“அது பரவால்ல மா”, என்று வினோதினி சொல்ல அனைவரும் பின் பக்கம் சென்றார்கள். அங்கேயே பாத்ரூம், துணி துவைக்க பெரிய கல், பாத்திரம் விலக்க என்று இடம் தனியே இருந்தது.
தேவிக்கும் வீடு நிறைவாக இருந்தது. “பால் காச்சலாமா?”, என்று கேட்டாள் பாமா.
“அடுப்பு இல்லாம இங்க என்ன பண்ண?”, என்று வினோதினி எண்ணிக் கொண்டிருக்கும் போதே பாமா அங்கே இருந்த அடுப்படியில் விறகு வைத்து அடுப்பை பற்ற வைத்து விட்டாள். அடுப்பு எல்லாம் திண்டிலே பதிக்கப் பட்டிருக்க அதை வித்தியாசமாக பார்த்தாள் வினோதினி.
பாமா சொல்லிக் கொடுக்க வினோதினியே ஆவலாக எல்லாம் செய்தாள். நல்ல நேரத்தில் வினோதினி கையால் பால் காச்சப் பட்டது. அனைவருக்கும் பால் ஆற்றிக் கொடுத்தாள். அனைவருக்கும் கொடுத்து விட்டு கதையாக இன்பா அருகில் வந்தவள் “ரொம்ப தேங்க்ஸ். நீங்க மட்டும் இல்லைன்னா நான் என்ன ஆகிருப்பேன்னு தெரியலை. உங்க உதவிக்கு ரொம்ப நன்றி”, என்றாள்.
“நீங்க மட்டும் இல்லைன்னா இன்னேரம் நானே இருந்துருக்க மாட்டேங்க. நீங்க எனக்கு செஞ்சது தான் உதவி. நான் உங்களுக்கு செஞ்சது ஜஸ்ட் கைமாறு அவ்வளவு தான். இனியாவது நல்லா சாப்பிடுங்க. வந்த அன்னைக்கு பாத்ததை விட இன்னைக்கு ரொம்ப மெலிஞ்சிட்டீங்க. கழுத்துல எலும்பு அப்படியே தெரியுது”, என்று அவளைப் பார்வையிட்டுக் கொண்டே அவன் சொல்ல அவன் பேச்சில் அவள் முகம் சிவந்தது. அவளுடைய சிவந்த முகத்தை ரசனையாக பார்த்தான் இன்பா.
“பால் காச்சின அன்னைக்கு இலை போட்டு சாப்பிடணும். நீங்க எல்லாரும் இங்க பேசிட்டு இருங்க. நான் அங்க சமைச்சிட்டு வரேன்”, என்றாள் பாமா.
“எல்லாருக்கும் எப்படி தனியா செய்வீங்க? இருங்க நானும் வரேன்”, என்றாள் தேவி.
“சரி வாங்க”, என்று இருவரும் செல்ல அவர்கள் பின்னேயே இளவரசி, அணு, வினோதினி, பாட்டி என அனைவரும் சென்றார்கள்.
கதிரும் இன்பாவும் வெளியே செல்ல சிதம்பரம் கிருஷ்ணனை தங்களின் தோப்புக்கு அழைத்துச் சென்றார்.
மதியம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தி விட்டு பேசிக் கொண்டிருந்தார்கள். அன்று மட்டுமல்ல. அடுத்து வந்த நாட்களிலும் பாமா தான் அனைவருக்கும் சமைத்து இங்கே எடுத்து வந்தாள்.
அடுத்த நாள் அனைவரும் கடைக்குச் சென்றார்கள். இன்பா தான் அவர்களைக் காரில் அழைத்துச் சென்றான். மகளுக்கு தேவையானதை வாங்கி விட்டு வந்தார்கள்.
வினோதினியுடன் இரண்டு நாட்கள் இருந்து விட்டு அவளது பெற்றோரும் அணுவும் கிளம்பிச் சென்றார்கள். போகும் போது இன்பாவின் கையைப் பற்றிய தேவி “நீங்க மட்டும் இல்லைன்னா என் பொண்ணு என்ன ஆகிருப்பாளோன்னு நினைக்கவே பயமா இருக்கு தம்பி. இனி அந்த கவலை எனக்கு இல்லை. அவளை நீங்களும் உங்க குடும்பமும் பாத்துக்குவீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நாங்க போயிட்டு வரோம்”, என்றாள்.
“கவலைப்படாம போங்க மா. நாங்க பாத்துக்குறோம்”, என்று சொல்லி அவர்களை வழி அனுப்பி வைத்தான் இன்பா. அவர்களை பஸ் ஏற்றி விட்டு தான் இன்பாவும் வினோதினியும் வீட்டுக்கு நடந்து வந்தார்கள்.
வரும் போது இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக வந்தார்கள். “ஏப்பா இன்பா யார் இந்த பொண்ணு?”, என்று கேட்டார் ராஜன் என்ற ஆள்.
“காலேஜ்ல என் கூட படிச்ச பொண்ணு சித்தப்பா. நம்ம கூட்டுறவு பேங்க்ல தான் வேலை கிடைச்சிருக்கு. ஊர் சென்னை. இங்க வாடகைக்கு வீடு இருக்குமான்னு கேட்டாங்க. அதான் அப்பா எங்க பழைய வீட்டையே வாடகைக்கு விடலாம்னு சொல்லிட்டாங்க. இவங்களை விட்டுட்டு அவங்க அம்மா அப்பா இப்ப தான் கிளம்புறாங்க. பஸ் ஏத்தி விட்டுட்டு வரோம்”, என்று நீண்ட விளக்கம் கொடுத்தான்.
“நல்ல காரியம் செஞ்சப்பா. வேற எங்கயாவது வீடு எடுத்து கொடுத்துருந்தா பிள்ளை நிலைமை என்ன ஆகுறது? ஊர் கெட்டுக் கிடக்கு. உங்க வீடுன்னா பாதுக்காப்பா இருக்கும். சரி போயிட்டு வா”, என்று அவன் சொல்ல “வாங்க”, என்று சொல்லி நடந்தான் இன்பா.
“எதுக்கு அவர் கிட்ட அப்படிச் சொன்னீங்க?”, என்று கேட்டாள் வினோதினி.
“எப்பவுமே ஆரம்பம் நல்லா இருக்கணும்னு சொல்லுவாங்க. இப்ப நான் சொன்னது தான் இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த ஊர் முழுக்க பரவும். எங்க வீட்ல இருக்கீங்கன்னு உங்களுக்கும் மரியாதை கிடைக்கும். அதை விட்டுட்டு நான் எனக்கு தெரிஞ்ச பொண்ணுன்னு சொல்லிருந்தா சிதம்பரத்தோட மகன் ஏதோ ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்து வீட்ல தங்க வச்சிருக்கான்னு பேசுவாங்க. கிராமம் பாத்தீங்களா? என்ன தான் நம்ம மேல தப்பு இல்லாம போனாலும் கவனமா இருக்கணும். இப்ப சொல்லுங்க நான் சொன்னது சரி தானே?”
“சரி தான். ஆமா நீங்க வாடகை என்னன்னு சொல்லவே இல்லையே? எவ்வளவுன்னு சொல்லுங்க. எந்த தேதில தரணும்னு சொல்லுங்க”
“என் வீட்ல இருக்குறதுக்கு நீங்க வாடகை கொடுத்தா என் உயிரைக் காப்பாத்தி கொடுத்ததுக்கு நான் உங்களுக்கு எவ்வளவுங்க வாடகை கொடுக்கணும்?”
“அதுவும் இதுவும் ஒன்னாங்க?”
“கண்டிப்பா ஒண்ணு இல்லை தான். நீங்க செஞ்சதுக்கு இந்த உலகத்துல ஈடு இணையே இல்லை”
“ஐயோ மறுபடியும் புகழ ஆரம்பிச்சிறாதீங்க. நான் வாடகை விஷயத்தைப் பத்தி உங்க அம்மா அப்பா கிட்டயே பேசிக்கிறேன்”
“பேசிக்கோங்க. முடிஞ்சா அவங்க கிட்ட வாடகை பணத்தைக் கொடுத்துப் பாருங்க”, என்று இன்பா சொல்லும் போதே அவன் வீடு வந்திருந்தது.
கம்பவுண்ட் கேட் அருகே அவளுக்கு கொடுத்திருக்கும் வீடு இருக்க, அவன் வீடு சற்று உள்ளே தள்ளி இருந்தது. அவள் அவளுடைய வீட்டுக்கு செல்லலாம் என்று திரும்ப “இப்ப அங்க போய் தனியா என்ன பண்ணப் போறீங்க? என் கூட வாங்க. நல்லா நேரம் போகும்”, என்று அழைத்துச் சென்றான்.
அவனுடைய வீட்டுக்குச் சென்றதும் பார்வதி அவளை தன் அருகே அமர வைத்துக் கொள்ள அவள் வாடகை விஷயம் பேசினாள். அந்த பேச்சையே அங்கு யாரும் அவளை பேச விட வில்லை.
உடனே இன்பாவைப் பார்த்தாள். அவனோ அவளைக் கண்டு புன்னகைத்தான். அதன் பின் அவளுக்கு நேரம் நன்கு சென்றது. தாத்தா பாட்டி ஏதாவது சொல்ல இன்பாவும் கதிரும் கவுண்டர் கொடுக்க அவளுக்கு நன்கு பொழுது போனது.
சிதம்பரமும் சற்று தள்ளி அமர்ந்து டிவி பார்ப்பது போல அவர்கள் பேச்சைத் தான் கேட்டுக் கொண்டிருந்தார். அனைவருக்கும் டீ எடுத்து வந்த பாமாவும் அவர்களுடன் அமர்ந்து விட்டாள். எல்லாரும் இருக்க அங்கே இளவரசி மட்டும் இல்லை என்பதை அப்போது தான் பார்த்தாள்.
“இளவரசி எங்க பாட்டி?”
“அவ உள்ள இருக்கா போய் பாரு மா”, என்று சொல்ல இளவரசியின் அறைக்குச் சென்றாள். அங்கே ஜன்னல் ஓரத்தில் சேர் போட்டு அமர்ந்திருந்த இளவரசி வெளியே அனைவரும் பேசிக் கொண்டிருப்பதை தான் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“என்ன செய்ற இளவரசி?”, என்று கேட்ட படி உள்ளே வந்த வினோதினியைக் கண்டு எழுந்து நின்று “வாங்க வாங்க, உக்காருங்க”, என்று சொல்லி அவளை கட்டிலில் அமர வைத்து அவளும் அமர்ந்து கொண்டாள்.
“எல்லாரும் வெளிய இருக்கும் போது நீ மட்டும் என்ன பண்ணுற? படிக்கிறியா? ஆனா கைல புக் இல்லையே?”
“ஒண்ணும் பண்ணலை. சும்மா நீங்க எல்லாரும் பேசிட்டு இருந்ததை தான் கேட்டுட்டு இருந்தேன்”
“அதை ஏன் இங்க இருந்து கேக்கணும்? அங்க வர வேண்டியது தானே?”
“இல்லை வேண்டாம். நான் வரலை”
“ஏன்? இது உன் வீடு தானே? நீ வா”, என்று சொல்லி வினோதினி அவள் கரம் பற்ற “இல்லை வேண்டாம், நான் வந்தா அங்க இவ்வளவு நேரம் இருந்த சந்தோஷம் இருக்காது”, என்று முகம் இறுகச் சொன்னாள்.
“ஏன் அப்படிச் சொல்ற?”
“நான் அங்க போனா கதிர் அத்தான் அங்க இருக்க மாட்டாங்க. எழுந்து போயிருவாங்க. அத்தான் போயிட்டா அண்ணனும் போய்ருவான். அப்புறம் அங்க சிரிப்பு எப்படி இருக்கும்?”
“ஏன் நீ வந்தா கதிர் எழுந்து போகணும்? ரெண்டு பேருக்கும் சண்டையா?”
“சண்டை எல்லாம் இல்லை. அது அப்படி தான். ஏன் அப்படி பண்ணுறாங்கன்னு தெரியாது. அதுக்கு நானே தனியா இருந்துக்குவேன்”
“கதிருக்கு உன்னைப் பிடிக்காதா?”
“தெரியாது”
“ஒரு வேளை ரொம்ப பிடிக்குமோ? அதான் விலகிப் போறாங்களா?’
“அதுவும் தெரியாது. அதனால தான் எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு. ஒரு வேளை இதுக்கு விடை தெரிஞ்சா நான் கொஞ்சம் நிம்மதியா இருப்பேன் போல?”, என்று சொன்ன இளவரசியின் கண்களில் ஏக்கம் தெரிந்தது.
“உனக்கு கதிரைப் பிடிக்குமா இளவரசி?”, என்று கேட்டாள்.
யாரிடமாவது தன்னுடைய மன பாரத்தைச் சொல்ல வேண்டும் போல இருந்தது. “ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனா அவங்களுக்கு தான் எப்படின்னு தெரியலை”, என்றாள்.
இதை எப்படியாவது கண்டு பிடிக்க வேண்டும் போல இருந்தது வினோதினிக்கு. அதற்காக ஒரு காரியம் செய்து கதிரிடம் நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டாள் வினோதினி.