பூ 22:
அனைத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்ட விஜய்யின் மனநிலையை பிரவீனால் கொஞ்சமும் கணிக்க முடியவில்லை. அமைதியாக எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான் விஜய்.
“ரொம்ப லேட் ஆகிடுச்சு விஜய்..! நீ போய் முதல்ல தூங்கு..!எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம்..!” என்றான் பிரவீன்.
“ஆமாண்ணா..! நீங்க வந்து தூங்குங்க.. ஒரே நாள்ல எத்தனை அதிர்ச்சியைத் தான் தாங்குவிங்க..?” என்று அருணும் அவன் பங்குக்கு சொல்ல, அந்த மொட்டை மாடிப் பனி தான் குளிர்ச்சியாய் இருந்ததே தவிர விஜய்யின் மனம் இல்லை.
“நடந்ததை எல்லாம் வச்சுப் பார்க்கும் போது, உனக்கு என்ன தோணுது பிரவீன்..?” என்றான் விஜய்.
“எதைப் பத்தி கேட்குற விஜய்..?”
“நான் கண்டிப்பா வந்தனா கழுத்தில் தாலி கட்டியிருப்பேன்னு நீ நினைக்கிறியா..?” என்றான்.
“அது எனக்கு சொல்லத் தெரியலை விஜய். உன்னோட சூழ்நிலை எப்படி இருந்ததுன்னு எனக்குத் தெரியாது. ஆனா, நான் உனக்கு போன் பண்ணி பேசிட்டு இருக்கும் போது, வந்தனா உன்னை தாலி கட்ட சொல்லி கட்டாயப்படுத்துனது, என் காதில் கேட்டுச்சு. ஒருவேளை அந்த கட்டாயத்தில் நீ கட்டியிருக்கலாம். இல்லை கட்டாமலும் இருக்கலாம்..!” என்றான் பிரவீன்.
“நான் அதைக் கேட்கலை பிரவீன்..! வந்தனாவைக் காப்பாத்தி கூட்டிட்டு வந்த நான், வேற எங்கேயும் போனேனா..? லைக் கோவில் அது மாதிரி..!” என்றான்.
“கண்ணன் சொன்னதை வச்சுப் பார்க்கும் போது, எனக்கு அப்படித் தோணலை..!” என்றான் பிரவீன்.
“சோ..! எது நடந்தாலும் கார்ல இருந்தப்ப தான் நடந்திருக்கணும். எங்க கூட வேற யாருமில்லை. அந்த தாலியை நான் கட்டியிருந்தா ஓகே. சப்போஸ் நான் அப்படி செய்யாத பட்சத்தில் என்ன நடந்திருக்கும்..?” என்றான் யோசனையுடன்.
“புரியலை விஜய்..”
“நல்லா கேட்டுக்கோ பிரவீன். தாலியை ஒன்னு நான் கட்டியிருக்கணும். அப்படியில்லையா வந்தனா தனக்குத் தானே கட்டியிருக்கணும். எப்படி யோசிச்சாலும் இந்த ரெண்டு விஷயம் நடந்திருக்க மட்டும் தான் அதிக பட்ச வாய்ப்பு இருக்கு..!” என்றான்.
“நான் கூட இதை யோசிக்கலை விஜய். நீ மாட்டேன்னு சொன்ன கோபத்துல, வேற வழி தெரியாம வந்தனாவே இப்படி செஞ்சிருக்க வாய்ப்பிருக்கு..! அப்போ ப்ரீத்தி ஏன் அப்படி சொல்லணும்..?” என்றான் பிரவீன்.
“அந்த ப்ரீத்தியை கண்டு பிடிச்சா, எல்லாமே முடிவுக்கு வந்துடும்..! அதாவது என்னோட சந்தேகங்களை சொன்னேன்..!” என்றான் விஜய்.
“அந்த விமலை என்ன பண்றது விஜய்..?” என்றான்.
“நடந்த ஆக்சிடென்ட், விபத்தா? இல்லை கொலை முயற்சியான்னு கண்டு பிடிக்கணும். அந்த விஷயம் தெளிவாகிட்டா, எல்லாமே தெளிவாகிடும்..!” என்றான் விஜய்.
“இதுல இன்னும் தெளிவாக என்ன இருக்கு..? இவ்வளவு பண்ணின அந்த விமல் தான் இதையும் செஞ்சிருப்பான்..! இப்பவும் உங்களுக்கு நினைவு தப்பிப் போனது அவனுக்கு தெரிஞ்சிருக்கும் அண்ணா. அதனாலத்தான் அவன் மேற்கொண்டு எதுவும் பண்ணலை..!” என்றான் அருண்.
“அருண் சொல்றதும் சரிதான். இதெல்லாம் நம்ம யூகங்கள் தான் அப்படின்னாலும், நடந்திருக்குறதுக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கு..!” என்றான் விஜய்.
“இப்போ அதையெல்லாம் விடு விஜய்..! எப்படியும் அந்த விமலுக்கு இருக்கு. உங்க கல்யாண விஷயத்துக்கு வருவோம்.. நீ என்ன முடிவு பண்ணியிருக்க..?” என்றான் பிரவீன்.
“ஆமாண்ணா..! துளசி புரியாம டிவேர்ஸ் கேட்டா, நீங்களும் கோபத்தில் சரின்னு சொல்லிட்டிங்க..! பாவம் ராஜ் அப்பா முகமே சரியில்லை..!” என்றான் அருண்.
“எனக்கும் சந்தோஷத்துக்கும் ரொம்ப தூரம் போல பிரவீன். எல்லாரும் என்னோட வாழ்க்கையில வந்த வேகத்துக்கு காணாம போய்டுறாங்க..! அப்படி இல்லைன்னா விலகிப் போய்டுறாங்க. கேட்டா நான் முரடன், முன்கோபி. யாருக்கும் என்னோட மனநிலையோ, உணர்வுகளோ தெரியறதே இல்லை..!” என்றான் விரக்தியான குரலில்.
“என்ன விஜய் இப்படி எல்லாம் பேசுற..? நாங்க எல்லாரும் இருக்கோம்..!”
“உனக்குத் தெரியாது பிரவீன். இடைப்பட்ட இந்த வருஷத்துல மறந்து போன எல்லா விஷயத்துக்கும் உன்னைத் தான் தேடியிருக்கேன். அந்த நிமிஷம் எப்படி இருக்கும் தெரியுமா..? அதுக்கு கோமாலயே இருந்திருக்கலாம்ன்னு தோணும். எல்லாரையும் புதுசா தான் பார்ப்பேன். ஆனா அது வெளிய தெரியகூடாது. எதுவுமே தெரியாம, எதுவுமே புரியாம, யார்கூடவும் ஓட்ட முடியாம.. இந்த நிலைமை எல்லாம் எதிரிக்குக் கூட வரக் கூடாது. புது மனுஷனா வாழ்றது ஈசி. ஆனா, பழகுன மனுஷங்க கூட புதுசா, புது மனுஷனா இருக்குற அந்த நிலைமை இருக்கே..அது இதை விட கொடூரம்..! எத்தனையோ இடத்துல என்னை நானே தேடியிருக்கேன். இது தான் நானா..? இல்லை வேற மாதிரி பீகேவ் பண்ணுவேனான்னு..! நிறைய சொல்லலாம்.
ஆனா, இது இப்போ வாழ்க்கை விஷயத்திலும் வந்து நிக்குது. துளசி நடந்துக்கறதைப் பார்த்தா, எனக்கு பயமா இருக்கு. என்னை மீறி எதுவும் நடந்திடுமோன்னு ஒவ்வொரு நிமிஷமும் நான் யோசிச்சுகிட்டே இருக்கேன்.அவ என்னை விரோதியா பார்த்தா கூட பரவாயில்லை பிரவீன். ஆனா, துரோகியா பார்க்கும் போது நான் என்ன பண்ண முடியும்.ஒவ்வொரு விஷயத்திலும் என்னை நானே புருவ் பண்ண முடியாது. என்ன நடக்கணும்ன்னு இருக்கோ, அது நடக்கட்டும்..” என்றான் விஜய்.
“ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டியே விஜய்..?” என்றான் பிரவீன்.
“என்ன..?”
“நீ துளசியை புதுசா பார்க்குற மாதிரியே பாரு. உனக்குத் தானாவே அவளைப் பிடிக்க ஆரம்பிக்கும்..!” என்றான் பிரவீன்.
“நான் துளசியை பிடிக்கலைன்னு எந்த இடத்துலையும் சொல்லலை. எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு. ஆனா, அவளுக்கு தான் பிடிக்கலை. அது தான் நிஜம்..!” என்றான் விஜய்.
“அவளுக்கு உன்னைப் பிடிக்கலைன்னு நீ பார்த்தியா..?” என்றான்.
“புரியலை..! என்ன சொல்ல வர..?”
“எல்லாத்தையும் நானே சொல்ல முடியுமா விஜய்..! சில விஷயங்களுக்கு விடையை நீதான் தேடனும். தேடு, தேடித் பார்த்தாதான் தெரியும் சில உண்மைகள். தேடல் கூட சில சமயம் சுகமானது தான் விஜய்..!” என்றான் பிரவீன்.
“அதுக்கு முதல்ல அந்த விமலை ஏதாவது செஞ்சாகனும் பிரவீன். பெத்த பொண்ணு சாவுல அரசியல் ஆதாயம் தேடி தொழில் துறை அமைச்சரா இருக்குற அந்த கனகவேலுக்கும் ஏதாவது பெருசா செஞ்சாகனும்..!” என்றான்.
“எதுக்கு விஜய், திரும்பி திரும்பி பகையை வளர்க்கணும்..?”
“இது பகை இல்லை, தீர்க்க வேண்டிய கணக்கு. எதுலையும் பாக்கி வச்சுடக் கூடாதுல்ல அதான்..!” என்றவனின் புருவ மத்தியில் சிந்தனை முடிச்சுகள். அது கண்டிப்பா, விமலுக்கு நல்ல விஷயமாக அமையாது என்று அருணுக்கும் தெரிந்திருந்தது.
“இப்போ கீழா போகலாமா.. இல்லை விடியற வரைக்கும் இந்த பனியில தான் நிக்கனுமா..?” என்று பிரவீன் சலிப்புடன் கேட்க,
“நீங்க கிளம்புங்க நான் வரேன்..!” என்று விஜய் சொல்லவும் அவர்கள் கிளம்பியிருந்தனர். விஜய்க்கு நிறைய விஷயங்கள் யோசிக்க வேண்டியிருந்தது. அவர்கள் சென்று வெகு நேரம் கழித்து தான் விஜய் கீழே இறங்கி வந்தான்.
வந்தவன் அறைக்குள் நுழையப் போக, துளசியின் அறையில் அப்போதும் லைட் எறிந்து கொண்டிருந்தது. யோசனையுடன் பார்த்துக் கொண்டே நின்றான்.
“இன்னேர வரைக்கும் என்ன பண்றா..?” என்று யோசிக்க,
“நடந்ததை நினைச்சு நீயே இன்னும் தூங்கலை. அப்பறம் அவளுக்கு மட்டும் எப்படித் தூக்கம் வரும்..?” என்று மனசாட்சி கேட்க,
“கதவும் லாக் பண்ணாம இருக்கு..!” என்ற யோசனையுடன், கதவை லேசாக தள்ளி எட்டிப் பார்த்தான் விஜய்.
அங்கே துளசி, எந்த நிலையில் அறைக்குள் வந்தாளோ அப்படியே உறங்கிப் போயிருந்தாள்.
“லைட்ட கூட ஆப் பண்ணாம தூங்கிட்டு இருக்கா..!” என்று அவன் உள்ளே செல்ல முயற்சி செய்ய,
“இப்ப மட்டும் நீ உள்ள போய், அவ எந்திருச்சா அப்பறம் தெரியும் கச்சேரி.!” என்று ஒரு மனம் அவனை எச்சரித்தது.
நான் லைட்ட மட்டும் தான் ஆப் பண்ண போறேன்..!” என்று பேசிக் கொண்டே உள்ளே சென்றவன், அவள் முகத்தைப் பார்த்து அதிர்ந்து நின்றான். அழுததில் அவள் முகம் முழுவதும் வீங்கி, கன்னங்கள் சிவந்து கிடந்தது. கழுத்தில் அவன் கட்டிய புது மஞ்சள் தாலியைத் தவிர எதுவும் இல்லை.
“எல்லாத்தையும் தான் ஈவ்னிங்கே கழட்டி எறிஞ்சுட்டு வந்துட்டாளே..? இருந்தாலும் உனக்கு இவ்வளவு கோபமும், ரோஷமும் ஆகாது துளசி..! எல்லாம் நல்ல முறையில நடந்திருந்தா, இன்னைக்கு பர்ஸ்ட் நைட். சாயந்தரம் அவ கழட்டி எறிஞ்சதை எல்லாம் நியாயத்துக்கு நான் தான் இன்னைக்கு…” என்று யோசித்துக் கொண்டே போனவன்,
“ச்ச..! வரவர நீ ரொம்ப தப்பா யோசிக்கிற விஜய். அவகேட்ட டிவேர்ஸ்க்கு சரின்னு சொல்லிட்டு.. இப்ப, இப்படி தூங்குற பொண்ணைப் பார்த்து இப்படியெல்லாம் யோசிக்கிறது பெரிய தப்பு. எந்த வேலைக்கு வந்தியோ அதை மட்டும் பார்த்துட்டு கிளம்பிடு விஜய். சோதனை எல்லாம் உனக்குத் தான் வருது..!” என்று மனதிற்குள் பேசியபடி, அவளை ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் பார்த்தான்.
அவன் திரும்பி செல்ல முற்படும் போது தான், அவள் கையில் அணைத்திருந்த அந்த பொருளை பார்த்தான்.
“என்னவா இருக்கும்..? எதுக்கு இதை இப்படிப் பிடிச்சுகிட்டு தூங்குறா..?” என்றவன், அதை பார்க்க முற்பட, அவனுக்குத் தெரியவில்லை. கைகளை விலக்கினால் எங்கே எழுந்து விடுவாளோ என்ற பயம் வேறு அவனுக்கு. சில நிமிடம் யோசித்தவன்,
“எதுவா இருந்தா என்ன..?” என்ற முடிவுக்கு வந்து, ஏசியின் அளவைக் குறைத்து விட்டு, லைட்டை ஆப் செய்துவிட்டு வந்தான். கடைசி வரை அவள் கையில் இருந்த பொருள் அவன் மூளையைக் குடைந்து கொண்டே இருந்தது.
அறைக்குள் வந்தவனுக்கு தூக்கமே வரவில்லை. கண்ணை மூடினால் துளசி தான் வந்து நின்றாள்.
‘என்ன இது இவ்வளவு பிரச்சனையையும் தாண்டி, துளசி முகம் தான் கண்ணுக்கு வருது. அவளைப் பார்த்தா, மனசுக்குள்ள தப்புத் தப்பா தோணுது. நானும் கொஞ்சம் சரியில்லையோ..? எப்படி பார்த்தாலும், இவ முகம் மட்டும் மனசை விட்டு போக மாட்டேங்குதே..? ஆண்டவா, என்னடா விஜய்.. உனக்கு வந்த சோதனை..!” என்று நொந்து கொண்டான் விஜய்.
“விஜய்..!” என்ற சத்தத்தில் கண் விழித்தான் விஜய். யாரோ தன்னை ஓங்கி அழைப்பதைப் போல் பட்டது அவனுக்கு. அதிகாலையில் தான் கொஞ்சம் கண் அசந்திருந்திருந்தான்.
அந்த குரலில் இருந்த பதட்டத்தில் எழுந்து அப்படியே ஓடி வந்தான் விஜய். அனைவரும் ராஜசேகர் அறையின் வாசலில் நிற்க, அதைப் பார்த்த விஜய்க்கு எதுவே சரியில்லை எனப் பட்டது.
“என்னாச்சு பாட்டி..?” என்று கேட்டுக் கொண்டே அவன் வேகமாய் இறங்கி வர, அந்த குரல் துளசியையும் எட்டியிருக்க வேண்டும். அவளும் விஜய்க்கு பின்னாடியே ஓடி வந்தாள்.
“என்னாச்சு..? ஏன் எல்லாரும் ஒரு மாதிரி இருக்கீங்க..?” என்றான்.
“அண்ணனை வந்து பாரு விஜய்..!” என்ற சுந்தரின் குரலில் எதுவோ சரியில்லை எனப்பட்டது.
“என்னாச்சு சித்தப்பா..!” என்றவனின் குரலில் பயமே அதிகம் இருந்தது.
“கேக்குறேனே..? என்னா ஆச்சு..?” என்றவன் ராஜ சேகரின் அருகில் செல்ல, எதுவோ வித்யாசமாய் பட்டது விஜய்க்கு.
“அப்பா ஏன் இப்படி இருக்கார். அவர் தான் தூங்கிட்டு இருக்கார்ல. எதுக்கு இங்க நின்னு கத்திட்டு இருக்கீங்க..?” என்றான் எதுவும் புரியாமல்.
“ஐயோ விஜய்..! அண்ணா, நம்மளை விட்டு போயிட்டார்டா..!” என்ற சுந்தர் கத்தியே விட்டார்.
அவ்வளவுதான். அதைகேட்ட விஜய்யின் நிலை சொல்லும் படியாக இல்லை. சில அதிர்ச்சிகளை பெண்கள் தான் தாங்க மாட்டார்கள் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு விஜய்யோ அவர்களின் நிலையைத் தாண்டி, நிலைகுலைந்து போனான்.
இத்தனை வருடம், தாய்க்கு தாயாய், தந்தையாய் இருந்து தன்னை வளர்த்தவர். இன்னொரு திருமணம் என்ற பேச்சுக்கே இடம் கொடுக்காதவர், எந்த நிலையிலும் மகனை விட்டுக் கொடுக்காமல், அவனுக்காகவே வாழ்ந்தவர், இன்று இல்லை. இரவு அவர் பேசி விட்டு சென்றதுக்கு பிறகு, அவரை யாரும் பார்க்கவில்லை.
தூங்குகிறார் என்று நினைத்திருக்க, அவரின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்திருந்தது. உயிர் பிரியும் நேரத்தில் மனதில் என்ன நினைத்தாரோ..?
“பெத்தவ நானு குத்துக் கல்லு மாதிரி இருக்கேன். என் மகன் போய்ட்டானே..? இன்னும் என்னவெல்லாம் பார்க்க இந்த உசுரு மிச்சம் இருக்கோ..!” என்ற வள்ளிப் பாட்டி அந்த வீடே எதிரொலிக்கும் அளவிற்கு கத்தி அழ ஆரம்பித்தார்.
“அப்பா..பிளீஸ்ப்பா.. எந்திரிங்கப்பா..! உங்கமேல எனக்கு எந்த கோபமும் இல்லப்பா.. எனக்கு உங்களை விட்டா யாருப்பா இருக்கா..பிளீஸ்ப்பா..! நீங்களும் இப்படி அநாதையாக்கிட்டுப் போயிட்டிங்களேப்பா..!” என்று விஜய் கதறிய கதறலில் அனைவரும் ஸ்தம்பித்து நின்று விட்டனர். விஜய் இப்படி அழுது ஒரு நாளும் பார்த்ததில்லை அவர்கள்.
“என்னய்யா.. அநாதை அப்படி இப்படின்னு எல்லாம் பேசுற..?” என்று வள்ளி நெக்குருகிப் போக,
“எல்லாம் என்னால தான் பாட்டி..! கடைசியா பேசுறப்போ கூட, அவர்கிட்ட நான் நல்ல விதமா பேசலையே..? இத்தனை வருஷம் அவர் கூடவே இருந்துட்டு, உயிர் போற அந்த நிமிஷத்துல கூட இல்லாம போயிட்டேன். ரொம்ப சுயநலமா இருந்துட்டேன். உயிர்போற நிமிஷம் அவர் என்னென்ன நினச்சாரோ..? என்னைப் பார்க்கனும்ன்னு நினைச்சிருப்பார் தான பாட்டி..!ஆனா, அதைக் கூட செய்யாத நானெல்லாம் என்ன பிறவி பாட்டி..!” என்று கண்களில் வழிந்த கண்ணீருடன் அவன் பேசும் போதே, அனைவரும் அழுதே விட்டனர்.
வித்யாவிற்கு அண்ணனின் இறப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரோ பிரம்மை பிடித்தவர் போல் அமர்ந்திருக்க, ராஜசேகரின் இழப்பு, அந்த வீட்டில் ஒரு பேரிடியாக தான் விழுந்திருந்தது.
“டேய் விஜய்..! நீயே இப்படி உடைஞ்சு போய்ட்டா எப்படி..?” என்ற பிரவீனை கட்டிக் கொண்டான் விஜய்.
“என்னால முடியலை பிரவீன்..! என்னோட கவலையில தான் அவருக்கு என்னமோ ஆகியிருக்கு.. எல்லாம் என்னால தாண்டா. ஒரு பிள்ளையா அவருக்கு நான் எதுவுமே செய்யலை பிரவீன்.. எனக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது..!” என்றவன் அங்கிருந்த சுவற்றில் ஆங்காரமாய் கைகளை குத்த ஆரம்பித்தான்.
அனைவரும் அவனைப் பிடித்து இழுக்க,
“என்ன பண்ற விஜய்..? அவர் உயிர் போனதுக்கு நீ எப்படி காரணமாவ..? நீ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு..!” என்று பிரவீன் சொல்லிக் கொண்டிருக்க,
துளசியோ, ராஜசேகரின் கால்களை பிடித்து, அவர் காலில் கவிழ்ந்து அழுது கொண்டிருந்தாள்.
“சாரி மாமா…! என்னால தான் எல்லாம்..! என்னை மன்னிச்சிடுங்க மாமா. நான் நேத்து ஏன் அப்படி நடந்துகிட்டேன்னு எனக்கே புரியலை மாமா..!” என்று தனக்குள் புலம்பி அழுது கொண்டிருந்தாள். விஜய்யும், துளசியும் அவரின் சாவுக்கு தாங்கள் தான் காரணம் என்று தனித் தனியாக நினைத்துக் கொண்டனர்.
ராஜ சேகரின் இறப்பு விஷயம் அனைவருக்கும் தெரிவிக்கப் பட, கண்ணாடிப் பேழைக்குள் இருந்த அவரின் உடலைப் பார்க்க, தொழில் முறை நண்பர்கள் அனைவரும் வந்து கொண்டிருந்தனர். வந்த அனைவரும் விஜய்க்கு ஆறுதல் சொல்லி சென்று கொண்டிருக்க, அவனுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய துளசியோ குற்ற உணர்வில் அவன் அருகில் கூட வரவில்லை.
ரத்னவேல் என்னும் கம்பீரமான அந்த மனிதர், இப்போது மிகவும் ஓய்ந்து போனவர் போல் ஆகிவிட்டார். அனைவரும் வாய்விட்டாவது அழுதனர். ஆனால் அவரோ அதையும் செய்யவில்லை. இவர்களின் நிம்மதியை கெடுக்கவென்றே வந்தார் கனகவேல். அவருடன் விமலும் மாலையுடன் வர, அவர்களைப் பார்த்த விஜய்க்கு, வழ்நாளில் இது வரை வந்திடாத அளவிற்கு கோபம் வந்தது.
“ஏய்..! நீங்கள்லாம் வரலைன்னு யார் அழுதது…?” என்று கோபமாய் முன்னேற,
“விஜய்.. வேண்டாம் விடு..! இப்ப எந்த பிரச்சனையும் பண்ண வேண்டாம். அந்த ஆள் பதவிக்காவது மரியாதை குடுத்து தான் ஆகணும்..!” என்று பிரவீன் அவனை படாதபாடு பட்டு அடக்கினான். இருந்தாலும் விஜய்யின் கண்கள் விமலைப் பார்த்த பார்வையில் அப்படி ஒரு சீற்றம்.
“என்ன..? இவன் பார்வை எப்பவுமில்லாம இவ்வளவு கோபமா இருக்கு..?” என்ற விமல் ஆராய்ச்சியில் இறங்கினான்.
கனகவேல் யாரையும் சட்டை செய்யாமல், விமலிடம் இருந்த ரோஜா மாலையை வாங்கி, அந்த பெட்டியின் மேல் போட, சிம்பிக் கொண்டே நின்றிருந்தான் விஜய்.
“நேத்து தான் மகனுக்கு கல்யாணம் முடிஞ்சது. இன்னைக்கு இப்படி ஆகிப்போச்சே..!” என்று வந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பேசிவிட்டு சென்றனர்.
“இவனுக்கு சிக்குறவளுக மட்டும், நல்லா தளதளன்னு தக்காளிப் பழம் மாதிரி தான் இருக்காளுக..!” என்று மனதிற்குள் நினைத்த விமல், துளசியை மேலும் கீழும் பார்த்து வைத்தான். அவனையும், அவன் பார்வை போன இடத்தையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான் விஜய்.
“பிரவீன்..! இன்னும் ஒரு நிமிஷம் அவன் இங்க இருந்தாலும் , என்னை கொலைகாரனா தான் பார்ப்ப..!” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.
“சொன்னா கேளு விஜய்..! நாம இப்ப எதுவும் பேச முடியாது. அமைதியா இரு. எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு அப்பறம் பார்த்துக்கலாம்..!” என்றான் பிரவீன்.
கனகவேலுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.. தான் வந்தது அங்கு யாருக்கும் பிடிக்காது என்று. இருந்தாலும் அவர் வந்தாக வேண்டிய காட்டாயம். பிடிக்குதோ பிடிக்கவில்லையோ, பொறுப்பில் இருந்தால் சில விஷயங்களை செய்து தான் ஆக வேண்டும். அதனால் கடமைக்கு சிறிது நேரம் இருந்தவர் புறப்பட்டு விட்டார். விஜய்யின் கோபத்தை பார்த்த விமலுக்கு எதுவோ இடித்தது. அவனும் யோசித்துக் கொண்டே தான் சென்றான். இத்தனை கலவரத்திலும் வித்யா வாயைத் திறந்து அழவில்லை. அமைதியாகவே அழுது கொண்டிருந்தார். சுரேஷ் அவரை ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தார்.
விஜய் செய்த அனைத்து காரியங்களிலும், ஒரு மனைவியாக உடன் நின்று அனைத்தையும் செய்தாள் துளசி. ஆனால் விஜய்யிடம் ஒரு வார்த்தை அவளும் பேசவில்லை. அவனும் பேச முயற்சி செய்யவில்லை.இந்த மட்டும் அவள் செய்ததையே, கொஞ்சம் நிம்மதியுடன் பார்த்திருந்தனர் அனைவரும்.
காரியங்கள் அனைத்தும் முடிந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தது… வீட்டில் அனைவரும் ஆளுக்கு ஒரு மூலையில் அடைக்கலம் புகுந்திருந்தனர். எல்லாவற்றையும் எப்போதும் எடுத்து சொல்லும் வள்ளிப்பாட்டியே ஓய்ந்து போய் அமர்ந்திருக்க,
“சாப்பிடுங்க அத்தை..! உங்க உடம்புக்கு ஏதாவது ஒண்ணுன்னா என்ன பன்றது..?” என்று நீலா வற்புறுத்திக் கொண்டிருந்தார். இரண்டு நாட்களாக அங்கு யாரும் சரியாக சாப்பிடவில்லை.
“சாப்பிடுங்கம்மா..! அண்ணன் நம்ம கூடத்தான் இருப்பார்ம்மா..! எத்தனை நாளைக்கு இப்படி சாப்பிடாம இருக்க முடியும்.?” என்று சுந்தர் சொல்ல, ஒரு வழியாக அனைவரையும் வற்புறுத்தி சாப்பிட வைத்தனர்.
ஆனால் விஜய் இருக்கும் அறைப் பக்கம் கூட யாராலும் போக முடியவில்லை. பிரவீனும் முயன்று பார்த்து விட்டான். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை.
இறுதியாக துளசியிடம் வந்து நின்றான் பிரவீன்.
“துளசி ப்ளீஸ்..! நீயாவது அவனை சாப்பிட சொல்லேன். இப்படியே இருந்தா அவனுக்கு நல்லதில்லை. நாளுக்கு நாள் அவனுக்கு கோபம் தான் அதிகமா வருது..!” என்றான்.
“நான் எப்படி..?” என்று தயங்கினாள்.
“நீ அவனுக்கு பொண்டாட்டி தான..?” என்றான் பிரவீன்.
“பொண்டாட்டின்னா, புருஷனை சாப்பிட வைக்குறது மட்டும் தான் வேலையா..?” என்றாள் பட்டென்று.
“அம்மா தாயே.. தெரியாம கேட்டுட்டேன். யார் எப்படிப் போனாலும் நீ இப்படியே தேள் கொடுக்கு மாதிரி கொட்டிட்டே இரு. அட்லீஸ்ட் அவனோட கசினா, அவனை கேர் பண்ணலாம் தான..? அது கூட உன்னால முடியலை..! பொண்ணுங்களுக்குன்னு ஒரு தாய்மை உணர்வு இருக்கும் அப்படி இப்படின்னு கேள்விப் பட்டிருக்கேன். அதெல்லாம் சும்மான்னு இப்போதான் பார்க்குறேன்..!” என்றான் கொஞ்சம் வெறுப்பான குரலில்.
“இப்ப என்ன..? அவனை சாப்பிட வைக்கணும். அதுக்கு ஏன் இவ்வளவு பேசுற..? வச்சுட்டு போ..! நான் பார்த்துக்கறேன்..!” என்றாள் எரிச்சலாய்.
“இவ்வளவு கஷ்ட்டப்பட்டு நீ அதை செய்ய வேண்டாம்..!” என்றான்.
“இப்ப என்ன எதிர்பார்க்குற..? இஷ்ட்டம்ன்னா வச்சுட்டுப் போ..! இல்லையா நீயே போய் சாப்பிட சொல்லு..!” என்றாள்.
“உன்னை திருத்தவே முடியாது துளசி..! வச்சிட்டே போறேன்..!” என்று பிரவீன் சாப்பாட்டை அங்கு வைத்து விட்டு செல்ல,
“இதை முன்னாடியே செஞ்சிருக்கலாம். இவ்வளவு சீன் தேவையில்லை. இங்க தான் எல்லாம் தலைகீழா இருக்கு…!” என்று புலம்பியபடியே சென்றாள் துளசி.