“ரொம்ப நல்ல ஜாதகம்! நம்ம பாப்பாக்கு தேடுனாலும் கிடைக்காது! ரெண்டு பேருக்கும் பொருத்தம் அமோகமா இருக்கு” என வீரகேசரியின் ஜாதகத்தை காட்டி சொல்லிக்கொண்டிருந்தார் சண்முகம்.
“பையன் குடும்பம், வேலை எல்லாம் எப்டிடா? விசாரிச்சியா நல்லா?” என்றார் மங்களம்.
“எல்லாம் விசாரிச்சுட்டேன்ம்மா! யாரும் ஒரு குறை சொல்லல… அந்த பையனோட அப்பா இறந்ததுக்கு பிறகு அதுல வந்த காசுல ஒரு வீட்டை வாங்கி போட்டுருக்காங்க! பையன் தலையெடுத்ததும், மீதம் இருந்த காசை வச்சு சத்திரம் பஸ் ஸ்டேன்ட் பக்கத்துல ஒரு பெட்ரோல் பங்க் வச்சு நடத்திட்டு இருக்காப்பல! மொத்தமே அம்மா பையன் மட்டும் தான்! எந்த பிக்கல் பிடுங்கலும் கிடையாது! நம்ம பாப்பாக்கு இதை விட நல்ல இடம் அமையாது!” என்று தனது திருப்தியை வார்த்தையில் கொட்டிவிட்டு சண்முகம் நீலாவை பார்க்க, அவர் யோசனையாய் நின்றிருந்தார்.
“என்ன நீலா, ஒண்ணுமே சொல்லாம நிக்குற?” என்றார் தன் மனைவியிடம்.
“குடும்பம், வேலை எல்லாம் சரி தாங்க! பையன் குணம் எப்டின்னு விசாரிச்சீங்களா?” என கேட்டதும், “அதை எப்டி விசாரிக்காம இருப்பேன்? கேட்டவரைக்கும் சொல்லிக்குற மாதிரி கெட்ட பழக்கம் ஒண்ணுமே இல்லன்னு தான் சொன்னாங்க!” என்றதும், “ம்ம்ம்” என தலையசைத்தார் நீலா.
“நம்ம செய்யுறது, அவங்க எதிர்ப்பார்ப்பு எல்லாம் எப்டின்னு கேட்டியா? நம்ம கைக்கு மீறி இருக்க போகுதுடா?” என்றார் மங்களம் கவலையுடன்.
“அதெல்லாம் எப்டிம்மா இப்போவே பேச முடியும்? தரகர் கிட்ட கேட்ட வரைக்கும் பெருசா எதுவும் எதிர்ப்பார்க்க மாட்டாங்கன்னு தான் சொன்னான்” என்றார் சண்முகம்.
கூடவே, “நம்மளும் என்ன சும்மாவா அனுப்புவோம் நம்ம பாப்பாவ? நம்ம சக்திக்கு தக்கன எந்த குறையும் இல்லாம செய்வோம்” என சொல்ல, அதையே ஆமோதித்தனர் இரு பெண்களும்.
வெளியே திருமண பேச்சு ஓடிக்கொண்டிருக்க, அதற்கு சம்பந்தப்பட்டளோ, தன் அறைக்குள் இருந்து வெளியே நடந்த பேச்சில் கவனம் வைத்திருந்தாள்.
அதில், ‘ஜாதகம் பொருந்தியது, அப்பாவுக்கு திருப்தி’ என்ற இரு முக்கிய கருத்துகள் மட்டுமே அவள் செவியை அடைந்து மூளைக்குள் செல்ல, ‘இதற்கு மேலும் தன் திருமணம் தடைப்பட கூடாது’ என்று எண்ணியவளாய்,
“முருகா, எனக்கு எப்படியாவது இந்த கல்யாணம் நடக்கணும்… இதுவரை ஒருநாளும் உன்கிட்ட எனக்கு கல்யாணம் செஞ்சு வைன்னு நான் கேட்டதில்லை, இப்போ கேட்குறேன்! ப்ளீஸ்” என உடனடி பெட்டிஷன் ஒன்றை கடவுளிடம் போட்டு வைத்தாள் அஷ்டலட்சுமி.
அவளுக்கு அன்று தோழிகளை சந்தித்து விட்டு வந்ததில் இருந்தே, தனக்கு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்ற எண்ணம் வலுபெற்றிருந்தது.
இப்போது அவளுக்கு தோதான வரன் வந்ததை தந்தை சொல்ல கேட்டதும், பையன் யார்? என்ன? எப்படி? என எதையும் யோசிக்காமல், அவன் முகம் பார்க்க கூட எண்ணாது, எப்படி இருந்தாலும் சரி, இந்த வரனே அமைந்து, சீக்கிரத்தில் தனக்கு திருமணம் முடிய வேண்டும் என பிராதித்திவிட்டாள்.
“நம்மளே பேசிக்கிட்டு இருந்தா போதுமா? பாப்பாக்கிட்டயும் கூப்பிட்டு கேட்டுடலாம், அவளுக்கு பிடிக்கிறது தானே இங்க முக்கியம்?” என தன் பேத்திக்காக பேசினார் மங்களம்.
சண்முகம் உடனே, அவள் அறை நோக்கி, “குட்டிமா!” என குரல் கொடுக்க, மௌன பிராத்தனையில் இருந்தவள், “இதோ வரேன்ப்பா” என கதவை திறந்து வேகமாய் வந்தாள்.
“குட்டிமா! உனக்கு கல்யாணத்துக்கு ஒரு வரன் வந்துருக்கு! கிட்டத்தட்ட முடிஞ்சுடும்ன்னு தான் நினைக்குறேன்! நீ பையனை ஒருக்க பார்த்து சரின்னு சொல்லிட்டா நம்ம அவங்க வீட்டுல பேசி, பொண்ணு பார்க்க வர சொல்லிடலாம்” என தெளிந்த முகத்துடன் ஆவலாய் சண்முகம் சொல்ல, லேசான தலையசைப்புடன் நின்றாள் அஷ்டா.
கையில் வைத்திருந்த ஜாதக ஏட்டினூடே இருந்த காக்கி கவரை உருவியவர் அதில் இருந்த போஸ்ட் கார்ட் சைஸ் நிழல்படத்தை எடுத்து முதலில் தன் அன்னையிடம் நீட்டினார்.
ஆவலுடன் வாங்கி பார்த்த மங்களம், புகைப்படத்தை பார்த்ததும், “நல்ல லட்சணமான முகம்! திருத்தமா இருக்கான்” என்றார் வெகு திருப்தியாய்.
உடனே நீலா அவர் அருகில் ஓடி, அவரும் பார்க்க, பார்த்த மாத்திரத்தில் பூவாய் மலர்ந்து போனது அவர் முகம்.
“மாப்பிள்ளை நல்லா இருக்காரு” அவரின் திருப்தி வார்த்தையில் தெரிய, “மாப்பிள்ளைன்னு முடிவே பண்ணிட்டாடா உன் பொண்டாட்டி” என சிரித்தார் மங்களம்.
“குட்டிமாகிட்ட குடுங்கம்மா! நீங்களே பார்த்துக்கிட்டு இருந்தா போதுமா?” என சண்முகம் சொன்னதும், போட்டோவில் இருந்து கண்ணை பிரிக்காமலே கையை மட்டும் அவள் நோக்கி நீட்டினார் மங்களம்.
சண்முகம், “வாங்கி பாருடா”
கை நீட்டி போட்டோவை தொட இருந்த நொடி, ‘ஒருவேளை போட்டோ பார்த்து பிடிக்காம போய்ட்டா?’ என்ற திடீர் சந்தேகம் அவளுள் தலை தூக்க, நீண்ட கை படக்கென பின்னோக்கி மறைந்தது.
“என்னடா?”
“வே…வேண்டாம் ப்பா! நான் பார்க்கல! உங்க எல்லாருக்கும் பிடிச்சுருக்குல? அது போதும் எனக்கு! நீங்க மேற்கொண்டு ஆக வேண்டியதை பாருங்க” என சொல்லிவிட்டு தந்தை மறுத்து சொல்வதற்குள் குடுகுடுவென அறைக்குள் ஓடி மறைந்துக்கொண்டாள்.
நீலாவுக்கு ஆச்சர்யம் தாள முடியவில்லை. ‘என் பொண்ணா இது?’ என நம்ப முடியாமல் அவர் நிற்க,
“பார்த்தியா சண்முகம் என் பேத்திய? நம்ம மேல எந்த அளவு நம்பிக்கை இருந்தா இப்படி சொல்லிட்டு போவா என் பேத்தி? அவ அருமை தெரியாம உன் பொண்டாட்டி தான் ஓயாம ஏதாவது சொல்லிட்டு இருக்கா அவளை” என பேத்தி பெருமை பேசி, மருமகளை போட்டு கொடுத்தார் மங்களம்.
சண்முகமும் தன் மகளை நினைத்து பெருமையாய் அமர்ந்திருந்தார்.
“அப்பறம் என்னம்மா, குட்டிமாவே சொன்னபிறகு எதுக்கு தாமதிக்கணும்? நான் தரகர் கிட்ட பேசி அவங்களை பொண்ணு பார்க்க வர சொல்லுறேன்” என நிறைவாய் எழுந்து வெளியே சென்றார்.
“இந்த இடத்தை எப்படியாச்சும் முடிச்சு குடுமா தாயி” என வேண்டிக்கொண்டே ஒரு ரூபாய் நாணயத்தை சிறு மஞ்சள் துணியில் முடிந்து சாமி மாடத்தில் வைத்து கை கூப்பி வேண்டினார் மங்களம்.
****
வெக்காளி அம்மன் கோவில் சுற்று பிரகாரத்தில் ஒரு ஓரமாய் ஒற்றை காலை நீட்டி அங்கும் இங்குமாய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் வீரா.
“ம்மா, நேரமாகுதும்மா! லோட் அடிக்க ஆளுங்க வந்துடுவாங்க, நான் ‘பங்க்’க்கு போகணும்” என கிட்டத்தட்ட கெஞ்சிக்கொண்டிருந்தான்.
நின்று எழுதுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஸ்டேண்டில் லேசாக சாய்ந்து தன் மூக்கு கண்ணாடியை சரி செய்தபடியே, “இருடா, எழுதி முடிக்கப்போறேன்” என தன் முன்னிருந்த மஞ்சள் சீட்டில் மும்மரமாய் எழுதிக்கொண்டிருந்தார் விஜயா.
“வாழ்க்கை வரலாறாமா எழுதுறீங்க? அடிஷனல் ஷீட்டு வேற கேட்பீங்க போல” கிண்டலாய் சொன்னாலும், இருபது நிமிடமாய் அந்த சீட்டில் வார்த்தைகளை செதுக்கிக்கொண்டு நின்றிருந்த அன்னையை கண்டு அலுத்துப்போனான் வீரா.
“கிண்டல் பண்ணாதடா! சாமி காரியம்” என அதட்டினாலும் தன் செதுக்களை நிறுத்தவில்லை விஜயா.
“என்ன பெருசா எழுதிட போறீங்க? என் புள்ளைக்கு சீக்கிரமே ஒரு ராஜகுமாரி வரணும், கல்யாணம் நடந்து பொண்டாட்டி, புள்ளை குட்டின்னு என் பையன் சிக்கி சின்னபின்னமாகனும்… அதானே?” என சிரிக்க,
“அடிச்சேனா படவா? எல்லாம் விளையாட்டா இருக்கு உனக்கு? வெக்காளி அம்மன் கோவில்ல சீட்டு கட்டி வச்சா, நினைச்சது நடக்கும்ன்னு தெரியாதா என்ன? சும்மா கிண்டல் பண்ண, சாமி கண்ணை குத்திடும்” என சொன்னதும் இல்லாமல், கையில் இருந்த பேனாவை அவன் கண்ணை நோக்கி குறி வைத்து நீட்டியபடி விஜயா சொல்ல,
“ஐயோ பயமா இருக்கும்மா” என இரண்டி நகர்ந்து பயம் போல பாவ்லா காட்டினான் வீரா.
‘கேடி’ என திட்டிக்கொண்டே மீதத்தையும் எழுதினார் விஜயா.
விளையாட்டாய் பேசினாலும் அடுத்து தனக்காக காத்திருக்கும் வேலைகளை மனத்துக்குள் எண்ணிக்கொண்டு, ‘அம்மாவ வீட்டுல விட்டுட்டு முதல்ல பங்க் போகணும்’ என நினைத்தவன், மணியை பார்த்தபடி அமர்ந்திருக்க, அவனது செல்போன் மௌனமாய் அதிர்ந்தது.
அதை எடுத்து பார்த்தவன், ‘தரகர்’ எண்ணை கண்டதும், “ம்மா! சாமிக்கிட்ட பெட்டிஷன் போட்டதுக்கு பலனா பூசாரிக்கிட்ட இருந்து கால் வருது பாருங்க” என போனை நீட்ட, மஞ்சள் சீட்டை கம்பத்தில் கட்டிக்கொண்டிருந்தவர், அருகே வந்து போனை வாங்கிக்கொண்டு,
“சொல்லுங்க தரகரே” என வீராவை செல்லமாய் முறைத்தபடி பேச ஆரம்பித்தார்.
மறுப்பக்கம் சொன்ன சேதியில் துள்ளி குதிக்காத குறையாய் விஜயா உணர்ச்சிகளை முகத்தில் கொட்டி ஆர்ப்பரிக்க, அதை பார்த்துக்கொண்டிருந்த வீரா,
“யப்பா, உங்க முகத்துல இருந்தே கரென்ட் எடுக்கலாம் போலயே ம்மா… எவ்ளோ பிரகாசமா இருக்கு?” என கிண்டலடிக்க, அவனை செல்லமாய் முதுகில் தட்டியவர்,
“ரொம்ப சந்தோஷம் தரகரே, சொன்னபடி நாங்க வெள்ளிக்கிழமை வந்துடுவோம்! நீங்க பொண்ணு போட்டோவ மட்டும் வீரா போனுக்கு அனுப்பி வச்சுடுங்க! சரியா? வச்சுடுறேன்” என பேசிமுடித்து மொபைலை வீராவிடம் கொடுத்தவருக்கு இருப்பு கொள்ளவில்லை.
“என்னம்மா இவ்ளோ சந்தோஷம் உங்களுக்கு?” அன்னையின் மகிழ்ச்சிக்காக காரணம் அறிய அவரிடமே கேட்க,
“நான் சொன்னேன்ல வெக்காளியம்மன் கோவில்ல சீட்டு கட்டுனா நம்ம வேண்டுனது நடக்கும்ன்னு சொன்னேன்ல? பாரு கட்டுன உடனே நடக்க போகுது” என உற்சாக ஊற்றாய் பேசினார் விஜயா.
“ம்மா! என்னன்னு சொல்லுங்கம்மா”
“போன வாரம் தரகர் ஒரு வரன் கொண்டு வந்தாரு! பொண்ணு போட்டோவ பார்த்ததுமே பிடிச்சு போச்சு எனக்கு… வீட்டுக்கு ஒரே பொண்ணு! அப்பா லோட் வண்டி நாலு வச்சுருக்காரு! ஸ்ரீரங்கம் பக்கம் சொந்த வீடு! நல்லா படிச்ச பொண்ணு! உனக்கு பொருத்தமா இருப்பா! அந்த பொண்ணுக்கும் செவ்வாய் தோஷ ஜாதகம்! எனக்கு அவளை பார்த்ததுமே என்னவோ மனசுல பட்டுடுச்சு, நம்ம வீட்டுக்கு வர போற பொண்ணு அவ தான்னு! அதான் உன் ஜாதகத்தை பொண்ணு வீட்டுல குடுத்துப்பார்க்க சொன்னேன் தரகர! இப்போ அதை சொல்ல தான் போன் பண்ணிருக்காரு”
விஷயத்தை கிரகித்து, “ஓஓ” என்றான் வீரா.
“பொண்ணு வீட்டுல சரின்னு சொல்லிட்டாங்களாம் டா! வர வெள்ளி பொண்ணு பார்க்க வர சொல்லிருக்காங்க! பொண்ணு போட்டோ நீ பார்க்கனும்ல? அதான் உனக்கு அனுப்பிவிட சொன்னேன்” என்றார் விஜயா.
அதற்கும், “ஓஓ” என்றான் வீரா.
“எனக்கு இப்போவே கல்யாணம் முடிவான மாதிரி இருக்குடா! எல்லாம் அந்த வெக்காளி அம்மன் கருணை” என கொடிமரத்தை பார்த்து ஒரு கும்பிடை போட,
“இதெல்லாம் அநியாயம்ம்மா! அப்போ போன மாசம் போனோமே கற்கடேஸ்வரர் கோவில்… அந்த சாமி கருணை எல்லாம் இல்லையா?” என முறைப்பாய் பார்க்க,
“ஹிஹி! சாமிக்கு நடுல பாகுபாடு பார்க்காதடா! எல்லாமே நம்ம சாமி தானே, யாரு குடுத்தா என்ன?” என்று சமாளித்து, “இருடா, நான் ஒருக்க அம்மனை பார்த்துட்டு வந்துடுறேன்” என தன் மூட்டு வலியையும் மறந்து குடுகுடுவென அம்மன் சந்நிதி நோக்கி ஓடினார் விஜயா.
சிறு பிள்ளை போல ஓடும் அன்னையை பார்த்து சிரிப்புடன் நின்றிருந்த வீரா’வின் அலைபேசி குறுஞ்செய்தி வந்ததன் அடையாளமாய் ஒரு முறை உறும, அதை எடுத்து பார்த்தவனின் விழிகள் அதில் இருந்த புகைப்படத்தில் ஆச்சர்யத்தால் நிலைக்குத்தி நின்றன.
நெஞ்சு வரை மட்டுமே தெரியும்படி இருந்த அந்த படத்தில் ஊதா நிற புடவையில் பின்னிய ஜடையை முன்பக்கமாய் போட்டு அதில் தொற்றிக்கொண்டிருக்கும் ஜாதிப்பூவின் வெண்மைக்கு போட்டியாய் சிரிப்பில் விரிந்த இதழ்களோடு, அஞ்சனம் பூசிய நயங்களும் சேர்ந்து புன்னகிக்க, அத்தனை வனப்பாய் தெரிந்தாள் அஷ்டலட்சுமி.
அவள் முகத்தில் நிலைக்கொண்ட அவன் கண்கள் அதில் இருந்து மீள முடியாது தேங்கிவிட்டன போலும்.
‘அட நம்ம கிழிஞ்ச நோட்டா?’ ஆச்சர்யமே முதலில் வந்தது. அதன்பின்னோ,
அதுவரை தனக்கு திருமணம் என சொல்லும்போதெல்லாம் தோன்றாத பரவசம், அவள் தான் தனக்கு பார்த்திருக்கும் ‘பெண்’ அறிந்த இந்நொடி, முதல்முறையாய் ‘கல்யாண ஆசை’ என்ற ஒன்று மனதில் சட்டென தோன்ற அவளை பார்க்கப்போகும் நிமிடத்தை இப்போதிருந்தே எதிர்ப்பார்க்க ஆரம்பித்து விட்டான்.
‘அவளுக்கும் இதே மாதிரி என் போட்டோ காட்டிருப்பாங்கள்ள? என்னை பிடித்து தான் ஓகே சொல்லிருப்பாலோ?’ என தோன்ற அவன் பரவசம் அதிகமானது.
காரணம் இன்றி இருமுறை மட்டுமே பார்த்திருந்த அவள், அவனின் வாழ்வில் பாதியாய் வர போகும் விந்தையை, அதையும் மீறி தன் மனம் அவள் தான் தனக்கான பெண் அறிந்ததும் அடையும் உற்சாகத்தை கண்டு வியப்பில் நின்றான்.
“டேய் கண்ணா… நின்னுக்கிட்டே கனவா? வா வீட்டுக்கு போவோம்! எனக்கு தலைக்கு மேல வேலை கடக்கு” என விஜயா சொல்லிக்கொண்டே வெளியே செல்ல, இதழை விட்டு நீங்காத புன்னகையுடன் கிட்டத்தட்ட கனவுலகில் மிதப்பவன் போல வேலைகளை மறந்து வீட்டை நோக்கி சென்றான் வீரா.