‘பேசுறாங்க புடிங்க..” என மொபைலை நீட்ட ராமசாமிக்கு தோழனிடம் பேச தயக்கம் என்பது போய் பெரும் பயம் வந்திருந்தது.. ம் பின்னே இருக்காதா.? ஆறுமுகமும் பரதனும் இறந்தது இன்னும் மாரியப்பனிற்கு இன்னும் தெரியாது..
ஆறுமுகத்திற்கு விபத்து நடந்த அன்று வேலை நிமித்தமாக வெளியே சென்றிருக்க.. ஆறுமுகத்தின் மரணம் நிகழ்ந்த பின்னரே அனைத்தும் ராமசாமிக்கு தெரிய வந்ததால், எதிர்பாராத இரு பெரிய இழப்புகள் மனதை பெரிதாய் பாதிக்க யாரிடமும் எதுவும் பகிர்ந்து கொள்ளும் நிலையில்லை ராமசாமி.
ஒரு வாரம் கழித்து மாரியப்பனிடம் தன் துக்கத்தை பகிரலாம் என நினைத்தார்தான்.. ஆனால் கணவன் சாகக்கிடக்க முதல்முறையாய் பணஉதவி நாடி வந்த பெண்ணிற்கு உதவ முடியாமல் போனதும்.. துக்க வீட்டில் மாதவி நடந்துகொண்டதும் தெரிந்தால் மாரியப்பனால் தாளமுடியாதென புரிந்த ராமசாமி நண்பனிடம் தனது துக்கத்தை பகிரும் எண்ணத்தை கைவிட்டார். பழைய நினைவில் ராமசாமி மொபைலை வாங்க மறுக்க.. தானே பேசினார் மாரியப்பனிடம்.
பேரனின் விசயங்களை சொல்லி.. ‘தயவு செய்து இந்த ஒருமுறை என் பேரனை காப்பாத்துங்க..” என மாதவி கெஞ்ச.. மாரியப்பன் அருகிலிருந்து அனைத்தும் கேட்டிருந்த கணேசன் ‘எப்படியோ போகட்டும் நம்மளால எதுவும் பண்ண முடியாதுன்னு சொல்லுப்பா..” என கோபத்தோடு முனுமுனுக்க.. ‘நான் என்னன்னு பார்க்கிறேன் தாத்தா..” என்றான் அதிரூபன்.
ம்.. தன் தாத்தா ஒரு பெண்ணை சொல்கிறார் என்றால் நிச்சயம் அதில் தவறிருக்காது என உறுதியாய் நம்பியதால்.. இவர்களின் பேத்தியைத்தானே சொன்னார்..? இதுவிசயமாக போய் அவளையும் பார்த்து வரலாம் என முடிவெடுத்தான் அதிரூபன்.
ரூபன் சம்மதிக்கவும்.. ‘சரி.. நான் என் பேரனை அனுப்பி வைக்கிறேன்..” என்றவர் ராமசாமியிடம் மொபைலை கொடுக்க பணிக்க.. ஆறுமுகம் பரதனின் நினைவில் ‘மாரி..” என தழுதழுத்தார் ராமசாமி.
‘இந்த பேரன் ஜெயிலுக்கு போனான்னதும் அப்படியே கமறுதா.?” என அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு சொல்லி.. ‘உன் பொண்டாட்டி பக்கத்துல இருக்கிறதால என்னால எதுவும் விலாவரியா சொல்ல முடியாது.. என் பேரன் வேற ஒரு காரணுத்துக்காகத்தான் அங்க வர ஒத்துக்கிட்டான்.. அங்க உன் பேரன் விசயம் என்னன்னு பார்த்துட்டு வந்திடுவான்..” என்றார் சிடுசிடுப்பாகவே.
ராமசாமி.. ‘ரூபனோட நீயும் வாடா.. உன்கிட்ட பேசனும்..” என்றவருக்கு கண்ணீர் பெருக்கெடுக்க.. ‘இரண்டு நாள் ஜெயில்ல இருந்தா உன் பேரன் ஒன்னும் குறைஞ்சிட மாட்டான்.. மக வீட்ட தவிர்த்து வெளில எங்க போறதுக்கும் கணேசனும் கனகாவும் விடறதில்ல.. எதுன்னாலும் ரூபன்கிட்ட சொல்லியனுப்பு.. இல்ல தோதிருக்கும்போது போன்ல சொல்லு.. இப்ப வைக்கிறேன்..” என கடுப்பாகவே இணைப்பை துண்டித்தார் மாரியப்பன்.
கணேசன்.. ‘நாளை மறுநாள் சூட்டிங் இருக்கு.. நாளைக்கு சென்னை போகனும்ன்னு சொன்னல்ல.? அதை பாரு.. எவன் எக்கேடு கெட்டா நமக்கென்ன.?” என்றார் கோபமாக.
மாரியப்பன்.. ‘கணேசா.. அந்த பொண்ணை கட்டினதுக்கப்புறம்தான் ராமசாமி இப்படியாகிட்டான்.. ஒன்னுமில்லாத இருந்த எனக்கு தொழில் அமைச்சி கொடுத்ததே ராமசாமிதான்.. அவன் செய்யிற முட்டாள்தனத்துக்கு இதுவரை எத்தனை திட்டியிருக்கேன்.. ஒருநாளும் கோபிச்சதேயில்ல..
இன்னைக்கு வரைக்கும் ஒருமுறை கூட எனக்கு செய்த உதவியை சொல்லிகாட்டினதில்ல.. அவ்வளவு ஏன்.? அவன்கிட்ட பேசியே ஏழெட்டு வருசமாச்சி.. இப்பவும் நான் சரியா பேசலன்னாலும் அதையெல்லாம் மனசுல வச்சிக்காம என்னை பார்க்கனும்.. என்கிட்ட பேசனும்னு நினைக்கிறான்..
அவன் பிரச்சனை எனக்கு தெரியலன்னா கூட பரவால்ல.. தெரிஞ்சதுக்கப்புறம் என்னால பார்த்திட்டிருக்க முடியாது. ரூபன் போகலன்னாலும் என்னால முடிஞ்ச உதவியை செய்யத்தான் நினைச்சிருப்பேன்..” என மகனிடம் சொல்லி..
அதிரூபனிடம்.. ‘ரூபா.. பொண்ணு விசயத்தை நான் பேசிக்கிறேன்.. நீ ராமசாமி பேரன் மேல தப்பிருக்கா.? இல்ல தேவையில்லாம மாட்டிக்கிட்டானான்னு மட்டும் விசாரி.. பையன்மேல தப்பில்லன்னா உன்னால எதுவும் செய்ய முடிஞ்சா செய்.. இல்ல வந்துடு..” என்றார்.
‘சரி தாத்தா.. நான் இப்பவே கிளம்பறேன்..” என விலாசம் வாங்கிக்கொண்டு கிளம்பினான்.
திருவண்ணாமலையிலிருந்து ஒரு மணிநேர பயணத்திற்கு பிறகு செங்கம் வந்தடைந்தான் அதிரூபன். நல்ல உயரமாய் நாயகனைப் போல் இருக்கும் அதிரூபனை பத்து வருடத்திற்கு முன் சிறுவயதில் பார்த்ததுதான்.. தற்போது ராமசாமியால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.
ஆனால் அதிரூபனின் தாத்தா ராமசாமியின் புகைப்படம் காட்டி நினைவூட்டிதான் அனுப்பியிருந்தார் ஆதலால்.. ‘நான் மாரியப்பன் பேரன் தாத்தா.. உங்க பேரனுக்கு என்ன பிரச்சனைன்னு தாத்தா பார்த்துட்டு வர சொன்னார்.” என்றான் வீட்டினரை அலசும் கண்களோடு.
ம்.. அதிரூபன் வந்ததே ராமசாமியின் பேத்தியை காணத்தானே.? குழந்தைக்கு விபரம் வரும்முன் தன் திருமணத்தை நடத்திக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இருப்பதாலும்.. குழந்தையோடு திருமணம் செய்ய ஐந்தாறு பெண்கள் வரை மறுத்திருக்க.. தற்போது ராமசாமியின் பேத்தியை தனக்கு பிடித்து விட்டால்.. தாத்தாவிடம் சொல்லி எப்படியாவது பெண்ணிடம் சம்மதம் வாங்கிடலாம் என்ற எண்ணத்தோடு ரூபனின் கண்கள் ராமசாமியின் பேத்தியை தேடியது.
அதிரூபனின் பேச்சரவம் கேட்டு மாதவியும் கவிதாவும் வெளியே வர.. ‘நான் மாரியப்பன் பேரன்..” என மீண்டும் அறிமுகம் செய்து கொண்டவன்.. குடிக்க தண்ணீரும் கேட்டான்.
‘கனிகா.. கொஞ்சம் தண்ணி கொண்டு வா..” என பணித்து.. ‘தம்பி.. என் பேரனுக்கும் அந்த கேசுக்கும் எந்த சம்மதமும் இல்லப்பா.. அந்த மாதவன் கடன்காரன் என் பேரனுக்குதான் கடைசியா போன் செய்தான்ற ஒரே காரணத்துக்காக அவனையும் கூட்டிட்டு போய்ட்டாங்க..” என கண்ணீர் சிந்தினார் மாதவி.
ஆமாம் என்பதாய் கவிதா தலையசைக்க.. அதிரூபனிற்கு சப்பென்று ஆனது.. ம்.. கனிகா நல்ல அழகாகத்தான் இருந்தாள்.. ஆனால் ரூபனின் மனம்தான் அவளிடம் லயிக்கவில்லை. ஒரு குழந்தையிடம் அன்பு காட்டும் அளவிற்கு இவளால் பக்குவமாக இருக்க முடியாதென உறுதியாய் தோன்றியது.
நம்ம தாத்தா இந்த பொண்ண ரொம்ப வருசத்துக்கு முன்ன பார்த்ததை வச்சி எனக்கு கட்டலாம்னு நினைச்சிட்டார் போல.. ம்..இந்த பொண்ணும் ஃப்ளாப்பா.? என சலிப்பாய் எண்ணியவன்.. பெண் அமையவில்லையென்றாலும் நம் தாத்தாவிற்கு ஒரு காலத்தில் உதவியவர் ராமசாமி என்பதால் இவரின் பேரன் விசயத்தில் தன்னால் முடிந்ததை செய்யலாம் என நினைத்தவன்..
‘உங்களுக்காக என்னால முடிந்ததை செய்யிறேன் தாத்தா..” என ராமசாமியிடம் சொல்லி.. யார் கைது செய்தார்கள்.? என இன்னும் பிற விபரங்களை அறிந்து கொண்டு கிளம்பப் பார்த்தான்.
எத்தனை கோபமிருந்த போதும் தனக்காக இன்றே பேரனை அனுப்பி வைத்த மாரியப்பனை நினைத்து மனம் நெகிழ்ந்த ராமசாமி.. ‘நீ என்ன வேலை கண்ணு செய்யிற.?” என்றார் பாசமாக.
திரைத்துறையில் கதாநாயகர்களுக்கு சண்டை காட்சிகளில் டூப் போடும் வேலை செய்வதையும்.. கடந்த ஒரு வருடமாக நிறைய படங்களில் பின்னனி குரல் கொடுக்கும் வேலை செய்வதையும் தன் குடும்பம் தவிர்த்து எங்கும் சொல்லியிராத அதிரூபன்.. ‘டிரைவர் வேலை பார்க்கிறேன் தாத்தா.. சென்னையில ஒரு ஹாஸ்பிட்டல்ல ஆம்புலன்ஸ் ஓட்டிட்டிருக்கேன்.” என அனைவரும் அறிய செய்து கொண்டிருக்கும் வேலையை சொன்னான்.
ராமசாமி அடுத்ததாக மாரியப்பனின் மகள் வீட்டினரை விசாரிக்க.. ப்ரியாவை நினைத்து மனம் கலங்கியவன்.. ‘எல்லாரும் நல்லாயிருக்காங்க தாத்தா.. எனக்கு நேரமாகுது.. ஸ்டேசன் போய் என்னன்னு விசாரிச்சிட்டு உங்களுக்கு ஃபோன் செய்யறேன்..” என கிளம்பினான்.
அதிரூபனின் பின்னோடு வந்த மாதவி.. ‘தம்பி அந்த இன்ஸ்பெக்டர் என்ன சொன்னாலும் அந்த பொண்ணு மயக்கம் தெளிஞ்சி என் பேரனுக்கும் இதுக்கும் சம்மதமில்லன்னு சொன்னாத்தான் விடுவேன்னு கறாரா இருக்கிறார். ஆனா என் பேரனுக்கும் அந்த பொண்ணு விசயத்துக்கும் உண்மையா எந்த சம்மதமும் இல்லப்பா..“ என கண்ணீர் வடித்து..
‘கம்ப்ளைன் கொடுத்தவங்க கேசை வாபஸ் வாங்கிட்டா என் பையனை விடுவிச்சிடுவாங்கன்னு ஒரு கான்ஸ்டபிள் சொன்னாரு.. யார் கம்ப்ளைன் கொடுத்தாங்கன்னு அவங்க அட்ரசையும் விசாரிச்சி வச்சிருக்கேன்.. அவங்ககிட்ட பேசி பார்க்கிறிங்களா.?” என்றார் கெஞ்சலாக.
பேரன் ஜெயிலில் இருக்கும் துக்கம் ராமசாமியின் முகத்தில் பெரிதாய் காணவில்லையே.. நம்ம தாத்தாகிட்ட கூட இந்தம்மாதான் பேசினாங்க என்ற யோசனையில் அதிரூபன் இருக்க..
‘அரவிந்தன் மேல தப்பு இல்லன்னா இன்னும் இரண்டொரு நாள்ல அவங்களே விட்டுடுவாங்கன்னு இந்த மனுசன் பதறாம இருக்காங்க.. சின்ன பையன் ரொம்ப பயந்துருக்கான்.. எதாவது பார்த்து பண்ணுங்க தம்பி..” என ஆதிரையின் விலாசம் எழுதிய காகிதத்தை நீட்டினார்.
ம்.. கம்ப்ளைன் கொடுத்தது ஆதிரை என நேற்றே தெரிந்துகொண்டார் மாதவி. ராமசாமிக்கு இவ்விசயம் தெரிந்தால் நிச்சயம் அந்த பேத்திக்காகத்தான் பார்ப்பார் என கணவனிடம் வெளிப்படுத்தவில்லை.
கூடவே ஆதிரையின் மீது அத்தனை ஆத்திரத்தில் இருந்தார். ஆனாலும் புதிதாய் வந்த இன்ஸ்பெக்டர் ரொம்ப நேர்மையானவர்.. கம்ப்ளைண்ட் கொடுத்தவங்களுக்கு எதாவது இடையூறு செய்தா உண்டுயில்லன்னு ஆக்கிடுவார்.. அதனால தன்மையா எடுத்து சொல்லி கேசை வாபஸ் வாங்க வைக்க முடியுமா பாருங்க என ஆதிரையின் விலாசம் கொடுத்த காவலாளி சொல்லியிருந்ததால் ஆதிரையை திட்டக் கூட முடியாத நிலையில்.. ஆத்திரத்தை உள்ளடக்கி முதலில் பேரன் வெளிவர வேண்டும் என அதற்கான முயற்சியில் இறங்கினார்.
மாதவியிடமிருந்து அட்ரசை வாங்கியவன்.. முதலில் ஸ்டேசன் சென்று அரவிந்தன் மீது என்ன கேஸ் பதிந்திருக்கிறார்கள் விசாரித்ததில்.. மாதவன் அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இடத்தில் அரவிந்தன் இல்லையென்பதும்.. மாதவனோடு தொடர்பிலிருந்த காரணத்தால்தான் சந்தேகத்தின் பெயரில் பிடித்து வைத்திருக்கிறார்கள் என அறிந்த பின்னே..
‘எதோ கூடா நட்பு போல.. பாவம் கல்லூரிப் படிப்பில் இருப்பவனின் எதிர்காலம் வீணாகிடவேண்டாம்..” என அரவிந்தனிற்காக இன்ஸ்பெக்டரிடம் பேசிப் பார்த்தான் அதிரூபன்.
‘அந்த மாதவன் ஏற்கனவே இரண்டு பொண்ணுங்களை மிரட்டிட்டு இருந்திருக்கான்.. இவனுங்க ரெண்டு பேரும் நெருங்கின நண்பர்களாம்.. அந்த பொண்ணுக்கு ஜூஸ்ல போதை மருந்து கலந்து கொடுத்திருக்கானுங்க.. இவனுங்களுக்கு அது எங்கிருந்து வந்தது.? அரவிந்தன்கிட்ட விசாரிச்சா எனக்கு எதுவும் தெரியாதுன்றான்.. அந்த பொண்ணே மயக்கம் தெளிஞ்சி அரவிந்தன் மேல தப்பில்லைன்னு சொன்னா பார்த்துக்கலாம்..” என்ற இன்ஸ்பெக்டர் அரவிந்தனை காண்பதற்கு கூட ரூபனிற்கு அனுமதியளிக்கவில்லை.
சம்பவத்தில் அரவிந்தனுக்கு பங்கில்லை என இன்ஸ்பெக்டரே சொல்லிட்டார்.. அரவிந்தன் அப்படிபட்டவன் இல்லையென புகார் கொடுத்தவரிடம் எடுத்துரைக்கலாம்.. கோர்ட் விசாரனை என வந்தால் அரவிந்தன் மீது பழிபோடுவது தவிர்க்கும்படி பேசிப் பார்ப்போம் என மாதவி கொடுத்த விலாசம் நோக்கி பயணித்தான் அதிரூபன்.