யுவனை நினைத்து சுசீலாவின் கண்கள் கலங்கியது. அவனுக்கு நல்ல பெற்றோர்களும் நல்ல சூழ்நிலையும் அமைந்திருந்தால் அவன் வாழ்க்கை இப்படி திசை மாறியிருக்காது என்று புரிந்தது.
அவனை நினைத்து அவள் கண்களில் கண்ணீர் வடிந்தது. அவனுக்காக அவள் விடும் கண்ணீரைக் கண்டவன் மனம் ஆனந்தத்தில் துடித்தது. அந்த கண்ணீர் அவனுக்கு பொக்கிஷம் அல்லவா?
அவள் கண்ணீரைத் துடைத்த படி மேலும் சொல்ல ஆரம்பித்தான். “முதல்ல இவனை எப்படி நெருங்கன்னு யோசிச்சப்ப தான் இவன் போதை தொழில்ல பெரிய லெவல்ல இருக்கான்னு தெரிஞ்சது. வேற வழியில்லாம அந்த தொழில்ல இறங்கினேன். இவனுக்காக தான் பிடிக்காத அந்த தொழிலை தப்புன்னு தெரிஞ்சும் செஞ்சேன். ஆனா ரெட்டி கிட்ட இருந்து நான் கைப்பற்றிய போதைப் பொருள் எல்லாம் கடல்ல தான் வீணாப் போகும். என்னால நல்லவங்க யாருமே பாதிக்கப் படலை சுசீ”
…..
“இவன் எவ்வளவு மோசமானவன் தெரியுமா சுசீ? சுரங்கத்துல வெட்டி எடுக்கும் போது எவ்வளவு பேர் இவனால செத்து போயிருக்காங்க தெரியுமா? எவ்வளவு பேரை இவன் அடிச்சே கொண்ணுருக்கான் தெரியுமா? எத்தனை பேருக்கு கடன் கொடுத்து அவங்களால கடன் கெட்ட முடியலைன்னா அவங்க பொண்டாட்டிகளை இழுத்துட்டு போய் அசிங்க படுத்திருக்கான் தெரியுமா? எப்படியோ இன்னைக்கு அவனை கொன்னுட்டேன். ஏதோ ஒரு பெரிய சாதனை செஞ்ச மாதிரி நிம்மதியா இருக்கு சுசீ”, என்று சொல்லி ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டான்.
“இது தான் நான். இப்ப சொல்லு சுசீ. தப்பான அப்பனுக்கு பிறந்தவன் நான். தப்பான தொழில் எங்க அம்மா செஞ்சாங்க. அடுத்த வேளை சாப்பாடுக்கு பிச்சை எடுத்துருக்கேன். போதைப் பொருள் கடத்திருக்கேன். நிறைய கொலை செஞ்சிருக்கேன். என்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்ச நீ இப்ப பதில் சொல்லு. என்னை உனக்கு புடிச்சிருக்கா? என் மேல இருந்த அன்பு உனக்கு இப்பவும் இருக்கா? இல்லை என்னைப் பத்தி தெரிஞ்ச அப்புறம் நீ என்னை அவமானமா நினைக்கிறியா?”, என்று கண்களில் வலியுடன் கேட்டான். ஆனாலும் அவன் முகத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
ஊருக்கு முன்னால் அவன் ஒரு வன்முறையாளன். அவனை பலர் கொலைகாரன் என்றும் சொல்லலாம். ஆனால் அவள் கண் முன்னே அவளுடைய காதலுக்காக கை கட்டி நிற்கிறான். அதில் அவனைக் காதலித்ததை நினைத்துக் கர்வம் கொண்டாள் சுசீலா.
இப்போது அவன் கண்களில் ஒரு துளி கூட கண்ணீர் வரவில்லை. ஆனால் வார்த்தைகளில் தான் பயங்கரமான வலி இருந்தது.,
“என்ன அமைதியா இருக்குற? இப்ப சொல்லு சுசீலா. என்னை உனக்கு பிடிச்சிருக்கா? இப்படிப் பட்ட அம்மா அப்பாவுக்கு பிறந்த என்னைப் பிடிச்சிருக்கா?”
மொத்த பாவத்துக்கு பிறந்தவன் தான் இவனோட தகப்பன், சபிக்கப் பட்டவள் இவனோட தாய், இருவருக்கும் மகனாக பிறந்ததை தவிர யுவன் வேறு எந்த விதத்தில் குறைந்து விட்டான். அவனால் காப்பாற்றப் பட்டவர்கள் பலர். அதில் அவளும் அடக்கம்.
அவன் மட்டும் அவளை காப்பாற்ற வில்லை என்றால் அவன் தாய் அடைந்த துயரத்தை தானே அவளும் அடைந்திருப்பாள்? அவளுக்கு வாழ்க்கை குடுத்தவனை அவளே வெறுப்பாளா?
கண்களில் காதலைத் தேக்கி அவனைப் பார்த்தவனை பார்த்து சுசீலாவுக்கு காதல் சுரந்தது. தன்னுடைய துக்கம், தயக்கம் அனைத்தையும் கடந்து அவன் அருகே ஓடிச் சென்றவள் மூச்சு வாங்க அவனைப் பார்த்தாள். அவனும் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அடுத்த நொடி அவனை இறுக அணைத்துக் கொண்டாள் சுசீலா.
அவள் அவனுடைய மார்பில் சாய்ந்திருந்தாலும் அவன் அவளைத் தீண்ட வில்லை. அவன் கைகள் கீழே தான் கிடந்தன. அதில் கேள்வியாக அவனை நிமிர்ந்து பார்த்தாள் சுசீலா.
“என் கூட நீ வந்துருக்குறது ஒரு வழிப் பாதை சுசீலா. நீ இப்ப முடிவு பண்ணிட்டா வேற எப்பவுமே திரும்ப முடியாது. கடைசி வரை நீ என்னோட தான் இருந்தாகணும். நிஜமாவே என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதமா? நான் பட்ட அவலங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை. என்னோட மனசாட்சிக்கு தோனினதை தான் நான் செஞ்சேன். நான் நல்லவனா கெட்டவனான்னு தெரியாது. ஆனால் என்னால நல்லவங்க யாரும் பாதிக்கப் படலை. நல்லா யோசிச்சு தெளிவா முடிவெடு. அதுக்கப்புறம் யோசிக்க உனக்கு அவகாசம் கிடைக்காது”, என்று சொன்னான் யுவன்.
“இந்த ஜென்மத்துல உங்க மேல எனக்கு எந்த நேரத்துலயும் வெறுப்பு வராது. உங்களை நினைச்சு எனக்கு பெருமை தான். இந்த வாழ்வின் கடைசி வரை நான் உங்க கூட தான் இருப்பேன்”, என்று சொல்லிக் கொண்டே அவனை மீண்டும் கட்டி அணைத்தாள்.
அவள் பதிலில் எல்லையில்லா ஆறுதல் கொண்டவன் அவள் முகத்தை நிமிர்த்தி தன்னைப் பார்க்க வைத்தான். என்ன நடக்கிறது என்று அவள் அனுமானிப்பதற்குள் அவளை இழுத்து அணைத்து அவள் உதடுகளில் முத்தத்தை பதித்தான் யுவன்.
கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அவனுடைய முத்தத்தை பெற்றதும் இல்லாமல் அவனுடைய கைச் சிறையில் இருந்தாள் சுசீலா.
அவனுடைய இறுக்கமான அணைப்பும், அழுத்தமான முத்தமும் இப்போது இருவருக்குமே தேவையாக இருந்தது. அவன் மனதில் உள்ள காயங்களை உணர்ந்தவள் அவன் விருப்பத்திற்கு உடன் பட்டு அவன் கைக்குள் புகுந்து கொண்டாள்.
அவன் முத்தத்தில் அவள் மூச்சுக் காற்றுக்காக தடுமாறி அவனை விலக்க முற்பட “சுசீ பிடிக்கலையா? என்னை புடிச்சிருக்கு தானே?”, என்று கேட்டான். அவன் கேள்வியில் அவள் முகம் சிவந்தது. அதில் நிம்மதியானவன் அவள் தோள் மீது கை வைத்து அவள் முகம் நோக்கி குனிந்தான்.
அவள் இதழோடு இதழ் பதித்தவன் அவளை இறுக்கிக் கொண்டான். அவள் பேச்சிழந்து அவன் தொடுகையில் கரைந்தாள். அவனது உடல் உராய்ந்ததில் அவள் உடல் நடுங்கியது. அவள் அவனிடம் இருந்து விலக முயல “சுசீ”, என்று தாபத்துடன் ஒலித்தது அவன் குரல்.
இதுவரை இப்படி தாபத்தை அவன் குரலில் அவள் கண்டதில்லை. . அந்த குரல் அவளை கட்டிப் போட அவன் மார்பில் முகம் புதைத்தாள். அவள் காது மடல்களில் அவன் இதழ்கள் உரசிச் சென்றது. அதன் பின் அவள் அவனிடம் இருந்து விலக வில்லை.
இப்போதும் அவன் அவளிடம் நேரடியாக காதலைச் சொல்ல வில்லை தான். ஆனால் அந்த காதலை சுசீலா உணர்ந்திருந்தாள். அவளுக்கு இதுவே போதுமானதாக இருந்தது.
அவனது மீசையின் ரோமங்கள் அவளது கன்னத்தில் குத்த தாங்க முடியாமல் கண்களை மூடிக் கொண்டாள்.
அவன் கைகள் சற்று எல்லை மீற விடு பட முடியாத ஒரு சுழலில் சிக்கிக் கொண்டாள். அவன் தொடுகையில் கண் செறுக கிறங்கிப் போனாள். ஆண்மை பொருந்திய அவன் வாசனையை உணர்ந்தவளுக்கு மனம் மயங்கிப் போனது.
ஹாஸ்பிட்டலில் வைத்து முத்தமிட்டதைத் தவிர வேறு எப்போதும் அவளை நெருங்காமல் கண்ணியத்தைக் கடை பிடித்து வந்தவன் தங்களுக்குள் இருந்த இடைவெளியை மொத்தமாக அழித்து விட்டான்.
பின் அவளை விட்டு மெதுவாக விலகியவன் அவளை கை அணைப்பில் வைத்துக் கொண்டே “ரொம்ப தேங்க்ஸ் டி. இந்த நிமிஷம் தான் எனக்கு கிடைச்ச ஒரே ஆறுதல். இதை என்னால மறக்கவே முடியாது”, என்று அவள் காதோரமாக கிசுகிசுத்தான்.
“என்னாலயும் தான்”, என்று மனதில் நினைத்தாலும் அதை வெட்கத்தை விட்டு அவளால் அவனிடம் சொல்ல முடியவில்லை.
“என்னோட அப்பா தப்பானவனா இருக்கலாம். என் அப்பானால என் அம்மாவும் தப்பான வழிக்கு போயிருக்கலாம். ஆனா நான் அப்படிக் கிடையாது டி. இது வரைக்கும் எந்த பொண்ணு மேலயும் என் விரல் தப்பான நோக்கத்துல பட்டது கிடையாது. உன்னை எனக்கு அவ்வளவு பிடிக்கும் சுசீ. முதல் முறையா உன்னைப் பாத்தப்பவே நான் விழுந்துட்டேன். ஆனா என்னோட சூழ்நிலை என்னை நெருங்க விடலை. சாரும்மா உன்னை கல்யாணம் பண்ண சொன்னப்ப கூட உனக்கு என்னை பிடிக்காதோன்னு நினைச்சு தான் நான் அப்படி பேசினேன். நீ எனக்கு கிடைச்ச வரம் சுசீ”, என்று சொல்லி அவளை அணைத்துக் கொண்டான். அதில் அவள் கண்கள் மின்னின. அவள் எதிர் பார்த்த காதலை சொல்லி விட்டானே?
இருட்டி வெகு நேரம் ஆனதை உணர்ந்த சுசீலா அவன் கையணைப்பில் இருந்து விலக முயல “பேசாம இரேன் டி”, என்றான்.
“நேரம் என்ன ஆச்சுன்னு பாருங்க. என்னமோ பகல் மாதிரி இரேன் டீன்னு மிரட்டுறீங்க? இனி என்னை நீங்க மிரட்ட எல்லாம் முடியாது ஆமா?”
“ஏன் மாமி அப்படிச் சொல்ற?”
“நான் இந்த தலைவனோட காதலியாச்சே? யாராவது என்னை மிரட்டிற முடியுமா?”, என்று கலகலத்து சிரித்தாள் சுசீலா.
தன்னுடைய தோள் சாய்ந்திருந்த அன்றலர்ந்த பூ போல் இருந்தவளை ரசித்தான்.
“சரி நேரம் ஆச்சு. போய் தூங்கு”, என்று சொல்லி அனுப்பினான்.
“நீங்களும் ரொம்ப நேரம் இங்க இருக்க கூடாது”, என்று அவனுக்கு கட்டளை போட்டு விட்டே அங்கிருந்து சென்றாள் சுசீலா.
அதே நேரம் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள் மாயா.
அவள் நினைவில் சுமனே இருந்தான். சுசீலா அவனிடம் மனம் விட்டு பேச சொன்னதே மனதில் வந்து போய்க் கொண்டு இருந்தது. ஆனால் அதை பேசவும் தயக்கமாக இருந்தது. கூடவே பயமாகவும் இருந்தது.
பழைய நினைவுகள் அவளுடைய உணர்வுகளை கொன்று விட்டதா என்று கூட அவளுக்கு தெரியவில்லை. இருந்தாலும் சுமனை நினைத்து தன்னுடைய மனதை மாற்ற முயன்று கொண்டிருந்தாள்.
அப்போது சுமன் அறைக்குள் வந்தான். எப்போதுமே மாயா தூங்கின பிறகு தான் உள்ளே வருவான். இன்றும் அவள் தூங்கியிருப்பாள் என்று எண்ணி அவன் வந்தால் அவளோ அவனுக்காகவே தான் காத்திருந்தாள்.
“தூங்கலையா மாயா?”, என்று கேட்க வேண்டுமே என்று தான் கேட்டான்.
“தூக்கம் வரலை”, என்று தயக்கத்துடன் சொன்னாள்.
“அது எப்படி வராம இருக்கும்? படுத்து கண்ணை மூடு”, என்று சொல்லி விட்டு ஒரு போர்வையை எடுத்து தரையில் விரித்தான்.
இப்படி அவன் ஒதுங்கியே இருக்கையில் அவனை எப்படி அவளால் கட்டிலில் படுங்க என்று சொல்ல முடியுமாம்?
காதல் தொடரும்…..