இரண்டு நாட்கள் கடந்த நிலையில் இன்றுதான் அதிரூபன் ரூமிற்கு வந்தான். குளித்து முடித்து நேரம் பார்க்க இரவு ஒன்பதரை காட்டியது. ம் இந்நேரம் வீட்டில்தான் இருப்பாள் என.. ஆதி.. என குறுஞ்செய்தி அனுப்பினான் ஆதிரைக்கு.
தான் விருப்பம் சொன்னதை வீட்டில் சொல்லியிருப்பாளா.? என்ற யோசனையோடு அவளின் பதிலுக்கு காத்திருக்க.. ஆதிரை அவன் அனுப்பிய குறுஞ்செய்தியை பார்த்ததிற்கான அறிகுறியே இல்லை.
தூங்கியிருப்பாளோ என யோசிக்க.. பத்து நிமிடம் கழித்து ஆதிரையின் எண்ணிலிருந்து ரூபனிற்கு அழைப்பு வரவே ஆச்சர்யத்தோடும் சந்தோசத்தோடும் அழைப்பை ஏற்றான்.
‘தம்பி.. நான் காஞ்சனா பேசுறேன்..”
அத்தையா..? ம்.. தன் விசயத்தை வீட்டில் சொல்லிவிட்டாள் என புரிந்து.. ‘நல்லாயிருக்கிங்களாத்தை.?”என்றான்.
‘உங்களுக்கு ஆதியை கொடுக்க விருப்பமில்லன்னு அன்னைக்கே உங்க வீட்ல சொல்லிட்டேன்.. ஹாஸ்பிட்டல்ல வச்சி என் பொண்ணும் உங்களை மறுத்திருக்கா.. அப்படியிருந்தும் ஃபோன் செய்யிறது.. இப்படி மெசேஜ் போட்டு தொல்லை செய்யிறதுன்னு இருந்தா நாங்க எப்படி நல்லாயிருக்க முடியும்.?” என்றார் கோபமாக.
ஃபோன் ஸ்பீக்கரில் இருக்கிறதென்றும் அருகில் இன்னும் இருக்கிறார்கள் என்றும் புரிந்து சற்று நேரம் அமைதி காத்தவன்.. ‘ஆதி உங்க பொண்ணுன்னு தெரிஞ்சி நான் விரும்பலைங்க அத்தை.. அவளை பார்த்ததும் எனக்கு ரொம்ப பிடிச்சிடுச்சி..” என கனிவாய் சொல்லி..
‘ஆதிரைக்கு எந்த குறையும் வராம நான் பார்த்துப்பேன்..” எனும்போது இடையிட்டார் காஞ்சனா.
‘என் புருசனும் மகனும் இல்லன்றதை தவிர என் பொண்ணுக்கு எப்பவும் எந்த குறையும் இல்ல தம்பி.. எதோ சொத்து வந்ததால சொல்றேன்னு நினைக்காதிங்க.. சொத்து இல்லாதப்பவும் உழைச்சி சாப்பிட்டோமே தவிர யார்கிட்டயும் கையேந்தி நிக்கல..
நீங்க கெட்டவர்ன்னு நாங்க சொல்லலையே.. நல்லவராவே இருங்க.. ஆனா என் பொண்ணை யாருக்கும் இரண்டாந்தாரமா கட்டிக்கொடுக்க எனக்கும் விருப்பமில்ல.. என் பொண்ணும் அதை விரும்பமாட்டா..
உங்க வசதிக்கும் அழகுக்கும் என் பொண்ணை விட அழகான பொண்ணுங்க கிடைப்பாங்க.. தயவு செய்து எங்களை தொல்லை செய்யாதிங்க..” என்றார் வேண்டுதலாக.
‘வசதிக்கும் மனசுக்கும் சம்மந்தமே இல்லைங்கத்தை.. எத்தனை வசதியிருந்தாலும் மனசுக்கு பிடிச்ச வாழ்க்கை கிடைக்கலங்கும்போது பணம் மட்டும் இருந்து என்னாகப்போகுது.? ஆதிரையை தவிர்த்து இனி யாரையும் நான் நினைக்க கூட போறதில்லை..” என பெரு மூச்சிழுத்தவன்..
‘சரிங்கத்தை.. எனக்கு மட்டும் பிடிச்சி என்னாகப்போகுது.? அவளுக்கும் உங்களுக்கும் இஷ்டமில்லன்னா என் பட்டுமா மட்டும் போதும் எனக்கு.. என்னை பிடிக்கலன்னு ஆதிரையே என்கிட்ட சொல்லட்டும்.. அதுக்கப்புறம் உங்க பொண்ணை தொல்லை செய்ய மாட்டேன்..” என்றான் தன் வேதனை மறைத்து திடமாக.
என்னயிது.? அம்மா பேசினா பயந்துட்டு கட் பண்ணிடுவான்னு பார்த்தா அம்மாகிட்டயும் அவன் விருப்பத்தை பத்தியே பேசுறான் என ஆதிரை நினைத்திருக்க.. ‘நீயே சொல்லிடு ஆதி..” என்றார் காஞ்சனா.
‘நான் எப்போ உங்களை பிடிச்சிருக்குன்னு சொன்னேன்.? இனி என்னை தொல்லை செய்யாதிங்க..”
‘நானிருக்கேன்.. சொல்லு ஆதிம்மா..” என இளங்கோ ஊக்க..
‘இனி தயவு செய்து ஃபோன் பண்ணாதிங்க.. எனக்கு நீங்க வேணாம்..” என ஆதிரை சொல்ல.. ‘பிடிக்கலையா.? பிடிச்சிருக்கா.? அதை மட்டும் சொல்லிட்டு கட் பண்ணு ஆதி..”
அத்தனை கோபமாய் அரவிந்தனை அடித்தவனின் குரலா இது..? தனது மறுப்பையும் இத்தனை அன்பாய் கேட்கிறான் என வியந்து நினைத்திருக்க.. ‘எதாவது சொல்லு ஆதிரை..” என்றான் எதிர்பார்ப்போடு.
இளங்கோவும் காஞ்சனாவும் சொல் என்பதாய் ஜாடை செய்ய.. ‘எனக்கு நீங்க.. வே.. வேணாம்.. பிடிக்கல..” என ஆதிரை திணற.. வேறொன்றும் பேசாமல் இணைப்பை துண்டித்தான் அதிரூபன்.
அடுத்த நாள் காலை தந்தைக்கு அழைத்தவன்.. வழக்கம்போல் அனைவரிடமும் பேசி.. இனி ஆதியை பத்தி அவங்க வீட்ல எதுவும் கேட்காதிங்கப்பா.. பட்டுமா பிறந்தநாளுக்கு நான் வருவேன்.. அப்போ நேர்ல பேசிக்கலாம் என்றிருந்தான்.
ஆதிரைக்கு இனி தீவிரமாய் மாப்பிள்ளை பார்ப்பார்கள்.. காதலை சொல்லியாயிற்று.. இதற்கு மேல் வற்புறுத்த வேண்டாம்.. திருமணம் பேசுகையில் தன் நியாபகம் வராமலா போய்விடும்..? பட்டுவின் பிறந்தநாளிற்கு ஒன்றரை மாதம் இருக்கு.. அதுவரை யோசிக்கட்டும்.. அதன்பின் ஆதிரையை தனியே சந்தித்து பேசலாம் என நினைத்தவன்.. இனி நேரில் பார்க்கும் வரை ஆதிரைக்கு அழைக்க கூடாதென முடிவெடுத்தான்.
—- —– ——
அதிரூபன் நினைத்தது போலவே ஆதிரைக்கு தீவிரமாக மாப்பிள்ளை தேடினார் காஞ்சனா. ஒன்றிற்கு நான்கு தரகர்களிடம் சொல்லி வைத்திருந்தார். அவர்களும் வாரம் இரு மாப்பிள்ளைகளை அழைத்து வந்தனர்.
ஆதிரை எட்டு மணிக்கு வேலைக்கு கிளம்பவேண்டும் என்பதாலும்.. இளங்கோவும் பத்து மணிக்கு மேல் வேலைக்கு சென்றிடுவார் என்பதாலும் எப்பொழுதும் காலையில்தான் பெண் பார்க்க வரசொல்லுவார் காஞ்சனா.
வந்தவர்களுக்கு டீ கொடுத்ததும் வேலைக்கு கிளம்பிடுவாள் ஆதிரை. அதன்பின் இளங்கோ ராஜாத்தியோடு கலந்தாலோசித்து மகளிடமும் கேட்டு ஃபோன் செய்கிறேன் என அனுப்பிவைப்பார் காஞ்சனா.
கடந்த ஒரு மாதத்தில் பத்து வரண்களுக்கு மேல் வந்திருப்பார்கள்.. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு குறை கண்டுபிடித்து வேணாம் என மறுத்திருந்தார் காஞ்சனா. இன்றும் ராஜாத்தி இளங்கோ அவரின் மனைவி அனைவரும் இருந்தனர்.
‘ஆதி.. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்க.. சீக்கிரம் எழுந்து குளிக்க போ..” என எழுப்பிக்கொண்டிருந்தார் காஞ்சனா.
‘மாணிக்கம் சார் மகன் கல்யாணம் முடிஞ்சதால இனி ஞாயித்துக்கிழமை லீவ்னு இரண்டு நாள் முன்னமே சொன்னேன்தானம்மா.? லேட்டா வர சொல்லியிருக்கலாமில்ல.?” என சலித்துக்கொண்டே எழுந்தாள் ஆதிரை.
‘அவங்க நல்லநேரம் பார்த்து இந்த நேரத்துக்கே வரன்றாங்க.. நான் என்ன செய்யட்டும்.? போய் ரெடியாகு.. அவங்க போனதுக்கப்புறம் தூங்கிக்கலாம்..” என்றார்.
ஆதிரை குளிக்கப் போகவும்.. ‘பையன் எல்.ஐ.சி ல வேலைல இருக்கானாம்.. பிக்கல் இல்லாத குடும்பம்.. இந்த பைனையும் எதாவது குறை சொல்லிடாத காஞ்சனா..” என்றார் ராஜாத்தி.
‘நான் என்ன அண்ணி பண்றது.? வசதி வாய்ப்பு இல்லன்னாலும் பரவால்ல.. நாளைக்கு ஆதிம்மாக்கு ஒரு ஆபத்துனா கட்டிக்க போறவன் துணிஞ்சி முன்ன நிக்க வேணாமா.? படிச்சிருக்கான்றாங்க.. நல்ல வேலைல இருக்கேன்றாங்க.. ஆனா மூஞ்சை பார்த்தா சொங்கியாட்டாம் இருக்கு.. ஆம்பிளைப் பையன்னா ஒரு கம்பீரம் வேணாமா.?” என்றார்.
‘அது சரி.. அப்போ பையில்வானைத்தான் பார்க்கனும்..” என சிரித்தார் ராஜாத்தி.
ஆனால் இளங்கோவிற்கு காஞ்சனா அதிரூபனை மனதில் வைத்து அவனிலும் சிறந்தவனாக பார்க்கனும்னு நினைக்கிறாங்க என புரிய.. ‘எல்லாமும் ஒரு சேர அமையாது அண்ணி..” என பேச வெளியே பைக் சத்தம் கேட்கவும் அமைதியானார்.
இளங்கோ வெளியே வந்து வந்தவர்களை வரவேற்க.. மாப்பிள்ளை மற்றும் அவனின் பெற்றோரும் வீட்டினுள் வந்தனர். மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்ததும் இரண்டு சோபாக்களை வாங்கி போட்டிருந்தார் காஞ்சனா.
வீட்டை நோட்டமிட்ட மாப்பிள்ளையின் அம்மா.. ‘நாங்க வரதுக்காக இதை பக்கத்து வீட்லயிருந்து வாங்கி போட்டுருக்கிங்களா.?” என்றார் சிறு மிதப்போடு.
காஞ்சனா.. ‘புதுசுதானுங்க.. ஆனா ஓசில வாங்கல.. காசு கொடுத்து வாங்கினோம்.. உங்களுக்காக மட்டும் வாங்கல.. வீட்டுக்கு யார் வந்தாலும் உக்கார வசதியாயிருக்கும்னு வாங்கினேன்..” என்றார் கடுப்பை மறைத்து.
காஞ்சனாவின் காரமான பதிலில்.. ‘பொண்ணு லட்சணமா இருப்பான்னு தரகர் சொன்னதாலதான் வசதியில்லன்னாலும் பரவால்லன்னு வந்தேன்.. ஆனா இங்க ஒன்னும் இல்லன்னாலும் ரோசம் மட்டும் அதிகமிருக்கும்போல.. இப்படி இடம் வேணாம்..” என கணவனிடம் முனுமுனுத்தார் மனைவி.
அந்த நேரம் குளித்து முடித்து வந்த ஆதிரையை பார்த்ததும் பிடித்து போனது ஆகாஷிற்கு. தந்தையிடம் முனுமுனுத்து கொண்டிருந்த அன்னையிடம்.. ‘ம்மா.. எனக்கு இந்த பொண்ணுதான் வேணும்.. எதுவும் தேவையில்லாம பேசி வைக்காதிங்க..” என்றான் ஆவலாக.
வந்துவிட்டார்களா என நினைத்தவாறு வெளியே சென்றவள் டவலை காயவைத்து உள்ளே சென்றாள். ‘என்ன.? கொஞ்சமும் கூச்சமே இல்லாம இப்படி நடை நடக்குறா..” என்றார் மகனிடம்.
‘நடக்குறதுல என்ன கூச்சம் வேண்டியிருக்கு..? அமைதியா இரும்மா..” என மிரட்டினான் ஆகாஷ்.
ம்.. எத்தனை பேர் பெண் பார்க்க வந்தபோதும் ஒருமுறை கூட ஆதிரைக்கு வெக்கமோ அசௌகரியமோ வந்ததில்லை.. கடமையே கண்ணாய் டீ கொடுப்பாள்.. டீ கொடுத்து பத்து நிமிடத்தில் வேலைக்கு கிளம்பிடுவாள். வேலை முடிந்து வந்ததும் ஒன்றிற்கு நான்கைந்து குறைகளை பெண் பார்க்க வந்தவன் மேல் சொல்லி இந்த இடம் வேணாம் என காஞ்சனா மறுப்பார்..
‘நான் கூட இந்தளவுக்கு கவனிக்கலமா..” என அன்னையின் அக்கறையில் பெருமையாய் சிரிப்பாள் ஆதிரை. இவர்களின் பெண்பார்க்கும் படலம் இப்படிதான் சென்றது.
தனக்கு திருமணம் முடிவாகிவிட்டால் அதிரூபன் தன்னை தொல்லை செய்யமாட்டான் என தன் திருமணம் குறித்து அன்னையிடம் பேசலாம் என நினைத்திருக்க.. ஆதிரைக்கு சிரமம் தராமல் காஞ்சனாவே மாப்பிள்ளை பார்ப்பதில் அதிரடியாய் இறங்கவே அன்னை சொற்படி நடக்க ஆரம்பித்தாள் ஆதிரை.
இன்று ஆகாஷின் அம்மா பேசுவதும்.. அதற்கு அவனின் பதிலும் ஆதிரைக்கு நன்றாக காதில் விழவே.. ‘நான்தான் வேணும்னு முடிவு செய்ய இவன் யாரு.?” என கடுப்போடு ஜடை கூட பின்னாமல் உள்ளே அமர்ந்திருந்தாள்.
‘இன்னைக்கு வரோம்னு நேத்தே தரகர்கிட்ட சொல்லியிருந்தும் ரெடியாகாம இப்பதான் குளிச்சிட்டு போயிருக்கா.. இன்னும் எப்போ ரெடியாகுறது..? அதுக்குள்ள நல்ல நேரமே முடிஞ்சிடும்..” என ஆகாஷின் அம்மா குறைபட..
ஆகாஷ்.. ‘அம்மா.. இப்போ நல்ல நேரம்தான.? உள்ள போகும்போதே அவளை பார்த்துட்டேன்.. பொண்ணு பார்க்குற சாங்கியம் முடிஞ்சது.. இனி ஒன்னும் பிரச்சனையில்ல.. மெதுவா ரெடியாகி வரட்டும்..” என்றான்.
ஒரு டீ யை கொடுத்து இவர்களை முதலில் அனுப்ப வேண்டும் என நினைத்த காஞ்சனா டீயை வைக்க போக.. ‘நான் வச்சிட்டேன்.. ஆதியை வர சொல்லு..” என்றார் ராஜாத்தி.
சிறிய வீட்டில் எங்கு பேசினாலும் எல்லா இடத்திலும் கேட்கும்.. இதில் ஆதிரையின் கவனம் வெளியிலிருக்க அத்தை சொன்னது நன்றாகவே கேட்கவும்.. சால் ஒன்றை மேலே போட்டு கொண்டையோடு வெளியே வந்தாள் ஆதிரை.
‘படிச்ச புள்ளதான நீ.? இதென்ன ஒரு சேலை கட்டாம சுடிதாரோடவும் கொண்டையோடவும் வந்து நிக்கிற.? என் மகன் எங்க வேலை பார்க்கிறான்னு சொன்னாங்களா இல்லையா.?” என்றாள் அதட்டலாக.
நான் இப்படித்தான் என்பதுபோல் அசராமல் நின்றிருந்தாள் அதிரை.
‘எத்தனை தெணாவெட்டு..” என மருகியவர்.. ‘எழுந்திருடா போலாம்.. இப்படி பொண்ணு நம்ம குடும்பத்துக்கு செட்டாக மாட்டா..” என்க..
‘நல்லதுங்க.. கிளம்புங்க..” என்றார் காஞ்சனா.
அத்தனை கோபத்தோடு எழுந்தார் ஆகாஷின் அம்மா. எழுந்தவன் ஆதிரையிடம் சென்று ‘மோதல் ஆரம்பிச்சா காதல்ல முடியும்.. ஆனா நம்ம குடும்பத்து மோதல் உறுதியா கல்யாணத்துலதான் முடியும்..” என மனதை வெளிப்படுத்தினான் ஆகாஷ்.
அருவருப்பாய் முகம் சுழித்து உள்ளே சென்றுவிட்டாள் ஆதிரை. தரகருக்கு போன் செய்து.. ‘இப்படி கௌரவம் பார்க்குற குடும்பத்தை எதுக்கு அனுப்பிவிடுறிங்க.?” என நடந்ததை சொல்லி கத்திவிட்டார் இளங்கோ.