அன்று மதியம் அருகில் இருந்தவர் உணவு வாங்கச் செல்ல அவளும் எழுந்தாள்.
“உனக்கு ஏதாவது வாங்கணுமா மா?”, என்று அவர் கேட்டதும் “ஆமா சார்”, என்றாள்.
“வெஜிட்டேரியன் ஹோட்டல்ல வாங்கிட்டு வரவா?”, என்று அவர் கேட்டதும் தான் தாமதம் சந்தோஷமாக சரி என்றவள் ஒரு நூறு ரூபாய் தாளை எடுத்துக் கொடுத்தாள்.
“வந்து வாங்கிக்கிறேன் மா”, என்று சொல்லிச் சென்றவர் உணவு பொட்டலத்துடன் வந்தார். பணம் எவ்வளவு என்று கேட்டு வேண்டாம் என்பவரிடம் வற்புறுத்தி கொடுத்தாள்.
கூடவே தினமும் அவளுக்கு உணவு வாங்க பியூனிடம் சொல்லச் சொல்லியும் கேட்டுக் கொண்டாள் .
“அதுக்கென்ன மேடம்? நான் வாங்கித் தரேன்”, என்று பியூனே நேரடியாக அவளிடம் சொல்லி விட “அப்பாடா சாப்பாடு பிரச்சனை முடிஞ்சிருச்சு”, என்று எண்ணிக் கொண்டாள்.
அவர் வாங்கி வந்தது சாதாரண தக்காளி சாதம் தான். உணவின் சுவையும் ஓரளவுக்கு நன்றாக தான் இருந்தது. பசியும் சேர்ந்து கொள்ள நிம்மதியாக உண்டாள்.
பேங்கில் இருந்து வெளியே வந்த இன்பா நேராக சென்று நின்றது அவனுடைய ஆபீஸ் அறைக்கு தான். அவனைப் பார்க்க ஆட்கள் குவிந்திருக்க அவர்களின் வேலையை முதலில் கவனித்தான்.
இன்று ஆட்கள் அதிகம் இருக்கவே மதிய உணவு கூட உண்ணப் போகாமல் ஒவ்வொருவரையும் பார்த்தான்.
கிட்டத்தட்ட நான்கு மணிக்கு யாரும் இல்லாமல் போக உதவியாளரிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு கிளம்பினான். வீட்டுக்குச் சென்றதும் பாமா அவனை உணவு உண்ண அழைக்க “இப்ப வேண்டாம் மா. ஏதாவது ஜூஸ் மட்டும் போட்டுக் கொடு”, என்று சொல்லி விட்டு அறைக்குள் வந்து உடை மாற்றினான்.
“ஜூஸ் குடிக்கிறதை விட பழங்களை கடிச்சு மென்னு சாப்பிடுறது தான் நல்லது. இந்தா”, என்று சொல்லி ஒரு கிண்ணத்தைக் கொடுத்தாள் பாமா.
அதில் பழங்களை சிறிதாக அரிந்து ஸ்பூன் போட்டிருந்தாள். அதை எடுத்துக் கொண்டு அறைக்குச் சென்றவன் கிண்ணத்தை டேபிளில் வைத்து விட்டு தன்னுடைய போனை எடுத்தான்.
அவளுடைய எண்ணில் இருந்து எடுத்த தேவியின் எண்ணுக்கு அழைத்தான். புதியதாக மாவு அரைத்து கிண்டிக் கொண்டிருந்தாள் தேவி.
அவள் அருகில் அமர்ந்து அவள் செய்து வைத்திருந்த முறுக்கை ஒரு பாத்திரத்தில் நிரப்பிக் கொண்டிருந்தார் கிருஷ்ணன். அப்போது தேவிக்கு போன் வரவும் “ஏங்க அந்த போனை கொஞ்சம் எடுத்து தாங்களேன். கை எல்லாம் மாவா இருக்கு”, என்றாள்.
உடனே அதை எடுத்து வந்து அவளிடம் நீட்ட அதை எடுத்து ஸ்பீக்கரில் போட்டாள்.
“ஹலோ”, என்றான் இன்பா.
ஒரு ஆண் குரல் கேட்கவும் “ஏதோ பலகாரம் செய்யச் சொல்ல அழைத்திருக்கிறார் போல?”, என்று எண்ணி “சொல்லுங்க சார்”, என்றாள் தேவி.
“வினோதினி அம்மாங்களா?”
“ஆமா, என் பொண்ணுக்கு என்ன ஆச்சு?”, என்று அவள் உண்மையிலே பதற “பதறாதீங்க மா. அவங்களுக்கு ஒண்ணும் இல்லை. அவங்களைப் பத்தின ஒரு விஷயம் பேசணும். அதனால தான் போன் பண்ணுனேன்”, என்றான் இன்பா.
அவன் அப்படிச் சொன்னதும் குழப்பமாக கிருஷ்ணனைப் பார்த்தாள். அவர் புருவமும் உயர்ந்தது.
தேவி அமைதியாக இருக்கவும் “வினோதினி நல்லா இருக்கணும்னு தான் மா பேசுறேன். தப்பான எண்ணத்துல இல்லை. பேசலாங்களா?”, என்று கேட்டான் இன்பா.
“நீங்க என்னை அம்மான்னு சொல்லிப் பேசுறதுலே உங்க மனசுல தப்பு இல்லைன்னு தெரியுது தம்பி. சொல்லுங்க என்ன விஷயம்?”, என்று தேவி கேட்டதும் தான் யார் என்றும் என்ன வேலை செய்கிறான் என்றும் வினோதினியை அவனுக்கு எப்படி தெரியும் என்றும் விஜியின் வீட்டில் அவள் நிலை எப்படி இருக்கிறது என்றும் அனைத்தையும் சொன்னான்.
மகளின் நிலை அறிந்து துடித்துப் போனாள் தேவி. கிருஷ்ணனுக்கே கஷ்டமாக இருந்தது. விஜியா இப்படி எல்லாம் செய்தாள் என்று இருவருக்குமே அதிர்ச்சி தான்.
“தம்பி நீங்க சொல்றது எல்லாம் உண்மையா? என் பிள்ளை சாப்பிடாம ரோட்ல மயங்கி கிடந்தாளா?”, என்று கேட்டாள் தேவி.
“சத்தியமான உண்மை மா. இதை நீங்க நம்பாம அவங்களைக் கஷ்டப் படுத்திருக்கீங்க? அவங்களைப் பொறுத்த வரைக்கும் அவங்களுக்கு உதவி செஞ்ச சாதாரண மனுஷன் நான். எனக்கும் அவங்களுக்கும் வேற எந்த சம்பந்தமும் இல்லை”, என்று அப்போதைய உண்மையைச் சொன்னான். என்ன தான் அவனுக்கு அவளைப் பிடிக்கும் என்றாலும் அவளுக்கு அவன் சாதாரண மனிதன் தானே?
“நான் நம்புறேன் தம்பி. என் பொண்ணை மட்டும் இல்லை. உங்களையும் தான். எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?”
“சொல்லுங்க மா”
“என் பொண்ணுக்கு ஒரு வீடு பாத்துக் கொடுக்க முடியுமா?”
“கட்டாயம் பாக்குறேன் மா. இன்னும் சொல்லப் போனா அன்னைக்கு சொன்ன உடனே பாத்துட்டேன். நான் இப்ப வீட்டைப் பத்திச் சொல்றேன் உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா வேற வீடு பாக்குறேன். எங்க வீட்டுக்கு பக்கத்துல எங்க பழைய வீடு இருக்கு. அந்த வீட்டைத் தான் மா சொன்னேன். அதுல வினோதினி இருந்தா அவங்களுக்கு பாதுகாப்பா இருக்கும். எங்க காம்பவுண்ட் உள்ள தான் அந்த வீடும் இருக்கு. எங்க வீட்ல அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி எல்லாரும் இருக்காங்க. எனக்கும் ஒரு தங்கச்சி இருக்கு. என்னை நம்பினா அந்த வீடு ஒகேன்னா சொல்லுங்க. இல்லைன்னா வேற பாக்குறேன்”
“அந்த வீடே இருக்கட்டும் தம்பி. நான் உங்களை நம்புறேன். அப்புறம் அவ கிட்ட என்னை பேச வைக்கிறீங்களா? நான் போன் பண்ணினா எடுக்க மாட்டா”
“அம்மா அவங்க மனசு உங்க பேச்சால ரொம்ப காயப் பட்டிருக்கு. அதனால நீங்க கொஞ்சம் நேர்ல கிளம்பி வந்தா நல்லா இருக்கும். அப்படியே வீட்டையும் பாத்துட்டு போவீங்கல்ல?”
“எனக்கு என் பொண்ணு சந்தோஷத்தை விட வேற ஒண்ணும் பெருசு இல்லை தம்பி. நான் கட்டாயம் வரேன்”
“சரி மா”
“ரொம்ப நன்றி தம்பி. மத்தது எல்லாம் நேர்ல வந்து பேசலாம்”
“சரி மா. நீங்க இங்க வந்ததும் என்னைக் கூப்பிடுங்க. நான் உங்களைப் பாக்க வரேன். இது தான் என் நம்பர். அப்புறம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வாங்க மா. நீங்க வர வரைக்கும் வினோதினி ஒரு தடவை தான் சாப்பிடுவாங்க”
அவன் சொன்னது உண்மை என்பதால் “சீக்கிரம் வரோம் தம்பி”, என்று சொல்லி விட்டு வைத்தாள்.
“என்னால தான் என் பொண்ணுக்கு இப்படி ஒரு நிலை. விஜி இப்படி இருக்க நான் தான் காரணம்”, என்று கலங்கிய குரலில் சொன்னார் கிருஷ்ணன்.
“நீங்க கவலைப்படாதீங்க, எல்லாம் சரி பண்ணுவோம். நாம ஊருக்கு போவோமாங்க?”
“போவோம் தேவி. ரெண்டு நாள் அணுவுக்கும் லீவ் தான் இருக்கும். இல்லைன்னா கூட லீவ் போடச் சொல்லலாம். நாம மூணு பேரும் போகலாம்”
பள்ளி முடிந்து வந்த அணு அம்மாவுடன் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த கிருஷ்ணனைப் பார்த்து திகைத்து போனாள். அவர் பாசமாக அவள் தலையை வருட “அப்பா”, என்ற படி அவள் அவர் நெஞ்சில் சாய்ந்து அழுதே விட்டாள். இதே அன்பை வினோதினியும் தன்னிடம் பிரதிபலிப்பாளா என்று அவர் நெஞ்சம் ஏங்கியது.
அடுத்த நாள் காலையில் அனைவரும் ஊருக்கு கிளம்புவதாக முடிவு செய்தார்கள். ஊருக்கு போகிறோம் என்றதும், வினோதினியைப் பார்க்க போவதும் சேர்ந்து அணுவுக்கு கொண்டாட்டத்தைக் கொடுத்தது.
வினோதினிக்கு கூடிய சீக்கிரம் நல்லது நடக்கும் என்று நிம்மதி அடைந்தான் இன்பா. அன்று மாலை வீட்டுக்கு வந்ததும் கதிர் அவனிடம் விசாரிக்க நடந்ததைச் சொன்னான்.
“மச்சான், நீ என்ன சொல்ற? நம்ம வீட்டுக்கா வர வைக்கப் போற?”, என்று அவன் அதிர்வாக கேட்க “நீ தானே சொன்ன? அதனால தான்”, என்றான் இன்பா.
“நான் என்ன மச்சான் சொன்னேன்?”
“நீ தானே சொன்ன, அவ கிட்ட வீட்ல பேச முடியாது. பேங்க்ல பேச முடியாது. வரப்பவும் போறப்பவும் பேச முடியாதுன்னு…”
“அதை நீ தான் மச்சான் சொன்ன?”
“அதை நான் தான் சொன்னேன்னு நீ ஒத்துக்க மாட்டியோ?”
“ஒத்துக்குறேன். நான் தான் சொன்னேன் போதுமா?”
“அதுக்கு தான் அவ நம்ம வீட்டுக்கிட்டயே இருக்க பிளான் போட்டேன். முதல்ல அவளை உன் வீட்ல இருக்க வைக்கலாம்னு தான் நினைச்சேன். ஆனா அது இதை விட வசதி இல்லைப் பாத்தியா? அதான். இனி கிட்ட இருந்து அவளைப் பாப்பேன். மாடில இருந்து சைட் அடிப்பேன். எப்படி என் பிளான்?”
“எமகாதகன் மச்சான் நீ”
“என்னை ரொம்ப புகழாத. எனக்கு வெக்கமா இருக்கு”, என்று இன்பா கொஞ்ச அவனை வேற்றுகிரக வாசி போல பார்த்தான் கதிர்.