ஆனால் நினைத்த மாத்திரத்திற்கு இத்தனை பெரிய தொகை தங்களிடமில்லை என மறுத்தார் காஞ்சனாவின் சித்தி. எங்கூரு ஜி.ஹெச்ல ஆப்ரேசன் செய்யிற அளவுக்கு வசதி இல்லையாம்.. டவுன் ஆஸ்பத்திரி இல்ல தனியார் ஆஸ்பத்திரிக்கு போனாதான் பிழைப்பாங்களாம்.. கடனாக கொடுங்கள்.. பின்னே காட்டை விற்று கொடுத்திடறேன் என காஞ்சனா கெஞ்ச.. பிறகுதான் என் தம்பிகிட்ட கடன் கேட்டு சாய்ங்காலம் ஆஸ்பத்திரிக்கு பணத்தோட வரேன் என்றார். ஆனால் அன்று மதியமே இறந்திருந்தார் ஆதிரையின் அப்பா ஆறுமுகம்.
ஏற்றுக்கொள்ள முடியாத இரண்டு பெரிய இழப்புகள்.. இவர்கள் ஊரில் பிரேத பரிசோதனை செய்த பிணங்களை ஊருக்குள் அனுமதிப்பதில்லை.. எனவே மருத்துவமனையிலிருந்து அப்படியே இடுகாட்டிற்கு கொண்டு சென்றிருந்தனர்..
நல்லடக்கம் செய்த பின்னே காஞ்சனாவின் அப்பாவும் சித்தியும் வீட்டிற்கு வந்திருந்தார்கள்.. இடுகாட்டிலிருந்து அப்படியே கிளம்புவார்கள் என நினைத்திருந்த காஞ்சனாவிற்கு தந்தையின் வருகை பெரும் ஆச்சர்யம்தான்.. ஒற்றை பார்வையோடு தலைகுனிந்த காஞ்சனாவிற்கு கண்ணீர் தாரையாய் கொட்டிக்கொண்டிருந்தது.. ஒரே நாளில் அனைத்தும் அஸ்தமனம் ஆனதில் இனி என்ன செய்ய போகிறோம் என்ற பயம்.. ஆதிரையில்லையென்றால் தானும் கணவன் பிள்ளையோடே சென்றிருக்கலாம் என்ற துக்கம் நெஞ்செல்லாம் கணத்தது.
காஞ்சனாவிற்கு அத்தனை விபரம் கிடையாது.. ஆறுமுகத்தின் தம்பி இளங்கோவும் இவர்களின் அக்கா ராஜாத்தியும்தான் அனைத்தும் பார்த்துக்கொண்டனர்.. ‘காஞ்சனா கொஞ்சம் பழையது குடி..” என சொம்பை நீட்ட.. ‘அண்ணி..” என கதறினார் காஞ்சனா.
‘எவ்வளோதான் அழுவ காஞ்சனா.?”என்ற ராமசாமிக்கும் கண்ணீர் பெருக்கெடுக்க.. அந்த சூழலை அதிகப்படுத்த விரும்பாத மாதவி.. ‘ஏங்க.. நீங்க ஆறுதல் சொல்விங்கன்னு பார்த்தா நீங்களும் சேர்ந்து அழுதா போனவங்க வந்திடுவாங்களா.?” என அக்கறையாய் கூறுவதுபோல் சொல்லி ‘பணத்தை கொடுங்க.. ஆக வேண்டியதை பார்க்கட்டும்..” என்றார். ம்.. கடமையை முடித்தால் பட்டென கிளம்பலாம் என்ற திட்டம். ராமசாமி பணத்தை நீட்ட வாங்க மறுத்தார் காஞ்சனா.
எத்தனை வறுமையிருந்த போதும் கணவன் இருக்கும்வரை இவர்களின் உதவியை நாட விட்டதில்லை. இவர்கள் பணம் கொடுத்து உயிர் பிழைத்திருந்தால் அதனை ஏற்று கொள்வாரா என்பதும் கூட சந்தேகம்தான்.. ஆகினும் அந்த நேரம் வேறு வழியறியாமல்தான் தகப்பனிடம் சென்றார் காஞ்சனா.
தற்போது அவர் சென்ற பின்னே இவர்களின் உதவியும் வேணாம்.. உறவும் வேணாம் என நினைத்து வெகுண்டார் தந்தையிடம். தாய் வழி உறவின்படி எந்த சம்பிரதாயமும் செய்ய வேணாம் என்றார்.
நீ வீட்டுக்கு வந்தது எனக்கு தெரியாதும்மா என காஞ்சனாவின் தந்தை கெஞ்சியபோதும்.. கணவன் வழி உறவினர்கள் எடுத்துரைத்தும் தந்தையின் பணம் சாங்கியம் என எதற்கும் அனுமதிக்கவில்லை காஞ்சனா.
ஆதிரை காஞ்சனாவின் சித்தியை பார்க்க.. தன் அன்னை பேசியது அவர்கள் எதிர்பார்த்தது என முகவாட்டத்திலேயே தெரிந்தது.. அதோடு அவர்கள் அணிந்திருந்த நகைகளே அவர்களின் செழுமையை விளங்க வைக்கவும்.. தன் தாத்தாவிடம் கேட்க பொங்கிக்கொண்டு வந்தது வார்த்தைகள்.
ஆனால் பெற்ற பெண்ணை விட மனைவி முக்கியம் என நினைக்கும் மனிதரிடம் எதை கேட்டும் உபயோகமில்லை என்பதும்.. அன்பை மட்டும் யாரிடமும் யாசிக்க கூடாது என தன் அப்பா அடிக்கடி சொல்வதும் நினைவு வரவும்.. அதான் அம்மா சொல்லிட்டாங்களே அப்புறமென்ன.? இந்த பணத்துக்கும் சேர்த்து இன்னும் கொஞ்சம் நகை வாங்கி போடுங்க உங்க பொண்டாட்டிக்கு..” என கர்ஜித்தாள் தாத்தாவிடம்.
ஆறுமுகம் இருந்தவரை ரோசமாக இருந்துவிட்டார்.. இனி ஆதிரை படிப்பிற்கு பணம் வேணும்.. சொத்தை பிரியுங்கள் என வந்துவிட்டால் என்ன செய்வது என யோசித்திருந்த மாதவி ஆதிரை பேசியதையே கப்பென பிடித்துக்கொண்டார்..
‘இத்தனை பேர் முன்ன பெத்த அப்பான்னு கொஞ்சம் கூட மரியாதையில்லாம உங்கம்மா பேசுறா.. இனி நாங்க எதுக்கு இந்த பக்கம் வரப்போறோம்.?” என ஆதிரையிடம் கத்தி..
‘எவ்வளோ நாளைக்கு இப்படி ரோசத்தோட இருக்காங்கன்னு பார்க்கலாம்.. நம்மளை மதிக்காத இடத்துல இனி ஒரு நிமிசம் கூட நிக்க கூடாது.. வாங்க போலாம்..” என கணவனை அழைத்து சென்றிருந்தாள் மாதவி.
பெற்றமகள் புருசன் பிள்ளையை இழந்திருக்கும் நேரத்தில் கூட மனைவி பேச்சிற்கு மறு பேச்சின்றி செல்லும் தாத்தாவை வெறுப்பாய் பார்த்திருந்தாள் ஆதிரை.
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் மருத்துவ செலவென எதுவும் ஆகவில்லை.. ஆறுமுகம் மூட்டை தூக்குபவர் ஆதலால் தொழிலாளர் சங்கத்திலிருந்து இருபத்தைந்தாயிரம் பணம் கொடுத்தனர். அதை வைத்துதான் மற்ற செலவுகளை பார்த்தார் காஞ்சனா.
பதினாறாம் நாள் காரியத்திற்கு ராமசாமி வந்தார்.. தந்தையை காணப்பிடிக்காமல் முகம் திருப்பினார் காஞ்சனா. மகளின் கையைப் பிடித்து.. ‘கல்யாணம் ஆகும்முன்ன உன்ன பெத்த பிள்ளையாட்டம் பார்த்துக்குவான்னு மாதவி அண்ணன் சொன்னான்.. அதை நம்பித்தான் கல்யாணம் செய்துக்கிட்டேன்.. ஆரம்பத்துல நல்லாயிருந்தவ நீ வளர வளர இப்படி மாறுவான்னு எனக்கு தெரியாதுமா..” என கண்ணீர் வடித்து.. ‘இந்த பணத்தை வச்சிக்கோ..” என கையில் திணிக்கவும்..
‘முதல்ல இதை எடுத்துட்டு கிளம்புங்க..” என்றார் ஆத்திரமாக.
பெத்த கடனிற்கு இதையாவது செய்யட்டுமே என நினைத்த ஆறுமுகத்தின் தம்பி இளங்கோ.. ‘வாங்கிக்கோங்கண்ணி..” என்றார்.
‘இவர் கல்யாணத்தப்ப நான் ஒன்னும் பால்குடி மறக்காத குழந்தையில்ல.. அஞ்சி வயசு புள்ளையை பார்த்துக்க முடியாதா இளங்கோ..? இவர் கல்யாண ஆசைக்கு நான் ஒரு காரணம் அவ்வளோதான்..
நகை நட்டுன்னு எதுவும் வேணாம்னு உங்கண்ணன் என்னை கேட்டதாலதான் தொல்லை ஒழியட்டும்னு இவங்க வூட்டம்மா என் கல்யாணத்துக்கு சம்மதிச்சாங்க.. உங்கண்ணன் ஒன்னும் வேணாம்னாலும் என் பொண்ணுக்கு நான் செய்வேன்னு செய்ய கூட வேணாம்.. ஒத்த வார்த்தை சொல்ல கூட செய்யலையே.. எப்படி சொல்வார்..? பொண்டாட்டி கோவிச்சிட்டு போய்ட்டா எல்லாத்துக்கும் திண்டாட்டமாகிடுமே..” என அருவருப்போடு சொல்லி..
‘இரண்டு பிள்ளை பொறந்தப்பவும் ஆஸ்பத்திரிக்கு வந்து பார்த்ததோட சரி.. பெத்தவர் சரில்லனாலும் கட்டினவர் சரியாயிருக்கவும் அச்சு.. இல்ல என் நிலைமை என்னவாகியிருக்கும்.?
கல்யாணம் கட்டி இத்தனை வருசத்துக்கப்புறம் அவங்க உசுர காப்பத்தத்தான் இவங்க வூட்ல போய் நின்னேன்.. அப்போ உதவாத இந்த பணம் இனி எதுக்கு.? இருக்க இடமிருக்கு.. வயித்து பாட்டை நான் பார்த்துக்கிட்டாலும் மத்த நல்லதை நீங்க முன்னிருந்து என் பொண்ணுக்கு செய்யமாட்டிங்களா.?” என்றார் கண்ணீரோடு.
இளங்கோ.. ‘அழாதிங்கண்ணி.. எனக்கு ஆதிம்மா வேற.. ரோஜா வேறயில்ல..” என தானும் கண்கலங்கினான். இளங்கோவிற்கு ரோஜா என ஒரு பெண்ணும் அபிமன்யு என மகனும் உள்ளனர்.
அபியை விட பரதன் பெரியவனாதாலாலும் படிப்பு பண்பு என அனைத்திலும் சிறந்தவனாதலாலும்.. தன் பிள்ளைகளுக்கும் நல்ல வழிகாட்டியாக பரதனைதான் மலையென நம்பியிருந்தார்.. எல்லாம் மண்ணாகிப்போனதில் இளங்கோவும் தாளமுடியாத வேதனையில் இருந்தான்.
ஆதிரையின் சிரித்த முகத்தை மட்டுமே பார்த்திருந்த ராஜாத்திக்கு தற்போதைய அண்ணன் மகளின் வேதனையான முகத்தை காண சகியவில்லை.. ‘ஆதிம்மா..” என்றதுதான்.. ‘அப்பா அண்ணனில்லாம இனி எப்படியிருப்பேன்த்த..?” என கதறியழவே ஆதிரையை தேற்றும் பணியில் ராஜாத்தியிருக்க.. மகள் அழுகையை தாளமுடியாமல் காஞ்சனாவும் அழ.. அங்கே ராமசாமியை ஒரு பொருட்டாய் யாரும் நினைக்கவில்லை. ஒருமணிநேரம் வரை அமர்ந்திருந்து கிளம்பிவிட்டார்.
மேலும் பத்து நாள் கழிந்திருந்தது. இன்னொரு குடும்பத்திற்கும் சேர்த்து செய்யும் அளவிற்கு ராஜாத்திக்கோ அல்லது இளங்கோவிற்கோ அதிகம் வசதி கிடையாது..
இளங்கோ மகன் இன்ஜினியரிங் மூன்றாம் வருடத்திலும் மகள் பள்ளிப் பருவத்திலும் இருப்பதால் கூலி வேலை செய்து வரும் இளங்கோவின் ஒருவர் வருமானத்தில் குடும்பம் நகர்த்துவதே பெரும்பாடு என்பதால் இனி ஆதிரையின் படிப்பிற்கும் இருவரின் ஜீவனத்திற்கும் வழிசெய்ய நினைத்தார் ராஜாத்தி.
ரோசம் பார்த்து உரிமைப்பட்டதை எதற்கு விடவேண்டும் என்ற எண்ணமும் சேர.. ராஜாத்தி ஆதிரையிடம்.. ‘உங்க தாத்தாகிட்ட சொத்து கேளு ஆதிம்மா.. இரண்டாந்தாரத்துக்கு பிறந்த பிள்ளைகளுக்கு இருக்கும் உரிமையைவிட உனக்கு தான் அதிகம் இருக்கு..” என்றார்.
ஆதிரை அன்னையைப் பார்க்க.. ‘வேணாம் அண்ணி.. அந்த பொம்பள லேசுபட்டவங்க இல்ல.. பணங்காசுக்காக என் பொண்ணுமேல இல்லாத பழியை வாய் கூசாம சொமத்திடுவாங்க.. நம்ம தகுதிக்கேத்த இடம் வரும்போது இருக்கிற காட்டை வித்துட்டு ஆதிக்கு கல்யாணம் செய்துக்கலாம்.. எனக்கப்புறம் இந்த வீடும் ஆதிக்குதான.? இது கூட இல்லாம எத்தனையோ இருக்காங்க.. எங்களுக்கு சொத்தும் வேணாம் தேவையில்லாத மனஉளைச்சலும் வேணாம்.. என் பொண்ணை நல்லபடியா கரையேத்திட்டனா அதுவே போதும்..” என்றார் காஞ்சனா.
‘அதுக்கில்ல காஞ்சி.. விக்கிற வெலவாசிக்கு ஒரு நாளைக்கு குறைஞ்சது நூறுரூவா கூட இல்லாம பொழப்பு ஓடாது.. நீ கொடுத்த இருபத்தஞ்சாயிரத்துல பதினாறாயிரம்தான் மிச்சமிருக்கு.. அது எத்தன நாளைக்கு காணும்..?” என ராஜாத்தி பரிதவிப்பாய் பார்க்க..
‘முப்பது கழிஞ்சதும் அவங்க வேலை செய்த பஜாருக்கே வர சொல்லியிருக்காங்கண்ணி.. இந்த மசால் செலவெல்லாம் சுத்தம் செய்து பாக்கட் பண்ற தர வேலை தராங்களாம்.. வாரக்கூலியா பார்த்து போட்டு தரேன்னு சாவுக்கு வந்தபோதே அவங்க முதலாளி சொல்லிட்டுதான் போனாங்க..” என்றார் காஞ்சனா.
தம்பி மனைவியின் நிலை இப்படியாகிற்றே என ராஜாத்தி கண்கலங்கவும்.. ‘அழாதிங்கண்ணி.. இனி ஆதிய பார்க்கனும்ல.? அவளுக்கின்னும் இரண்டு வருச படிப்பு மிச்சமிருக்கு.. அதுவரைக்கும்தான் கஷ்டம்.. அப்புறம் அவளுக்கு நல்ல வேலை கிடைச்சிடும்..” என்றார் தேறுதலாக.
அண்ணனையும் தந்தையையும் நினைத்து அழுதுகொண்டிருந்தவளுக்கு தற்போதுதான் அன்னையின் நிலை புரிய ஆரம்பிக்கவும்.. அப்பா இருந்த வரை அம்மாவை எப்படி வைத்துக்கொண்டார்களோ அதுபோல நாமும் பார்த்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்ற.. தன் தந்தை இறந்ததிலிருந்து தன்னோடேயே ஒட்டிக்கொண்டிருக்கும் சரத்திடம் வேலைக்கு கேட்டாள்.
ஆதிரையின் சித்தப்பாவும் அம்மாவும் ஒப்புகொள்ளவில்லை.. எனக்கு வீட்ல அண்ணன் அப்பா நியாபகமா இருக்கு.. நம்ம சரத் வேலை செய்யிற இடத்துக்குத்தான் வேலைக்கு போகப்போறேன்.. வேலை காலேஜ் என சென்று வந்தால்தான் சற்று இயல்பாக முடியும் என பிடிவாதமாய் வேலைக்கு சேர்ந்தாள்.
தன் சோகத்தை அன்னையிடம் காண்பிக்காமல் ஆதிரையிருக்க.. அதையே காஞ்சனாவும் மகளிடம் பின்பற்றினார். காலையில் வேலைக்கு செல்லும்முன் ஆதிரையை பார்த்து பேசாமல் கிளம்பமாட்டார் இளங்கோ. ராஜாத்தியும் அடிக்கடி வந்து போவார்.
பழைய நினைவுகளோடு வீடு வந்த இளங்கோ நடந்ததை மனைவியிடம் சொல்லி, “நம்ம ஆதிம்மாக்கு கிடைக்காத சொத்து இப்படி அநாவிசயமாத்தான் செலவாகும்..” என கோபமாய் சொல்லி.. “அண்ணிதான் ரொம்ப பயந்துக்கிறாங்க, நாளைக்கு போய் கொஞ்சம் தைரியம் சொல்லிட்டு வா..” என்றார்.