“முழுசா கேளு டா. சத்தம் வந்த திசைல எல்லாரும் திரும்பிப் பாத்தோம். அங்க தேவதை மாதிரி ஒரு பொண்ணு மாப்ள. நீ சொன்ன மாதிரி நம்ம குலதெய்வம் தான் அந்த பொண்ணு ரூபத்துல வந்துச்சோ என்னவோ?”
“பொண்ணு அங்க நின்னுச்சா மச்சான்?”
“ஆமா டா, இவனுங்க என்னை வெட்ட தயாரா இருக்க எனக்குமே டக்குன்னு என்ன பண்ண தெரியலை. ஒரு பக்கம் மரம், மத்த மூணு பக்கம் அவனுங்க. நான் என்ன செஞ்சிருந்தாலும் கண்டிப்பா என் மேல ரெண்டு மூணு வெட்டாவது விழுந்துருக்கும். அந்த பொண்ணு ரோட்ல நின்னுட்டே போலீஸ் போலீஸ் கொலை கொலைன்னு கத்துன உடனே இவனுங்க சிதறி ஓடிட்டாங்க. கள்ளச் சாராய கேஸ்ல இவனுங்களைத் தான் போலீஸ் தேடுதே. சிக்குனா விட மாட்டாங்கன்னு தான் காட்டுக்குள்ள ஒழிஞ்சு கிடந்தாங்க. அதனால அந்த பொண்ணு கத்தினதும் ஒரு நிமிஷம் கூட நிக்காம ஓடிட்டானுங்க. அந்த பொண்ணு மட்டும் இல்லைன்னா இந்நேரம் நான் ஆஸ்பத்திரில இருந்துருக்கணும்”
“நல்லா இருக்கணும் மச்சான் அந்த பொண்ணு. சரி அது யார் என்னனு விவரம் தெரியுமா?”
“தெரியாது மாப்பிள்ளை. நீல கலர் ஸ்கூட்டி. வயலட் கலர் காட்டன் சேலை. நம்ம ஊருக்கே ஒட்டாத அழகு. அப்படியே என் கண்ணுக்குள்ளே இருக்குது டா. என் ஆயுசுக்கும் அந்த புள்ள முகம் எனக்கு மறக்காது”, என்று கண்களில் கனவு மிதக்க சொன்ன இன்பாவை வியப்பாக பார்த்தான் கதிர்.
“மச்சான், மயங்கிட்டியா டா?”, என்று நேரடியாக கேட்டும் விட்டான்.
அதற்கு எந்த ஒளிவு மறைவும் இன்றி “எனக்கு சொல்லத் தெரியலை”, என்று பதில் கொடுத்தான் இன்பா.
“டேய் என்ன மச்சான் சொல்ற? தெரியலையா? அப்படி எல்லாம் இல்லைன்னு சொல்லுவேன்னு எதிர் பாத்தேன் டா”
“உண்மைலே மனசுக்குள்ள ஏதோ ஒரு பீல் கதிர். அவ உயிரை காப்பாத்தினதுனாலயா? இல்லை அவ அழகா இருக்குறதுனாலயா? ஏதோ ஒண்ணு. அவசரமா அவ எதிர்ல வந்து நின்னு அவளைப் பாத்தேன் டா. எனக்கு ஏதாவது ஆயிருக்குமோன்னு அப்படி பதட்டத்துல அவ என்னைப் பாத்தா. அந்த பார்வைல அப்படியே விழுந்துட்டேன் நான். எனக்குன்னு இல்லை கதிர், என் இடத்துல வேற யார் இருந்திருந்தாலும் அந்த பொண்ணு காப்பாத்திருக்கும்னு தான் தோணுது மாப்ள. ஆனா எனக்கு தான் அவ முகம் கண்ணுக்குள்ளே இருக்கு டா. அவளை ஆசையா பாத்துட்டு இருக்கும் போதே வண்டியை எடுத்துட்டு கிளம்பிட்டா”
“எந்த பக்கம் போனா மச்சான்?”
“ஓட்டப்பிடாரம் ரோட்ல தான் போனா. ஆனா எந்த ஊருக்கு போறான்னு தெரியலையே? திருப்பி வருவாளானும் தெரியலை”
“அவ உனக்குன்னு கடவுள் முடிஞ்சு வச்ச பொண்ணா இருந்தா கண்டிப்பா திருப்பியும் உன் கண்ணுல அந்த புள்ள மாட்டும் டா. ஆனா என் மச்சானைக் காப்பாத்தின அந்த பொண்ணு தான் இனி நம்ம வீட்டு குலசாமி”
“வீடுன்னு சொன்ன உடனே தான் நினைவுக்கு வருது. இங்க நடந்ததை வீட்ல ஒப்பிச்ச அப்புறம் அவ்வளவு தான் பாத்துக்கோ”
“சொல்ல மாட்டேன் டா. சொன்னா மாமா, அத்தை, அம்மாச்சி, தாத்தா எல்லாரும் பயந்துருவாங்க டா”, என்று அவன் சொன்னதும் இன்பாவும் வேறு ஏதோ பேசிய படியே சென்றான்.
ஆனால் அவர்கள் வீட்டுக்கு சென்றது தான் தாமதம் “என் ராசா உனக்கு ஒண்ணும் ஆகலை தானே கண்ணு?”, என்று கேட்டாள் அவனது பாட்டி பார்வதி.
“எனக்கு ஒண்ணும் இல்லை ஆச்சி. வேணும்னா கதிர் கிட்ட கேளு”, என்றான் இன்பா.
“ஆமா அம்மாச்சி”, என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு வேகமாக வந்தனர் சிதம்பரமும் பாமாவும்.
ஓடி வந்து அவன் எதிரே நின்ற பாமா அவன் தலை கை கால் எல்லாம் தடவி பார்த்து “உனக்கு ஒண்ணும் இல்லை தானே கண்ணு? விஷயம் கேள்வி பட்டதுல இருந்து பக்குன்னு ஆச்சு”, என்று கண்ணீருடன் புலம்பினாள்.
சிதம்பரமும் மகனின் தலை முதல் பாதம் வரை பார்வையால் வருடினார். “எனக்கு ஒண்ணும் இல்லை மா. முதல்ல நான் போய் குளிக்கிறேன்”, என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் சென்று விட்டான்.
கதிர் புறம் திரும்பிய சிதம்பரம் “எதுக்குல என் கிட்ட சொல்லலை? இங்க ஒருத்தன் எதுக்கு இருக்கேன்? நீ வண்டியை எடுக்கும் போதே எங்கன்னு கேட்டேனா இல்லையா டா? இன்பா சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டானாக்கும்?”, என்று கேட்டார்.
“ஆமா மாமா”
“எவ்வளவு தைரியம் இருந்தா என் மகன் மேல கை வைக்கப் பாத்திருப்பாங்க? அவனுங்களை இனி வெளியவே வர விடக் கூடாது”, என்று கோபமாக சொன்னார்.
“இனி அவனுங்க அவ்வளவு லேசுல வெளியே வர முடியாதுன்னு இன்ஸ்பெக்டர் சொன்னார் மாமா”, என்றான் கதிர்.
“நிஜமாவே அவனுக்கு அடி ஏதும் படலை தானே கதிர்? அடி பட்டா கூட வாயை திறக்க மாட்டான் என் மவன்”, என்று கேட்டாள் பாமா.
“நிஜமாவே அவனுக்கு ஒண்ணும் இல்லை அத்தை. நீ வேண்டுற உன் குல தெய்வம் தான் ஒரு பொண்ணு மூலமா வந்து அவனைக் காப்பாத்திருக்கு. இல்லைன்னா கண்டிப்பா இந்நேரம் நம்ம இன்பா ஆஸ்பத்திரில இருந்துருப்பான்”
“என்னல சொல்ற?”
“ஆமா அத்தை. யார் என்னன்னு தெரியலை. வண்டில போன பிள்ளை போலீஸ் போலீஸ்ன்னு கத்தி தான் அவனுங்களை அங்க இருந்து விரட்டி விட்டுருக்கு”
“அம்மா பேச்சியம்மா, நீ தான் அந்த பொண்ணு மூலமா என் மகனைக் காப்பாத்திருக்க. உனக்கு இப்பவே கிடா நேந்து விடுறேன் மா. அந்த பொண்ணு நல்லா இருக்கணும்”, என்று வேண்டிய பாமா “அந்த பொண்ணு யாருன்னு கண்டு பிடிச்சா வீட்டுக்கு கூட்டிட்டு வா கதிர்”, என்றாள்.
“சரி அத்த. ஆனா யாருன்னு தெரியலை. பாப்போம்”, என்று கத்தி சொன்ன கதிர் பாமா காதருகே குனிந்து “உன் மனசுல போட்டுக்கோ அத்தை. அவ உன் மருமகளா வரக் கூட வாய்ப்பிருக்கு. அந்த புள்ளையைப் பத்திப் பேசும் போது என் மச்சான் கண்ணுல ஒரு வித மயக்கத்தைப் பாத்தேன்”, என்று சொன்னான்.
“என்னல சொல்ற?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள் பாமா.
“மருமகனும் மாமியும் என்ன ரகசியம் பேசுறீங்க?”, என்று கேட்டார் சிதம்பரம்.
“ஐயோ மாமா இருக்குறதை மறந்துட்டோமே?”, என்று எண்ணிய கதிர் “பசிக்குது மாமா, சோறு தான்னு அத்தை கிட்ட கேட்டேன் மாமா”, என்று ஜகா வாங்கினான்.
“முதல்ல போய் குளில. அதுக்கப்புறம் உள்ள தள்ளலாம். சரி நான் நம்ம தோட்டத்து வர போயிட்டு வரேன் பாமா. அம்மா வரேன் மா”, என்று சொல்லி விட்டு தன்னுடைய வண்டியை எடுத்துக் கொண்டு சென்றார் சிதம்பரம்.
“அங்க பாரு சீம ராசா நடந்து வரதை”, என்று பார்வதி கை காட்ட அங்கே திரும்பிப் பார்த்தான் கதிர், அங்கே இன்பாவின் பழைய டிரவுசர் மற்றும் கதிரின் பழைய பனியன் அணிந்து வெளியில் இருந்து நடந்து வந்தார் சண்முகநாதன்.
“தாத்தா இது என்ன கோலம்? ஆமா நீ எங்க போயிட்டு வர?”
“வாக்கிங் போயிட்டு வரேன் பேராண்டி. தினமும் நடந்தா இன்னைக்கு மாதிரியே எப்பவும் இளைமையா அழகா இருப்பேனாம்”, என்று சொன்ன சண்முகநாதன் ஊஞ்சலில் அமர “யார் நீ இளைமையா இருக்கியா? இந்த பொய் எல்லாம் சொல்லி உன்னை ஏமாத்தினது?”, என்று கேட்டான்.
“வேற யார் என் பேத்தி தான்”, என்று அவர் சொல்ல கதிர் அமைதியாகி விட்டான். இளவரசியைப் பற்றிச் சொன்னதும் அவன் என்ன சொல்வான்?
“சுத்த விவரம் கெட்ட மனுசா? இங்க என்ன நடக்குன்னு தெரியாம கூத்து பண்ணிட்டு இருக்கீரு? எல்லாருக்கும் உசுரு போய் திரும்பி வந்துருக்கு”
“என்ன கிழவி ஆச்சி?”, என்று தாத்தா கேட்டதும் நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தாள் பார்வதி. தாத்தாவும் பதறிப் போனார். உடனே இன்பாவைக் காண உள்ளே சென்று விட்டார்.,
கதிரும் உள்ளே செல்ல நினைக்க அப்போது தான் அவன் கண்ணில் விழுந்தாள் பாமா.
“அத்தை, என்ன அசையாம இருக்குற? எனக்கு நிஜமாவே பசிக்குது. நான் குளிச்சிட்டு வரேன். சாப்பாடு தா”, என்றான்.
“இல்லை அந்த பொண்ணைப் பத்தி தான் நினைச்சேன் மருமகனே. முதல் தடவையா இவனுக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்கே. அது அதிசயம் தான். சரி நான் தோசை ஊத்துறேன். நீ ஒரு சின்ன ஒத்தாசை பண்ணுறியா?”
“என்ன சொல்லு. செய்யின்னா செய்யப் போறேன். என்ன கேட்டுட்டு இருக்க?”
“நம்ம இளவரசியை இன்னைக்கு மட்டும் கொஞ்சம் காலேஜ்ல விட்டுட்டு வந்துருல?”
“என்னது?”, என்று அரண்டு போனான் கதிர்.
அவனை ஒரு மாதிரியாக பார்த்த பார்வதி “வருங்கால பொண்டாட்டியை வண்டில ஏத்திட்டு போக உனக்கு கசக்குதாலே?”, என்று கேட்டாள்.
“அம்மாச்சி நீ சும்மா இருக்கலை நைட் அம்மிக் கல்லை தூக்கி உன் மண்டைல போட்டுருவேன்”, என்று பாட்டியை மிரட்டியவன் “அத்தை வேண்டாம் அத்தை. நான் போகலை. எனக்கு வேலை இருக்கு. நீ இன்பா கூட அவளை அனுப்பு. இல்லைன்னா கவர்ன்மெண்ட் பஸ்ல அவளைப் போகச் சொல்லு”, என்றான்.
“இன்பாவுக்கு நேரமே சரி இல்லை கதிர். இப்ப அந்த சின்ன துரை ஜெயிலுக்கு போன கோபத்துல அவன் சொந்தக்காரங்க ஏதாவது செஞ்சிட்டா? அதனால தான் உன் கூட அவளை அனுப்புறேன்”
“அப்ப பஸ்ல அனுப்பு அத்தை”
“இன்னைக்கு அவ சேலை கட்டிட்டு போகனுமாம் டா. சேலை கட்டிட்டு எப்படி பிள்ளை பஸ்ல அந்த கூட்டத்துல போகும்? ஒரு முக்கா மணி நேரம் தானே? போய் விட்டுட்டு வா டா”
“அத்தை”, என்று அவன் தயங்கிய படியே அழைக்க “நீ எதுக்கு தயங்குறன்னு எனக்கு தெரியும் மருமகனே. யார் என்ன சொன்னாலும் எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு”, என்றாள்.
“மாமா, ஏதாவது சொல்லப் போராறு”
“அவர் தான் அவளை உன் கூட அனுப்பச் சொன்னதே. அவருக்கு ஏதோ வேலை இருக்காம், நீ போய் குளிச்சிட்டு கிளம்பு”, என்று பாமா சொல்லும் போதே அங்கே வந்த இளவரசி “அம்மா, எங்க போயிட்ட? எனக்கு இந்த சேலை கட்டவே தெரியலை”, என்று அரை குறையாக கட்டிய சேலையுடன் அங்கே வந்தாள்.
அவள் குரல் கேட்டதும் மூவரும் அங்கே திரும்பிப் பார்க்க அவள் நின்ற தோரணையில் கதிர் நிலைகுலைந்து போனான். அங்கே நின்ற கதிரைக் கண்டு இளவரசியும் திகைத்து தான் போனாள்.
அவளுடைய பளீரென்று இருந்த இடை தான் கதிரின் கண்ணில் விழுந்தது. கஷ்டப் பட்டு பார்வையை அவன் திருப்பிக் கொண்டான். அவளோ அவனையே பார்த்த படி தான் நின்றாள்.
“கூறு கெட்டவ, எப்படி வந்து நிக்குறா பாரு”? வாடி உள்ள, வாய் மட்டும் எட்டு ஊருக்கு கிழியுது, இன்னும் சேலை கட்டத் தெரியலைன்னு வந்து நில்லு”, என்று அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள் பாமா.
ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு தன்னை சமாதானப் படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தான் கதிர்.
பல தலைமுறை பார்த்த பார்வதிக்கு பேரனின் மனது தெரியாதா என்ன? அவன் மனதின் தவிப்பை உடனே கண்டு கொண்டு விட்டாள்.
அம்மாச்சியின் பேச்சைக் கேட்டு அதிர்ந்து போனவன் முறைத்து விட்டு உள்ளே சென்றான். ஆனாலும் அந்த காட்சி அவன் மனதை விட்டு நீங்காமல் அப்படியே அவன் மனதில் பதிந்து தான் போனது.
அவன் அறைக்குள் சென்ற போது சண்முகநாதன் இன்பாவை கொஞ்சிக் கொண்டிருந்தார். கதிர் உள்ளே சென்றதும் அவன் கன்னத்தை வருடி “ரெண்டு பேரும் பாத்து இருங்க டா பேராண்டிகளா. உங்களுக்கு ஒண்ணுன்னா என் உயிரே நின்னுரும் டா”, என்று சொன்னார் தாத்தா. அவர் கண்கள் கண்ணீரைச் சொறிந்தன.
அவர் அழுவதை தாங்க முடியாமல் “அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டுருவோமா என்ன? என் பையனுக்கும் கதிர் பையனுக்கும் யார் சிலம்பம் எல்லாம் கத்து தருவா? சும்மா கண்ணால ஒண்ணுக்கு அடிக்காம போ தாத்தா. போய் குளி. வேர்வை நாத்தம் தாங்கலை”, என்றான் இன்பா.
“ஆமா ஆமா, போய் குளி தாத்தா”, என்று கதிரும் சொல்ல “நாத்தமா? வியர்வை வாசனைன்னு சொல்லணும் டா. சரி சரி நீங்களும் குளிச்சிட்டு வாங்க., சாப்பிடுவோம்”, என்று சொல்லி இரண்டு அடி நடந்தவர் “கவனமா இருங்க டா கண்ணுங்களா”, என்று சொல்லி விட்டுச் சென்றார். அவரது பாசத்தைக் கண்டு நெகிழ்ந்த கதிரும் இன்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.