“நீ என்ன சொல்ற வந்தனா..?” என்று அதிர்ந்தபடி கேட்டான் விமல்.
“மாமா, நீங்க தான் எப்படியாவது அம்மாகிட்ட இந்த விஷயத்தைப் பத்தி பேசணும். என்னால அவரைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ண முடியாது. எனக்கு கல்யாணம் நடந்தா அவரோட தான் நடக்கணும். இல்லையா என்னோட கருமாதி தான் நடக்கணும்..!” என்று உணர்வு போங்க பேசிக் கொண்டிருந்தாள் வந்தனா.
விமலுக்கு போனில் அவள் பேசிய விஷயங்களை முதலில் நம்ப முடியவில்லை. வந்தனாவைப் பற்றி அவனுக்கு நன்றாகத் தெரியும். அவள் காதலிக்கிறாள் என்பதைத் தான் அவனால் நம்ப முடியவில்லை.
‘யோவ் மாமா..! கூடவே இருக்குற நான் உனக்கு கண்ணுக்குத் தெரியலை. பெரிய இடத்து மாப்பிள்ளையா பார்க்குற..? இங்க உன் மக உன்னோட எல்லாத் திட்டத்துக்கும் பெரிய ஆப்பா ரெடி பண்ணிக்கிட்டு இருக்காய்யா..!’ என்று மனதிற்குள் சிரித்துக் கொண்ட விமல்,
“இதுல நான் என்ன செய்ய முடியும் வந்தனா..? மாமாவைப் பத்தித்தான் உனக்கு நல்லா தெரியுமே..? அத்தைகிட்ட சொன்னாலும்,மாமாவை மீறி அவங்களால ஒன்னும் செய்ய முடியாது வந்தனா..!” என்றான் விமல் நல்லவன் போல்.
“நான் உங்களை ரொம்ப நம்பியிருக்கேன் மாமா..!” என்றாள் வந்தனா அழாத குறையாக.
“உன்னைப் பார்த்தாலும் எனக்குப் பாவமாத்தான் இருக்கு. சரி சொல்லு, உனக்கு நான் என்ன செய்யணும்..?” என்றான்.
“இப்போதைக்கு இந்த கல்யாணத்தை நிறுத்தனும் மாமா..!” என்றாள்.
“அதுக்கான வாய்ப்பு ஒரு சதவிகிதம் கூட இல்லை வந்தனா. உங்க அப்பா, எலக்சனுக்கு முன்னாடியே இந்த கல்யாணத்தை நடத்தனும்ன்னு தீவிரமா இருக்கார். இந்த நேரத்துல என்ன செஞ்சாலும் அதைத் தடுக்குறது கஷ்ட்டம்..!” என்றான் விமல்.
“வேற என்னதான் பண்றது மாமா..!” என்றாள்.
“நீ யாரை லவ் பண்ற..? பையன் என்ன பண்றான்..? அதை முதல்ல சொல்லு..!” என்ற விமலின் முகத்தில் தீவிரமான யோசனை ஓடிக் கொண்டிருந்தது. அதை நரித்தனமான யோசனை என்று கூட சொல்லலாம்.
“அவர் பேரு வி..” என்று ஆரம்பிக்கப் போன வந்தனா, கொஞ்சம் நிதானம் காத்தாள். எந்த விதத்திலும் விஜய்க்கோ, கனகவேலுவுக்கோ இந்த விஷயம் தெரிந்து விடக் கூடாது என்பதில் முனைப்பாக இருந்தாள் வந்தனா.
“என்ன வந்தனா..? பாதியிலயே நிறுத்தியிட்ட..? அவன் பேரு என்ன..? எந்த ஊரு..? என்ன பன்றான்..?” என்றான் வரிசையாக.
“அதெல்லாம் அப்பறம் சொல்றேன் மாமா..! இப்போ இந்த கல்யாணப் பேச்சை நிறுத்தனும். அதுக்கு ஒரு வழி சொல்லுங்க..!” என்றாள் மீண்டும் பழையபடி.
‘இவ என்ன..? தேஞ்ச ரெக்கார்டு மாதிரி திரும்ப திரும்ப அதையே சொல்லிட்டு இருக்கா..? விமலு, கொஞ்சம் புத்தியோட யோசி. இவ கேட்ட மாதிரி கல்யாண பேச்சும் நிக்கணும், அதே சமயம் இவளையும் அவ லவ்வர் கூட சேர்த்து வைக்கிற மாதிரி வைக்கணும். ஆனா, உடனே பிரிச்சிடனும். மானம் போச்சு, மரியாதை போச்சுன்னு அந்த கனகவேல், தானவே உனக்கு இவளை கட்டி வைப்பார். (Klonopin) ஒவ்வொரு காயா சரியா நகர்த்துனா, ஆட்டத்துல ராணி உனக்குத்தாண்டா..!’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன்,
“நீ எதுக்கும் கவலைப்படாத வந்தனா..! இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டியது என் பொறுப்பு. இப்போ தட்டு மாத்துற விஷயத்தை எல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காத. சந்தோஷமா சம்மதிக்கிற மாதிரி சம்மதம் சொல்லிடு. அதுக்கப்பறம் நடக்க வேண்டியதை நான் பார்த்துக்கறேன்..” என்றான் விமல்.
“இப்போ சம்மதம் சொன்னா, அந்த பையனை ஏமாத்துற மாதிரி ஆகிடாதா மாமா..! இந்த நிச்சயத்தையும் நிறுத்த முடியாதா..?” என்றாள்.
“அதுக்கு வாய்ப்பே இல்லை வந்தனா..! ஏன்னா, எல்லா ஏற்பாட்டையும் மாமா பண்ணிட்டார். இனி நிறுத்தினா, அது அவருக்கு பெரிய அவமானத்தை தேடித் தரும். அந்த கோபத்துலையே உன்னோட காதலை முழுசா எதிர்ப்பார்.. உனக்கு வசதி எப்படி..?” என்று அவள் நம்பும் படியான எல்லா காரணங்களையும் சொல்லி, அவளை மூளை சலவை செய்தான் விமல்.
“நீங்க சொல்றதும் சரிதான் விமல் மாமா..! உங்களை மட்டும் தான் நம்புறேன்..!” என்று அவள் சொல்ல,
“இப்பவாவது அந்த பையன் யாருன்னு சொல்லலாம்ல..! என்னை நம்பு வந்தனா, நான் சத்தியமா இப்போதைக்கு மாமாகிட்ட சொல்ல மாட்டேன்..!” என்று விமல் வாக்கு கொடுக்க,
“உங்களுக்கு தெரிஞ்சவர் தான் மாமா..அவர் பேர் விஜய்.RRS இன்டஸ்ட்ரியல்ஸ் ரத்னவேல் அவரோட பேரன். நம்ம ஊரு தான்..!” என்றாள் திக்கித் திணறி.
‘அவள் காதலன் என்று சொன்ன உடன், ஏதோ ஒரு பஞ்ச பரதேசியா இருப்பான்னு பார்த்தா, கடைசில இவனா..? இவனைத்தான், மகள் காதலிக்கிறான்னு தெரிஞ்சா, இந்த ஆளே கல்யாணம் பண்ணி வச்சிடுவானே..? உன்னோட காதலன் யாருன்னு உங்கப்பாக்கு தெரிஞ்சா அது பிரச்சனை இல்லை வந்தனா, உனக்கு நல்லது தான். இந்த விஷயம் உனக்குத் தெரியாம இருக்குற வரைக்கும் தான் எனக்கு நல்லது. கடைசி வரைக்கும் நீ யாரைக் காதலிக்கிறேன்னு சொல்லாமலேயே காய் நகர்த்துறேன் பாரு..!’ என்று வன்மமாக மனதிற்குள் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தான் விமல்.
“லைன்ல இருக்கிங்களா மாமா..?” என்றாள் வந்தனா.
“ஆங்..!இருக்கேன் வந்தனா. உங்கப்பாவுக்கும் அவனுக்கும் ஆகவே ஆகாதே..! எந்த தைரியத்துல இப்படி லவ் பண்றேன்னு சொல்ற..?” என்றான் வரவழைத்துக் கொண்ட கோவத்துடன்.
“அது எனக்கும் தெரியும் மாமா..! அதனால தான் உங்க உதவியைக் கேட்கிறேன்..!” என்றாள்.
“நீ இப்படி லூசா இருக்குற வரைக்கும் நான் மாஸா பிளான் பண்ணலாம்டி என் மாமன் மகளே..! விமல் உன் காட்டுல மழை தாண்டா..!” என்று மனதிற்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தான்.
“இங்க பாரு வந்தனா, இந்த விஷயத்துல என்னைக் கேட்காம நீ ஒன்னும் செய்ய கூடாது. கண்டிப்பா அந்த விஜய் கூட உன்னை நான் சேர்த்து வைக்கிறேன்..!” என்றான்.
“சரிங்க மாமா..! ரொம்ப தேங்க்ஸ் மாமா. இந்த உதவியை நான் எப்பவும் மறக்கவே மாட்டேன்..!” என்று சொல்லி விட்டு வந்தனா போனை வைக்க, எதிர்புறம் இருந்த விமல், பயங்கரமாக சிரித்துக் கொண்டிருந்தான்.
அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை, இப்படி ஒரு சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைக்கும் என்று.
இவர்களின் திட்டங்கள் தெரியாமல் அங்கே கனகவேல் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார்.
வந்தனா, விமலிடம் உதவி கேட்டதில் ப்ரீத்திக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லை. அதை அவள் வந்தனாவிடம் நேராகவே சொல்லிவிட்டாள்.
“இதுக்கு நீ விஜய்கிட்டவே உண்மையை சொல்லி இருக்கலாம். எனக்கு என்னவோ, நீ மேலும் சிக்கலை உண்டு பன்றியோன்னு தோணுது சிம்ரன்..!” என்றாள் ப்ரீத்தி.
“இல்லடி..! இப்ப கூட மாமா அதைத்தான் போன்ல சொல்றார். விஷயம் எக்காரணம் கொண்டும் விஜய்க்கு தெரியக் கூடாதுன்னு. ஏன்னா..? விஜய்க்கு எங்கப்பாவைக் கண்டாலே பிடிக்காது..!” என்றாள்.
“எப்படியும் தெரியத்தான் போகுது. நீ சொல்ற மாதிரி உங்க கல்யாணத்துக்கு அப்பறம் தெரிஞ்சா, அப்போ விஜய்யோட மனநிலையை யோசிச்சுப் பாரு..?” என்றாள் ப்ரீத்தி.
“அதைப் பத்தி எல்லாம் என்னால இப்போ யோசிக்க முடியாது பிரீத்தி. விஜய் கூட சேர்ந்ததுக்கு அப்பறம் என்ன நடந்தாலும் பரவாயில்லை. நான் செத்தா கூட நிம்மதியா சாவேன்..!” என்றாள் வந்தனா.
“லூசு மாதிரி பேசாத.. நீ கற்பனை பண்ணி வச்சிருக்க அளவுக்கு, விஜய்யும் அப்படியில்லை… உங்க அப்பாவும் அப்படியில்லை. நீயா இதை பெரிசு பண்ற. நீ நினைக்கிற மாதிரி விஜய் ஓடி வந்து எல்லாம் கல்யாணம் பண்ண மாட்டார். அதை அவரே சொல்லிட்டார். அதுக்கு மேல உன்னோட விருப்பம்..!” என்று முடித்து விட்டாள் ப்ரீத்தி.
பிரீத்தி சொன்ன பிறகு தான் வந்தனாவிற்கும் விஜய் சொன்னது மண்டையில் உறைத்தது. இவள் மீண்டும் அவனுக்கு போன் செய்ய, திரையில் வந்த நம்பரை பார்த்துக் கொண்டே, எடுக்காமல் அமர்ந்திருந்தான் விஜய்.
“போன் அடிச்சுகிட்டே இருக்கு விஜய்..!” என்றான் பிரவீன்.
“வந்தனா தான் கூப்பிடுறா பிரவீன்..!”
“எடுத்துப் பேச வேண்டியது தான..?”
“என்ன பேச சொல்ற..? எப்ப பாரு கல்யாணம் பண்ணலாமா..? ஓடிப் போலாமான்னு..? எரிச்சலா வருது. என்னைப் பத்தி என்ன நினைச்சுகிட்டு இருக்கா இவ. எனக்கு எதுவும் வேலை வெட்டி இல்லைன்னு நினைப்பு போல..!” என்று பிரவீனிடம் எறிந்து விழுந்து கொண்டிருந்தான் விஜய்.
“என்கிட்டே கத்தி ஒன்னும் ஆகப் போறதில்லை விஜய். நீ பேசுறதைப் பார்த்தா, லவ் பண்றவன் பேசுற மாதிரி இல்லை. அவ்வளவு வேண்டா வெறுப்பா அதை ஏன் பண்ணனும்..?” என்றான் பிரவீன்.
“அதுவும் சரிதான். நான் ஒன்னும் தீவிரமா காதலிக்கணும் அப்படின்னு லவ் பண்ணலை. எப்படின்னாலும் ஒரு கல்யாணம் பண்ணுவோம். இந்த பொண்ணு நல்ல பொண்ணா இருக்கேன்னு பேசாம இருந்தேன். ஆனா, இவ என்னடான்னா… அவ குடும்பம் பத்தியே சொல்ல மாட்டேங்குறா..? கேட்டா கல்யாண ஏற்பாடு பண்ணுறாங்கன்னு சொல்றா..? நான் பேசுறேன்னு சொன்னா அதுவும் வேண்டாம்ன்னா.. எனக்கு எரிச்சலா வருது..!” என்றான் விஜய்.
“நீயே அவ வீட்ல போய் பேசுறேன்னு சொன்ன..?” என்றான் பிரவீன்.
“பேசுறேன்..! அதுக்கு வேற சென்னை போகணும்..!” என்றான் விஜய்.
“அதுக்கெல்லாம் அவசியம் இல்லை. அவங்க அப்பா இங்க தான் இருக்காரு..! அவ ஊரும் இந்த ஊருதான்..!” என்றான் பிரவீன் வேலையை பார்த்துக் கொண்டே.
“என்ன சொல்ற பிரவீன்..? அப்பறம் ஏன் அவ இதைப் பத்தி என்கிட்டே சொல்லவே இல்லை..?” என்றான் விஜய் யோசனையுடன்.
“சொன்னா, நீ கண்டிப்பா அவளை லவ் பண்ண மாட்டன்னு அவளுக்குத் தெளிவா தெரிஞ்சிருக்கும், அதான்..!” என்றான் பிரவீன்.
“நீ என்ன சொல்ல வர..? எனக்கு புரியலை..!” என்றான் இடுங்கிய கண்களுடன்.
“வந்தனா வேற யாருமில்லை..! அந்த கனகவேல் பொண்ணுதான்..!” என்றான் பிரவீன்.
பிரவீன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தான் விஜய். அவன் நிச்சயமாக இப்படி கோணத்தை எதிர்பார்த்திருக்கவில்லை.
“நீ என்ன சொல்ற பிரவீன்..? இது உனக்கெப்படி தெரியும்..? அந்த ஆள் பொண்ணா இருந்திருந்தா, கண்டிப்பா நமக்குத் தெரிஞ்சிருக்குமே..?” என்றான்.
“பொதுவா அந்தப் பொண்ணுக்கு அவங்க அப்பாவைக் கண்டால் ஆகாது போல. இந்த ஆளுக்கும் அப்படித்தான். அதனால வெளிய தன்னை யாருன்னு சொல்றதே இல்லை அந்த பொண்ணு..! விசாரிச்சதுல கிடைச்ச தகவல் தான் இது. இதை உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியாமத்தான் யோசனை பண்ணிட்டு இருந்தேன். இப்போ வந்தனாவே போன் பண்ணவும் , சொல்லியாக வேண்டிய கட்டாயம், சொல்லிட்டேன். இனி உன் பாடு, அந்த பொண்ணு பாடு..!” என்றான் பிரவீன்.
“அந்த ஆளோட பொண்ணுன்னு தெரிஞ்சிருந்தா, அவகிட்ட பேசியிருக்க கூட மாட்டேன் பிரவீன்..!” என்றான் விஜய் கோபமாக.
“உன்னைப் பத்தி தெரிஞ்சதனால தானோ என்னவோ, வந்தனா உன்கிட்ட சொல்லாம விட்டிருக்கணும்..! ஆனா, அந்த பொண்ணு ரொம்ப அருமையான பொண்ணுன்னு தான் சொல்றாங்க…!”
“அதுக்காக..!” என்ற விஜய், தலையை கைகளில் தாங்கி அமர்ந்துவிட்டான்.
“இந்த சின்ன விஷயத்தை நீ ஏன் பெருசு பண்ற விஜய். உனக்கு பிடிச்சிருந்தா ஓகே சொல்லு. இல்லையா உறுதியா முடியாதுன்னு சொல்லிடு. நான் பார்த்த வரைக்கும் நீ அந்த பொண்ணை உருகி உருகி காதலிச்ச மாதிரியும் தெரியலை..!” என்றான் பிரவீன்.
“உண்மைதான்..!” என்று தெளிந்த விஜய், அதற்கடுத்து நிம்மதியாக வேலையைப் பார்க்க போனான்.
அதற்கடுத்து சென்ற ஒரு வாரமும், எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்றது. கனகவேல் அந்த குடும்பத்துடன் நிச்சயத்தை முடித்திருந்தார். அதற்கடுத்து கல்யாண வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்க, இடையில் விஜய்யிடம் இருந்து வந்தனாவிற்கு எந்த போணும் வரவில்லை.
அவளே போன் செய்தாலும், அவன் எடுக்கவேயில்லை. அவள் எவ்வளவு முயற்சி செய்தும் பலன் இல்லாமல் போக, அவன் சென்னை வந்திருப்பது தெரிந்து, விஜய்யை நேரிலேயே பார்க்கப் போனாள் வந்தனா.
அவளை தன்னுடைய் கம்பெனியில் விஜய் கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை. அதுவும் நேரில் வருவாள் என்று.
“என்ன விஷயம் வந்தனா..?” என்றான் பட்டும் படாமல்.
“எதுக்காக விஜய், நான் போன் பண்ணா எடுத்து பேசவே மட்டேங்குறிங்க..? எதுக்காக என்னை அவாய்ட் பண்றிங்க..?” என்றாள் கலங்கிய கண்களுடன்.
“இங்க வார் வந்தனா, நான் வெட்டியா இருக்கேன்னு நினைச்சியா? எனக்கு ஆயிரம் வேலை இருக்கும். இதுல வெட்டியா பேசுறதுக்கு எனக்கு டைம் இல்லை. அண்டர்ஸ்டென்ட்..!” என்றான் கோபமாக.
“என்கிட்டே பேசுறது உங்களுக்கு வெட்டியா பேசுற மாதிரி தெரியுதா..?” என்றாள்.
“கண்டிப்பா..!” என்றான்.
“நீங்க என்னை இப்படி ஏமாத்துவிங்கன்னு நான் சத்தியமா நினச்சுப் பார்க்கலை விஜய்..!” என்றாள்.
“வாட் டு யு மீன்..? நான் உன்னை ஏமாத்துனேனா..? இதென்ன புதுக் கதையா இருக்கு..? நான் என்னைக்காவது உன்கிட்ட உன்னை லவ் பண்றேன்னு சொல்லியிருக்கேனா..? இல்லை உன்கூட ஊர் சுத்தி கழட்டி விட்டேனா..? என்ன நினச்சுட்டு இருக்க..?” என்றான் கோபமாய்.
“அன்னைக்கு, எங்க வீட்ல கல்யாணம் பேசுறாங்கன்னு சொன்னப்போ, நீங்க வந்து பேசுறதா சொன்னிங்களே..?” என்றாள் இயலாமையுடன்.
“படிக்கிற பிள்ளைய எதுக்கு இப்படி பண்றிங்க. படிக்க வைங்கன்னு பேசலாம்ன்னு இருந்தேன்..!” என்றான் பட்டென்று.
“பொய்..! உங்களுக்கு என்னைப் பிடிக்கும்..!” என்றாள் தேம்பியபடி.
“இங்க பார் வந்தனா, இப்பவும் உன்னை எனக்குப் பிடிக்கும். நீ என்னை லவ் பண்றன்னு எனக்குத் தெரிஞ்சப்போ, நல்ல பொண்ணா இருக்கா, கல்யாண பேச்சு வந்தா..வீட்ல சொல்லி உன்னைப் பார்க்க சொல்லலாம் அப்படின்னு தான் நினைச்சேனே தவிர, நீயில்லாம நான் இல்லைன்னு எந்த இடத்துலையும் நான் வசனம் பேசுனதா, எனக்கு நியாபகம் இல்லை..!” என்றான்.
“அதான் நீங்களே சொல்றிங்களே..? அப்பறம் என்ன..? உங்களால காதலிக்க முடியாது சரி, ஆனா, கல்யாணம் பண்ணிக்கலாமே..?” என்றாள்.
“அந்த கனகவேல் பொண்ணை கல்யாணம் பண்ணனும்ன்னு எனக்கு எந்த அவசியமும் கிடையாது. இதுக்கு எங்க வீட்ல யாரும் சம்மதிக்கவும் மாட்டாங்க..! இதெல்லாம் தெரிஞ்சு தான, இந்த விஷயத்தை என்கிட்டே இருந்து நீ மறைச்சிருக்க. இப்ப என்ன புதுசா..? அதான் நிச்சயமே முடிஞ்சிருச்சாமே. இன்னமும் நீ என்னை நினைக்கிறதே தப்பு..! நல்ல நண்பர்களாவே எப்பவும் இருப்போம்..!” என்று முடித்து விட்டான் விஜய்.
“விஜய்.. ப்ளீஸ்..! நான் மறைக்கனும்ன்னு மறைக்கலை..!” என்று வந்தனா சொல்ல,
“ப்ளீஸ் வந்தனா..! எனக்கு நிறைய வேலை இருக்கு..!” என்று சொல்ல,
“செத்தாலும் சாவேனே தவிர, இன்னொருத்தனை கல்யாணம் பண்ண மாட்டேன்..!” என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள் வந்தனா.
அவள் வந்ததும், விஜய் பேசியதும் பிரவீன் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
“என்ன விஜய்..? இப்படி பேசிட்ட..?” என்றான் பிரவீன்.
“அப்பறம் என்ன பிரவீன்..? நடக்கவே நடக்காதுன்னு தெரிஞ்சும், இதை நம்மகிட்ட மறைச்சிருக்கா..? எத்தனை நாளா இவளை நமக்குத் தெரியும்..? நாம போய் பொண்ணு கேட்டா, இவ அப்பன் மாட்டேன்னா சொல்லுவான்..? அதெல்லாம் தாராளமா சரின்னு சொல்லுவான். அந்த ஆளு பெருசா நினைக்கிற ஜாதியே சரியா இருக்கும் போது, அந்த ஆளுக்கு என்ன பிரச்சனை வரப் போகுது.
ஆனா, அதுக்கப்பறம் அவனோட அரசியல் சாயத்தை நம்ம மேல பூசப் பார்ப்பான். சும்மாவே அந்த ஆளுக்கும் நமக்கும் ஆகாது. இதுல நம்ம தாத்தாவுக்கு சுத்தமா ஆகாது. யாருக்குமே நிம்மதி இருக்காது. ஒன்னுக்கு பின்ன ஒண்ணா, பல பிரச்சனை வரும். இதெல்லாம் தேவையா..? அதான் வேண்டாம்ன்னு சொன்னேன்..!” என்றான் விஜய்.
“எல்லாம் சரிதான் விஜய். உனக்கு அந்த பொண்ணை பிடிச்சிருந்ததே..! நான் வேணும்ன்னா தாத்தாகிட்ட பேசுறேன்..!” என்றான் பிரவீன்.
“திரும்ப திரும்ப என்னை பேச வைக்காத பிரவீன். பிடிக்கிறதுக்கும், காதலிக்கிறதுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு..! விட்டுடு இந்த பேச்சை இதோட..!” என்றான் விஜய்.
“நீ வந்தனாவைக் கட்டிகிட்டா, கனகவேலை பழிவாங்க ஒரு வாய்ப்பா இருக்கும் இல்லையா..?” என்ற கோணத்தில் கூட பிரவீன் சொல்லிப் பார்த்தான்.
“இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு பிரவீன்..? அந்த ஆளைப் பழிவாங்குறதுக்காக ஒரு பொண்ணோட வாழ்க்கையை எப்படி அழிக்க முடியும்..?”
“அந்த பொண்ணுக்குத்தான் உன்னைப் பிடிச்சிருக்கே..! எனக்கு என்னவோ, வந்தனா இதை ஈசியா எடுத்துக்கப் போற மாதிரி தெரியலை..!” என்றான் பிரவீன்.
இவர்கள் இங்கே வாதாடிக் கொண்டிருக்க, அங்கே வந்தனா, எல்லா விஷயங்களையும் விமலிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“நீ என்ன சொல்ற வந்தனா..?”
“ஆமா மாமா..! அவருக்கு எல்லாமே தெரிஞ்சு போய்டுச்சு..! அவர் எதுவுமே இல்லைங்கிற மாதிரி பேசிட்டார்..! இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க மாமா..! விஜய்க்கு என்னை பிடிக்காம போனாலும், கடைசி வரைக்கும் நான் இப்படியே இருந்துட்டு போறேன்..!” என்று கண்ணீருடன் சொல்லிவிட்டு போனை வைத்து விட்டாள் வந்தனா.
வந்தனா சொன்னதை விமலால் நம்ப முடியவில்லை. அவனுக்குத் தெரிந்த வரை எந்த விஷயத்தில் இருந்தும் விஜய் பின்வாங்கியது கிடையாது.
‘உன்னோட கல்யாணத்தை நிறுத்துனாலும், என்னோட கல்யாணத்தை நடத்த உனக்கொரு காதலன் இருந்தாகணுமே..! என்ன பண்ணலாம்..?” என்று யோசித்த விமல், தந்திரமாக காய் நகர்த்த, அவன் செய்த வேலையால் அடுத்த நாளே கனகவேலிற்கு அழைப்பு வந்தது.
“சொல்லுங்க தலைவரே..!!” என்றார் பவ்யமுடன்.
“யோவ்..!!! உன் பொண்ணு வேற யாரையோ விரும்புதாமே..! இந்த விஷயம் தெரிஞ்சும் என் வீட்ல சம்பந்தம் பேச உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்..!” என்றார் அவர்.
“அப்படியெல்லாம் எதுவும் இல்ல தலைவரே..! என் பொண்ணு சம்மதம் சொல்லித்தான் இந்த ஏற்பாடே பண்ணேன்..! எந்த பிரச்சனையும் வராது..” என்றார்.
“உன் பொண்ணை காதலிக்கிறவன் நேரா மாபிள்ளைக்கே போன் போட்டு சொல்லியிருக்கான். விசாரிச்சா அப்படித்தான் சொல்றாங்க..! இப்ப சரின்னு சொல்லிட்டு கல்யாணத்தன்னைக்கு ஓடிப் போயிட்டான்னா, உன்னோட குடும்ப மானத்தோட சேர்த்து, என் குடும்ப மானமும் தான் காத்துல பறக்கும்..!” என்றார் அவர்.
“அப்படி எல்லாம் எதுவும் இல்லை தலைவரே..! நான் பார்த்துக்குறேன்..” என்று போனை வைத்த கனகவேலின் முகத்தில் அப்படி ஒரு கோபம்.
“ராதிகா..!” என்று அவர் கத்திய கத்தலில் வீடே அதிர்ந்தது.
“என்னங்க..? என்னாச்சு..? எதுக்காக இப்படி சத்தம் போடுறிங்க..?” என்றார் ராதிகா புரியாமல்.
“உன் பொண்ணு பண்ணி வச்ச வேலையைப் பாரு..!எவன் கூட ஊர் சுத்திட்டு இருக்கா..? அதுவும் மாப்பிள்ளை வீட்டுக்கே போன் போட்டு சொல்லுற அளவுக்கு..!”என்று குதிக்க,
“இல்லங்க,நம்ம வந்தனா அப்படி எல்லாம் பண்ணக் கூடிய பொண்ணு கிடையாது. நான் பேசுறேன் அவகிட்ட..!”என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“மாமா சொல்றது உண்மைதான் அத்தை.வந்தனா ஒரு பையனை காதலிக்கிறது நிஜம் தான். இதை அவளே என்கிட்டே சொன்னா..” என்றான் விமல் சமயம் பார்த்து.
“என்ன சொல்ற விமல்..? உனக்கு இந்த விஷயம் எப்போ தெரியும்..?” என்றார் கனகவேல்.
“கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் தெரியும் மாமா..!” என்றான்.
“தெரிஞ்சும் என்கிட்டே ஏன் சொல்லலை..!” என்று கனகவேல் கோபப்பட,
“அதை எப்படி மாமா சொல்றது..? லவ் பண்றேன்னு தான் சொன்னா.ஆனா, யாருன்னு சொல்லலை.அவ தயங்குறதைப் பார்த்தா, பையன் நம்ம ஜாதி இல்லைன்னு தோணுது..!” என்று பச்சையாய் பொய் சொன்னான் விமல்.
“என்னது..???” என்ற கனகவேலிற்கு அடுத்து பேச்சே வரவில்லை.
“என்னங்க விமல் என்னவெல்லாமோ சொல்றான்..?” என்ற ராதிகாவும் கலங்கிப் போனார்.
அதற்குள் வெளியே சென்ற விமல்,வந்தனாவிற்கு போன் செய்தான்.
“சொல்லுங்க மாமா..!” என்றாள் வந்தனா.
“என்னத்தை சொல்ல சொல்ற வந்தனா..? என்னமோ விஜய் உன் வாழ்க்கையில் இனி இல்லைன்னு சொன்ன..?இப்ப என்னடான்னா மாப்பிள்ளை வீட்டுக்கே போன் போட்டு சொல்லியிருக்கான், உன்னைய லவ் பண்றதா..?” என்றான் விமல்.
“என்ன மாமா சொல்றிங்க..? விஜய்யா பேசினார்..? வாய்ப்பு இருக்காது மாமா.. என்னைய நிச்சயம் பண்ண வந்தது யாருன்னே விஜய்க்குத் தெரியாதே..?” என்றாள் வந்தனா.
‘இவ்வளவு அறிவாளியா இருக்கக் கூடாதுடி என் மாமன் மகளே..!’ என்று மனதில் நினைத்தவன்,
“நீ யாரோட பொண்ணுன்னு கண்டு பிடிக்கத் தெரிஞ்சவனுக்கு, இதெல்லாம் பெரிய விஷயமா..?” என்றான்.
“அப்போ அப்பாக்கு விஷயம் தெரிஞ்சு போய்டுச்சா மாமா..?”என்றாள் பயத்துடன்.
“ஆமா, வந்தனா..! மாமா இங்க ரொம்ப கோவத்துல இருக்கார்..! இப்ப என்ன பண்றது..?” என்று விமல் கேட்க, வந்தனாவிற்குமே பயம் பிடித்துக் கொண்டது.
பயத்தில் அவள் கை விஜய்க்கு தானாகவே போன் செய்தது.
“இன்னும் என்ன வந்தனா..?” என்றான் எரிச்சலாக.
“மாப்பிள்ளை வீட்டுக்கு எதுக்காக விஜய் போன் பண்ணிங்க..? இப்போ விஷயம் அப்பாக்கு தெரிஞ்சு போய்டுச்சு..!” என்று அழுக ஆரம்பித்தாள்.
“ஹேய்..! என்னைப் பத்தி என்னவொரு உயர்ந்த எண்ணம் உனக்கு..?உன்னை இந்த பக்கம் அனுப்பிட்டு, அந்த பக்கம் காய் நகர்த்த நான் ஒன்னும் பொறுக்கி கிடையாது. என்ன நினைச்சுட்டு இருக்க..? பெரிய தொல்லையா இருக்கு..?” என்று எறிந்து விழுந்தான் விஜய்.
“சாரி விஜய்..! இனி உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன்..!” என்று பட்டென்று போனை வைத்து விட்டாள் வந்தனா.