அவர்களுக்கு முன் அந்தப் பெருங்கடல் கோட்டை பரந்து விரிய ஆரம்பித்தது. இந்த முறை, அவர்களை வரவேற்க டிராகன்கள் இல்லாமல் இருக்க, நால்வரும் அந்தக் கோட்டையைச் சுற்றிப் பார்த்தனர்.
அப்போது திடீரென்று அந்த இடத்தை அதிர வைக்கும் அளவிற்கு, இரண்டு டிராகன்கள் வேகமாக நீந்தி வர, அவற்றுள் ஒன்றின் மீது ப்ரொமேத்தியஸ் அமர்ந்திருந்தான். தான் அமர்ந்திருந்த வெள்ளை நிற டிராகனிடம், “யாங், வேகமாக செல். இன்று நாம் யின்-ஐ வெற்றி பெற விடக்கூடாது” என்று கூற, தனது நண்பன் கூறுவதை கேட்ட யாங்-கும் தனது வேகத்தைக் கூட்டியது.
யின்-னும் தனது முயற்சியைக் கைவிடாமல் போட்டி போட, வெற்றியாளர் யார் என்று அறியப்போகும் நேரம், அந்த இடத்தில் கண்களைக் கூசச் செய்யும் பேரொளி தோன்றியது. ஓரிரு நொடிகளில் ப்ரொமேத்தியஸின் கண்கள் அந்த ஒளிக்குப் பழகிவிட, அங்கு செலினா தன்னை நோக்கி வருவது தெரிந்தது.
அவரைக் கண்டவுடன், டிராகனை கடலின் தரையில் இறக்கிய ப்ரொமேத்தியஸ், “வாருங்கள், செலினா ! முன்னறிவிப்பின்றி வந்திருக்கிறீர்கள், ஏதாவது பிரச்சனையா ?” என்று நேராக விஷயத்துக்கு வர,
“மிகவும் முக்கியமான விஷயம்தான்” என்றார் செலினா. ப்ரொமேத்தியஸ், அவரை என்னவென்பது போலப் பார்க்க, அவர் அமைதியாக நின்றார்.
அவரின் அமைதியே பெரிய பிரச்சினை உருவாகியுள்ளது என்பதைக் கூற, செலினாவே இவ்வளவு யோசிக்கும் அளவுக்கு என்ன விஷயமாக இருக்கும் என்று யோசித்தவனுக்கு கிடைத்த பதிலில் அதிர்ந்தான்.
ப்ரொமேத்தியஸ், “டைட்டன் பற்றியதா ?” என்று கேட்க, தலையசைத்த செலினா,
“உனக்கு இந்நேரம் டைட்டனைப் பற்றிய நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கும், மேத்தியு. இன்னும் ஒரு வருடத்தில், கன்வர்ஜென்ஸ் வரப்போகின்றது. இந்த நேரத்தில் சீரஸ் பேரரசன் ஆகிவிட்டான். அதே சமயம் டைட்டனின் வாரிசும் திரும்பிவிட்டான்” என்றார்.
அவரது இறுதி வாக்கியத்தில் அதிர்ந்த ப்ரொமேத்தியஸ், “என்ன சொல்கிறீர்கள், செலினா ?” என்று கேட்க,
“ஆமாம். என்னால் டைட்டன் வெலாரிஸ் கோட்டையில் இருப்பதை உணர முடிகின்றது. ஆனால், அவன் யாருடைய ரூபத்தில் இருக்கின்றான் என்று தெரியவில்லை. உருபோரஸ் விழாவில் நிச்சயம் அவன் எழுவர் மலைக்கு அருகில் இருந்தான். கடந்த முறையே, அவனை எதிர்பாராத விதத்தில் தாக்கியதால் மட்டுமே வெற்றி பெற்றோம்.
ஆனால், இந்த முறை, அரசர்கள் அனைவரும் இப்போது தான் பதவியில் அமர்கிறார்கள். அவர்களைவிட பல மடங்கு அனுபவமும் அறிவும் கொண்ட டைட்டனை அவர்கள் எப்படி எதிர்க்கப் போகிறார்கள் ? அவன் வெகு சாதுரியமாகத் தன்னை மறைத்துக் கொண்டு நம்மிடையே இருக்கின்றான். இந்த முறை அவன் ஏதாவது ஒரு பெரிய திட்டம் வைத்திருப்பான்” என்றார்.
அவர் கூறியதை மனதில் ஏற்றிக் கொண்ட ப்ரொமேத்தியஸ், “நாம் ஏன் இப்படிச் செய்யக்கூடாது, செலினா ? உங்களால் சுரைவழி மூலமாக காலப்பயணம் செய்யமுடியும் அல்லவா ? இல்லையென்றால் உங்கள் நினைவுகளைக் கடந்த காலத்துக்கு அனுப்பி, டைட்டனுக்கு வரமே கொடுக்காமல் இருக்கலாம் இல்லையா ?” என்று கேட்டான்.
“இதை நான் முன்பே யோசித்து இருக்கமாட்டேன் என்று நினைக்கிறாயா, மேத்தியு ? உன்னுடைய சிறுவயதில் உனக்கொரு வாக்கு கொடுத்தேன். அது நினைவிருக்கிறதா, மேத்தியு ?” என்று கேட்டவர் அவன் ‘ஆம்’ என்பது போல தலையசைப்பதைக் கண்டவர்,
“உரிய காலம் வரும்போது டைட்டனைப் பற்றி மற்றவர்களுக்கு தெரியாத விஷயங்களை உனக்கு கூறுகிறேன் என்று கூறியிருந்தேன் அல்லவா ? அந்த நேரம் இப்போது வந்துவிட்டது, மேத்தியு. உன்னிடம் நான் இப்போது கூறப் போவதை, நீ யாரிடமும் கூறக் கூடாது” என்று என்று கூறியவர் தொடர்ந்து,
“நீ இப்பொழுது அறியும் டைட்டனும், நான் ஒரு காலத்தில் தோழனாக ஏற்றுக்கொண்ட டைட்டனும் வேறு நபர்கள், அவர்களது குணத்தில், மேத்தியு. அப்போதெல்லாம், அவனது எண்ணங்கள் ஏதாவது புதிதாக ஒரு விஷயத்தை அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதில்தான் இருக்கும். கயா கிரகத்தை மட்டுமல்லாமல், இந்த மொத்த பிரபஞ்சத்தையும் மேம்படுத்த ஆலோசனைகள் கூறுவான்.
நீ கூறிய யோசனையை நான் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே முயற்சி செய்து விட்டேன், மேத்தியு. டைட்டன் சிற்றரசர்களை மட்டும் ஏமாற்றவில்லை, என்னையும் சேர்த்துத் தான் ஏமாற்றினான். ஒருமுறை சுரைவழி உருவாக்குவதைப் பற்றி என்னிடம் கேட்டபோது, அதை பற்றி கூறுவது தவறுதான் என்று தெரிந்தாலும், நான் அதைப்பற்றி கூறியிருக்கிறேன்.
அவனது நினைவுகளை சோல் பாக்ஸிற்கு அனுப்பிய பிறகு, அவனது உடலை நான் பரிசோதித்த போது, எனக்கு அவனுடைய கருவி கிடைத்தது. க்ரோனனுடைய சக்திகளைப் பெருக்கி, என்னுடைய நினைவுகளை நான் அறியாதபோது தூண்டிவிட்டு உண்மையை அறிந்துக் கொண்டிருக்கிறான்.
இதே கருவியைக் கொண்டுதான் அவன் மற்ற சிற்றரசர்களின் சக்திளைப் பெற்றுள்ளான். இந்தக் கருவியைக் கண்டுபிடித்த போதுதான் என்னையும் அவன் ஏமாற்றி இருக்கிறான் என்பதை தெரிந்துக்கொண்டேன்” என்றார்.
அவர் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மிகவும் கடினப்பட்டு வெளியே வந்த ப்ரொமேத்தியஸ், “ஆனால், அதற்கும் சுரைவழியில் பயணம் செய்து நீங்கள் மாற்ற முடியாததற்கும் என்ன சம்பந்தம் ?” என்று கேட்டான்.
“முதலில் டைட்டன் என்னை எதிர்த்த போது, நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்போதிருந்த அரசர்கள் அவனை அடக்கி விடுவார்கள் என்று தான் நினைத்தேன். பின்னர், பிரச்சினையின் தீவிரத்தை அறிந்துக்கொண்டு நான் கயா கிரகத்திற்கு வந்தேன். அப்போது நான் நீ சொன்ன வழியைத் தான் முயற்சி செய்தேன்.
அப்போது தான் எனக்குத் தெரிந்தது, அந்த முதல் வருடத்தில் சிற்றரசர்களிடமிருந்து சக்திகளைப் பறிப்பதோடு மட்டும் அவன் தன் பணியை நிறுத்தவில்லை.
அவன் சுரைவழி மூலம் காலப்பயணம் செய்து கடந்தகாலத்தில் அந்த நிகழ்வு நடப்பதற்கான, அதாவது நான் வரத்தை அளிப்பதற்கான இருந்த அத்தனை கோடி சாத்தியக்கூறுகளையும் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டிருக்கிறான்.
அதனால் நான் காலப்பயணம் செய்து, எத்தனை மாற்றங்களை ஏற்படுத்தினாலும், அதனால் எந்தப் பலனும் கிட்டாது” என்றார் செலினா.
அவர் கூறியதைக் கேட்டு, ப்ரொமேத்தியஸுக்கு இன்னும் எவ்வளவு அதிர்ச்சிகள் தனக்காக காத்திருக்கிறது என்று ஆயாசமாக உணர்ந்தான். இவ்வளவு செயல்களைத் துல்லியமாக திட்டமிட்டுச் செய்பவன், இப்போது வெலாரிஸ் கோட்டையில் இருக்கிறான் என்ற எண்ணமே, அவனை அச்சுறுத்தியது.
பிறகு ப்ரொமேத்தியஸ், “சரி செலினா, நிச்சயம் டைட்டன் ஏதாவது பெரிய திட்டத்தோடு தயாராக இருப்பான். இன்னும் ஒரு வருடத்தில் அவன் யார் என்பதைக் கண்டுபிடித்தால் மட்டும் போதாது. அவனை அழிப்பதற்கான வழியையும் கண்டுபிடிக்க வேண்டும்” என்றான்.
அவன் கூறியதைப் பொறுமையாக கேட்ட செலினா, “நீ எப்போதாவது உன்னுடைய பிரச்சனையை வேறு விதத்தில் யோசித்து இருக்கிறாயா, மேத்தியு ? அதாவது உண்மையான டைட்டன் வெளியில் சுற்றும் போது, அனைவரின் சந்தேகப் பார்வையும் உன்மீது மட்டும் எப்படி விழுகிறது ?
ஓரிரு நிகழ்வுகள் என்றாலும் பரவாயில்லை. எப்படி இத்தனை வருடங்கள் பல நற்காரியங்கள் செய்திருந்தாலும், உன்மீது மறைமுகமான பாசம் வைத்திருந்த தந்தை உட்பட அனைவருக்கும் உன்மேல் சந்தேகங்கள் மட்டும் இருக்கின்றன. அன்று அந்தப் பெண்ணின் உடல் உன்னுடைய அறையில் எப்படி வந்திருக்கும் என்று நினைக்கின்றாய் ?” என்று கேட்டார்.
இதுவரை தன் மீது உள்ள வெறுப்பால் தான் அனைவரும் அப்படி நடந்து கொள்கின்றனர் என்றும் அந்தப் பெண்ணின் உடலைக் கூட வல்கன் தான் வைத்திருப்பான் என்று எண்ணியிருந்த ப்ரொமேத்தியஸ், தன்னை அறியாமலேயே, “டைட்டன்” என்றான்.
செலினா, “ஆமாம், மேத்தியு. உண்மையான டைட்டன் சுதந்திரமாக தன் வேலையில் ஈடுபட வேண்டுமென்றால், வேறு யாரின் மீதாவது அந்தப் பழி இருக்க வேண்டும். இந்த முறை டைட்டனின் பகடைக்காய் நீதான், மேத்தியு. அதனால் அவனை அவ்வாறே நம்ப வைத்து நாம் இந்த முறை வெற்றி பெற வேண்டும்” என்றார்.
“இப்போது நாம் என்ன செய்ய வேண்டும், செலினா ?” என்று குரலில் தீவிரத்துடன் கேட்டான் ப்ரொமேத்தியஸ்.
செலினா, “இப்போது நமக்கு வேகத்தை விட விவேகம் தான் முக்கியம், மேத்தியு. நீ முதலில் இந்தச் சிறையிலிருந்து தப்பிக்க வேண்டும். அதற்கு சீரஸ் ஆத்திரமடைவது போல நாம் காட்ட வேண்டும். அப்போதுதான் டைட்டன், உங்கள் இருவருக்குமிடையே ஏற்கனவே இருந்த விரிசல் இன்னும் அதிகமாகிவிட்டது என்று நம்புவான்”
“நீயும் டைட்டனை எதிர்ப்பதற்கு உன்னுடைய ஆராய்ச்சியைத் தாராளமாக நடத்தலாம். அதற்குப் பிறகு அவன் தனது திட்டத்தை செயல்படுத்தும் போது, டைட்டன் யார் என்று கண்டுபிடித்து விடலாம்” என்றார்.
அவர் கூறிய திட்டத்திற்கு தனது சம்மதத்தைத் தெரிவித்தவன், “செலினா, நீங்கள் ஒரு விஷயத்தைக் கூறவில்லையே ? டைட்டனுடைய வாரிசு எப்படி இப்போது உயிரோடு வர முடியும் ? சோல் பாக்ஸிற்கு அவனது நினைவுகளை அனுப்பிய பின்னர், அவன் எப்படி திரும்ப வந்திருக்க முடியும் ?” என்று கேட்டான் ப்ரொமேத்தியஸ்.
செலினா புன்முறுவலுடன், “எனக்கும் அதற்கான விடை இதுவரை தெரியவில்லை, மேத்தியு. ஆனால், டைட்டன் சம்பந்தப்பட்ட விஷயம் என்றால், ‘சாத்தியமில்லை’ என்ற வார்த்தை இடம்பெறாது” என்றார்.
பிறகு அந்தக் காட்சியில் இருந்த பெருங்கடல் கோட்டை நிலத்துக்குள் புதைந்து, தண்ணீர் வற்ற ஆரம்பித்தது.
******
அந்தக் காடு எப்போதும் போல் பச்சை பசேலென இருக்கும் மரங்களால் உருவாகி இருந்தது. அதிலிருந்து ஒரு பெரிய மரத்தை வீடாக மாற்றி இருந்தான் ப்ரொமேத்தியஸ். அவன் தோற்றத்தில் சிறிது மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், அவன் முகத்திலிருந்த தேஜஸ் சிறிதும் குறையவில்லை.
ப்ரொமேத்தியஸ் தனது வேலையில் மூழ்கியிருக்க, தான் அமைத்திருந்த பாதுகாப்பு கவசத்தில் இடர்பாடு ஏற்பட்டதாக அருகிலிருந்த கருவியில் செய்தி வர, அவனது நெற்றியில் முடிச்சு விழுந்தது. தன்னைச் சுற்றி சருகுகளை மிதிக்கும் சத்தத்தைக் கேட்டவுடன், வீரர்கள் வருகின்றனரோ என்று எண்ணி, சத்தம் வந்த திசையில் தனது ஆயுதத்தைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டு காத்திருக்க, அங்கே சீரஸும் மினர்வாவும் நின்றிருந்தனர். மினர்வாவுக்குள் கயா கிரகத்தின் எதிர்கால பேரரசர் துயில் கொண்டிருந்தார்.
அவர்கள் இருவரையும் கண்டவுடன் ப்ரொமேத்தியஸ், தனது ஆயுதத்தைக் கீழே வைத்தான். அதைக் கண்ட சீரஸ், “என்ன மேத்தியு, சிறிது அஜாக்கிரதையாக இருந்திருந்தால் எங்கள் இருவரையும் தாக்கி இருப்பாய் போலவே ?” என்று புன்னகையுடன் கேட்க,
“பேரரசர் சீரஸையும், பேரரசி மினர்வாவையும் தாக்கும் அளவிற்கு எனக்குச் சக்திகள் இருக்குமா என்ன ?” என்று கம்பீரமாக கேட்டவன்,
“அப்படி உங்களைத் தாக்கும் நிலை ஏற்பட்டால், அதற்குப் பதிலாக என் உயிரைக் கூட தியாகம் செய்வேன்” என்றவனது குரல் கரகரத்து ஒலித்தது.
அதைக் கேட்டு சீரஸ் பதில் கூறுவதற்கு முன், மினர்வா, “வாயை மூடு, மேத்தியு ! இப்படியெல்லாம் தவறாக பேசாதே ! ஏற்கனவே உன் மீது கடும் கோபத்தில் இருக்கிறேன் நான். நானும் சீரஸும் திருமணம் செய்து கொண்டபோது உன்னைப் பார்த்தது. அதற்குப் பிறகு உன்னை இப்போது தான் பார்க்கிறேன். சீக்கிரம் இந்த வனவாசத்தை எல்லாம் முடித்துக் கொண்டு, கோட்டைக்கு வா. உனக்காக பல வேலைகள் காத்துக்கொண்டு இருக்கின்றன” என்றாள்.
ப்ரொமேத்தியஸ், சிரித்து கொண்டே, “கவலைப்படாதே, மினர்வா ! இன்னும் சில நாட்களில் கன்வர்ஜென்ஸ் வந்துவிடும். அதற்குப் பிறகு நாம் எப்போதும் ஒன்றாகவே இருப்போம். அதற்கு முன் உனக்குத் துணையாக, குட்டி மினர்வாவும் வந்துவிடுவாள்” என்றான்.
சீரஸ் இடைமறித்து, “ஏன் அவன் குட்டி சீரஸா இருக்கக் கூடாதா ?” என்று கிண்டல் தொனியில் கேட்க,
“இல்லை கண்டிப்பாகப் பெண் குழந்தைதான் பிறக்கும், ஏன் இதுவரை கயா கிரகத்தை பேரரசிகள் ஆண்டதில்லையா என்ன ? இன்னும் சொல்லப்போனால் நான் பெயர் கூட வைத்து விட்டேன். அவள் பெயர் க்ரிசான்டா. நான் பிறந்ததிலிருந்து என்னுடைய தாயைப் பார்த்தது இல்லை. நிச்சயம் அவர்தான் உனக்கு மகளாக வருவார்” என்றான் ப்ரொமேத்தியஸ்.
பிறகு சிறிது நேரம் அவர்கள் மூவரும் மகிழ்வுடன் பேசிக்கொண்டனர். அதுதான் அவர்கள் மூவரும் கடைசியாக மகிழ்வுடன் இருக்கும் தருணம் என்று அவர்களுக்குத் தெரியவில்லை.
பின்னர், சீரஸ் ப்ரொமேத்தியஸைத் தனியாக அழைத்துச் சென்று, “மேத்தியு ! டைட்டன் எந்தத் திட்டமும் தீட்டியது போல் தெரியவில்லை. அப்படியே அவன் தீட்டியிருந்தாலும், அதை மிகவும் ரகசியமாக பாதுகாத்து வருகிறான் அவன். இனி நமக்கு நாட்களும் குறைவாகத் தான் இருக்கிறது. நாம் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும்.
அதனால், அவனை வெளிக்கொணர நான் உனக்கு மரண தண்டனை அளிக்க உத்தரவிடப் போகிறேன். அதற்கு நீ வெகுண்டெழுவது போல நடிக்க வேண்டும். அப்போது உனக்கு டைட்டன் நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவ வர வாய்ப்பிருக்கிறது. அவ்வளவு எளிதில் சிக்க வாய்ப்பில்லை. ஆனால், முயற்சி செய்துதான் பார்ப்போமே” என்றான்.
பின்னர் ப்ரொமேத்தியஸ், கன்வெர்ஜென்ஸின் பொழுது பயன்படுத்த தான் உருவாக்கிய ஆயுதங்களைக் காட்டினான். சீரஸும், அதை மறைமுகமாக உற்பத்தி செய்ய ஏற்பாடு செய்கிறேன் என்றார்.
மேலும், சிறிது நேரம் நடக்கப் போகும் பெரும்போரினைப் பற்றி பேசியவர்கள், இனிமேல், அடுத்த முறை எப்போது பார்ப்போம் என்ற வருத்தத்துடன் விடைபெற்றனர் சீரஸும் மினர்வாவும்.
ஆனால், அவர்களுக்கு தெரியாத விஷயம் என்னவென்றால், டைட்டனின் வாரிசு என்று அவர்களால் அழைக்கப்பட்ட உருவம், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு போடும் திட்டத்தில், தாங்கள் அனைவரும் கைப்பொம்மைகளே என்பதுதான்.
அந்தக் காடு முழுவதையும் அக்னிதேவன் தன் சக்திக்கு இரையாக்க, அவர்களைச் சுற்று எறிந்த தீயின் ஜுவாலைகள், அவர்களை எதுவும் செய்யாமல், சுற்றியிருந்த மரங்களைக் கபளீகரம் செய்துவிட்டு, அடுத்தக் காட்சியைப் பெற்றெடுத்தன.
******
மறுபடியும் அவர்கள் நால்வரும், எழுவர் மலைக்கு முன் நின்றனர். மெல்ல நால்வரும் அதற்குள்ளே செல்ல, ப்ரொமேத்தியஸின் கோபமான குரல் அவர்களை வரவேற்றது.
அந்த நினைவுகள் அவர்களை வேகமாக உள்ளே இழுக்க, அங்கு ப்ரொமேத்தியஸ் கோபத்தின் உச்சியில் நின்றிருந்தான். அவனை எப்படியாவது சம்மதிக்க வைத்து விட வேண்டும் என்ற பிடிவாதத்துடன் சீரஸ் நிற்க, அவர்கள் இருவரையும் கட்டுப்படுத்த முடியாமல் செலினா நின்றிருந்தார்.
ப்ரொமேத்தியஸ், “என்ன ஆனாலும் சரி, இந்த முறை கன்வர்ஜென்ஸின் பொழுது நாம் டைட்டனை எதிர்த்து சண்டை போடுவோம். உன்னையும் மினர்வாவையும் கொன்றால் தான் டைட்டனைக் கண்டுபிடிக்க முடியும் என்றால், அப்படி ஒரு வாய்ப்பே எனக்கு வேண்டாம். அதற்குப் பிறகு மட்டும் டைட்டன் தன் சுயரூபத்தைக் காட்டுவான் என்பது என்ன நிச்சயம் ?” என்று கேட்டான்.
சீரஸ், “மேத்தியு, நீ ஒரு அன்புள்ள சகோதரனாக யோசிக்கிறாய். ஆனால், கயா கிரக பேரரசனாக எனக்கு, அனைத்து உயிரினங்களும் உறவினர்கள் தான். டைட்டன் இன்னும் தன் உண்மையான முகத்தைக் காட்டவில்லை என்றால், அவனது திட்டத்தைப் பற்றி யோசித்துப் பார். நம் முன்னோர்களும் இவ்வாறுதான் அவனைக் குறைவாக மதிப்பிட்டு தோற்றனர். கயா கிரகத்தில் இருக்கும் வீரர்கள் அனைவரையும் சேர்த்தாலும், இது கடினமான காரியம்தான்” என்றார்.
ப்ரொமேத்தியஸ், “என்னுடைய ஆயுதங்கள் அனைத்தையும் யுத்தத்தில் பயன்படுத்துவோம். நீயும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈரின் கல்லை எடுத்து உன்னோடு பிணைத்துக்கொள். நமக்கு ஆயிரம் வழிகள் இருக்கிறது. வேறு ஏதாவது வழி இருக்கவே இருக்காதா ?” என்று சோர்ந்தக் குரலில் கேட்டான்.
அவன் காதில் சற்றுமுன் சீரஸ் கூறிய திட்டம் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது.
<<<
“கன்வர்ஜென்ஸ் ஆரம்பித்தவுடன், நானும் மினர்வாவும் கோட்டையை விட்டுத் தப்பிச் செல்வோம். அதேநேரம், நீ கயா கிரக பேரரசனாகப் பொறுப்பேற்க வேண்டும். நீ எங்களைத் தேடி வருவதற்குள் பாதி நேரம் முடிந்து விடும். செலினாவால் கன்வெர்ஜன்ஸை நடக்கவிடாமல் ஆரம்பத்திலேயே தன்னைச் சிறைப்படுத்திக் கொள்ள முடியும்”
“ஆனால், அவர் அவ்வாறு செய்தால், அடுத்த இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு நம் மக்களுக்கு ஆற்றல் கிடைக்காமல் சீக்கிரம் இறந்துவிடுவர். அதனால், எங்களைக் கண்டுபிடிக்கும் வரை, அவர் மக்களுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுத்துக் கொண்டிருப்பார்”
“அதற்குப் பிறகு நீ என்னையும் மினர்வாவையும் கொன்று விட்டால், டைட்டனுக்கு பேரதிர்ச்சி ஏற்படும். அவன் அடுத்த திட்டம் தீட்டுவதற்குள், செலினா வழக்கம் போல சோல் பாக்ஸின் சாவியை மறைத்து வைத்து விடுவார். அது எந்த இடமென்று நாம் யாருக்கும் தெரியாமல் இருப்பது தான் நல்லது. பிறகு, அவரும் தன்னை சோல் பாக்ஸுக்குள் அடைத்துக் கொண்டு கன்வர்ஜென்ஸை நிறுத்தி விடுவார்”
“டைட்டனால் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. அதனால், அவன் பேரரசராகி தனது வேலைகளில் இடர்பாடு ஏற்படுவதை விரும்ப மாட்டான். உன்னை வைத்தே தனது காரியத்தைச் சாதித்துக் கொள்ள நினைப்பான். அடுத்த இருபத்தி நான்கு வருடங்களில், நீ எப்படியாவது டைட்டனைக் கண்டுபிடித்து விடவேண்டும்” என்றார்.
>>>
ப்ரொமேத்தியஸ் கேட்ட பிறகு, இதுவரை அமைதியாக இருந்த செலினா பெருமூச்சு விட்டுக்கொண்டு, “மேத்தியு ! ஈரின் கல்லை இப்போது கொண்டு வருவது எந்தப் பயனும் கொடுக்கப் போவதில்லை. மாறாக, அது டைட்டனக்கு கிடைத்துவிட்டால், நிச்சயம் அவனை என்னால் கூட கட்டுப்படுத்த முடியாது. அதுமட்டுமில்லாமல், நானும் சீரஸும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த யோசிப்பதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது” என்றார்.
அவன் மற்ற இருவரையும் குழப்பத்தோடு பார்க்க, செலினா, “டைட்டனின் வாசிசு நிச்சயம் உருபோரஸ் சடங்கில் பங்கு கொண்டவராக இருக்க வேண்டும். என்னையும் சீரஸையும் தவிர்த்து பார்த்தால், மீதமிருப்பது ஏழு சிற்றரசர்களும் பொசய்டனும் தான். டைட்டன் மீண்டும் வந்திருக்கிறான் என்பதை நான் அப்போதுதான் உணர்ந்து கொண்டேன்”
“அப்படியென்றால், ஆற்றல் மாற்றும் போதுதான் நான் அவனைக் கண்டுகொண்டிருக்க வேண்டும். இப்போது சொல், மேத்தியு ! நாம் எப்படி செயல்பட்டாலும், அது அவனுக்கு தெரியாமல் இருக்காது. கடந்த முறை போலவே, பல வருடங்கள் நம்முடன் இருந்து நம்மைக் கண்காணித்திருக்கிறான். இப்போது, நமக்கு இதை விட்டால், வேறு வழியில்லை” என்றார்.
ப்ரொமேத்தியஸ் அதிர்ச்சியடைந்தாலும், இன்னும் பிடிவாதத்துடன் இருக்க, செலினா, “ஒரு வெற்றிக்காக நாம் அனைவரும் சில தியாகங்கள் செய்துதான் ஆகவேண்டும், மேத்தியு. அன்று எனக்கு முன்பு இரண்டு வாய்ப்புகள் இருந்தன. அதை நான் சரியாக பயன்படுத்தாததால் தான், இவ்வளவு பிரச்சினையும். இப்போது உனக்கு முன்பும் இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. சரியாக தேர்வு செய். இப்போது நீ சுயநலமாக யோசித்தால், இந்த அண்ட சராசரமே அழிந்துவிடும், நாமும் சேர்ந்து தான்” என்றார்.
பல மணி பேச்சுவார்த்தை அவனுக்கு ஆயாசத்தைக் கொடுத்தது. இறுதியாக ப்ரொமேத்தியஸ், “சரி, நான் ஒத்துக் கொள்கிறேன்” என்று வேண்டா வெறுப்பாகக் கூறியவன்,
“மினர்வாவின் குழந்தையை மட்டுமாவது வேறு ஒரு கிரகத்துக்கு அனுப்பி விடுங்கள். இந்தப் பிரச்சினை அனைத்தும் முடிந்த பிறகு நான் அந்தக் குழந்தையைப் பார்த்துக் கொள்கிறேன். கயா கிரகத்தின் தற்போதைய பேரரசரைக் காப்பாற்றும் உரிமை தான் எனக்கு கிடைக்கவில்லை. வருங்கால பேரரசரையாவது பாதுகாக்கிறேன்” என்றான்.
சீரஸும் தனது வேதனையை மறைத்துக் கொண்டு, ‘சரி’ என்பது போல தலையசைத்தான்.
செலினா, “நிச்சயம் அந்தக் குழந்தையைக் காப்பாற்றி உரிய நேரத்தில் கயா கிரக நினைவுகளைக் கொடுப்பேன் என்று உனக்கு வாக்களிக்கிறேன், மேத்தியு !” என்றார்.
ப்ரொமேத்தியஸ், “பிறகு, இங்கு நடந்த எதுவும் மினர்வாவுக்கு தெரியக்கூடாது. தெரிந்தால், அவளை என்னால் கண்ணெடுத்து பார்க்க முடியாது. அது அவளது குழந்தைக்கும் ஆபத்துதான்” என்றான்.
சீரஸ், “மேத்தியு, அப்படிச் செய்தால் மினர்வா உன்னைத் தவறாக நினைத்துக் கொள்வாளே” என்று கூற,
ப்ரொமேத்தியஸ், “இந்தக் கிரகமே இனி வரும் காலங்களில், என்னை அப்படித்தானே பார்க்கப் போகிறது, பரவாயில்லை” என்று கோபமாக கூறினான்.
செலினா, அவனைத் தடுத்து ஒரு பழைய பதப்படுத்தப்பட்ட தோலை அவனிடம் கொடுத்தவர், “ஈரின் கல்லுக்கு நீ தகுதியானவனாக இருந்தால், இது உனக்கு வழிகாட்டும்” என்று கூறினார்.
அவனும் அதைப் பெற்றுக்கொண்டு, அமைதியாக வெளியேறினான்.
அவன் மனதில், மினர்வாவைக் கடந்த முறை சந்தித்த போது பேசிய உரையாடல்கள் நினைவுக்கு வந்தன. விரக்தியாக செல்லும் அவனை, தங்களது கையாலாகாத்தனதுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் சீரஸும், செலினாவும்.
மனம் மயங்கும் ஒருவித இசை ஒலிக்கப்பட, அவர்கள் அனைவரும் மகுடிக்கு மயங்கும் பாம்பினைப் போல, மெய்மறந்து கேட்டுக் கொண்டிருக்க, அந்த இசை நிறுத்தப்பட்டதும் நால்வரும் கண்திறந்து பார்க்க, தங்கள் முன்னால் வேறொரு காட்சி தோன்றியிருப்பது தெரிந்தது.
******
கன்வர்ஜென்ஸ் தொடங்கி சில மணிநேரங்கள் முடிந்துவிட்டன. இன்னும் டைட்டன் வெளிப்படவில்லை. ப்ரொமேத்தியஸுக்கு, உண்மையில் டைட்டனின் வாரிசு திரும்பி வந்தானா இல்லையா என்ற சந்தேகம் தோன்றியது. செலினாவையும் சந்தேகிக்க முடியவில்லை. இருப்பினும் டைட்டனைப் பற்றி அறிந்தவனுக்கு எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
இறுதியில், முந்தைய நாள் போட்ட திட்டத்தின்படி, நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதைக் கண்டவன், அவர்கள் மறைந்திருக்கும் மலையை நோக்கி கனத்த இதயத்துடன் செல்லத் தொடங்கினான்.
அவன் தனது வாழ்நாளில் வெறுக்க நினைக்கும் அத்தனை நிகழ்வுகளும் அதன்பின்னர் வரிசையாக நடக்க, கடைசியில், எந்த நிகழ்வு நடந்தால், தனது உயிரையும் தியாகம் செய்து காப்பாற்றுவேன் என்று கூறியிருந்தானோ, அந்த நிகழ்வுக்குத் தானே காரணமாக போகிறோம் என்பதை நினைத்தவனுக்கு சொல்லிலடங்கா துயரம் ஏற்பட்டது.
அதுவும், தான் தாக்கப் போகும் முன் மினர்வாவின் கண்களில் தெரிந்த உணர்ச்சி கலவை… அதிர்ச்சி… பயம்… நம்பிக்கையைப் பொய்த்துவிட்டாயே… அன்றே உயிருடன் மரித்துவிட்டான் ப்ரொமேத்தியஸ்.
அந்த நிகழ்வுக்குப் பிறகு இருந்த ப்ரொமேத்தியஸ், டைட்டனை வேட்டையாடும் வேடனாக மாறினான்.
******
ப்ரொமேத்தியஸ், பேரரசருக்கான அறையில் தன்னெதிரே இருந்த பிரம்ம கிரந்தத்தில் தனது நினைவுகளைச் சேமித்துவிட்டு, தானும், சீரஸும், மினர்வாவும் ஒன்றாக கழித்த பொழுதுகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். இன்றோடு கன்வர்ஜன்ஸ் முடிந்து இரண்டு நாட்கள் முடிந்துவிட்டன.
சிறிது நேரம் கழித்து, அதுவும் அவன் வருத்தத்தைப் போக்காமல், அதிகமாக்கிக் கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில், அதையும் மூடிவைத்து விட்டு அமர்ந்தான். பிறகு, தனக்கு முன்னிருக்கும் பிரச்சினையைக் கவனித்தான். சிற்றரசர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து, தனக்கெதிராக படை திரட்டுகின்றனர் என்ற செய்தி அவனை வந்தடைந்திருந்தது.
அவனுக்கு அவர்களைச் சமாளிப்பது எல்லாம் பெரிய விஷயமாக தெரியவில்லை. எட்டு பேருக்குள் ஒருவர்தான் டைட்டன் என்று தெரிந்துவிட்டது. ஆனால், இதில் யாரை நம்புவது, யாரைச் சந்தேகிப்பது என்ற குழப்பத்தில் மூழ்கியிருந்தான்.
பல்வேறு திட்டங்களை யோசித்து, அதில் உள்ள குறைகளை சிந்தித்து, பின்னர் கடைசியாக, ஒரு திட்டத்தில் நின்றான் ப்ரொமேத்தியஸ். கயா கிரகத்தில் உள்ள எட்டு மலைகளைத் தேர்ந்தெடுத்தான்.
அவனது கணிப்பின்படி, டைட்டன் இப்போது நிச்சயம் சோல் பாக்ஸின் சாவியைத் தேடிக் கொண்டிருப்பான். அதை இரையாக வைத்துதான் அவனுக்கு தூண்டில் போட வேண்டும் என்று நினைத்தான்.
அதனால், எட்டு பேரிடமும் தனித்தனியாக, இல்லாத சோல் பாக்ஸின் சாவியைக் குறிப்பிட்ட மலையில் இருப்பதாக செய்தி சென்று சேருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.முக்கியமான விஷயம் எட்டு பேரிடமும் வெவ்வேறு மலைகளைக் கூறப்போவது தான்.
டைட்டன் அல்லாத நபர்கள், அதைக் காக்க நினைத்து வெளியில் சொல்ல மாட்டார்கள். அதேசமயம், அதை இப்போது எடுத்து பாதுகாப்பதைக் காட்டிலும், போருக்கு தயாராகும் முக்கியமான வேலை இருப்பதால், அதைத் தேடி வரமாட்டார்கள்.
உண்மையான டைட்டன், நிச்சயம் அதை எடுக்க வருவான். எட்டு மலைகளிலும் கண்காணிப்புக் கருவியைப் பொருத்தியவன், அவற்றை பிரம்ம கிரந்தத்துடன் இணைத்தான். இப்போது இருக்கும் கடினமான காரியம், எட்டு பேரிடமும் அவர்கள் சந்தேகிக்காதவாறு, அந்தச் செய்தியை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதுதான்.
இவ்வாறு ஒரு முடிவுக்கு வந்தவன் சுயபச்சாதாபத்தில் நேரத்தைக் கழிக்க விரும்பாமல், அடுத்தக் கட்ட நடவடிக்கைகளைப் பார்க்க போனான்.
******
தனது திட்டத்திற்காக கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் செலவழித்தான் ப்ரொமேத்தியஸ். மிகவும் கவனமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்திருந்தான் அவன். பிரம்ம கிரந்தத்தை விட்டு நொடி நேரம் கூட நகராமல், அதையே பார்த்துக் கொண்டிருந்தான். அதேசமயம் படைத்தலைவர்களுக்கு அவ்வப்போது கட்டளையிட்டுக் கொண்டும் இருந்தான்.
இறுதியில், அவன் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த தருணமும் வந்தது. ஆனால், அவன் பிரம்ம கிரந்தத்தில் கண்ட காட்சியைப் பார்த்து அதிர்ந்துவிட்டான். எட்டு பேரில் தனக்கு நம்பிக்கையான ஒருவன் என்று நினைத்திருந்த நபரே டைட்டனாக இருக்க, சில நொடிகள் அவனுக்கு எதுவுமே புரியவில்லை.
பிரம்ம கிரந்தத்தில், பொசய்டன் தான் தேடியது கிடைக்காது போனதால் அந்த மலையை விட்டு கோபத்துடன் திரும்பிச் சென்றுக் கொண்டிருக்க, அவன் மனதில் மற்றொரு சந்தேகமும் உதித்தது. ஒருவேளை பொசய்டன், தன்னிடமிருந்து அதைக் காப்பாற்ற தேடிப் போயிருக்கலாம் அல்லவா என்று தோன்ற, மற்ற சிற்றரசர்களைச் சில நாட்கள் கவனித்தான்.
அவர்கள் பேருக்கு தயாராவதைத் தவிர மற்றெதிலும் ஈடுபாடற்று இருக்க, இறுதியில் பொசய்டன் தான் டைட்டன் என்ற முடிவுக்கு வந்தான் ப்ரொமேத்தியஸ்.
அவனது மனதில் ஒவ்வொரு நிகழ்வாக தோன்றியது. வாலிப வயதில் தன்னை டைட்டனின் அறைக்குச் செல்ல முடியுமா என்று சவால் விட்டது, டைட்டனுடைய ஆராய்ச்சிகளில் தன்னுடன் இருந்து உதவி செய்தது, தன்னிடம் நெருங்கிப் பழகியது, தனது அறைக்கு ஒரு பெண்ணின் உடலைத் தான் சுமந்து வந்ததாக தலைமை மந்திரியிடம் கூறப்பட்டதாக அவர் கூறியது, கயா கிரகத்தின் மொத்த வரலாற்றையும் தெரிந்துக் கொண்டது…
இப்படியான பல விஷயங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் மற்றொரு பக்கத்தைக் கண்டவன் தன் இதயத்தில் யாரோ கத்தியை சொருகி திருகுவதைப் போல உணர்ந்தான்.
ப்ரொமேத்தியஸ், தனது அறையில் கோபமாக நடந்து கொண்டிருந்தான். அவன் மனதில், “பொசய்டன், நீ தான் டைட்டனா ? உன்னை என் தோழனாக அல்லவா நினைத்திருந்தேன். ஆனால், நீ உன்னுடைய சதி திட்டத்தால் என்னுடைய முழு குடும்பத்தையும் என்னை வைத்தே அழித்து விட்டாய் அல்லவா ? உன்னை உன் வழியிலேயே வந்து வெற்றி பெறுகிறேன். உன்னைப் பழிவாங்காமல் விடமாட்டேன்” என்று சூளுரைத்துக் கொண்டான்.
அந்தக் காட்சி மெல்ல கலைய… மீண்டும் வேறு காட்சிகள் தோன்றத் தொடங்கின.
******
அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளில் ப்ரொமேத்தியஸின் நாட்கள் பறந்துச் சென்றன.
ப்ரொமேத்தியஸ், பெசய்டனை, ‘அவன் தன்னைக் கட்டுப்படுத்துகிறான்’ என்பதை நம்ப வைப்பதற்கும், அவனால் மற்ற சிற்றரசர்கள் பாதிக்கப் படாமல் இருப்பதற்கும், அவர்கள் அனைவரையும் போரில் வென்று பெருங்கடல் சிறையில் அடைத்தான்.
போரில் சில சிற்றரசர்களின் வாரிசுகள் இறந்ததைத் தடுக்க முடியாவிட்டாலும், அக்கிலஸையும், லூனாவையும் மட்டுமாவது மிகவும் முயற்சி செய்து தப்பிக்க வைத்தான். அவன் வழியில் தான் செல்வதாகப் போக்கு காட்டி, பொசய்டனைத் தன் வலையில் விழ வைத்தான் ப்ரொமேத்தியஸ்.
எவ்வளவு முயன்றும் அந்த சோல் பாக்ஸின் சாவி எங்கு இருக்கிறது என்பதை பொசய்டனுக்கு அறிய முடியவில்லை. கயா கிரக மக்களுக்கும், சிற்றரசர்களுக்கும் துரோகம் செய்த பொசய்டன், தியாகியானான்; தியாகம் செய்த ப்ரொமேத்தியஸ், துரோகியானான்.
இதற்கிடையில் ப்ரொமேத்தியஸிற்கு, பொசய்டனை அழிக்க மற்றொரு வழி தோன்றியது. அது தான் ஈரின் கல். அடுத்த முறை கன்வர்ஜென்ஸ் வருவதற்குள், எப்படியாவது அதை எடுத்துவிட்டால் பொசய்டனை அழிப்பதற்கு பயன்படும் என்று நினைத்தவன் அதற்கான முயற்சியில் ஈடுபட்டான்.
செலினா தன்னைக் கடைசியாக சந்தித்த போது, அவர் கொடுத்த பார்ச்மென்டில் குறிப்பிட்டிருந்த சவால்களை ஒவ்வொன்றாக வென்றான். அனைத்து சிற்றரசர்களின் கட்டங்களையும் தாண்டி, இறுதியில் முதல் பேரரசர் அகஸ்டஸையும் வெற்றி பெற்று ஈரின் கல்லைப் பெற்றான்.
அதைக் கண்டு பிடித்துவிட்டு, அவன் ஓய்வாக கயா கிரகத்தின் சிம்மாசனத்தில் அமர்வதற்கு ஓராண்டு காலம் ஓடிவிட்டது. பின்னர், மக்கள் தங்கள் ஆற்றல்களை அடுத்த கன்வர்ஜன்ஸ் வரை சேமித்து வைப்பதற்கு, பல்வேறு சட்டங்களை விதித்தான், அவர்களது எதிர்ப்பையும் மீறி. ஏற்கனவே, மக்கள் மனதில் இருந்த வெறுப்பு இதனால் மேலும் தூண்டிவிடப்பட்டது.
இனி தான் செய்வதற்கு என்ன இருக்கிறது என்று அவனது மனம் விரக்தியாக உணர்ந்தபோது, அவன் மனதில் தோன்றிய ஒரே பெயர், ‘க்ரிசான்டா’.
சீரஸின் குழந்தை அந்தத் தாக்குதலிலிருந்து தப்பி இருக்குமா ? எந்தக் கிரகத்திற்குச் சென்று சேர்ந்து இருக்கும் ? இப்போது எப்படி இருக்கும் ?” போன்ற கேள்விகள் அவன் மனதை வாட்டினாலும், இந்த மொத்த பிரபஞ்சத்திலும் எப்படி தேடுவது என்று அவனுக்குப் புரியவில்லை.
இருப்பினும் விடாமுயற்சியுடன் தேடியதில் ஐந்து ஆண்டுகளில் அந்தக் குழந்தையைக் கண்டுபிடித்தான் அவன். அந்தக் காட்சி அவன் கண்களை விட்டு மறையவே இல்லை. தான் எதிர்ப்பார்த்தவாறு, அவள் ஒரு பெண் குழந்தையாக இருக்க, அதை நினைத்து மகிழ்வதா இல்லை அவளது பெற்றோரை இழக்க காரணமாக இருந்து, அவளைக் கையில் எடுத்து கொஞ்சக் கூட முடியாத சூழலில் இருக்கும் தன் நிலையை வெறுப்பதா என்று எண்ணிக்கொண்டவனின் முகத்தில் விரக்தி புன்னகை நிறைந்திருந்தது.
அதிலும், அவள் மனிதர்கள் இருக்கும் கிரகத்துக்கு சென்றது தனது அதிர்ஷ்டம் என்று மகிழ்ந்தான். இல்லையென்றால், அவளை ஒரு கயா கிரக வாசியாக மாற்ற நிறைய கஷ்டப்பட்டிருக்க வேண்டும். அவளது கிரகத்தின் மொழிகளை ஆராய்ந்தவன், பொதுமொழியைத் தேர்ந்தெடுத்து, கணிதப் புதிர்களையும், சிற்றரசர்களின் கிரகங்களில் சவால்களையும் மாற்றி அமைத்து, அவளைச் சோதிக்க திட்டமிட்டான் ப்ரொமேத்தியஸ். அதிலும், அந்த பார்ச்மென்டை தனது தாயணையைக் கொண்டு அவளைத் தவிர வேறு யாராலும் பயன்படுத்த முடியாதவாறு மாற்றினான்.
அடிக்கடி அவளைப் பார்க்க முயற்சித்தால், பொசய்டன் கண்டுகொள்வானோ என்று யோசித்தவன், க்ரிசான்டாவைக் கடைசியாக ஒருமுறை தனது மனதில் நிறைத்துக் கொண்டு அவளைக் காண்பதை நிறுத்திக் கொண்டான். ஆம்… க்ரிசான்டா தான்… பூமியில் அவள் நந்தினியாக இருந்தாலும், அவனுக்கு அவள் க்ரிசான்டா தானே…
பின்னர், ப்ரொமேத்தியஸ் ஈரின் கல்லை மறைத்து ஒரு டோக்-கை உருவாக்கினான்.
ப்ரொமேத்தியஸ், “என்னதான் க்ரிசான்டா கயா கிரகத்திற்கு வந்தாலும், அவளுடன் போராடுவதற்குப் படைபலம் வேண்டும்” என்று யோசித்தவன், ஒவ்வொரு கிரகத்திலிருந்தும் நூறு உயிரினங்களைக் கொண்டு வரச் செய்தான்.
அந்த நேரத்தில் பொசய்டன் அங்கு இருப்பது நல்லதல்ல என்று கருதிய ப்ரொமேத்தியஸ், பொசய்டனை ஈரின் கல்லைத் தேடுவதற்காக அவரிடம் தனக்கு முதலில் வெற்றி பெற்ற போது கிடைத்த ஹெஸ்பரஸின் பார்ச்மென்ட்டை கொடுத்து அனுப்பினான்.
எப்படியும் பொசய்டனால் அந்தக் கிரகங்களை நெருங்க முடியாதென்றும், அதற்காக க்ரிசான்டாவை தேடிக் கண்டுபிடித்து கயா கிரகத்துக்கு அழைத்து வந்துவிடுவான் என்று நினைத்த ப்ரொமேத்தியஸ், அப்படிச் செய்ததில் இரண்டு பலன்களை அடைந்தான்.
ஒன்று, இன்னும் தான் பொசய்டனின் கைப்பிடியில் இருப்பதாக அவனை நம்ப வைப்பது. மற்றொன்று, க்ரிசான்டாவின் திறமையைச் சோதிப்பது. எப்படியோ பொசய்டனை அந்த இடத்தை விட்டு அனுப்பிய பிறகு, சிற்றரசர்களுக்கு தன் சக்திகளைக் காண்பிக்கும் வகையில், அவர்கள் தப்பிப்பதற்கு மறைமுகமாக உதவினான்.
முதல் முறை, டைட்டன் மற்ற உயிரினங்களைத் தன் படையாக மாற்றியதை நினைவில் வைத்துக் கொண்டு, அதை முறியடிக்கும் வகையில் ஒரு கருவியையும் செய்தான் ப்ரொமேத்தியஸ். இதற்கிடையே, அவன் பிரம்ம கிரந்தத்தைப் பயன்படுத்தி, நிம்மதி தேட முயல, அது அவன் மறக்க நினைக்கும் நினைவுகளைக் காட்டி கோபப்படுத்தியது.
இறுதியில் தான் இறந்து விட்டால் இந்த உண்மைகளை க்ரிசான்டாவிடம் யார் சொல்வது, என்று யோசித்து, பிரம்ம கிரந்தத்தில் குறிப்பிட்ட நினைவுகளைச் சேகரித்தான் ப்ரொமேத்தியஸ்.
******
அனைத்து நினைவுகளையும் காட்டிய பிறகு பிரம்ம கிரந்தம், தான் உருவாக்கியிருந்த மாயையை கலைத்துவிட்டு, அவர்கள் நால்வரையும் நிகழ்காலத்துக்கு அழைத்து வந்தது. சிறிது நேரத்தில் சுற்றம் உணர்ந்து நால்வரும் எழுந்து அமர, நந்தினியின் இதயத்திலிருந்த வேதனைக்கு உருவம் கொடுக்கும் வகையில், கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.
உரையாடல் முழுவதும் கயா கிரக மொழியில் இருந்தாலும், நடந்த சம்பவங்களை ஓரளவுக்கு உணர்ந்ததால் அதிர்ச்சியிலிருந்து வெளியேறாமல் இருந்தனர் ஆரியனும், ஆதியும்.
லூனா மட்டும் சிறிது தெளிவாக இருக்க, தனது கழுத்தில் அணிந்திருந்த ஆபரணத்தில் ஒரு கல்லை அமுக்கி விட்டு அமைதியாக நின்றாள். நந்தினியின் பார்வை சூனியத்தை வெறிக்க, சிறிது நேரத்தில், அக்கிலஸ் மற்ற சிற்றரசர்களுடன் அங்கு வந்து சேர்ந்தான்.