‘தாத்தா…” என பெரிதாய் வியந்தவன்.. ‘அவளைதான் தாத்தா நான் விரும்பறேன்.. நீங்க எனக்காக பார்த்தது ஆதிரைன்னு எனக்கு தெரியாது..” என்றான் வியப்போடு.
‘நீ விரும்பற பொண்ணு யாருன்னு எத்தனை முறை கேட்டேன்.? ஒரு பொண்ணை விரும்பறேன்.. அவளைத்தவிர யாரையும் கல்யாணம் செய்துக்கமாட்டன்னு மட்டும் அத்தனை முறை சொன்னியே.. ஒருமுறையாவது ஆதிரைன்னு பேரை சொன்னியா.?” என சந்தோசமாய் குறைபட்டார் கணேசன்.
குழந்தையால் மனக்கசப்பு வந்திருக்க.. ரூபன் விரும்பும் பெண் ஆதிரை எனத் தெரிந்ததும்.. இனி ஆதிரையை நம் மகன் விடமாட்டான் என்ற சந்தோசம் பொங்கவே மனதிற்குள் குதூகலித்தார் கணேசன்.
‘நீங்களும் காஞ்சனா பொண்ணுனுதான் சொன்னிங்க..? காஞ்சனா பொண்ணு ஆதிரைன்னு சொன்னிங்களா.? இப்படி அத்தை வீட்டுக்கு ஒரு நாளாவது என்னை கூட்டிட்டு போனிங்களா.?” என குறைபட்டு..
என்ன.? காதலிக்கிறானா.? நம்ம ஆதியையா.? நம் மகளை இவனிற்கெப்படி தெரியும்.? என பதட்டத்தோடு காஞ்சனா ஆதிரையை பார்க்க.. ‘நிறுத்துறிங்களா.?” என வெடித்தவள்..
‘ம்மா.. நமக்கு ஒன்னும் வேணாம்.. அதுவும் இவங்க சப்போர்ட்ல கிடைக்கிறது வேணவே வேணாம்.. வாமா போலாம்..” என்றாள் உடைந்த குரலில்.
மாரியப்பன்.. ‘ஆதிம்மா.. எங்க சப்போர்ட்னு ஒன்னும் இல்ல.. வக்கில் வரசொன்னதால நாங்க வந்தோம்.. இது உனக்கு நியாயமா சேர வேண்டிய சொத்து.. எங்களால அது கிடைக்காம இருக்க வேணாம்.. நாங்க யாரும் உன் கல்யாணம் பத்தி இனி பேசமாட்டோம்..” என்றார் கெஞ்சலாக.
இளங்கோவும் ராஜாத்தியும் சொல்லி அனுப்பியது நியாபகம் வர.. ‘உன்னை எப்படி ரூபனுக்கு தெரியும்னுதான் கொஞ்சம் நிதானம் இழந்துட்டேன்.. இந்த கல்யாண பேச்சு எனக்கே பிடிக்கலங்கும்போது உன்னை வற்புறுத்துவனா.?
என் அப்பா சொத்தை எதிர்பார்த்து நான் வரல.. என் அப்பா பொண்டாட்டி சொத்தை அனுபவிக்கனும்னாலும் நம்ம கையெழுத்து தேவைப்படும்னு வக்கில் வர சொல்லியிருக்காங்க.. என்னன்னு பார்த்துட்டே போய்க்கலாம்.. பாதியில போனோம்னா அந்தம்மா நம்மளை நிம்மதியா இருக்க விடாது..” என சமாதனப்படுத்திக் கொண்டிருந்தார்.
சற்று தொலைவில் வக்கில் வருவது தெரியவும்.. அதிரூபன்..‘நம்ம பிரச்சனையை அப்புறம் பார்த்துக்கலாம்.. வக்கில் வந்துட்டார்..” என்றான் காஞ்சனாவிடம்.
‘சரி.. சரி.. நம்ம பிரச்சனையில்ல.. உங்க பிரச்சனைதான்..” என அதிரூபன் கனிவாய் சொல்ல.. வக்கிலும் அருகே வந்திடவும் அமைதியானாள் ஆதிரை.
மாதவி இல்லையென்றதும் அவருக்கு அழைத்தார் வக்கில். ‘இங்கதான் இருக்கேன்..” என இணைப்பை துண்டித்த மாதவி.. ‘இந்த அரவிந்தனை எங்கையும் போகதன்னு எத்தனை முறை சொன்னேன்..? என் பேச்சை கேட்டானா.? கனிகாவை வீட்ல விட்டுட்டு வந்துடறன்னு போய்ட்டானே.. ஏன் அவளும்தான் இங்கிருந்தா என்ன.? இப்போ வக்கில் வேற வந்துட்டாராம்.. நம்ம பக்கம் பேச ஒரு ஆம்பிளை கூட இல்ல.. அவ அத்தனை பேரோட வந்திருக்கா..” என கவிதாவிடம் புலம்பியவாறு வந்தார்.
முன்பு தந்தை சொல்லிற்காகவும் தாத்தாவின் நண்பனுக்காக என்று மட்டுமே வந்தவன்.. தற்போது வருங்கால மனைவியின் அன்னையென இன்னும் கவனமானான்.
வக்கிலிடம் மாதவி எதையோ ஆரம்பிக்க.. ‘இங்க பாருங்க.. சும்மா வழவழன்னு பேசிட்டிருக்க எனக்கு நேரமில்ல.. ராமசாமி என்ன எழுதியிருக்கார்ன்னு படிக்கிறேன்.. கேளுங்க..” என்றார் கண்டிப்போடு.
வேறு வழியின்றி மாதவி கவனமாக.. ‘மாதவி தற்போது குடியிருக்கும் வீடு.. வாடகைக்கு விட்டிருக்கும் இரண்டு வீடுகள்.. மற்றும் நான்கு ஏக்கர் காடு அனைத்தும் மாதவிக்கும்.. அவருக்கு பிறகு சொத்தில் சரிபாதியாக அரவிந்தன் கனிகாவிற்கு பாத்தியம்..
என் அன்னையின் என்பது பவுன் நகையில் சரிபாதியாக என் பெரிய மகள் காஞ்சனாவிற்கும்.. இளையமகள் கவிதாவிற்கும் பாத்தியம்..” என வக்கில் படித்ததும் மாதவிக்கும் கவிதாவிற்கும் பேரானந்தம்.. பின்னே இருக்காதா.? இராமசாமியிடம் மாதவியறிந்து மொத்த சொத்தே இவ்வளவுதான் என்பதால் முகம் சந்தோசத்தில் தாண்டவமாடியது. மாமியாரின் நாற்பது பவுன் நகைதானே.? போனால் போகிறதென பெரிய மனதாய் நினைத்திருந்தார்.
இப்படி உயில் எதிர்பாராத மாரியப்பனும் கணேசனும் பேரதிர்ச்சியில் இருந்தனர்.
காரணமில்லாமல் நம் அப்பாவையும் தாத்தாவையும் ராமசாமி அழைத்திருக்க மாட்டார் என நம்பிய அதிரூபன் வக்கிலையே பார்த்திருக்க.. காஞ்சனாவின் ஊரை குறிப்பிட்ட வக்கில்.. ‘மாணிக்கம் பேக்கரிக்கு அருகிலிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பு.. மூத்த தாரத்திற்கு பிறந்த என் பெரிய மகள் காஞ்சனாவிற்கும் அவருக்கு பின் காஞ்சனாவின் மகளும்.. என் பெரிய பேத்தியுமான ஆதிரைக்கு மட்டுமே சொந்தம்.. மற்றும் என் முதல் மனைவியின் ஐம்பது பவுன் நகைகள் என் பெரிய பேத்தி ஆதிரைக்கு மட்டுமே பாத்தியம்..” என வக்கில் சொல்லி முடிக்க மாதவியால் தாளமுடியவில்லை.
உயிலை படித்து முடித்த வக்கில்.. ‘இங்க மாரியப்பன்..” என கேட்க.. ‘நான்தான்..” என மாரியப்பன் சந்தோசத்தோடு சொல்ல.. ‘உயில் எழுதும்போதே அவங்கம்மா நகைகளையும் என்கிட்ட ஒப்படைச்சிட்டார்.. இந்த லட்டரை உங்ககிட்ட கொடுக்க சொன்னார்.. எனக்கு மூனு மணிக்கு ஒரு கேஸ் இருக்கு..” என லட்டரை கொடுத்த வக்கில் கிளம்பியிருந்தார்.
ஆதிரை பெரிய பெண்ணானபோது ராமசாமி கொடுத்த ஐம்பதாயிரத்தை ஆறுமுகம் வேணாம் என மறுத்ததால்.. அப்போதே பரதனிற்கும் ஆதிரைக்கும் எதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன்.. அந்த நேரம் தோக்கவாடியில் நாற்பதாயிரம் சதுரடியில் இடம் விலைக்கு வர.. மாதவிக்கு தெரியாமல் வைத்திருந்த சேமிப்பு பணத்தில் அவ்விடத்தை வாங்கினேன்.
இரண்டாண்டிற்கு முன் ஆறுமுகம் இறப்பிற்கு பின் வீட்டிற்கு கொடுக்கும் பணத்தை பாதியாய் குறைத்திருந்ததால் தன்னிடம் நல்ல தொகை சேமிப்பில் இருந்தது.. நாற்பதாயிரம் சதுரடி நிலத்தில் பத்தாயிரம் சதுரடியை விற்று அதோடு தன்னிடமிருந்த பணத்தையும் சேர்த்து.. பேங்க் லோனும் போட்டு ஐந்தடுக்கு மாடியை கட்டினேன். ஒரு வருடம் முன்பு கட்டட வேலை முடிந்திருக்க.. அதில் வரும் வாடகையிலேயே வங்கி கடனை அடைத்து வந்தேன்.. இரண்டு மாதம் முன் கட்டட கடன் அனைத்தும் முடிந்துவிட்டதென ராமசாமி கொடுத்த கடிதம் விளக்கவே ஆனந்த கண்ணீர் வடித்தார் மாரியப்பன்.
‘அந்த அடுக்கு மாடில இருபது வீடாவது இருக்கும்.. வாடகையே ஒரு மாசத்துக்கு அறுபதாயிரம் பக்கம் வருமே.. இந்த மனுசனுக்கு என்ன செஞ்சி என்ன பிரியோஜனம்.? ஆத்தாளும் மகளும்..” எனும்போதே..
‘எதாவது சாபம் அப்படியிப்படின்னு பேச்சை விட்ட.. அவ்வளோதான்..” என முறைத்தார் மாரியப்பன்.
மாதவி அதிர்வாக.. லட்டரை வாங்கி பார்த்த அதிரூபன்.. ‘இந்த உயில்ல திருப்தி இல்லன்னு நீங்க கேஸ் போட்டாலோ.. இல்ல காஞ்சனா அத்தையோடு பிரச்சனையோ.. இல்ல அவருக்கு மனஉளைச்சல் கொடுத்தாலோ.. அவங்களுக்கு கொடுத்த சொத்தோட சேர்த்து உங்களுக்கு கொடுத்த மொத்த சொத்தும் அவங்க மூத்த தாரத்து பொண்ணுக்கே சேரும்னு தனி உயில் எழுதி வச்சிருக்கேன்.. காஞ்சனாகிட்ட மாதவி பிரச்சனை செய்தா வக்கில்கிட்ட சொல்லுங்க.. எல்லாம் அவர் பார்த்துப்பார்ன்னு எழுதியிருக்கார்.. உங்களுக்கு எப்படி வசதி..?” என லட்டரில் இல்லாத விசயத்தை சொல்லி பயமுறுத்தினான் அதிரூபன்.
அப்பொழுதுதான் அங்கே வந்த அரவிந்தனிற்;கு அதிரூபனைப் பார்த்ததும் ஆத்திரம் பொங்கவே.. ‘அம்மா.. இவனாலதான் நமக்கு மூனு லட்சம் நஷ்டம்..” என அரவிந்தனின் கேஸ் விசயத்தில் அதிரூபன் செய்த அனைத்தையும் விளக்கி.. ‘உங்கப்பா எனக்கு நல்லது செய்ய இவனை வரவைக்கல.. அந்த ஆதிபுள்ளைக்கு ஆதரவா இருக்க ப்ளான் போட்டு வரவச்சிருக்கார்..” என்றான் தவறான கண்ணோட்டத்தில்.
அடுத்த ஐந்து நிமிடம்வரை யாராலும் அதிரூபனை தடுக்க முடியவில்லை.. அரவிந்தனின் தவறான பார்வைக்கும் பேச்சிற்கும் மின்னலென பாய்ந்தவன்.. ஒவ்வொரு அடியையும் இடியாய் இறக்கியிருந்தான்.
இரண்டு அடிக்குமேல் அரவிந்தனால் கத்தக்கூட முடியவில்லை.. ‘என் பையனை கொலை பண்றானே.. இதை கேட்க யாரும் இல்லையா.?” என்ற கவிதாவின் கத்தலில் பக்கத்து அறையிலிருப்பவர்களில் ஒவ்வொருவராய் வர அங்கே கூட்டம் கூடியது.
பதட்டத்தோடு வெளியே வந்த நான்கைந்து செவிலிப்பெண்கள்.. ‘தனிப்பட்ட பிரச்சனையை தீர்க்க ஹாஸ்பிட்டல்ல சத்தம் போடுவிங்களா.? கிளம்புங்க எல்லாரும்..” என திட்டவே ஒவ்வொருத்தராய் கலைந்தனர்.
‘அவன் என் பேரனை அடிச்சிட்டான்..” என மாதவி அதிரூபனை காட்டவே.. மாதவியின் பேச்சை நம்பாமல்.. ‘ஆளுங்களை பாரு.. புருசன் சாகக்கிடக்கிறார்.. காலைலயிருந்து எந்த சொத்தை யாருக்கு எழுதி வச்சிருக்காரோன்னு புலம்பிட்டிருந்துட்டு.. இப்போ என்னவோ டீச்சர் கிட்ட கம்ப்ளைன் செய்யிற ஸ்டூடண்ட் மாதிரி ரியாக்ஷன் கொடுத்துட்டிருக்கிங்க.. ஒருத்தர் மட்டும் இங்கயிருந்துட்டு மத்தவங்கள்லாம் கிளம்புங்க முதல்ல..” என மூலையில் சுருண்டிருக்கும் அரவிந்தனை பாராமலே திட்டி சென்றாள் நர்ஸ்.
ஆத்திரம் தாளாமல் மீண்டும் உதைத்த அதிரூபன்.. ‘யாரைடா ஆதிபுள்ளன்ன.? வகுந்துடுவேன் ஜாக்கிரதை..” என முகம் சிவக்க எச்சரித்து.. காஞ்சனாவிடம்.. ‘அத்தை.. இந்த பேப்பர்ல ஒரு கையெழுத்து மட்டும் போடுங்க.. சொத்து விசயத்துல உங்களுக்கு மனஉளைச்சல் கொடுக்கறாங்கன்னு எழுதி கேஸ் போட்டு மொத்த சொத்தையும் புடுங்கிடலாம்..” என தன்னிடமிருந்த லட்டரை காஞ்சனாவிடம் நீட்டியவன்.. கோபத்தோடு மாதவியைப் பார்த்தான்.
பேரதிர்ச்சியான மாதவி.. ‘கவி.. கவிதா.. நீ அரவிந்தனை கூட்டிட்டு வீட்டுக்கு போ.. இங்க நான் பார்த்துக்கிறேன்..” என திக்கி திணறி முடித்து.. ‘அவன் பேசினதுக்குதான் அடிச்சிட்டல்ல.? அப்புறம் எதுக்கு சொத்து பத்தி பேசுற..? எதோ சின்னபையன் தெரியாத பேசிட்டான்.. இனிமே அப்படி பேசாம பார்த்துக்கிறேன்..” என்றார் பயத்தோடே.
அந்த பெண்ணிற்கு பணம் கிடைக்க வழிவகுத்தவன் இவன்தானா..? எத்தனை நல்லவனாக இருந்தாலும், தன்னை கீழே நினைத்த குடும்பத்தினர்தான் தற்போது உதவியும் இருக்கிறார்கள் என நினைத்த ஆதிரைக்கு தன் நிலையை நினைத்து கண்ணீர்தான் வந்தது.
‘எதுக்கு அழற.? கேடுகெட்ட நாய் பேச்சுக்கெல்லாம் ஃபீல் பண்ணுவியா.?” என ஆதிரையும் கடிந்து.. ‘அத்தை இதுல ஒரு கையெழுத்து போட்டுட்டு நீங்க கிளம்புங்க.. இனி எதாவது பண்ணட்டும் அப்புறம் இருக்கு..” என பேனாவை நீட்டினான்.
இத்தனை பெரிய சொத்தை அப்பா தனக்கு கொடுத்ததை மாதவியால் தாளமுடியாது.. நிச்சயம் மீண்டும் பிரசச்னை செய்வார் என பயந்த காஞ்சனா.. மாதவிக்கு பயத்தை வர வைக்கவாவது கையெழுத்து போடனும் என நினைத்து.. அதிரூபன் சொன்னதை செய்து மகளை அழைத்துச் சென்றார்.. சற்று தூரம் நடந்த பின்னே வேக நடைபோட்டு அவர்களை அடைந்தவன்.. ‘அத்தை.. அந்த மாதவிம்மா அரவிந்தால எதாவது பிரச்சனை வந்தா என் காதலை காரணம் காட்டி சொல்லாம விட்டுடாதிங்க..
உங்களுக்கு பிடிக்காத அப்பான்னாலும் அவர்தான் எங்க தாத்தாக்கு சின்ன வயசுல நிறைய செய்திருக்கார்.. அந்த நன்றிக் கடனை அடைக்க விடுங்க..” என்றான்.
அக்கறையா இருக்க மாதிரி பேசுறான், அரவிந்தனை எப்படி அடிச்சிட்டான், இவன் வல்லமை எதிர்த்து தம் சித்தப்பாவால் கூட எதுவும் செய்ய முடியாதே.. திருமணத்திற்கு வற்றுத்துவானோ என பலத்த யோசனையோடு ஆதிரை அன்னையோடு சென்றாள்.
தந்தையிடம் வந்த அதிரூபன்..’கிளம்பலாமாப்பா.?” என்றான்.
‘இத்தனை நாளா அடுத்தவங்களுக்கு டூப் போட்ட சண்டையைதான் பார்த்திருக்கேன்.. நீ சண்டை போடும் போது இன்னைக்குத்தான் முகத்தை பார்த்தேன்.. இப்படி அடிக்க எங்கடா கத்துக்கிட்ட.? என்னா கோபம்.? என்னா கோபம்.? செத்துடப்போறான்னு எனக்கே பயமாகிடுச்சி..” என்றார் பெருமையாக.
‘அப்பா.. என் வருங்கால பொண்டாட்டியை மரியாதையில்லாம பேசிட்டானேன்னு நானே கொலைவெறில இருக்கேன்.. நீங்க சினிமா சண்டையை போல ரசிச்சிட்டிருந்திங்களா.?” என்றான் செல்ல முறைப்பாக.
‘வந்த வேலை நல்லவிதமா முடிஞ்சது.. நீ கிளம்பறதுனா கிளம்பு ரூபா.. நாங்க ராமசாமியை பார்த்துட்டுதான் வருவோம்.. அங்க பட்டுமா உன் அம்மாவை படுத்திட்டிருப்பா..” என்றார்.
‘என் பொண்டாட்டியோட தாத்தாவை நானும் பார்த்துட்டே போறேன்.. டீ குடிச்சிட்டு வரலாம் வாங்க..“ என அழைத்து போனான்.