“டீ போட்டுத் தரவாக்கா?”, என்று விஜி கேட்டதும் “சரி போடேன் விஜி. அம்மா போடுற மாதிரி இஞ்சி தட்டிப் போடு”, என்றாள்.
“சரிக்கா”, என்று சொல்லி விட்டு இரண்டடி நடந்தவள் “அக்கா டீத்தூளும் சீனியும் இல்லை. ஒரு நூறு ரூபாய் சில்லறை இருந்தா தாயேன்”, என்று கேட்டாள்.
“என் ரூம்ல பர்ஸ்ல இருக்கும். எடுத்துக்கோ”, என்று சொல்லிய வினோதினி ரிஷியுடன் விளையாட ஆரம்பித்தாள். மேலே சென்று பணம் எடுத்து வந்த விஜி அடுத்த கால் மணி நேரத்தில் டீயைக் கொண்டு வந்து கொடுத்தாள்.
அதை வாங்கிப் பருகிய வினோதினிக்கு “யாரும் கடைக்கு போக வில்லையே? பின் எப்போது டீத்தூளும் சீனியும் வாங்கினாள்?”, என்ற கேள்வி தான் தோன்றியது. ஆனால் அதைக் கேட்க வில்லை. அன்னையின் நினைவோடு அந்த தீயை உறிஞ்ச ஆரம்பித்தாள். தேவி அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவுக்கு குடிக்கும் படி இருந்தது விஜி போட்ட டீ.
அப்போது “அக்கா சொல்ல மறந்துட்டேன். உன் பர்ஸ்ல இருந்து ஐநூறு ரூபாய் எடுத்துக்கிட்டேன் சரியா? ரிஷிக்கு பால் மாவு இல்லை. அதான்”, என்றாள்.
“நூறு ரூபாய் எடுப்பான்னு பாத்தா ஐநூறா?”, என்று உள்ளுக்குள் நெருடல் வந்தாலும் அதை பெரிதாக எடுக்காத வினோதினி “பரவால்ல விஜி”, என்று சொல்லி விட்டு அதையே மறந்து போனாள்.
அன்று இரவு “அக்கா சப்பாத்தி போடப் போறேன். கொஞ்சம் உருட்டித் தாயேன். நான் போட்டு எடுக்குறேன்”, என்று விஜி சொல்ல சந்தோசமாகவே அவளுக்கு உருட்டிக் கொடுத்தாள்.
அதன் பின் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட மனதின்றி “எனக்கு பசிக்குது”, என்று சொல்லி சீக்கிரமே சாப்பிட்டு விட்டு அவளுடைய அறைக்குள் சென்று விட்டாள்.
சிறிது நேரம் எதை எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள். வேலை, அங்கு பார்த்த மனிதர்கள், விஜி, ரவி அனைவரைப் பற்றியும் யோசித்தாள். அவள் யோசனையில் இன்பாவும் வந்தான். இப்போதும் அவன் பார்வையில் இருந்தது என்ன என்று குழம்பினாள். கட்டாயம் அவன் பார்வையில் எந்த தவறும் இல்லை என்று புரிந்தது. அதைத் தாண்டி அது ஆர்வமா, தேடலா, எதிர்பார்ப்பா? என்ன என்று அவளுக்கு புரிய வில்லை.
எல்லாவற்றையும் யோசித்த படி அவள் தூங்க ஆரம்பித்ததும் கதவு தட்டப் பட்டது. படக்கென்று கண் விழித்தவள் கதவைத் திறந்தாள். அங்கே விஜி தான் ரிஷியுடன் நின்றிருந்தாள்.
“உன் கூட தான் படுப்பேன்னு ஒரே அழுகை. இவனை இங்க படுக்க வச்சிக்கோ கா”
“சரி கொடு”, என்று அவனை வினோதினி வாங்கிக் கொண்டதும் விஜி சென்று விட்டாள்.
அதன் பின் வினோதினியின் தூக்கம் அவளை விட்டுச் சென்றது. ஏதோ தூங்கி எழுந்த குழந்தை போல விளையாடிக் கொண்டிருந்தான் ரிஷி.
லேசாக தூங்கி எழுந்ததால் தலை வலித்தது வினோதினிக்கு. தூக்கத்தைக் கொடு என்று அவள் கண்கள் கெஞ்சின. மற்ற நேரமாக இருந்திருந்தால் அவனை அவள் சந்தோஷமாக பார்த்திருப்பாள் தான். ஆனால் முந்தைய நாள் இரவு பயணம், அடுத்த நாள் பகல் வேலை என்பதால் தான் அவளுக்கு கஷ்டமாக இருந்தது. ஓய்வுக்கு அவளது உடலும் கண்களும் கெஞ்சின. ஆனால் பகல் முழுவதும் விஜியுடன் சேர்ந்து நன்கு உறங்கிய குழந்தைக்கு அது தெரியுமா என்ன?
ஒரு வழியாக அவனைத் தூங்க வைத்து விட்டு வினோதினி படுக்கும் போது இரவு ஒரு மணி ஆகி இருந்தது. அதன் பின் கஷ்டப் பட்டு தூங்கிப் போனாள்.
அடுத்த நாள் எழும் போதே தலை வலியுடன் தான் எழுந்தாள். ரிஷி அவள் மேல் கால் போட்ட படி நல்ல உறக்கத்தில் இருந்தான். அவனது அழகில் மனதை தொலைத்தவள் அவன் நெற்றியில் மெதுவாக இதழ் பதித்து விட்டு குளிக்கச் சென்றாள்.
குளித்து உடை மாற்றி அவள் கீழே கிளம்பி வரும் வரைக்கும் அவன் உறங்கிக் கொண்டு தான் இருந்தான். கீழே அவள் வரும் போது விஜியின் அறைக் கதவு திறக்கப் படவே இல்லை.
அடுப்படியில் சென்று பார்த்தாள். நேற்று போட்டு வைத்த இரண்டு சப்பாத்தி தான் காய்ந்து கொண்டு இருந்தது. “இவ முன்னாடியே முடியாதுன்னு சொன்னா ஏதாவது செஞ்சிருப்பேனே?”, என்று எண்ணிக் கொண்டு அடுப்படியில் இருந்து வெளியே வரும் போது அலங்கோலமான நிலையில் வெளியே வந்தாள் விஜி.
அவளது நிலையே இரவு உள்ளே என்ன நடந்திருக்கும் என்று வினோதினிக்கு புரிய வைத்தது. ஏதோ ஒரு சங்கடம் அகம் எங்கும் சூழ “நான் இவ வீட்டுக்கு வந்துருக்கவே கூடாது”, என்று எண்ணிக் கொண்டாள்.
“சாரிக்கா, நேத்து தூங்க நேரம் ஆச்சு. அதான் எதுவும் செய்யலை. நேத்து உள்ள சப்பாத்தி இருக்கு. சாப்பிட்டு போ. மதியத்துக்கு கடைல வாங்கிக்கோ”
“இல்லை விஜி, இப்ப எனக்கு சாப்பாடு வேண்டாம். மதியம் நான் வெளிய பாத்துக்குறேன். ரிஷி தூங்குறான். பாத்துக்கோ”, என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டாள்.
சரியாக அவள் அந்த ஊரில் இருந்து கிளம்பி மெயின் ரோட்டுக்கு வரும் போது ஒரு மரத்தடியில் வண்டி மீது அமர்ந்திருந்தான் இன்பா. அவன் அருகே கதிரும் நின்றிருந்தான்.
இன்பாவைக் கண்ட வினோதினி “இவன் எதுக்கு இங்க நிக்குறான்? இவனுக்கு இந்த ஊர் இல்லையே?”, என்று எண்ணிக் கொண்டாள்.
தலை வலி மண்டையை பிளக்க “யார் எங்க இருந்தா நமக்கென்ன?”, என்று எண்ணிக் கொண்டு கிளம்பி விட்டாள்.
“மச்சான், அவ போறா பாரு”, என்று கதிர் சொன்னதும் இன்பா வண்டியைக் கிளப்பினான்.
“அவ பைக் முன்னாடி போய் நிறுத்தி பேசு மச்சான்”, என்றான் கதிர்.
“எங்க நிப்பாட்டுறது? அங்க பாரு நம்ம சின்ன சித்தப்பா வரார்”, என்று சொன்னான் இன்பா. அவர்கள் எதிரே அவர்கள் சித்தப்பா வண்டியில் வந்து கொண்டிருந்தார். இவர்களைப் பார்த்ததும் கை ஆட்டி விட்டுச் சென்றார்.
மீண்டும் அவர்கள் வண்டி வினோதினியைப் பாலோ செய்ய அதைப் பார்த்த வினோதினிக்கு “இவங்க நம்ம பின்னாடி தான் வராங்களா?”, என்ற குழப்பம் வந்தது.
“சே சே, இவர் தான் தினமும் பேங்க்க்கு வருவாரமே? அதுக்கு கூட வரலாம். நாம தப்பா நினைக்க கூடாது”, என்று எண்ணிக் கொண்டு வண்டியை ஓட்டிச் சென்றாள். இன்பா வண்டி அவள் பின்னேயே தான் சென்றது. அவர்களுக்கு தெரிந்த ஆட்களாக எதிரில் வரும் போது அவளது வண்டியை மறித்து அவளிடம் பேசுவது தவறு என்று புரிந்தது இன்பாவுக்கு.
“மச்சான் அவ வண்டியை நிறுத்தி பேச வேண்டியதை பேசேன் டா”, என்றான் கதிர்.
“இந்த ரோட்ல அவ கிட்ட பேசினேன்னு வை. நம்ம ஊர் ஆள் பாத்து உடனே நம்ம வீட்ல வத்தி வச்சிரும். இரு டா ஏதாவது சந்தர்பம் வருதான்னு பாப்போம்”
“நீ வரும் வரும்னு வெயிட் பண்ணி கடைசில அவ பேங்க்கே வந்துட்டு”, என்று கதிர் சொல்லும் போது அவள் வேலை செய்யும் பேங்க் வந்திருந்தது. அவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டே உள்ளே சென்றாள். அவர்கள் தன்னையே பார்ப்பது போல தான் இருந்தது அவளுக்கு.
குழப்பத்துடன் உள்ளே சென்றவள் இன்பா உள்ளே வருவான் வருவான் என்று எதிர் பார்க்க அவனோ கதிரை அழைத்துக் கொண்டு சென்றே விட்டான். அவளும் தலை வலியுடன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். காலையில் உண்ணாத வயிறு வேறு அவளைப் பாடாய்ப் படுத்தியது.
மதிய உணவு இடைவேளை வந்ததும் “எப்படி சாப்பாடு வாங்க?”, என்று குழம்பினாள். பியுனை அழைத்து வாங்கச் சொல்லலாம் தான். ஆனால் வேலைக்கு சேர்ந்த இரண்டே நாளில் அவனை வேலை ஏவுவது அவளுக்கே சரி என்று பட வில்லை.
வரும் போதே உணவுக் கடையைப் பார்த்திருந்ததால் அவளே பர்சை எடுத்துக் கொண்டு நடந்தாள். கடைக்கு சென்றதும் ஏண்டா வந்தோம் என்று ஆனது அவளுக்கு. அந்த ஊரில் இரண்டு உணவகம் தான் இருக்க அங்கேயும் பரோட்டா வாங்குவதற்க்காக ஆண்களின் கூட்டம் அலை மோதியது.
அனைவரும் ஆண்களாக இருக்க தனி ஒரு பெண்ணாக இருப்பது அவளுக்கே ஒரு மாதிரி இருந்தது. திரும்பிப் போய் விடலாமா என்று எண்ணினாள் வினோதினி.
அப்போது “சாப்பாடு வாங்க வந்தியா மா?”, என்று கேட்டார் ஒரு தாத்தா.