கலங்கிய கண்களுடன் அமர்ந்திருந்த தேவியிடம் “என்ன ஆச்சு மா? அக்கா ஏன் என் கிட்ட பேசலை?”, என்று கேட்டாள் அணு.
“அவசரப் பட்டு வார்த்தையைக் கொட்டிட்டேன் டி. அங்க என்ன நடக்குதுன்னு எனக்கு ஒண்ணும் புரியலை”, என்று ஆரம்பித்த தேவி அனைத்தையும் சொல்லி விட்டாள்.
“நீயா மா அப்படி பேசினது? அதுவும் வினு அக்கா கிட்ட. அவ நெருப்பு மா. அவளைப் போய் அந்த லூசு சொல்லுச்சுன்னு இப்படி பேசிருக்க?”, என்று கோபமாக கேட்டாள் அணு.
“இல்லை டி அவ அப்படிச் சொன்னதும் ..”
“அவ சொன்னா உன் மூளையை நீ என்ன அடகு கடைலயா வச்சிருக்க? ஒரு அம்மாவா நீ விசாரிக்கிறது தப்பு இல்லை மா. அது சரியும் கூட. நாங்க தப்பு செஞ்சா நீ கண்டிக்கவும் செய்யணும். அது எல்லாம் எப்படி நியாயமோ நீ பெத்த பொண்ணுங்களை முதல்ல நீ நம்பனும் மா. உனக்கு ஏன் அக்கா மேல அந்த நம்பிக்கை இல்லாம போச்சு? நாளைக்கு என்னைப் பத்தி யாராவது சொன்னா நீ அதை நம்பி என்னையும் இப்படி தான் பேசுவியா?”
“இப்ப என்னோட தப்பு புரியுது அணு. நான் வினுவை நம்புறேன். ஆனா அவ இனி என் கிட்ட பேச மாட்டேன்னு சொல்லிட்டா”, என்று அழுதாள்.
அன்னை அழுவது கஷ்டமாக இருந்தாலும் அக்காவுக்காக யோசிக்கவும் செய்தாள். “சரி விடு. உன் மேல தான் தப்பிருக்கு. ஒரு ரெண்டு நாள் கழிச்சு அக்காவை சமாதானப் படுத்து. இப்ப அழாத. ஆனா நான் உன் கிட்ட முன்னாடியே சொன்னேன் தானே? அக்காவை விஜி வீட்டுக்கு அனுப்பாதேன்னு. விஜி ஒரு சுயநல பிசாசு மா, அவ சரியான பச்சோந்தி. அவ அக்காவை எவ்வளவு கஷ்டப் படுத்தப் போறாளோ? அது தான் கஷ்டமாக இருக்கு“, என்று அணு சொல்லும் போது வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
“இதோ வந்துட்டார்ல இந்த வீட்டு மஹாராஜா. அங்க பாரு சாரம் அவுந்தது கூட தெரியலை. அந்த அளவுக்கு மூக்கு முட்ட குடிச்சிருக்கார். இவரை ஒரு நாளாவது நீ கேள்வி கேட்டுருக்கியா? உனக்கே ஆம்பளைங்கன்னா உசத்தி, பொண்ணுன்னா கீழன்னு எண்ணம் இருக்கு அப்படி தானே?”
“என்ன டி இப்படி எல்லாம் பேசுற? நான் என்னைக்காவது ஆம்பளைப் பிள்ளைங்களுக்கு ஏங்கிருக்கேனா?”
“ஆனா நான் ஏங்கிருக்கேன் மா”
“அணு”
“எனக்கு ஒரு அண்ணன் இருந்தா இந்த ஆளை தூக்கி போட்டு மிதிச்சிருக்க மாட்டானான்னு ஏக்கம் இருக்கு. ஏன் அக்கா அடிக்கடி இந்த ஆளை எதுத்து கேள்வி கேக்கும் போதும் நீ அக்காவைத் தான் அடக்கி வச்ச. இப்ப வந்து நாலு வெளுப்பார் வாங்கிக்கோ. உன் புருஷன் உன்னை அடிச்சாலும் மிதிச்சாலும் தான் நீ பேசாம இருப்பியே?”, என்று அணு சொல்லும் போதே அங்கு வந்தார் கிருஷ்ணன்.
அவருக்கு குடிவெறியில் இருவர் அமர்ந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. ஆனால் யார் எது என்று கூட தெரிய வில்லை.
“என்ன டி தேவி, வெட்டி கதை பேசிட்டு இருக்க? மனுஷன் பசியோட வருவானு தெரியாது. சாப்பாடு போடு”, என்று கத்தினார்.
அவரை முறைத்த படி இருவரும் அசையாமல் இருந்தார்கள். மற்ற நேரமாக இருந்தால் அவர் சொன்னவுடன் தேவி அவருக்கு சாப்பாடு எடுத்து வைத்திருப்பாள். இன்று மகளின் மனதை நோகடித்த வலியில் அவளால் அதைச் செய்ய முடிய வில்லை.
“என்ன டி சொல்லிட்டு இருக்கேன்? பேசாம உக்காந்துட்டு இருக்க?”, என்ற படி அவர் அணுவை அடிக்க கையை ஓங்க அணு ஒரு நொடி பயந்தே விட்டாள்.
அந்த வீட்டில் அனைவரும் கிருஷ்ணனிடம் அடி வாங்கி இருக்கிறார்கள் அனுவைத் தவிர. எப்போதும் வினோதினி அணுவைக் காப்பாற்றி விடுவாள்.
இன்று அடி வாங்கப் போறோம் என்று அவள் கண்களை இறுக மூடி பயத்துடன் அமர்ந்திருக்க வேகமாக எழுந்த தேவி “அவ மேல கையை வச்ச கொன்னுறுவேன்”, என்றாள்.
மனைவி புறம் திரும்பியவர் “என்ன டி வாய் நீளுது? மரியாதை இல்லாம பேசுற?”, என்று கத்திய படியே மனைவி புறம் பாய தேவிக்கு எங்கிருந்து தான் அவ்வளவு வேகம் வந்ததோ அவரை வேகமாக தள்ளி விட்டாள்.
“அம்மா”, என்று கத்திய படி நிலை குலைந்து போய் தரையில் மல்லாக்க விழுந்தார் கிருஷ்ணன். இந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்த அணுவுக்கு வியப்பு தான்.
“என்ன டி… என்னையே தள்ளி விடுவியா நீ? உன்னை இன்னைக்கு கொன்னுறேன் பாரு”, என்று கத்திக் கொண்டே கிருஷ்ணன் எழுந்து வர சுத்தி எதையோ தேடிய தேவி தண்ணீர் குடிக்கும் செம்பை எடுத்து அவர் மீது வீசினாள்.
அந்த பழைய காலத்து பித்தளைச் செம்பு அவர் நெற்றியை சரியாக பதம் பார்த்தது. சரியாக கண்ணிமைக்கு மேல் பட்டு ரத்தம் கொட்டியது. ரத்தத்தைப் பார்த்ததும் கிருஷ்ணன் உண்மையில் பயந்து போனார்.
அவருக்கு போதை கூட கொஞ்சம் இறங்கி விட்டது. திருமணம் முடிந்து இத்தனை வருடத்தில் அவர் என்ன அடித்தாலும் வாங்கிக் கொண்டு போறவளின் இந்த வெறிச்செயலில் திகைத்து நின்றார்.
“அம்மா அவர் தலையில ரத்தம் வருது மா”, என்றாள் அணு.
“வரட்டும், நல்லா வரட்டும். உயிரே கூட போகட்டும். இவன் இருந்து என்ன சாதிக்கப் போறான்? இருக்குறதும் ஒண்ணு தான். போய்ச் சேருறதும் ஒண்ணு தான். இத்தனை வருஷம் இவனால நான் பட்ட கஷ்டம் போதும்”, என்று சொல்லிக் கொண்டே அழுதாள் தேவி.
“இன்னைக்கு உனக்கு என்ன டி ஆச்சு?”, என்று திகைத்துப் போய்க் கேட்டார் கிருஷ்ணன்.
“ஏதாவது பேசின மண்டையைப் பொலந்துருவேன். நீயெல்லாம் ஒரு மனுசனா? நாய் கூட நன்றியா இருக்கும். உன்னால நாங்க சீரழிஞ்சது போதும். இனி நீ எங்களுக்கு தேவையில்லை. முதல்ல வீட்டை விட்டு வெளிய போ”
“நான் ஏன் டி போகணும்? இது என் வீடு. நீ போ. ஆத்தாலும் மகளும் இனி இங்க ஒரு நிமிஷம் கூட இருக்க கூடாது”
“என்னது நான் போகனுமா? நான் ஏன் போகணும்? நீயெல்லாம் ஒரு ஆளுன்னு உன் கிட்ட வீம்பு போட்டு நான் என் பொண்ணோட நடு ரோட்ல நிக்கணுமா? உன்னைக் கொன்னுட்டு ஜெயிலுக்கு வேணும்னாலும் போவேன். ஆனா இந்த வீட்டை விட்டு போக மாட்டேன். எத்தனையோ பேர் தினமும் சாகுறாங்க. உனக்கு ஏன் யா அந்த சாவு வரலை?”, என்று தேவி சொன்னதும் மகளைப் பார்த்தார் கிருஷ்ணன்.
“ஏய் சின்னக் கழுதை அவளை அமைதியா இருக்கச் சொல்லு. அப்பாவை அவ அடிக்கிறா,. திட்டுறா, சாகச் சொல்றா. நீ அமைதியா வேடிக்கை பாக்குற?”, என்று அணுவிடம் கேட்டார்.
“அப்பாவா? நீங்களா? அந்த உறவுக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?”, என்று கேட்டாள் அணு.
“என்ன டி உனக்கும் வாய் நீழுது? பெரியவ சம்பாதிக்கிற தைரியமா?”
“அப்படியே வச்சிக்கோங்க. அவ இன்னைக்கு போனாலும் எனக்கு கஞ்சி ஊத்துவா. என்னை படிக்க வைப்பா. ஒரு அப்பனா நீங்க எனக்கு என்ன செஞ்சிருக்கீங்க? உங்களால எனக்கு என்ன கிடைச்சிருக்கு? எனக்கு பாதுகாப்பா இருந்துருக்கீங்களா? இல்லை உனக்கு நான் இருக்கேன்னு தைரியம் கொடுத்துருக்கீங்களா?”
“பொட்டைக் கழுதை உனக்கு அவ்வளவு வாய்? உன் அம்மா உன்னை அப்படி வளத்து வச்சிருக்கா. அதுக்கு தான் பையன் வேணும் வேணும்னு ஆசைப் பட்டேன்”
“உங்களுக்கு பையன் இல்லைன்னு சந்தோஷப் படுங்க. ஒரு வேளை நானோ வினோதினி அக்காவோ பையனா பிறந்திருந்தா உங்களை எல்லாம் எங்கயோ விரட்டி அடிச்சிருப்போம். அது முடியலைன்னா செருப்பைக் கழட்டியாவது அடிச்சிருப்போம்”, என்று ஆவேசத்துடன் அணு சொல்ல திகைத்துப் போனார் கிருஷ்ணன்.
அந்த வார்த்தையைக் கேட்டு உள்ளுக்குள் துடித்துப் போனார் என்று சொன்னால் சரியாக இருக்கும். அன்னை தந்தை முகத்தைப் பார்த்து தான் கொஞ்சம் அதிகமாக பேசி விட்டோம் போல என்று அணுவுக்கே தோன்றியது. அதனால் அடுத்து எதுவும் பேசாமல் அவள் அமைதியாகி விட்டாள்.
“கேட்டுகிட்டியா யா? எப்படி ஒரு வார்த்தை உன் பொண்ணு வாயில இருந்து வருதுன்னு? இதுக்கு நீ நாண்டுகிட்டு செத்துருக்கலாம். அந்த பிஞ்சு மனசுல எவ்வளவு வேதனை இருந்தா இப்படி பேசும்? குடிச்சு குடிச்சு என்னத்த யா சாதிச்ச? எங்க வாழ்க்கையை சீரழிச்சது தான் மிச்சம். நீ மட்டும் ஒழுங்கா இருந்திருந்தா நான் என் பொண்ணுங்களை எப்படி வளத்துருப்பேன் தெரியுமா?”, என்று கேட்டாள் தேவி.
“அதான் வளத்த லட்சணம் தெரியுதே. ஒருத்தி எவனையோ இழுத்துட்டு ஓடினா. இன்னொருத்தி என்னை மதிக்கவே மாட்டா. இப்ப இவளும். இதான் உன் வளர்ப்பு லட்சணம் தேவி”
“நான் இந்த அளவுக்கு வளத்ததுனால தான் நீ இன்னும் உயிரோட இருக்க. இல்லைன்னா எப்பவோ செத்துருப்ப. விஜி ஓடிப் போனது என் வளர்ப்பால யா? அப்படியே இருக்கட்டும். நீ அப்பனா என்ன செஞ்ச அவளுக்கு? நீ ஒழுங்கா இருந்திருந்தா அவளை அன்பா பாத்துகிட்டிருந்தா அவ எதுக்கு இன்னொரு ஆம்பளையை தேடப் போறா”
“தேவி”
“வாயை மூடு. என் பேரைச் சொல்லக் கூட உனக்கு உரிமை இல்லை. இன்னைக்கு சொல்றேன் கேட்டுக்கோ. இன்னைக்கு தான் கடைசி. இனி குடிச்ச இந்த வீட்டுப் பக்கம் வந்திறாத. அப்படிக் குடிச்சிட்டு வீட்டுக்கு வந்தா நானே கிரைண்டர் கல்லை தலைல போட்டுக் கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிருவேன். என் சின்னப் பொண்ணை என் பெரிய பொண்ணு பாத்துக்குவா”
“அப்படின்னா நான் யாருக்கும் வேண்டாதவனா ஆயிட்டேன்ல?”, என்று தளர்ந்து போய்க் கேட்டார்.
“நீ அப்படி தான் யா இருக்க. உன்னால எங்களுக்கு என்ன கிடைச்சது? எங்களுக்கு நீ எதுவும் செய்ய வேண்டாம். குடிச்சு தொலைக்காமலாவது இருக்கலாம்ல? எங்க பணம் வச்சாலும் திருடிட்டு போய் குடிச்சே அழிச்ச. இவ்வளவு நாள் இந்த பிள்ளைகளுக்கு ஒரு அப்பா வேணும்னு ஆசைப் பட்டேன். ஆனா நீ இப்படி இருந்தா என் பிள்ளைகளுக்கு எந்த நல்லதும் நடக்காது. நீ குடிச்சிட்டு மல்லாந்து கிடக்குற வீட்ல எவன் யா என் பொண்ணை பொண்ணு கேட்டு வருவான். கட்டிக்குடுக்கிற வயசுல என் பிள்ளை வேலைக்கு போகுது? ஒழுங்கு மரியாதையா குடிக்காம இருக்குறதா இருந்தா இரு. இல்லையா வீட்டை விட்டு போய்கிட்டே இரு. நீ இருந்தும் இல்லாம இருக்குறதை விட இல்லாம போறதே மேல். நீ எங்கயோ ஓடிட்டன்னு நான் எல்லார்கிட்டயும் சொல்லிக்கிறேன். இல்ல செத்துட்டன்னு சொல்லிக்கிறேன்”, என்று தேவி சொல்லி விட்டு தளர்ந்து போய் அமர ரத்தம் வழியும் முகத்துடன் ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்தார் கிருஷ்ணன்.