‘அப்பா..” என கணேசன் பதற.. இப்படி பேச்சினை எதிர்பாராத காஞ்சனாவும் அதிர்வாய் பார்த்தார்.
‘என்ன காஞ்சனா அப்படி பார்க்கிற.? உன் கணேசன் அண்ணா மகன் அதிரூபனுக்கு உன் பொண்ணை கொடுக்க மாட்டியா.?” என்றார் உரிமையாக.
‘அப்பா..” என தடுமாறிய காஞ்சனாவிற்கு சந்தோசமும் தடுமாற்றமும் ஏற்பட.. இதற்கு மேல் அமைதிகாக்க வேணாம் என நினைத்த கணேசன்.. ‘என்ன காஞ்சனா.? இங்க உங்க சொந்தங்கள்ல யாருக்காவது ஆதியை பேசி முடிச்சிருக்கிங்களா.?” என்றார் சந்தேகத்தோடு.
‘இல்லண்ணா..” என அவசரமாய் மறுத்தவர்.. ‘உங்க வசதியளவுக்கு என்னால பெருசா சீர் செய்யமுடியாது.. ஆதிம்மா வேலைக்கு போனதுக்கப்புறம்தான் கொஞ்சம் நகை பணம் சேர்த்த ஆரம்பிச்சிருக்கேன்.. அதோட இன்னும் யாரும் அவளை பொண்ணும் கேட்டதில்ல.. இப்படி நீங்க பட்டுன்னு சொல்லவும் பதட்டமாகிடுச்சி..” என்றார்.
அன்னைக்கு பார்த்து ராமசாமி என்னை நேர்ல பார்க்கனும்னு சொன்னான்.. அவன் குரல் என்னவோ போல இருக்கவும் இன்னைக்கே வந்தேன்.. இன்னைக்குத்தான் அன்னைக்கு நடந்ததெல்லாம் ராமசாமி சொன்னான்..” என கண்கலங்கி..
‘ஆறுமுகத்துக்கு எங்களை பிடிக்கல.. நம்மளால இங்க களவரம் வேணாம்னுதான் வராம இருந்தேன்.. ஆனாலும் இவ்வளோ நாள் உன்ன பார்க்க வராம இருந்திருக்க கூடாதுனு இப்போதான்டா தோணுது.. வரப்போக இருந்திருந்தேன்னா நீயும் உரிமையா எங்ககிட்ட சொல்லியிருப்ப.. எப்படியாவது ஆறுமுகத்தை காப்பாத்தியிருக்கலாம்..” என்றார் வேதனையாக.
காஞ்சனா.. ‘விடுங்கப்பா.. என் விதி இப்படின்னு கடவுள் முன்னமே எழுதிட்டார்.. பழைசை நினைக்க வேணாம்..” என தானே தேற்றி.. ‘எனக்கு இப்ப இருக்கிற ஆசையெல்லாம் ஆதியை ஒரு நல்ல இடத்துல கட்டிக்கொடுக்கனும்னுதான்.. நான் சொன்னா ஆதிம்மா கேட்டுக்குவா..
ஆனா இந்த ஏழை வீட்ல பொண்ணெடுக்க அண்ணி சம்மதிப்பாங்களா.? என் அண்ணன் பையனுக்கு என் பொண்ணை பிடிக்குமா.? இந்த கல்யாணத்துக்கு சம்மதிப்பானா.? உங்களுக்கு என்மேல உள்ள பாசத்துக்காக ரூபனை கட்டாயப்படுத்த முடியாதில்லைங்களா.? மத்த விசயம்னா பரவால்ல.. கல்யாண விசயம் பிடிச்சி செய்தாதான வாழ்க்கை நல்லா இருக்கும்..” என்றார் ஆசை தேக்கிய குரலோடு.
கணேசன்.. ‘நம்ம ஆதிம்மாவை யாருக்காவது பிடிக்காம போகுமா.? பொண்ணுங்களுக்கு சொத்தே படிப்புதான்.. ஆதிம்மா இன்ஜினியருக்கு படிச்சிருக்கு.. இதைவிட வேற என்ன சொத்து வேணும்.? அதோட யாராவது தங்கச்சி வீட்ல பொண்ணெடுக்க சீர் செனத்தி எதிர்பார்ப்பாங்களா.?
உங்கண்ணி பொண்ணு கிடைச்சா போதும்னு தினம் தினம் சாமிகிட்ட வேண்டிட்டிருக்கா.. இதுல தேவதையே கிடைச்சா சம்மதிக்காம என்ன செய்வா.?” என தானும் ஆசையாய் சொல்லி..
‘வாழ்க்கையிழந்து நிராதரவா நின்ன நேரத்துல உன்ன பார்க்க கூட வராம இருந்துட்டோம்.. அதெல்லாம் மனசுல வச்சிக்காம அப்பா சொன்னதும் நீ பொண்ணு கொடுக்க சம்மதிச்சது என் புண்ணியம் காஞ்சனா..” என்றார் பெருமையாக.
‘இன்னைக்கு ஒரு நாளைக்கு போன் செய்து வரவைக்க முடியாதாம்மா..?” என்றார் மாரியப்பன்.
‘என்னைக்காவது ரொம்ப முடியலன்னா சொல்லிட்டு வருவாதான்..” என முனுமுனுத்தவர்.. ‘சாய்ங்கால நேரம்தான் வியாபாரம் ஜாஸ்தியா இருக்கும்னு ஆறு மணிக்கு மேல ஃபோன் செய்தாலே எடுக்க மாட்டா.. ஆனா இப்போ மணி நாலுதான் ஆகுது.. டீ டைமா இருந்தா பேசுவா.. இருங்க போன் செய்து பார்க்கிறேன்..” என ஆதிரைக்கு அழைத்தார்.
‘சொல்லுமா.. என்ன இந்த நேரத்துக்கு ஃபோன்..?” என்றாள்.
சற்று நேர மௌனத்திற்கு பிறகு.. ‘ஓ.. நான் பெரிய பொண்ணானப்ப உங்கப்பா ஒருத்தர்கிட்ட காசு கொடுக்க சொல்லி நமக்கு கொடுத்தாங்களே அவங்களா.?” என்றாள்.
‘ஆமா ஆதிம்மா.. உனக்கு நியாபகம் இருக்கா.? உன்னை பார்த்துட்டுதான் போகனும்னு ஆசைப்படுறாங்க.. இன்னைக்கு ஒரு நாள் பர்மிசன் போட்டுட்டு வரியா.?” என்றார் ஆசையாக.
‘என் அப்பா அண்ணன் சாவுக்கு வராதவங்க.. உங்கப்பா பேரன் ஜெயிலுக்கு போனான்னதும் கேசை வாபஸ் வாங்க சொல்லி கேட்க வந்திருக்காங்க..” என உள்ளடக்கிய கோபத்தோடு சொல்லி..
‘இதுகூட தெரியாம ஆசை பாசம்னு இன்னும் ஏன்மா பச்ச மண்ணாவே இருக்க.?” என ஆற்றாமையோடு திட்டி.. ‘அந்த அரவிந்தனை கேசுலயிருந்து விடுவிச்சது தெரியாம வந்திருப்பாங்களா இருக்கும்.. உங்கப்பா பேரனை கேசுலயிருந்து விடுவிச்சிட்டாங்கன்னு சொல்லி பாருங்க.. உடனே கிளம்பிடுவாங்க..” என நக்கலாக சொன்னவள்..
‘ரொம்ப பாசமா என்னை பார்க்க வந்தாங்களாம்.. வேலை நேரத்துல டென்சன் செய்துகிட்டு.. ஃபோனை வைம்மா..” என கோபத்தோடு சொல்லி இணைப்பை துண்டித்தாள் ஆதிரை.
‘என் பேத்தி என்ன சொன்னது காஞ்சனா.?” என மாரியப்பன் ஆவலோடு கேட்க.. ‘அது.. அது இப்போ கொஞ்சம் வேலை அதிகமாம்..” என காஞ்சனா தடுமாற.. ‘நீ ஏன்மா பதட்டப்படுற.? என் மருமக சரியாதான் பேசியிருக்கு..” என்று ஆதிரை பேசியதை மாரியப்பனிற்கு விளக்கினார் கணேசன்.
குற்றவுணர்வில் மாரியப்பன் முகம் சட்டென வாடிவிட்டது. ‘அன்னைக்கு நடந்த பிரச்சனை மட்டும்தான் அவளுக்கு தெரியும்.. மத்தபடி உங்களைப் பத்தி அவளுக்கு தெரியாதுப்பா.. வீட்டுக்கு வந்ததும் எடுத்து சொன்னா புரிஞ்சிப்பா.. நீங்க வருந்தாதிங்க..” என்றார் தவிப்பாக.
‘அவங்கப்பா அண்ணன் சாவுக்கு வராததுக்கு ஆதிம்மா கோபப்பட்டது எனக்கு வருத்தமில்லமா.. அது நியாயமான கோபம்தான்.. ஆனா.. இப்பவும் அரவிந்தனுக்காக வந்திருக்கோம்னு எங்களை தப்பா நினைச்சதைதான் தாங்க முடியல..” என கணேசனும் வருந்தினார்.
‘அவ சின்ன பொண்ணுணா.. எடுத்து சொன்னா புரிஞ்சிப்பா..” என்றார் மீண்டும்.
கணேசன்.. ‘ஆதிம்மாதான் என் மருமகன் மனக்கோட்டை கட்டிட்டேன்.. எப்படியாவது எடுத்து சொல்லி புரியவை காஞ்சனா.. அரவிந்தனுக்காக வந்தோம்ன்ற காரணத்துக்காகவே கல்யாணத்துக்கு சம்மதிக்காம இருந்திடப்போகுது..” என்றார்;.
‘அவங்கப்பா போனதுக்கப்புறம் ஆதி ரொம்ப பக்குவமாகிட்டாண்ணா.. பொறுமையா எடுத்து சொன்னா கண்டிப்பா புரிஞ்சிப்பா..” என்றார் நம்பிக்கையாக.
சரியென தலையசைத்து ஆமோதித்து மேலும் சற்று நேரம் பேசியிருந்து.. ‘நீ ஆதிம்மாகிட்ட பேசி சம்மதம் வாங்கினதுக்கப்புறம் எனக்கு ஃபோன் பண்ணு.. ஒரு நல்ல நாள் பார்த்து முறைப்படி பொண்ணு பார்க்க வரோம்..” என தனது நம்பரை கொடுத்து கிளம்பினார்கள் கணேசனும் மாரியப்பனும்.
—– ——- ——–
வழக்கம்போல் ஒன்பது மணிபோல் ஆதிரை வந்தாள். சோர்ந்திருந்த அன்னை முகத்தை பார்த்தவாறே முகம் கழுவ போய் வந்தவள்.. ‘சாப்பாடு எடுத்து வாம்மா..” என்றாள்.
காஞ்சனா எடுத்து வர.. வழக்கம்போல் ஆதிரை பரிமாற இருவரும் சாப்பிட்டனர். ‘ஆதி நீ நினைக்கிற மாதிரி அவங்க அரவிந்தன் கேசை வாபஸ் வாங்க சொல்ல வரல..” எனும்போதே..
‘அதுக்காகத்தான் வந்திருப்பாங்க.. அவனை விடுவிச்சிட்டாங்கன்னு நான் சொன்னதை நீ சொல்லியிருப்ப.. உடனே மாத்தி பேசியிருப்பாங்க..” என்றாள்.
‘ப்ச்.. இல்ல ஆதி.. நிஜமா அரவிந்தனைப் பத்தி ஒத்த வார்த்தை கூட அவங்க பேசுல.. உன் விசேசத்துல சண்டை வந்ததுக்கப்புறம் எங்கப்பாவோட பேச்சு வார்த்தையே இல்லாம இருந்திருக்காங்க..
என் அப்பா இவங்களை நேர்ல பார்க்கனும்னு வர சொல்லியிருந்தாராம்.. ரொம்ப வருசத்துக்கப்புறம் கூப்பிடவும் உடம்புக்கு எதோன்னு பார்க்க வந்திருக்காங்க.. இன்னைக்குதான் உன் அப்பா செத்ததே இவங்களுக்கு தெரிய வந்திருக்கு..
இங்க வந்ததும் நான் பேசவேயில்ல ஆதி.. உங்கப்பா படத்தையும் பரதன் படத்தையும் பார்த்து ரொம்ப அழுதாங்க.. அவங்க பாசம் உண்மை ஆதிம்மா.. உன்னை பார்க்கனும்னு ரொம்ப ஆசையோட இருந்தாங்க..” என்றார்.
கதை ரொம்ப நல்லாயிருக்கு என மனதில் நினைத்தவள்.. ‘சரிம்மா.. அவங்க பாசக்காரவங்கதான்.. அதுக்கு என்ன பண்ணலாம்.?” என்றாள்.
‘ஒன்னும் பண்ண வேணாம்.. உன்னை பார்க்கிற ஆசையில இன்னொரு நாளைக்கு வரன்னு சொல்லிட்டு போயிருக்காங்க.. அவங்க வந்தா நாலு வார்த்தை அன்பா பேசு போதும்..” என்றார்.
அதான் அவன் ரிலீவ் ஆகிட்டானே.. அப்புறம் எதுக்கு வரப்போறாங்கன்னு நம்ம மக்கு அம்மாக்கு புரிஞ்சாதான.? என மனதில் நினைத்து.. ‘சரிம்மா.. மறுபடி வந்தா பார்த்துக்கலாம்..” என தன்மையாகவே சொல்லி.. ‘தூங்கலாமா.?” என்றாள்.
மனதில் நிம்மதி பிறக்க.. ‘நீ படு.. நான் நாடகம் பார்த்துட்டு தூங்கறேன்..” என்றார் சந்தோசத்தோடு.
‘ம்..” என படுத்தவள் தன் மொபைலை எடுத்தாள். வழக்கமாய் சற்று நேரம் பார்த்துவிட்டுதான் தூங்குவாள் என்பதால்.. தொலைகாட்சியை உயிர்பித்தவருக்கு நாடகத்தில் மனம் லயிக்கவில்லை..
வீட்டிற்கு வந்ததே தமக்காக என நம்பாத மகளிடம் அவர்கள் நல்லவர்கள் என இப்போதுதான் பேசி புரிய வைத்திருக்கிறோம்.. இப்பொழுதே பெண் கேட்ட விசயத்தை சொன்னால் ஒப்புகொள்ள மாட்டாள்.. முதலில் ராஜாத்திஅண்ணி இளங்கோ இவர்களிடம் சொல்லி பிறகு ஆதிக்கு புரிய வைக்கலாம் என முடிவெடுத்த பிறகுதான் சற்று நிம்மதியானது காஞ்சனாவிற்கு.