அன்று காலை எட்டு மணிக்கு மேல் தான் கண் விழித்தான் இன்பா. கதிர் நன்கு உறக்கத்தில் இருக்க அவனை எழுப்பாமல் காட்டுக்குள் இருக்கும் ஆல மரத்துப் பக்கம் வந்தான். சில்லென்ற காற்று அவன் முகத்தில் வந்து மோதியது. அந்த இதமான சூழ்நிலையைக் கண்களை மூடி அவன் அனுபவிக்கும் போது “இன்னைக்கு வசமா சிக்கிட்டியா? எங்க கிட்ட இருந்து உன்னால தப்பிக்கவே முடியாது டா”, என்ற கர்ண கொடூரமான குரல் கேட்டு அதிர்ந்து போய் கண்களைத் திறந்தான் இன்பா.
எதிரே கொலை வெறியுடனும் கையில் அருவாளுடனும் நின்றான் துரை. அவன் அருகே அவனுடைய மச்சினன்களும் இருந்தார்கள். அவர்கள் மூவரைக் கண்டு கொஞ்சம் திகைத்துப் போனான் இன்பா.
“இப்படி இவனுங்க கிட்ட தனியா வந்து சிக்கிட்டோமே? இப்ப என்ன பண்ணுறது?”, என்று எண்ணி உள்ளுக்குள் பயந்தாலும் “என்ன டா காலைலே எனக்கு தரிசனம் கொடுக்குறீங்க? ஊருக்குள்ள உங்களுக்கு வேற வேலை வெட்டி எதுவும் இல்லையா? காத்தாட காலைக் கடன் முடிக்க வந்தது குத்தமா டா?”, என்று நக்கலாக கேட்டான். அவனுடைய உதடுகள் அப்படி பேசினாலும் உள்ளுக்குள் இவர்களிடம் இருந்து எப்படி தப்பிக்க என்று சிந்தனை ஓடிக் கொண்டு தான் இருந்தது.
“என்ன டா நக்கலா? ஊருக்குள்ள மரியாதையா திரிஞ்ச எங்களை அசிங்கப் படுத்தினது நீயும் உன் அப்பனும் தானே டா? எங்க எல்லாரோட வேலையையும் தான் உன் குடும்பம் எடுத்துக்குச்சே. அப்புறம் எங்களுக்கு என்ன வேலை இருக்கும்? உன் குடும்பத்தை அழிக்கிறது தான் எங்க முழு நேர வேலையே. உங்களால எங்க மரியாதையே போச்சு. அதை நாங்க திருப்பி வாங்க வேண்டாமா? உங்களை ஏதாவது பண்ணினா தானே ஊருக்குள்ள எங்களைப் பாத்து பயப்படுவாங்க? அதனால இன்னைக்கு உன்னைப் போட்டுத் தள்ளப் போறோம்”, என்று சொன்னான் துரை.
“மரியாதை எல்லாம் தானா வரணும் துரை. நீங்களா அடம் பிடிச்சு வாங்க நினைக்க கூடாது. சரி சரி வழியை விடுங்க. நான் போகணும்”
“முடியாது, இவ்வளவு நேரம் உனக்காக தான் டா காத்துட்டு இருந்தோம். கூட அந்த கதிர் பயலும் வருவான்னுல்ல நினைச்சோம்”
“டேய் வயிறு கலக்குது, விடுங்க டா”
“உன்னைப் போக விடுறதுக்கா ஸ்கெட்ச் போட்டு இங்க வந்துருக்கோம்?”
“டேய் இதுக்கு பேர் ஸ்கெட்சா? விடிஞ்சதுல இருந்து நான் கொல்லைக்கு எப்ப வருவேன்னு காத்துட்டு இருந்துக்கிட்டு பிளான் பண்ணிருக்கோம்னு சொல்றீங்களே டா? இங்க பாரு துரை. நான் கவர்ன்மெண்ட் சர்வண்ட். என் மேல கையை வச்ச அப்புறம் நீயும் உன் மச்சான்களும் களி தான் திங்கணும். உங்க குடும்பத்தை பாக்க எவனும் வெளிய இருக்க மாட்டீங்க”
“களி திங்குறது எங்களுக்கு ஒண்ணும் புதுசு இல்லை டா. ஆனா இன்னைக்கு உன்னை உயிரோட விட மாட்டோம். அது தான் எங்களுக்கு வேணும்”, என்று சொல்லிக் கொண்டே துரை அரிவாளை ஓங்கினான்.
இந்த காட்சியை தான் வேலைக்கு சென்று கொண்டிருந்த வினோதினி பார்த்தது. “ஐயோ, பட்ட பகலில் இது என்ன கொடூரம்?”, என்று எண்ணியவள் அடுத்த நொடி “போலீஸ் போலீஸ், ஓடி வாங்க, கொலை கொலை”, என்று கத்தினாள்.
அந்த காட்டுக்குள் திடீரென்று ஒரு பெண் குரல் கேட்டதும் திகைத்துப் போய் அங்கு நின்ற நால்வரும் திரும்பிப் பார்த்தார்கள். வினோதினி மேலும் மேலும் கத்திக் கொண்டிருக்க துரையோ இப்ப என்ன செய்ய என்னும் விதமாய் உடன் வந்தவர்களைப் பார்த்தான்.
“இப்போதைக்கு பதுங்குவோம், அப்புறம் பாத்துக்கலாம். இப்ப டவுண் பஸ் வேற வரும். யாராவது பாத்தா பிரச்சனை”, என்று ஒருவன் சொல்ல மற்றவர்களும் தலையசைத்தார்கள். பின் அவனை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து வேகமாக காட்டுக்குள் ஓடினார்கள். இன்பாவோ திகைப்புடன் வினோதினியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
இருவருக்கும் இடையே வெகு தூரம் இருந்தாலும் அவளது முகமும், அவளது படபடப்பும் அவன் மனதில் ஆழப் பதிந்தது.
“ஆர் யு ஓகே? ஏன் அங்கயே நிக்குறீங்க? இங்க ஓடி வாங்க, இங்க வந்துருங்க”, என்று அவள் இங்கிருந்தே கத்த அவளை நோக்கி ஓடி வந்தான் இன்பா.
அருகில் வந்த அவனைப் பார்த்தவள் அவன் உருவத்தை எல்லாம் அலசி ஆராயாமல் அவனை தலை முதல் கால் வரை பார்த்து அவனுக்கு ஒன்றும் இல்லை என்று தெரிந்ததும் “ஏன் இப்படி? அவங்க எல்லாம் யாரு? ஏன் உங்களை கொல்ல வந்தாங்க?”, என்று கேட்டாள்.
அவள் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லும் நிலையில் அவன் இல்லை. கிராமத்துக்கு ஒட்டாத முக பாவத்துடன், எளிமையான காட்டன் புடவையில் கூட அழகு தேவதை போல இருந்த அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அதுவும் அவளது கண்கள் காட்டும் பாவங்களைப் பார்க்கும் போது அவளிடம் இருந்து அவனால் பார்வையை திருப்பவே முடிய வில்லை. அவளையே பார்த்த படி அவன் இருக்கவும் அவனையும் தன்னுடைய கையில் இருந்த கடிகாரத்தையும் மாறி மாறி பார்த்த வினோதினி “அதிர்ச்சியில் இருக்கான் போல? அதான் பேச மாட்டிக்கான்”, என்று எண்ணிக் கொண்டு “எனக்கு நேரம் ஆச்சு. நீங்க பாத்து வீட்டுக்கு போங்க. இந்த இடத்துல இருக்க வேண்டாம். அவங்க இங்க தான் இருப்பாங்க. திருப்பி வந்துருவாங்க. அதோ பஸ் வருது, அதுல போயிருங்க”, என்று சொல்லி விட்டு அவனுடைய பதிலைக் கூட எதிர் பார்க்காமல் வண்டியை விரட்டினாள்.
போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்கள் அவள் உருவம் மறையும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.
“பெண்ணே நீ யார்? சடுதியில் வந்து எனக்கு உயிர் பிச்சை வழங்கிய நீ யார்?”, என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டவன் தன்னுடைய சட்டைப் பையில் இருந்து போனை எடுத்து கதிரை அழைத்தான்.
அடுத்த நொடியில் பழைய இன்பாவாக மாறிப் போனான். அவளை பற்றிய நினைவுகள் அவன் மனதில் தங்கிப் போனது. கதிர் போனை எடுத்ததும் “மாப்ள நாலு ஆளுங்களை கூட்டிட்டு ஆல மரத்துப் பக்கம் வா”, என்றான்.
“எந்த ஆலமரம் டா? எதுவும் பிரச்சனையா?”
“அதெல்லாம் இல்லை, நீ வா. சாமி கோவிலுக்கு பின்னாடி இருக்குற மரம் டா”
“இதோ வரேன் மச்சான். அப்பா கிட்ட சொல்லட்டுமா?”
“வேண்டாம், அப்பா கிட்ட அப்புறம் சொல்லிக்கலாம். நீ சொன்னதை செய். சீக்கிரம் வா”, என்று சொல்லி போனை வைத்த இன்பா அந்த காட்டுக்குள்ளே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான்.
செடிகளில் அசைவிலே அவர்கள் அங்கே தான் பதுங்கி இருக்கிறார்கள் என்று அவனுக்கு புரிந்து போனது. அவன் அங்கேயே நோட்டம் விட்டுக் கொண்டிருக்க துரையோ ரோட்டில் நிற்கும் இன்பாவைக் கொல்லலாமா வேண்டாமா என்று ஆலோசனையில் இருந்தான்.
அப்போது ஏழு பேருடன் அங்கே வந்தான் கதிர். அனைவரும் அவர்களின் நண்பர்கள் தான்.
“என்ன ஆச்சு மச்சான்? ஏதாவது பிரச்சனையா?”, என்று கேட்டான் கதிர். மற்றவர்களும் அதையே கேட்க “அந்த கடவுள் துணை இல்லைன்னா இந்நேரம் என்னை உயிரோட பாத்துருக்க முடியாது மாப்பிள்ளை”, என்று சொன்ன இன்பாவின் மனதில் வினோதினி முகம் மின்னியது.
“என்ன டா சொல்ற?”, என்று திகைப்பாக கேட்டான் கதிர்.
“அந்த சின்னத்துரையும் அவனோட ரெண்டு மச்சானுங்களும் சுத்தி வளைச்சிட்டாங்க. திடீர்னு வந்து நின்னதும் கையும் ஓடலை காலும் ஓடலை. மத்தது அப்புறம் சொல்றேன். இப்ப ஆகுற வேலையைப் பாப்போம். அவங்க அந்த காட்டுக்குள்ள தான் பதுங்கி இருக்காங்க. வாங்க டா பிடிப்போம்”, என்று சொன்னதும் அடுத்த நொடி அனைவரும் அந்த காட்டுக்குள் புகுந்தார்கள்.
அடுத்த கால் மணி நேரத்தில் அந்த மூவரையும் அடி அடி என்று அடித்து புதூர் போலீஸ் ஸ்டேசனுக்கு அள்ளிக் கொண்டு சென்றார்கள்.
இன்பாவைக் கண்டதும் இன்ஸ்பெக்டர் அவனுக்கு ராஜ மரியாதையைக் கொடுக்க அதை அங்கீகரித்தவன் அந்த மூவர் செய்த செயலை சொன்னான்.
ஏற்கனவே அவர்கள் போலீஸ் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் குற்றவாளிகள் என்பதால் அவர்களை உள்ளே அடைத்தார் இன்ஸ்பெக்டர்.
இன்பா அவர்கள் மேல் கொலை முயற்சி, கள்ளச் சாராயம் காச்சுதல் இது போன்ற பல கேசையும் கொடுத்து விட்டு வெளியே வந்தான்.
மற்ற நண்பர்கள் அனைவரும் இன்பாவிடம் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்ப “ஏறு மச்சான்”, என்று சொன்ன கதிர் இன்பா ஏறியதும் வண்டியை எடுத்தான்.
சிறிது தூரம் சென்றதும் “என்ன மச்சான் நடந்தது? தெளிவா சொல்லு”, என்றான் கதிர்.
“கொல்லைக்கு போகணும்னு வந்தேன் டா”
“நீ எதுக்கு தனியா வர? என்னை எப்பவும் கூப்பிடணும்னு சொல்லிருக்கேன்ல? இதுக்கே மாமா என்னை திட்டுவாங்க”
“அவசரமா வந்துச்சு டா. நான் எந்திச்சதே எட்டு மணிக்கு தான். உன்னை எழுப்பலாம்னு பாத்தா நீ நல்ல தூக்கம். அதான் நான் மட்டும் வந்தேன். நம்ம தோப்பு பக்கம் அந்த நேரத்துல ஆள் இருக்கும். அங்க போக முடியாதுன்னு ஆல மரத்துப் பக்கம் வந்தேன்”
“இனி அங்க போகாத மாப்பிள்ளை. ஏற்கனவே சுடுகாடு வேற”
“நம்மளே ஒரு பேய். நம்ம கிட்ட அதுங்க அண்டுமா?”
“உடனே வியாக்கியானம் பேசுவியே, சரி என்ன நடந்துச்சுன்னு சொல்லு”