“அது வந்து பா…”, என்று ஆரம்பித்தான் இன்பா. அனைவருக்குமே விஷயம் என்ன என்று புரிந்து விட்டது.
“எனக்கு புரிஞ்சிருச்சு. அந்த பொண்ணுக்கு தங்க இடம் இல்லை. இப்ப என்ன அந்த பொண்ணை இங்க தங்க வைக்கணுமா?”, என்று கேட்டார் சிதம்பரம்.
“இங்க இல்லைப்பா. நம்ம பழைய வீட்ல….”, என்ற அவன் தயங்க “நீங்க ரெண்டு பையங்க இருக்க வீட்ல ஒரு வயசு பொண்ணை எப்படி தங்க வைக்க?”, என்று கேட்டார்.
“எங்க மேல நம்பிக்கை இல்லையா?”, என்று அவள் சிலிர்த்துக் கொண்டு கேட்க “கண்டிப்பா இல்லை. உன்னை நம்பவே மாட்டேன்”, என்று சொல்லி அவன் மூக்கை உடைத்தார்.
“ஏங்க அந்த பொண்ணு இல்லைன்னா நம்ம இன்பா இல்லைங்க”, என்று இடையில் புகுந்து பேசினாள் பாமா.
அதைக் கேட்டு “என்னது?”, என்று அவர் அதிர “ஐயையோ இந்த அம்மா நம்ம காதலை சொல்லிருமோ”, என்று பயந்தான் இன்பா.
“அது இல்லைங்க. அவ அன்னைக்கு இன்பாவைக் காப்பாத்தலைன்னா அவன் இப்ப நமக்கு இல்லை. அதைத் தான் சொல்ல வந்தேன்”, என்று பாமா தெளிவு படுத்த “அதானே பாத்தேன்”, என்றார் சிதம்பரம்.
“அப்படிப் பட்ட பொண்ணுக்கு நம்மளால உதவியை செய்ய வேண்டாமா? நாம எல்லாம் அவளைப் பாத்துக்கலாம். நம்ம பிள்ளைங்க மேல நமக்கே நம்பிக்கை இல்லைன்னா எப்படி? என்னங்க அத்தை சொல்றீங்க?”, என்று கேட்டு பார்வதியையும் கூட்டு சேர்த்தாள் பாமா.
“உன் மகனை நம்பிட்டாலும்….”, என்று சிதம்பரம் சொல்ல “அந்த பொண்ணுக்கு உதவ வேண்டியது நம்ம கடமை பா சிதம்பரம்”, என்றாள் பார்வதி. சண்முகநாதனும் அதையே சொல்ல “சரி சரி வீட்டை கிளீன் பண்ணிட்டு வரச் சொல்லு”, என்றார் சிதம்பரம்.
“நேத்தே பண்ணியாச்சு”, என்று இன்பா சொல்ல சிதம்பரம் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு அவருடைய அறைக்குச் சென்று விட்டார்.
“அடப்பாவி, நெல்லு மூட்டை போடணும்னு தானே டா நீ நேத்து அங்க கிளீன் பண்ணச் சொன்ன?”, என்று கேட்டாள் பாமா.
“அவன் முகம் அதை தான் சொல்லுது. பொறுத்திருந்து பாப்போம். அவனே சொல்லுவான். அது வரை நாம கேக்க வேண்டாம்”, என்று அவர் சொல்ல பாட்டியும் சரி என்றார்.
“கதிர் நீ வண்டியை எடு. நான் காரை எடுக்குறேன்”, என்றான் இன்பா.
சரி என்று சொல்லி வண்டியை ஸ்டார்ட் செய்தான் கதிர். இன்பாவும் காரைக் கிளப்பினான். இருவரும் ரவியின் வீட்டுக்குச் சென்றார்கள். இவர்கள் போகும் போது அங்கே அவர்கள் தயாராக இருந்தார்கள். விஜி மட்டும் முகத்தை உர்ரென்று வைத்திருந்தாள். அது தான் விஜி என்று என்பா புரிந்து கொண்டான். மற்றவர்கள் எல்லாரும் சந்தோஷமாக தான் இருந்தார்கள். இன்பா பேசியதை எல்லாம் தெரிந்து கொண்ட வினோதினி அவனை நன்றியோடு பார்த்தாள். அவன் பார்வையால் அவளைக் கண்டித்தானே தவிர வேறு எதுவும் சொல்ல வில்லை.
ரவி கதிரை பார்த்து புன்னகைத்தான் அவ்வளவே. இந்த சூழ்நிலையில் அவனால் வேறு எதுவும் பேச முடியவில்லை.
தேவி அருகில் வந்த இன்பா “நான் தான் இன்பா. அப்புறம் இவன் கதிர். என் மாப்பிள்ளை”, என்று சொல்லி அறிமுகப் படுத்தினான்.
“வணக்கம் தம்பி”, என்று இருவரையும் பார்த்து கரம் குவித்த தேவி “இவர் தான் வினுவோட அப்பா. அப்புறம் இவ வினுவோட தங்கச்சி”, என்று இருவரையும் அறிமுகப் படுத்தினாள்.
“சரிங்கம்மா, கிளம்பலாமா? எல்லாம் எடுத்து வச்சிட்டீங்களா வினோதினி?”, என்று கேட்டான் இன்பா.
“நீ செஞ்ச பாவத்தை நான் மன்னிக்கணும்னா என் மருமக நல்லவளா மாறிட்டா. அவளை மன்னிச்சிருங்கன்னு உங்க மாமியார் சொல்லட்டும். அப்ப உன்னை மன்னிக்கிறேன். அணு வினு, வண்டில ஏறுங்க”, என்று சொல்லி விட்டு காரில் ஏறிக் கொண்டாள்.
வினோதினியின் பைகளை கார் டிக்கியில் வைத்து விட்டு டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்தான் இன்பா. ரிஷியை விஜியிடம் கொடுத்து விட்டு அணு இன்பா அருகில் அமர்ந்து கொண்டாள்.
கதிர் வண்டியைக் கிளப்ப கிருஷ்ணன் அவன் பின்னே ஏறி அமர்ந்தார். வண்டியும் காரும் கிளம்பியது.
இவர்கள் கார் வீட்டுக்குள் நுழைந்ததும் வீட்டில் இருந்த அனைவரும் வெளியே வந்து விட்டார்கள்.
“வாங்க வாங்க”, என்று இரு கரம் கூப்பி வரவேற்றார் சிதம்பரம். அதிலே அவர்கள் குடும்பத்தை தேவி மற்றும் கிருஷ்ணனுக்கு பிடித்து போனது.
“வாங்க வாங்க”, என்று தேவியின் கையைப் பற்றிக் கொண்டாள் பாமா.
“எப்படி மா இருக்க வினோதினி? இது உன் தங்கையா?”, என்று கேட்டார் பார்வதி.
“வாசல்ல வச்சே பேசனுமா? எல்லாரும் உள்ள வாங்க”, என்று சொன்னார் சண்முகநாதன். இளவரசியும் வினோதினியை பாசமாக அணைத்துக் கொண்டாள். பின் அணு மற்றும் வினுவின் கை பற்றி உள்ளே அழைத்துச் சென்றாள். அனைவரையும் உள்ளே அழைத்து அமர வைத்தாள் பாமா. பாமா “டீ போட்டுத் தரேன்”, என்று சொல்ல “முதல்ல எல்லாரும் குளிக்கணும் மா”, என்றாள் வினோதினி.
“அதுக்கு என்ன? அதோ அந்த ரெண்டு ரூம்ல குளிங்க”, என்று சொன்னாள் பாமா. அங்கே குளிப்பதற்கு அவர்கள் தயங்கினார்கள்.
அவர்கள் தயக்கம் உணர்ந்த இன்பா “அம்மா பழைய வீட்டு சாவி கொடு. அவங்க அங்க குளிக்கட்டும்”, என்றான்.
“உனக்கு ஒண்ணும் தெரியாது. நீ அமைதியா இரு“, என்று மகனை அடக்கிய பாமா தேவியைப் பார்த்து “உங்களுக்கு தெரியாதது இல்லை. புதுசா அந்த வீட்டுக்கு போகும் போது அழுக்கோட போக வேண்டாம். இன்னைக்கு ஒரு நாள் இங்க குளிச்சிட்டு சாப்பிட்டு அப்புறம் அங்க போகலாம். இன்னைக்கே பால் காச்சிறலாம்”, என்றாள்.
பாமா சொன்னது சரியென்று பட அவர்களும் ஒப்புக் கொண்டார்கள். கிருஷ்ணன் தேவி ஒரு அறையிலும் அணு வினோதினி மற்றொரு அறையிலும் குளிக்கச் சென்றார்கள்.
“வீடு ரொம்ப பெருசா இருக்குல்ல கா”, என்று கேட்டாள் அணு. “ஆமா”, என்று சொன்ன வினோதினியும் அந்த வீட்டின் அழகை ரசித்தாள்.
அவர்கள் நால்வரும் குளித்து கிளம்பி வருவதற்குள் அனைவருக்கும் சாப்பாடு தயார் செய்து விட்டாள் பாமா. இளவரசியும் அவளுக்கு உதவினாள். அத்தனை பேருக்கும் இட்லி, தோசை, பூரி என்று செய்தால் நேரம் எடுக்கும் என்பதால் பொங்கல், சட்னி, சாம்பார் என்று செய்து விட்டாள்.
கதிர் கடைக்கு சென்று வடை வாங்கி வந்தான். அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்கள். “வீடே நிறைஞ்ச மாதிரி இருக்குங்க”, என்றாள் பார்வதி.
அதன் பின் நடந்த அனைத்தையும் பேசிக் கொண்டிர்ந்தார்கள். “சரி பேசிட்டே இருந்தா எப்படி? வாங்க அந்த வீட்டுக்கு போகலாம். நேத்தே கழுவி விட்டுட்டேன். நல்ல நேரத்தில் பால் காச்சலாம்”, என்றாள் பாமா.
அனைவரும் எழுந்து கொண்டார்கள். பாமா ஒரு புதுப் பானை, டம்ப்லர் எல்லாம் எடுத்துச் சென்றாள். இன்பாவும் கதிரும் சேர், பாய் எல்லாம் எடுத்துச் சென்றார்கள்.
முதலில் சென்றதும் வினோதினி வீட்டினர் வீட்டைச் சுற்றிப் பார்த்தார்கள். வெளியே பழைய வீடு போல தெரிந்தாலும் உள்ளே நன்றாக இருந்தது.
வீட்டைச் சுற்றி மரங்கள் சூழ்ந்து குளுமையாக இருந்தது. பழைய வீடு என்பதால் நிலா முற்றம் நடுவில் இருந்தது. அதைப் பார்த்ததும் “எனக்கு இந்த வீடு ரொம்ப பிடிச்சிருக்கு”, என்றாள் வினோதினி.
“பழைய வீடுங்குறதுனால உள்ள தண்ணி கணேக்சன் இல்லை மா வினோதினி. பின் பக்கம் கிணறு தான் இருக்கு. மோட்டார் போட்டா மேல பைப்ல தண்ணி வரும். ஆனா வீட்டுக்குள்ள பைப் இல்லை”, என்றாள் பாமா.