பாத்ரூமில் சாய்ந்து சிறிது நேரம் அழுத வினோதினி நேரம் ஆனதை உணர்ந்து கண்ணீரை ஒத்தி வைத்து விட்டு குளிக்க ஆரம்பித்தாள். பின் அவசரமாக கிளம்ப ஆரம்பித்தாள். இரவு ஏழு மணிக்கு தன்னுடைய பேகை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.
“கிளம்பிட்டியா பாப்பா?”, என்று கேட்ட படி அங்கு வந்தாள் அவளது அன்னை தேவி.
“ஆமா மா, எட்டு மணிக்கு பஸ். இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும். அணு குட்டி டியூஷன் முடிஞ்சு வந்ததும் அவ கிட்ட சொல்லிருங்க. நான் கிளம்புறேன்”
“சரி மா, இரு டப்பால சப்பாத்தி கட்டி வச்சிருக்கேன். எடுத்துட்டு போ. பஸ்ல போகும் போது சாப்பிட்டுக்கோ”
“சரி மா”
“தனியா போக கஷ்டமா இருக்கா வினு? நான் வேணும்னா பக்கத்து வீட்டு அண்ணனை பஸ் ஏத்தி விட வரச் சொல்லட்டுமா?”
“வேண்டாம் மா, அந்த அண்ணன் வரது உன் புருசனுக்கு தெரிஞ்சா தப்பா பேசுவார். பேரப் பிள்ளையை பாத்த அப்புறமும் உன்னையே அந்த ஆள் தப்பா பேசுறார். இதுல என்னை விட்டு வைப்பாரா? ஏற்கனவே என் கோச்சிங்க் கிளாஸ் சாரை அப்படி தான் பேசினார். இப்ப புதுப் பிரச்சனை வேண்டாம். ஆனாலும் இந்த ஆள் திருந்தவே மாட்டாரா மா?”, என்று தளர்ந்து போய்க் கேட்டாள்.
“அப்பானு சொல்லு பாப்பா”
“அந்த ஆளுக்கு அந்த உறவுக்கு அர்த்தமே தெரியாது மா. கிளம்புற நேரத்துல உங்க புருஷன் புராணம் பாடி என்னை டார்ச்சல் பண்ணாதே. ஏற்கனவே புது வேலையைப் பத்தி டென்ஷனா இருக்கு. ரெண்டாவது உன் மக வீட்ல தங்க போறது வேற டென்ஷன். அம்மா நல்லா கேட்டுக்கோ. நீ சொன்னதுனால தான் அவ வீட்ல தங்க சம்மதிச்சேன். அங்க எனக்கு ஏதாவது எரிச்சல் ஆச்சுன்னா நான் கண்டிப்பா வேற வீடு வாடகைக்கு பாத்துருவேன்”
“அப்படிச் சொல்லக் கூடாது பாப்பா. தெரியாத ஊர், தெரியாத இடம். உன் தங்கச்சியை அங்க தான் கட்டிக் கொடுத்துருக்கு. அவ வீட்ல தங்க உனக்கு என்ன கஷ்டம்?”
“அம்மா தெரியாத ஹாஸ்டல்ல கூட நிம்மதியா இருந்துறலாம். ஆனா தெரிஞ்சவங்க வீட்ல மட்டும் இருக்க முடியாது மா. ஏற்கனவே விஜி கொஞ்சம் அரைக் கிறுக்கு. அவளுக்கு என்னைக் கண்டாலே ஆகாது. என்னமோ என்னை எதிரியை பாக்குற மாதிரி தான் சின்ன வயசுல இருந்து பாப்பா. இதுல அவ வீட்ல தங்கணும்னா எனக்கு திக்கு திக்குன்னு இருக்கு”
“விஜி முன்னாடி மாதிரி இல்லை வினு. கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்ப மாறிட்டா. முன்னாடி ஒரே வீட்ல இருந்தீங்க.? அதனால அக்கா தங்கைக்குள்ள சண்டை வரது இயல்பு தான். இப்ப அவளுக்கு ஒரு குழந்தை வேற இருக்கு. அதனால பக்குவம் வந்துருச்சு. மாப்பிள்ளை கிட்ட நீ தங்குறதுக்கு அனுமதி வாங்கினதே விஜி தான் தெரியுமா?”
“என்ன பக்குவமோ? எனக்கு அவளை நினைச்சாலும் பயமா இருக்கு. அவ புருஷனை நினைச்சாலும் பயமா தான் இருக்கு. எப்படி தான் அந்த ஆளை லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணினாளோ? எனக்கு தெரியலை”
“அப்படி பேசக் கூடாது பாப்பா. உன்னோட பாதுகாப்புக்காக தான் அம்மா உன்னை அங்க தங்கச் சொல்றேன்”
“சரி சரி அந்த ஆள் எங்க?”, என்று தன்னுடைய தந்தையைக் கேட்டாள்.
“அவர் அப்பவே அரை ஆளா தான் வந்தார். உள்ள படுத்துட்டார். இப்ப போதை தெளியாது”
“ஏமா இவர் மட்டும் இப்படியே இருக்கார்?”
“நான் வாங்கி வந்த வரம் அப்படி டி. ஆனா என்னோட சனியன் உன்னையும் துரத்துதே. உன் தங்கச்சிக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு. இப்ப அணு வேற காலேஜ்க்கு போயிட்டா. இன்னும் மூணு வருசத்துல அவளும் படிச்சு முடிச்சு கல்யாணத்துக்கு ரெடி ஆகிருவா. ஆனா உன் வாழ்க்கை மட்டும் இப்படியே இருக்குதே? எந்த வரன் வந்தாலும் தட்டித் தட்டிப் போகுது. உனக்கு வயசு வேற இருபத்தி ஆறு ஆகிருச்சு டி. உன்னை நினைச்சா தான் எனக்கு கவலையா இருக்கு”
அம்மா பேசியது மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் “அம்மா, விஜிக்கு நாம கல்யாணம் பண்ணி வைக்கலை. இருபத்தி ஒரு வயசுல அவளே ஒருத்தனை தேடி ஓடிப் போயிட்டா. வேற வழி இல்லாம நாம அவளை ஏத்துகிட்டோம் அவ்வளவு தான். அதுக்கப்புறம் நான் கவர்ன்மெண்ட் வேலை வாங்க இத்தனை வருஷம் போராடி படிச்சு ஒரு வழியா வாங்கிட்டேன். அதனால தேவையில்லாததை எதுவும் யோசிச்சது இல்லை. என் கல்யாணம் தட்டிப் போச்சுன்னா நீங்களும் நானும் எதுவும் செய்ய முடியாது மா. எனக்குன்னு இருக்குறவன் என்னைத் தேடி வருவான். நீங்க கவலைப் படாம இருங்க. சரி நான் கிளம்புறேன். அப்புறம் அந்த ஆள் ஏதாவது புலம்பினா நீங்க கண்டுக்காதீங்க. நீங்க ஆதங்கத்துல ஏதாவது பேசினா அந்த ஆள் அடிக்க ஆரம்பிச்சிருவர். லூசு பேசுதுன்னு கண்டுக்காதீங்க மா. நல்லா சாப்பிடுங்க. நான் தினமும் கால் பண்ணுறேன். லீவ் கிடைக்கும் போது வரேன் சரியா?”, என்று சொல்லி விட்டு கிளம்பினாள்.
வீட்டில் இருந்து கிளம்பி பஸ் ஸ்டாண்ட் வந்தவள் கோயம்பேடு பஸ் நிலையம் வந்து சேர்ந்தாள்.
தான் பதிவு செய்திருந்த பஸ்ஸைக் கண்டு பிடித்து ஏறி அமர்ந்தாள்.
அவளுக்கென்று ஜன்னல் சீட் கிடைத்திருக்க வெளியே தெரிந்த பலதரப் பட்ட மக்களைப் பார்த்த படி அமர்ந்திருந்தாள். அன்று வார இடைநாள் என்பதால் கூட்டம் அதிகம் இல்லை.
சிறிது நேரத்தில் பஸ் கிளம்பியது. பஸ் ஸ்டாண்டில் இருந்து ஊர்ந்து ஊர்ந்து வெளியே வந்து பைபாசில் நுழைந்த பஸ் தூத்துக்குடியை நோக்கிச் சென்றது.
வினோதினிக்கு தூத்துக்குடியில் இருந்த கூட்டுறவு வங்கியில் தான் வேலை கிடைத்திருந்தது. நாளை தான் அவள் வேலையில் சேர வேண்டும்.
சென்னை தான் அவர்களுக்கு பூர்வீகம். தேவி கிருஷ்ணன் தம்பதியினர் பல வருடங்களாக சென்னையில் தான் வசிக்கிறார்கள்.
கிருஷ்ணன் பயங்கரமான குடிக்காரர். அவர் குடிக்காத நாளே இல்லை என்று சொல்லலாம். மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறார்களே என்ற பொறுப்பு இல்லாமல் கிடைக்கும் பணத்தை குடித்தே அளிப்பவர். இப்போது வரைக்கும் அப்படி தான் அழித்துக் கொண்டிருக்கிறார்.
தேவி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு துணி தைத்துக் கொடுத்து குடும்பத்தை ஓட்டினாள். அது போக இட்லி, தோசை, ஆப்ப மாவு அரைத்து விற்றுக் கொண்டிருக்கிறாள். கூடவே ஏதாவது பங்ஷன் என்றால் இவளிடம் தான் பலகாரங்கள் செய்யச் சொல்லி சொல்வார்கள். இப்படி ஏகப் பட்ட சில்லறை வேலைகளை செய்து தான் மூவரையும் படிக்க வைத்தாள்.
அவள் சிறுக சிறுக சேமிப்பதை கிருஷ்ணன் குடித்தே அழிக்காமல் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருப்பார்கள்.
சிறு வயதில் இருந்து தாயின் கஷ்டம் அறிந்து வளர்ந்த வினோதினி எதற்குமே ஆசைப் படாமல் இருந்தாள். ஆனால் அவளுக்கு அடுத்து பிறந்த விஜயலட்சுமி என்ற விஜி சரியான பேராசைக்காரி. பார்த்ததெல்லாம் தனக்கு வேண்டும் என்று நினைக்கும் குணம் படைத்தவள்.
மூன்றாவது பிறந்த அணு குடும்ப கஷ்டம் அறிந்து அக்கா வினோதினியைப் ரோல் மாடலாக எண்ணி வளர்ந்தாள்.
காலேஜ் முடித்த வினோதினி தீவிரமாக கவர்ன்மெண்ட் வேலைக்கு படிக்க ஆரம்பித்தாள். பல நேரங்களில் இண்டெர்வியூ வரைக்கும் சென்றும் அவளுக்கு வேலை கிடைத்த பாடில்லை.
ஆனாலும் தீவிரமாக படித்துக் கொண்டிருந்தாள். அப்போது விஜி கல்லூரி கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தாள். எல்லாம் ஓரளவுக்கு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது என்று நினைத்தாள் தேவி.
ஆனால் காலேஜ் முடித்த அடுத்த நாளே கோவிலுக்கு போகிறேன் என்று சொல்லி விட்டு சென்ற விஜி அவளுடன் காலேஜில் படித்த ரவி என்பவனை திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு வந்தாள்.
கழுத்தில் புத்தம் புது தாலி மின்ன ஒரு ஆணுடன் வீட்டுக்கு வந்த மகளைக் கண்டு அதிர்ந்து போனாள் தேவி. வினோதினியும் தங்கை இப்படி செய்வாள் என்று நினைக்கவே இல்லை.
வினோதினி அவர்கள் இருவரையும் உள்ளே அழைக்கவா விரட்டவா என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே “இனி ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க கூடாது. வெளிய போ”, என்று சொல்லியிருந்தாள் தேவி.
தவறு செய்த உறுத்தல் கூட சிறிதும் இன்றி “வாங்க ரவி போகலாம்”, என்று சொல்லி விட்டு ரவியின் கையை பற்றிய படி கர்வமாக நடந்து சென்றாள் விஜி.
அவளை நினைத்து தேவி ஒரு பக்கம் அமர்ந்து குமுறி அழுதாள். “ஏய் என்ன மூலைல உக்காந்துருக்க? போய் சாப்பாடு செய். எனக்கு பசிக்குது”, என்று சொல்லிக் கொண்டே உள்ளறையில் இருந்து எழுந்து வந்த கிருஷ்ணனைக் கண்டு வெறுத்துப் போனாள் வினோதினி.
தேவி கண்ணீருடன் எழுந்து செல்லப் பார்க்க “நீங்க இருங்க மா. நான் சாப்பாடு செய்றேன்”, என்று சொல்லி விட்டு சென்றாள் வினோதினி.
பள்ளி முடிந்து வந்த அணுவுக்கும் விஜியின் செயலை அறிந்து அதிர்ச்சி தான். அடுத்து வந்த இரண்டு நாட்கள் வினோதினி தான் எல்லா வேலைகளையும் செய்தாள்.
இரண்டு நாட்கள் இடிந்து போய் இருந்த தேவி பின் மற்ற இரண்டு பிள்ளைகளுக்காக தன்னுடைய மனதை தேற்றிக் கொண்டு சாதாரணமாக உலா வர ஆரம்பித்தாள். விஜியின் செய்கையால் மற்ற பெண்களின் வாழ்க்கையில் பிரச்சனை வருமோ என்று பயந்தாலும் இவர்களும் அவளை மாதிரி செய்ய மாட்டார்கள் என்று நம்பினாள். வினோதினி மற்றும் அணு மேல் தேவிக்கு நம்பிக்கை இருந்தது.
வினோதினியும் அணுவும் “நாங்க இருக்கோம் மா. அவ போனா போறா. அவளை மாதிரி நாங்க இருக்க மாட்டோம். கண்டிப்பா உங்களை பெருமைப் படுத்துவோம்”, என்று உறுதி கொடுத்தனர்.
அதன் பின் வாழ்க்கை சாதாரணமாகச் செல்ல கொஞ்சம் கொஞ்சமாக பேசி பேசி பிறந்த வீட்டுடன் ஒட்டிக் கொண்டாள் விஜி. அதுவும் குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டு வீட்டுக்கு வந்தவளை அவர்களால் வெளியே போகச் சொல்ல முடியவில்லை. அதன் பின் அடிக்கடி அம்மா வீட்டுக்கு வர ஆரம்பித்தாள். குழந்தை பிறந்து ஆறு மாதம் கழித்து தான் பிறந்த வீட்டில் இருந்து சென்றாள்.
இப்போதும் ஏதாவது பண்டிகை வந்தால் ரவியையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு இங்கே வந்து விடுவாள். அவளுடைய குடும்பத்துக்கும் தேவி தான் உடை எடுத்துக் கொடுக்க வேண்டும். வினோதினி, அணு இருவருக்குமே ரவியைக் கண்டாலே பிடிக்காது, ஆனால் தேவி தான் அவர் இந்த வீட்டு மாப்பிள்ளை என்று சொல்லி சொல்லி அவர்களை மரியாதையாக நடந்து கொள்ளச் சொல்வாள்.
அதன் பின் வினோதினி கவர்ட்மெண்ட் பரிட்சைக்கு படிப்பதில் கவனம் செலுத்த ஒரு வழியாக கூட்டுறவு வங்கியில் அவளுக்கு வேலை கிடைத்தது. ஆனாலும் பாஸ் ஆகி ஒரு வருடங்களுக்கு மேல் ஆன பிறகு தான் அவளுக்கு போஸ்டிங் ஆர்டரே வந்தது. ஆனால் அவளுக்கு வேலை கிடைத்திருப்பது தூத்துக்குடியில் என்பதால் மகளை விஜியின் வீட்டில் தங்க வைக்க எண்ணினாள் தேவி.
வினோதினிக்கு விருப்பம் இல்லை என்றாலும் அன்னைக்காக அமைதி காத்தாள். ஆனால் அவளை எதிரியாக நினைக்கும் விஜி “அக்கா எங்க வீட்ல தங்கி இருந்து வேலைக்கு போகட்டும் மா. நான் இங்க இருக்கும் போது அவ எதுக்கு ஹாஸ்டல்ல இருக்கணும். நான் எங்க வீட்டுக்காரர் கிட்ட பேசுறேன். எங்க வீட்ல இருந்து ஒரு கால் மணி நேரத்துல தான் அக்காக்கு வேலை கிடைச்ச பேங்க் இருக்கு”, என்று சொன்னாள்.
இதில் ஏதாவது உள் குத்து இருக்குமோ என்று தான் வினோதினிக்கும் அணுவுக்கும் தோன்றியது. ஆனால் அதை சொல்லி தேவியைக் கஷ்டப் படுத்த மனதில்லாமல் கிளம்பி வந்து விட்டாள். ஆனால் அவர்கள் வீட்டுக்கு போக அவளுக்கு ஒரு சதவீதம் கூட பிடிக்கவே இல்லை. அவளுடைய வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கூட அவளுக்கு தெரியாது. அதனால் மனது முழுக்க சஞ்சலமாக இருந்தது.
தன்னுடைய தந்தை மட்டும் ஒழுங்காக இருந்திருந்தால் தங்கள் வாழ்க்கை இப்படி எல்லாம் ஆகி இருக்காதோ என்று பல முறை நினைப்பது போல இப்போதும் நினைத்து பார்த்தாள்.
வினோதினி, விஜி, அணு மூவருக்குமே தந்தை பாசம் கிடைக்கவே இல்லை. அதனால் தான் ரவி பாசமாக பேசியதும் விஜி மயங்கி விட்டாளோ என்று கூட வினோதினி எண்ணிக் கொள்வாள்.
வீட்டில் தலைவன் சரி இல்லை என்றால் அந்த தலைமுறையே பாழாகி விடும் என்பது எவ்வளவு உண்மை என்று அவளுக்கு புரிந்தது.
கூடவே அன்னை சொன்ன திருமண விஷயமும் அவள் மனதை பாரமாக்கியது. அவளுடன் படித்த பிள்ளைகளுக்கு எல்லாம் இப்போது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் அவளோ இப்போதும் தனி மரமாய் நிற்கிறாள்.
மற்ற பெண்கள் கழுத்தில் தடிமனான தாலிச் சங்கிலியுடனும், நெற்றி வகிட்டில் குங்குமத்துடனும் தன்னுடைய கணவருடன் செல்லும் போது ஒரு சராசரிப் பெண்ணாக வினோதினிக்கும் எதிர்பார்ப்புகளும் ஏக்கங்களும் உருவாகும். ஆனால் அடக்கிக் கொள்வாள்.
அதுவும் “உன் தங்கைக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்காமே? நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்க?”, என்று சிலர் கேட்கும் போது மனதுக்குள் எழும் வலி அவள் மட்டுமே அறிவாள்.
“நானா வேணும்னு கல்யாணம் பண்ணாம இருக்கேன்?”, என்று அவர்களிடம் கத்த வேண்டும் போல் அவளுக்கு தோன்றும். ஆனால் சிறு புண் சிரிப்புடன் அவர்களை கடந்து விடுவாள்.