‘இத்தனை வருசம் இந்த மனுசனோட குப்பை கொட்டி என்னயிருக்கு.? இவங்களுக்கு வடிச்சி கொட்டவும் புள்ள பெத்துக்கவும் மட்டும் ஒருத்தி வேணும்.. ஆனா இரண்டாந்தாரம்னா எதையும் உரிமையா கேக்க கூடாது.. நல்லாயிருக்கு இவங்க சட்டம்..” என புலம்பிய படி மருத்துவமணை வளாகத்தில் அத்தனை ஆத்திரத்தோடு உலாத்திக் கொண்டிருந்தார் மாதவி.
மாரியப்பனும் கணேசனும் ராமசாமிக்கு என்னவாயிற்றோ என்ற பதட்டத்தோடு வந்து கொண்டிருக்க.. ‘அம்மா.. ஹை கோர்ட் நீதிபதிங்க வராங்க..” என்றாள் கவிதா.
இருவரையும் பார்த்த மாதவியின் முகம் இறுக்கமானது. ம்.. இவர்தான் வர சொன்னார்.. வேறு வழியில்லை என்பதால் வர சொன்னார்.. மாதவியருகே வந்த மாரியப்பன்.. ‘ராமசாமிக்கு இப்போ எப்படியிருக்கு..?” என்றார் பதட்டமாக.
ம்.. சோகம் சொத்தின் மீதாகத்தான் இருக்கும் என நினைத்த மாரியப்பனிற்கு ராமசாமியோடு தன் இளவயது நினைவுகள் வலம் வர கண்கள் குளம் கட்டியது. ‘அப்பா.. உங்க பிரண்டுக்கு ஒன்னும் ஆகாது.. இப்படி வந்து கொஞ்சம் உக்காருங்கப்பா..” என கணேசன் அருகிலிருந்த சேரில் அமரவைத்து தானும் அருகமர்ந்து.. ‘டாக்டர் எப்ப வருவாங்க.? நாம அவரை பார்க்க முடியுமா.?” என்றார்.
‘யாரையும் உள்ள விடமாட்டுக்கிறாங்க..” என்றார் கவிதா.
மேலும் அரைமணி நேரம் கழிந்த நிலையில் காஞ்சனாவும் ஆதிரையும் காரிடரில் நுழைய.. ஆதிரையைக் கண்டதும்.. ‘அப்பா..அங்க பாருங்க..” என்றார் கணேசன்.
எதோ தேவையில்லா இடத்திற்கு தேவையில்லாமல் வருவதுபோல் தன் அன்னையோடு வந்து கொண்டிருந்தாள் ஆதிரை. யாரோ எப்படியோ போகட்டும்.. அவங்க சொத்து நமக்கு வேணாம் என அன்னையிடம் வாதடினாள் ஆதிரை.
உரிமைப்பட்டதை எதற்கு விடனும் என இளங்கோவும் ராஜாத்தியும் எடுத்துரைக்க.. அப்பொழுதும் அவங்க மேல எங்களுக்கு எந்த உரிமையும் இல்லையென்றாள்.
நீங்க போகலன்னா அந்த மாதவி அதற்கும் பிரச்சனை செய்யும்.. உங்க தாத்தா அப்படி உயில் எழுதி வச்சிருக்கார் போல.. போய் பிரச்சனையை முடிச்சிட்டு வாங்க என வற்புறுத்தவும்தான் இங்கு வர சம்மதித்தாள்.
இளங்கோவும் ராஜாத்தியும்.. ‘நீ சொத்து வேணாம்னா உங்கப்பாவோட பொண்ணே இல்லன்னு கூட அந்த மாதவி சொல்லும்.. இத்தனை வருசம் கழிச்சி செத்து போன உங்கம்மாக்கு இப்படி அசிங்கம் தேவையா.? உனக்கு உரிமைப்பட்டதை வாங்கிக்கோ.. என காஞ்சனாவிடமும்..
‘உங்க தாத்தாக்கு உங்களுக்கு செய்யனும்னுதான் ஆசை.. ஆனா அந்தம்மாக்கு தெரியாம செய்ய நினைக்கிறது உங்கப்பாக்கு பிடிக்காததாலதான் பிரச்சனையாகி எதையும் செய்யாம விட்டுட்டார்..
ஆறுமுகம் உயிரோடு இருந்த வரை பிரச்சனையில்ல.. இப்போ நீயும் கல்யாணம் ஆகி போய்ட்டினா உங்கம்மா செலவுக்கு என்ன செய்வாங்க.? அவங்கப்பா அவர் பொண்ணுக்கு கொடுக்க நினைக்கிறார்.. உன்னால அது கெட வேணாம்.. அம்மாவோட போய் வா..” என ஆதிரைக்கும் எடுத்துரைத்து அனுப்பினர்.
ஆதிரை வேலைக்கு போனால்தான் வருமானம் என்ற நிலையில்.. சொத்திற்க்காகத்தான் வரவழைத்திருக்கிறோம் என அறிந்த பின்னும்.. சொத்தின் மீது எந்த ஆசையுமில்லாமல், காஞ்சனாவின் கையை தன் கையினுள் பிணைத்தபடி அன்னைக்கு ஆதரவாய் மட்டுமே வந்து கொண்டிருக்கும் ஆதிரையைப் பார்த்தும் பூரித்து போனார் கணேசன்.
அருகே வந்த காஞ்சனா.. யாரையும் பார்க்காமல் தன் மகளோடு தள்ளியே நின்றார்.
‘பெத்த அப்பன் சாகக்கிடக்கிறார்.. எந்த பதைப்பும் இல்லாம வந்து நிக்கிறா பாரு.. இப்படி மகளுக்குத்தான் உங்கப்பா சொத்தெழுதி வச்சிருக்கார்..” என மகளிடம் முனுமுனுத்தார் மாதவி.
‘ம்மா.. தேவையில்லாம எதாவது பேசி வச்சிடாத.. நமக்கு காரியம் ஆகனும்..” என அதட்டினாள் கவிதா.
அடுத்த பதினைந்து நிமிடம் கழித்து.. கனிகாவும் அரவிந்தனும் வந்தனர். இவளாலதான் நான் இரண்டு நாள் ஜெயில்ல இருந்தேன்.. என மருவியபடி ஆதிரையை தீயாய் பார்த்திருந்தான் அரவிந்தன்.
‘அம்மா.. நீயும் ஆயாவும் சாப்பிட எடுத்து வந்திருக்கேன்.. போய் சாப்பிடுங்க..” என்ற கனிகாவின் முகத்தில் தன் தாத்தா உடல்நிலைக்கான கவலை இருந்தது.
‘வேணாம் கனிகா..” என்றார் மாதவி.
‘மணி பத்தாகப்போகுது.. எவ்வளோ நேரம் பசியோட இருப்பிங்க.? போய் சாப்பிடுங்க.” என அதட்டினான் அரவிந்தன்.
மாதவிக்கும் கவிதாவிற்கும் ராமசாமி என்ன எழுதி வச்சிருக்காரோ என்ற கவலையில் பசியே இல்லை. எப்போ வக்கில் வருவார்.? என்ற ஆவலிலேயே இருந்தனர்.
‘தாத்தாக்கு ஒன்னும் ஆகாதுமா.. மணி பதினொன்னாகப்போகுது.. மயக்கம் ஏது வந்திடப்போகுது.. முதல்ல வந்து சாப்பிடுங்க..” என மாதவியையும் கவிதாவையும் சாப்பிட அழைத்துப் போனான்.
கணேசன்.. ‘சம்பந்தியாகலன்னா என்ன.? பேசக் கூட மாட்டியா காஞ்சி..” என்றார் வேதனையாக.
‘உங்களுக்கு ஒரு பொண்ணிருந்தா இப்படி கட்டிகொடுப்பிங்களா.?” என்றார் கோபமாக.
‘மறைக்கனும்னு இல்ல காஞ்சி, நம்ம தங்கைதானன்னு இருந்துட்டேன், தப்புதான்..’’ என சமாதனப்படுத்தவே காஞ்சனா கண் கலங்கினார்.
‘அவங்க என்னவோ சொல்லிட்டு போறாங்க.. நீ அமைதியா இரு..” என ஆதிரை என்ன சொல்லியும் மாரியப்பனின் கண்ணீரும்.. ‘உனக்கு பிடிக்கலன்னா நான் வறுபுறுத்தல காஞ்சி.. நம்ம ஆதிக்கு பிடிச்சமாதிரி நல்ல இடமா பார்க்கலாம்..” என கணேசனின் அக்கறையான பேச்சுக்களையும் கேட்க சகிக்காமல்.. ‘அம்மா.. நான் அந்த பால்கனிகிட்ட இருக்கேன்..” என கோபமாக அவ்விடம் விட்டு அகன்றாள் ஆதிரை.
— —— —– ——
மருத்துவமணையில் நுழைந்தவன்.. தந்தைக்கு அழைத்து அறை எண் விசாரித்தபடி இரண்டாம் தளம் நோக்கி வேக நடைபோட.. ஆதிரை தரிசனம் கிடைக்கவே.. இங்க எப்படி இவ.? என சற்றும் எதிர்பாராத சந்தோசத்தில் சட்டென நின்றான்.
பிறகு தன் மொபைலில் கவனம் செலுத்தியிருந்தவளை ரசித்தவாறே மெல்ல நடந்து அவளை நெருங்கியவன்.. ‘ஹாய்..” என்றான் உற்சாகத்தோடு.
மிக அருகில் ஆண்குரல் கேட்கவும் திடுக்கென நிமிர்ந்தவள்.. ஒரு நொடி அதிர்ந்தாலும்.. பின்னே தள்ளி நின்று.. ‘அன்னைக்கு போலீஸ்ன்னு பொய் சொல்லி எங்க வீட்டுக்குள்ள வந்ததும் இல்லாம.. என்ன தைரியம் இருந்தா இன்னைக்கும் இப்படி பக்கத்துல வந்து ஹாய் சொல்விங்க.?” என்றாள் அதீத கோபத்தோடு.
‘உன் பக்கத்துல வரதுக்கு தைரியம் வேற வேணுமா.?” என சின்ன சிரிப்போடு கேட்டு.. ‘ம்.. உன்கிட்ட நிறைய பேசனும்.. இன்னைக்கு இங்க ஒரு வேலையா வந்தேன்.. இங்க முடிச்சதும் உன்னை பார்க்க வீட்டுக்குதான் வரலாம்னு இருந்தேன்.. என் அதிர்ஷ்டம் நீ இங்க இருக்க..” என்றான் சந்தோசத்தோடு.
‘வீட்டுக்கா..” என அதிர்வோடு விழிவிரித்தவள்.. ‘இனி வீட்டு பக்கம் ஏது வந்திங்க.. போலீஸ்ன்னு பொய்சொல்லி ஃபோர்ஜரி செய்திங்கனு உங்கமேல கம்ப்ளைன் கொடுத்திடுவேன் ஜாக்கிரதை..” என்றாள் கோபமாக.
ஆதிரையின் கோபத்தை ஒதுக்கியவன்.. இவ வீட்ல இவங்கம்மா மட்டும்தான்னு சொன்னாளே.. ஒரு வேளை இவங்கம்மாக்கு முடியாம அட்மிட் செய்திருக்காங்களோ என யோசித்திருக்க..
‘என்ன கம்ப்ளைன் கொடுக்கமாட்டன்னு நினைப்பா.? அடுத்த பொண்ணு ஆபத்துக்கே போலீஸ்க்கு கால் செய்தவ.. எனக்கொன்னுனா விட்ருவனா.? இந்த குண்டு மிரட்டல்லாம் என்கிட்ட வச்சிக்காதிங்க..”என எச்சரித்து நகரப் போனவளை கைப்பிடித்து நிறுத்தினான்.
‘ஏய்..” என ஆதிரை கையை உதற முயல.. ‘ரௌடி பசங்களைப் பார்த்து பயப்படாம சமூக அக்கறையோட ஒரு பொண்ணை காப்பாத்த நினைச்ச உன்னை மாதிரியான பொண்ணை பாராட்டியே ஆகனும்..” என்றான் பெருமையாக.
‘அந்த பொண்ணை எப்படியாவது காப்பாத்தனும்னு நினைச்சேன்.. அது போலீஸ் செய்துட்டாங்க.. உங்க பாராட்டெல்லாம் எனக்கு தேவையில்ல..” என நகர முயல.. அங்கிருந்து மற்றொரு காரிடார் மறைவிற்கு கட்டாயத்தோடு அழைத்து சென்றான்.
ம்.. எப்படியாகினும் இன்று இவளிடம் தன் காதலை சொல்ல நினைத்தோம்தானே.? இப்பொழுதே தனியாகத்தானே இருக்கிறோம் என நினைத்து ஆழ்ந்து பார்த்திருந்தான் ஆதிரையை.
‘யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க.? கையை விடுங்க முதல்ல..” என்றாள் கோபத்தோடு.
‘நீ திமிறாம அமைதியா நின்னினா யாரும் ஒன்னும் நினைக்க மாட்டாங்க.. ஒரு பத்து நிமிசத்துல உன்னை போக விட்டுடறேன்..” என்றான் கெஞ்சலாக.
ஆதிரை என்ன என்பதுபோல் பார்க்க.. ‘அன்னைக்கு உன் வீட்ல வச்சே என் மனசை சொல்லியிருப்பேன்.. ஆனா மத்தவங்க மாதிரி என்னால காதலை மட்டும் சொல்லிட்டு அதோட விடமுடியாது.. என் பட்டுவையும் உனக்கு தெரிய வைக்கனும்.. அதுக்கான நேரம் அன்னைக்கு இல்லன்னுதான் இன்னொரு நாள் வரன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்..
நான் பட்டுன்னு சொன்னது என் குழந்தையை..” என்றதும்.. இத்தனை நேரம் அவனின் கைக்குள் அடங்கியிருந்த கையை விலக்க சிறிதாய் முயற்சித்திருந்தவள்.. தற்போது பலமாய் போராடினாள்.
ஆதிரையின் கையை தானே விடுவித்து அவள் செல்வதை தடுக்குமாறு சுவற்றில் கை ஊன்றியதும்.. ‘கையை எடுங்க நான் போகனும்..” என்றாள் ஆற்றாமையோடு.
அன்றும் இன்றும்.. தன்னிடம் கோபமாய் பேசியவளின் குரல்.. தற்போது காதலை சொன்னதும் உடைந்திருப்பதை உணர்ந்து.. தலைகுனிந்திருந்தவளின் தாடை தொட்டு நிமிர்த்தி ஆதிரையின் முகம் பார்த்தவன்.. ‘ஒரு குழந்தைக்கு தகப்பன்னா லவ் பண்ண கூடாதா.? என் விருப்பத்தை சொன்னதும் எதோ உன்னை கீழ நினைச்ச மாதிரி எதுக்கு இப்படி கண்கலங்குற.?” என்றான் சிறு அதட்டலாக.
ஆதிரை தன் காதலுக்கு எதிர்ப்பை தெரிவித்திருந்தால் கூட சமாளித்திருப்பான்.. இப்படி இயலாமையோடு கண்கலங்கியது மனதை பிசைந்தது அதிரூபனிற்கு.
‘கையை எடுங்க.. நான் போகனும்..” என்றாள் கண்ணீரோடே. அதிரூபன் காதல் சொன்னபோது சிறு தடுமாற்றம் வந்தது உண்மையே.. ஆனால் குழந்தையிருக்கிறது என்றதும்.. ஏனோ தன் அண்ணன் தந்தை நினைவு வர அழுகை தானாய் வந்தது.
‘பிடிக்கலன்னா அதை சொல்றதை விட்டுட்டு எதுக்கு அழுத.? காரணம் தெரியாம உன்னை இங்கயிருந்து நகர விடமாட்டேன்..” என்றான் கட்டளையாக.
அவனின் கையை விலக்க முற்பட.. ‘பதில் சொல்லலைன்னா உன் பின்னாடியே வருவேன்..” என கையை விலக்கினான்.
ஆதிரைக்கு அழைப்பு வர.. ‘இங்தான்மா இருக்கேன்.. இதோ வரேன்..” என இணைப்பை துண்டித்து நடக்க முற்பட.. ‘நல்லதா போச்சு.. உங்கம்மா இங்கதான் இருக்காங்களா.? அவங்கள்ட்ட பொண்ணு கேட்கறேன்..” என பின்னோடே வந்தான்.
சட்டென நின்றவள்.. ‘எங்கம்மா ரொம்ப நம்பின ஒருத்தர்.. எங்க ஏழ்மையை நினைச்சும் எங்கப்பா இறந்தது தெரிஞ்சும் அவங்க பையனுக்கு இரண்டாந்தாரமா என்னை கேட்டுருக்காங்க.. அந்த வேதனையிலயிருந்தே எங்கம்மா இன்னும் வெளிவரல..
உங்களுக்கும் எங்கப்பா இல்லன்னு தெரியவும் நீங்களும் அதையே செய்யிறிங்க.. பரவால்ல.. இப்படி எத்தனை பேர் வந்தாலும் எங்கம்மாவை தைரியப்படுத்த நான் இருக்கேன்..” எனப் பொறிந்து வேக நடைபோட்டு அன்னையிடம் சென்றாள்.
இவளின் ஏழ்மையை பயன்படுத்தினேன் என எத்தனை கேவலமாய் நினைத்துவிட்டாள் என வேதனையடைந்து சற்று நேரம் நின்றிருந்தவன்..
தன் விருபம் சொல்லும்போது அவளின் முகத்தில் பிடித்தமின்மை இல்லை என்பதில் நிம்மதி வர.. எனில் என் காதலை நிச்சயம் ஒரு நாள் புரிந்துகொள்வாள் என தன்னைத்தானே தேற்றி.. தற்போதுதானே தன் விருப்பத்தை சொல்லியிருக்கோம்.? குழந்தையோடு தன்னை ஏற்க எந்த பெண்ணும் யோசிப்பாள்தானே.? ஆதிரைக்கு போதுமான நேரம் கொடுக்க வேண்டும் என நினைத்தவாறு தந்தை சொன்ன இடம் நோக்கி செல்ல அங்கே ஆதிரையை கண்டவன் திகைத்து நின்றான்.
‘வா.. ரூபா.. ஏன் அங்கயே நின்னுட்ட.?” என கணேசன் கேட்கவும் வரேன் என தலையசைத்து தந்தையிடம் வந்தவன்.. ‘உங்க ஃபிரண்டுக்கு இப்போ எப்படியிருக்காம் தாத்தா.?” என்றான்.
ராமசாமியின் உடல்நிலையைப் பற்றி சொன்னவர்.. ‘ரூபா.. அதுதான் நம்ம ராமசாமியோட மூத்த தாரத்து பொண்ணு.. காஞ்சனா.. பக்கத்துல நிக்கிறது காஞ்சனா பொண்ணு.. என் பேத்தி ஆதிரை..” என்றார்.