மதியம் இரண்டு மணிபோல் காஞ்சனாவின் வீட்டிற்கு வந்தனர் மாரியப்பனும் கணேசனும். கார் சத்தம் மாதிரி கேக்குதே.. நம்ம வீட்டு முன்ன யாரா இருக்கும்.? என யோசித்தபடி வெளியே வந்த காஞ்சனா ராமசாமியைப் பார்த்து அதிர்ந்து நின்றார்.
ஒரே ஒரு நிமிடம்தான்.. பின் முகம் இறுகியவராய் எதுவும் சொல்லாமல் உள்ளே சென்றிட.. கணேசன் முகம் வாடிவிட்டது.. ‘என் பொண்ணு என்கிட்ட கோவிக்காம வேற யார்க்கிட்ட கோவிக்கும்..? வா கணேசா உள்ள போலாம்..” என மகனின் கைப்பிடித்தவாறு உள்ளே நுழைந்தர் மாரியப்பன்.
காஞ்சனா அமைதியாய் நின்றிருக்க.. சுவற்றில் மாட்டியிருந்த படத்தை பார்த்து கணேசன் கண்கலங்க.. மாரியப்பன் சத்தமாகவே கதறிவிட்டார். தலைகுனிந்து நின்றிருந்த காஞ்சனாவிற்கும் கண்ணீர் பெருக்கெடுக்க துடைத்தபடி சுவற்றுப்புறம் திரும்பி நின்று கொண்டார்.
பத்து நிமிடம் வரை கண்ணீரிலேயே மூவரும் நின்றிருக்க.. மாரியப்பன்.. ‘எனக்கு தெரியாதுடா காஞ்சிமா.. இன்னைக்குத்தான் தெரியும்..” என்றார் கமறிய குரலில்.
மாரியப்பனை காஞ்சனாவால் நம்பாமல் இருக்க முடியவில்லைதான்.. ஆனாலும் அமைதியாகத்தான் நின்றிருந்தார். கணேசன்தான்.. ‘உக்காருங்கப்பா.. எவ்வளோ நேரம் நிப்பிங்க..?” என அங்கிருந்த நாற்காலியை தந்தைக்கு அருகே எடுத்து போட்டார்.
கணவனும் மகனும் எதிர்பாராத இறப்பென்பதால் அன்று வரமுடியாமல் போனாலும் அந்த வாரத்தில் மாரியப்பனை எதிர்பார்த்தார் காஞ்சனா. ஒரு வாரம்வரை வராமல் போகவும் என்ன வேலையோ.? அங்கு என்ன சூழலலோ என மனதை தேற்றி அந்த மாதத்திலாவது வருவார் என எதிர்பார்த்தார்.
வாரங்கள் மாதங்களாகி வருடங்கள் ஆகியும் வராமல் போகவே என்னயிருந்தாலும் தந்தையின் தோழன்தானே.? அப்பா அப்பா என அழைத்தால் அப்பாவாகிடுவாரா என்ன.? அதோடு பெத்தவரே இப்படியிருக்கையில் மத்தவரை குறை சொல்லி என்னாகப்போகுது என்ற எண்ணமும் ஓங்க.. இனி யார் வந்து என்னாகப்போகுது என இவர்களின் நினைவை ஒதுக்கியிருந்தார்.
ஆனால் தற்போது நேரில் பார்த்ததும் மனம் இலகித்தான் போனது.
எந்த பதிலுமின்றி உள்ளே போய் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க இருவரும் பருகியபின் சொம்பை வாங்கியவர்.. ‘சாப்பிட எதாவது செய்யிறேன்..” என கிச்சனுள் நுழையப்போக..
மாரியப்பன்.. ‘அதெல்லாம் ஒன்னும் வேணாம்டா.. இப்படி உக்காரு..” என்றார் அங்கிருந்த மடக்கு கட்டிலை காண்பித்து.
‘அவ்வளோ பெரிய சொம்புல மொத்த தண்ணியும் காலி பண்ணியிருக்கிங்க.. பசியில்லாமலா பச்ச தண்ணிய மொடுக்கு மொடுக்குனு குடிச்சிங்க..? இங்க வந்து மயக்கம் ஏது வந்துடுச்சினா என்ன பண்ணுவேன்.? இருங்க எதாவது செய்யிறேன்..” என முறைப்போடு உள்ளே போனார்.
தான் அமர சொல்லாததால் நின்றே இருக்கும் கணேசனை நினைத்து உள்ளிருந்தபடியே.. ‘அண்ணா.. உங்களுக்கும் வயசாகிடுச்சிதான்.. சமைக்க எப்படியும் அரைமணிநேரமாவது ஆகும்.. அப்படி கட்டில்ல உக்காருங்க..” என்றார்.
கணேசன்.. ‘பசங்க படிப்புக்கு எதாவது தேவைன்னா போன் பண்ணுன்னு சொல்லிட்டுதான போனேன்.? ஏழெட்டு வருசமாகியும் ஒரு போன் கூட பண்ணல.. உன் வீட்டு சோறு ஒன்னும் எனக்கு வேணாம்..” என கோபித்தாலும் கட்டிலில் அமரத்தான் செய்தார்.
உடன் பிறக்கவில்லையென்றாலும் சிறு வயதிலிருந்தே அண்ணா என பாசத்தோடு காஞ்சனா அழைக்கும் அழைப்பு கணேசனிற்கு மிகவும் பிடிக்கும். தற்போதும் கோபம் போல் சொன்னாலும் பசியோடிருக்கிறோம் என புரிந்து கொண்ட காஞ்சனாவின் அக்கறை கணேசனை அமரச்செய்தது.
காஞ்சனாவின் அன்னை இறந்ததிலிருந்து அவரின் பாட்டிக்கு இணையாக அக்கறையும் பாசமும் வைத்த ஒரே ஜீவன் மாரியப்பன்தான்.
காஞ்சனாவை ஆறுமுகத்திற்கு கொடுக்கவேண்டாம் என வாதிட்டது.. காஞ்சனாவே திருமணத்திற்கு சம்மதித்ததால் அப்போ பத்து பவுன் நகையாவது போடு என மாரியப்பன் வாதிட்டது.. குழந்தை பிறப்பிற்கு எதுவும் செய்யாததால் ராமசாமியிடம் சண்டைக்கு நின்றது..
பரதன் ஆதிரை முடியெடுத்ததற்கு மாரியப்பன் பத்தாயிரம் பணம் கொடுத்ததற்கு ஆறுமுகம் வேணாம் என மறுத்ததற்கு.. மாரியப்பனிடமிருந்து பணத்தை வாங்கிய கணேசன்.. குழந்தைகளோட தாய்மாமன் நான்.. என் சீரை எப்படி மறுப்பீர்கள் என தன் கணவனோடு சண்டையிட்டு பணத்தை உரிமையாய் கொடுத்தது..
பதிமூன்றாம் வயதில் ஆதிரை பெரியவளாகினாள்.. அப்பொழுதும் பழம் இனிப்போடு தாவனிபாவாடை மட்டும் எடுத்து வந்த ராமசாமியிடம் ஒரு பவுன் நகைகூட எடுக்க உன்கிட்ட காசில்லையா என மீண்டும் மாரியப்பன் சண்டையிட்டார்.
அதன்பின் ஒன்பதாம் நாள் வீட்டிற்குள் அழைத்து.. ஆடம்பரம் இல்லாமல் ஆதிரையின் விசேசத்தை முடித்து.. பதினோராம் நாள் மாமன் முறையினருக்கு கறி விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் ஆறுமுகம். அதற்கு கணேசனை அழைக்க வேண்டும் என காஞ்சனா சொல்ல மாரியப்பன் குடும்பத்தினரை விசேசத்திற்கு வர சொல்லியிருந்தார் ஆறுமுகம்.
உடம்பு சரியில்லையென இந்த விழாவிற்கு வர மறுத்துவிட்டார் மாதவி. அன்று ஐம்பதாயிரம் ரூபாயை காஞ்சனாவிடம் ராமசாமி கொடுக்க.. அவங்களுக்கு தெரியாம நான் வாங்கமாட்டேன் என காஞ்சனா வாங்க மறுக்கவே.. தான் கொடுத்தால் ஆறுமுகம் பணம் வாங்கமாட்டார் என்றுணர்ந்து மாரியப்பன் மூலமாக கொடுக்க வைத்தார் ராமசாமி.
ம்.. இப்படி அந்தம்மாக்கு தெரியாம கொடுக்கிற பணத்தை வாங்கிக்க காஞ்சனா என்ன உங்க ஃபிரண்டுக்கு வப்பாட்டி பொண்ணா.? என பிடிபிடியென பிடித்துக்கொண்டார் ஆறுமுகம்.
ஒத்த ரூபான்னாலும் பெத்த அப்பன்ற முறைக்கு பத்து பேர் முன்ன சபையில செய்ய வக்கில்ல.. இப்படி பொண்டாட்டிக்கு தெரியாம உங்ககிட்ட கொடுத்தனுப்பியதை வாங்கி திண்ண இங்க யாரும் மானரோசம் கெட்டுபோய் கிடக்கல.. எடுத்துட்டு போய்டுங்க பணத்தை.. இனி அந்தாளு சொல்றான்னு இப்படி பணம் அது இதுன்னு வந்திங்க.. உங்களுக்கும் மரியாதை இருக்காது சொல்லிட்டேன்.. என வன்மையாய் கண்டித்தார் ஆறுமுகம்.
ராமசாமி செய்ததற்கு தன் தந்தை என்ன செய்வார்.? இப்படி மரியாதையில்லாமல் பேசுறானே என ஆறுமுகத்தின் மீது கணேசனும் வார்த்தையை விட.. அது ஆறுமுகத்திற்கும் கணேசனிற்கும் மனவருத்தத்தை உண்டாக்கியது.
‘அண்ணா நீங்க எதுவும் தப்பா நினைக்காதிங்க.. பெத்த புள்ளைக்கு செய்யிறதுக்கு எதுக்கு மறைச்சி செய்யனும்ன்ற கோபம்தான் அவருக்கு.. அப்பா மேல உள்ள கோபத்துல பேசிட்டார்..” என காஞ்சனா கணேசனை சமாதனம் செய்து சாப்பிட அழைத்தார்.
ஆனால் ஆறுமுகத்தோடு சேர்த்து அவரின் குடும்பத்தினரில் ஒருவரும் மாரியப்பனையோ கணேசன் கனகாவையோ சாப்பிட சொல்லாமல் போகவே மாரியப்பன் சகித்துக்கொண்டு இருந்தபோதும் கணேசனிற்கும் கனகாவிற்கும் அது பெருத்த அவமானமாய் தோன்ற..
தன் கூட பிறந்திருந்தா இப்படி கோவிப்பாங்களா என காஞ்சனா நினைத்திடக் கூடாதென.. ‘புருசனுக்கும் எங்களுக்கும் இடையில நீ அல்லாடிக்காத.. சாப்பிட்டாதான் உன்மேல பாசம்ன்னு இல்ல.. அப்பா எப்பவும் உன்ன மகளாத்தான் நினைப்பார்.. குழந்தைங்களுக்கு எதாவது தேவைப்பட்டா நாங்க இருக்கோம்ன்றதை மறந்திடாத.. என சொல்லி என குடும்பத்தாரை அழைத்துக்கொண்டு போனதுதான்.
அதன்பின் கணேசனும் மாரியப்பனும் இன்றுதான் வந்திருக்கிறார்கள்.. சிறுவயதில் தன்மீது காட்டிய பாசம் பொய்யில்லை என்பதை கணேசன் மாரியப்பனின் தற்போதைய அழுகை சொல்லவே.. கணவனின் இறப்பிற்கு வரவில்லையென்ற கோபம் இருந்தபோதும் தற்போது காஞ்சனாவால் வெறுப்பு காட்டமுடியவில்லை.. இதோ பழையதை நினைத்தவாறு சமைத்து முடித்து வந்தார்.
‘எழுந்து முகம் கழுவி வாங்கப்பா..” என்றார் மாரியப்பனிடம்.
கணவன் மகன் என இரு உயிர்களை பறிகொடுத்து இரண்டு வருடமாகியும் தான் வந்து பார்க்காத கோபமெல்லாம் ஐந்து நிமிடத்தில் மறந்து தன் பசியாற்ற சமைக்க சென்ற காஞ்சனா மீது கணேசனிற்கு இன்னும்தான் பாசம் கூடியது.
தன் மகனிற்கு ப்ரியா என நாம் முடிவுசெய்தோம்.. ஆனால் நடக்கவில்லை.. தற்போது ரூபனிற்கு தீவிரமாக பெண் தேடிக்கொண்டிருக்கும் நேரம் அப்பா காஞ்சனாவின் மகளை சொன்னாலும்.. ஆறுமுகம் தமக்கு பெண் கொடுப்பார் என்ற நம்பிக்கை இல்லை.
அப்படியிருந்தும் கேட்டு பார்ப்போம் என நினைத்தால் தற்போது அவர் உயிரோடு இல்லை.. ஆறுமுகம் இல்லாதது பெரும் துயரம் என்றாலும்.. ரூபனிற்கு ஆதிரைதான் என கடவுள் போட்ட முடிச்சி போல.. அதான் ப்ரியா இழப்பு ஆறுமுகம் இழப்பென பல விசயங்கள் நடந்தேறிவிட்டது.
இனி தன் மகனை ஆதிரைக்கு பிடிக்கவேண்டும்.. ரூபனிற்கு ஆதிரையை பிடிக்க வேண்டும் அவ்வளவே.. ரூபனை கூட நாம் சொல்லி சம்மதிக்க வைத்திடலாம்.. ஆனால் ஆதிரைக்கு தன் மகனை பிடிக்குமா என்ற யோசனையோடு காஞ்சனா சாப்பிட அழைத்தது கூட அறியாமல் அமர்ந்திருந்தார் கணேசன்.
தான் சாப்பிட கூப்பிட்டும் அண்ணா ஏன் எதுவும் சொல்லாமல் இருக்கிறாங்க.? வெறும் ரசம் முட்டை மட்டும் இவர்களுக்கு பிடிக்காதோ என தோன்ற.. ‘எனக்கொருத்திக்குன்னு பெருசா எதுவும் சமைக்கிறதில்லண்ணா.. வீட்ல முட்டை மட்டும்தான் இருந்தது.. முதல்ல பசியாத்துவோம்னு இருக்கிறதை செய்தேன்.. இப்போ சாப்பிடுங்க.. சாய்ங்காலம் எதாவது செய்யிறேன்..” என்றார்.
‘நாங்க என்ன விருந்தாளியா.. இருக்கிறதே போதும்டா..” என்றவர்.. ‘கணேசா.. எழுந்துரு கை கழுவி வரலாம்..” என்ற மாரியப்பனின் குரலில்தான் சுதாரித்து எழுந்தார் கணேசன்.
இருவரும் கை கழுவி சாப்பிட அமர்ந்தனர். ‘அதென்ன உனக்கொருத்திக்கின்ற.? அப்போ ஆதிம்மாக்கு.?” என்றார் மாரியப்பன்.
அதற்கு காஞ்சனா பதிலளிக்கும் முன் மருமகளைப் பற்றி அறியும் ஆவலில்.. ‘ஆதிம்மா வேலைக்கு போகுதாமே.. எங்க போகுது.? என்ன படிச்சிருக்கு.?” என்றார் கணேசன்.
‘இன்ஜினியருக்கு படிச்சிருக்காண்ணா.. சென்னையில நல்ல வேலையும் கிடைச்சது.. என்னை தனியா விட்டுட்டு போக மனசில்லாம முன்ன சாய்ங்காலம் மட்டும் வேலை செய்திட்டிருந்த பேக்கரிக்கே இப்ப முழுநேர வேலைக்கு போறா.. பதினைஞ்சாயிரம் தராங்க..” என்றார்.
கணேசன்.. ‘எத்தனை நாளைக்கு உன்னோடவே இருக்க போகுதாம்..?” என்றார் சிரிப்போடு.
‘அதையேண்ணா கேக்குறிங்க.. வாழ்க்கை முழுக்க என்னோடதான் இருக்க போறாளாம்.. வீட்டோட மாப்பிள்ளை கிடைச்சா மட்டும்தான் கல்யாணம் செய்துக்குவாளாம்..” என்றார் மகளின் நினைவில் நெகிழ்ச்சியோடு.
கணேசன்.. ‘பார்டா.. அம்மா மேல அவ்வளோ பாசமா.?” என பெருமையாய் சொல்லி.. ‘ஆனா இந்த காலத்துல அப்படி எங்கன்னு மாப்பிள்ளை தேட.?” என்றார் சிரிப்போடு.
கணேசனிற்கு தற்போதே பெண் கேட்டிடும் எண்ணம் வந்ததுதான்.. ஆனால் நீண்ட நெடிய வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் வந்திருக்கோம்.. அதுவும் துக்கம் விசாரிக்க வந்திருக்கும் நேரம் இப்படி பேச்செடுக்க வேணாம்.. நல்ல நாள் பார்த்து மனைவியோடு வந்து பேசலாம் என நினைத்து அமைதியானர்.
ஆனால் மாரியப்பனால் ரகசியம் காக்க முடியாமல் போகவே..’வீட்டோட மாப்பிள்ளைக்கு என் பேரன் ஒத்துக்க மாட்டானே காஞ்சிமா.. ஆனா ஆதிம்மாவோட சேர்த்து உன்னையும் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போக சம்மதிப்பான்..” என்றார் சிரிப்போடு.