தைப் பாக்குறதுக்கு. இது எல்லாம் உன்னால தான்”, என்று மனைவியைப் பாராட்டினார் சண்முகநாதன்.
நிச்சயம் முடிந்ததும் அனைவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். ஹோட்டலில் ஆர்டர் செய்திருந்த சாப்பாடு வர அனைவரும் உண்டார்கள்.
உணவு முடிந்ததும் உறவினர்கள் அனைவரும் சென்று விட வீட்டு ஆட்கள் மட்டும் இருந்தார்கள். மணமக்களுக்கு தான் தனியே பேச சந்தர்ப்பம் அமைய வில்லை.
அன்று இரவே வினோதினி குடும்பமும் கிளம்பியது. மாலை மயங்கி இருள் சூழ்ந்த வேளையில் கதிர் வினோதினியிடம் பேசலாம் என்று எண்ணி வீட்டில் இருந்து கிளம்ப அவனை வாசலிலே தடுத்த பார்வதி “எங்க டா போற?”, என்று கேட்டார்.
“காத்து வாங்க பாட்டி”
“நீ காத்தும் வாங்க வேண்டாம். கடலை மிட்டாயும் வாங்க வேண்டாம். ஒழுங்கா உள்ள போ”
“பிளீஸ் பாட்டி, ஒரு அஞ்சு நிமிஷம்”
“சரி போ, நான் இப்ப வருவேன். சரியா அஞ்சு நிமிஷம் தான்”, என்று சொன்னதும் சிட்டாக பறந்து விட்டான்.
வினோதினி திண்ணையில் அமர்ந்திருக்க அவளை நெருக்கி அடித்து அமர்ந்தவன் “ஹாய் பொண்டாட்டி”, என்றான்.
அவள் வெட்கத்துடன் நகர்ந்து அமரப் பார்க்க “பேசாம இரு டி. இல்லைன்னா கொன்னுருவேன்”, என்றான்.
“ரவுடியா நீங்க? வில்லன் மாதிரி மிரட்டுறீங்க?”
“நீங்க எல்லாரும் பண்ணின வில்லத்தனத்தை விடவா டி நான் பண்ணிட்டேன்?”
“என்னை மன்னிச்சிருங்க. பாட்டி தான் சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க”
“பரவால்ல விடு. இது கூட கிக்கா தான்”, என்று சொன்னவன் அவளுடைய தோளை இடிக்க “நகர்ந்து உக்காருங்களேன்”, என்றாள்.
“இத்தனை நாளே உன்னை விட்டு தள்ளி இருக்க முடியலை. இனியும் இருப்பேனா? உன்னைப் பாத்ததுல இருந்தே பைத்தியமா இருக்கேன் டி?”
“பாத்த உடனே வா? அப்புறம் ஏன் என் கிட்ட சொல்லலை?”
“நான் சொல்ல வந்தப்ப நீ கண்ணா பின்னான்னு கத்துனியா? அப்படியே வாயை மூடிக்கிட்டேன். இனி கண்டிப்பா உன்னை விட்டு தள்ளி எல்லாம் இருக்க மாட்டேன்”, என்ற படி அவன் அவள் முகம் நோக்கி குனிய “அஞ்சு நிமிஷம் ஆகிருச்சு டா. நான் வந்துட்டேன்”, என்ற படி வந்தார் பார்வதி.