அவனின் சந்தோசம் அப்படியே தடைபடுவதை போல்…. அங்கு வந்தாள் திவ்யா.
“ஏய் என்ன..? நேத்து வாங்கினது பத்தாதா..? மறுபடியும் எதுக்கு ஆபீஸ் வரைக்கும் வந்திருக்க..?” என்றான் பிரவீன்.
“அதை உன்கிட்ட சொல்லனும்கிற அவசியம் எனக்குக் கிடையாது..” என்று திவ்யா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அமைதியா இரு பிரவீன்.. என்ற விஜய்,
“என்ன விஷயம்..?” என்றான்.
“முக்கியமான ஒரு சந்தேகம்.. அதை கேட்டுத் தெரிஞ்சுகிட்டு போகலாம்ன்னு வந்திருக்கேன்..!” என்றாள்.
“என்ன தெரியனும்..?” என்றான் விஜய்.
“நிஜமா, நீ எங்க அக்காவை கல்யாணம் பண்ணலையா..?” என்றாள்.
“நான் அவளை லவ் பண்ணவே இல்லைங்கிறேன். அப்பறம் எப்படி கல்யாணம் பண்ணியிருப்பேன்..!” என்றான்.
“வந்தனா என்கிட்டே சொன்னாலே, உன்னை கல்யாணம் பன்ன போறதா..?” என்றாள்.
“அது என்னோட குரல்ல, விமல் பேசியது..! நடந்த எல்லா விஷயமும் அவனுக்குத் தெரியும். நீ அவன்கிட்டேயே கேட்டுத் தெரிஞ்சிருக்கலாமே..” என்றான் விஜய்.
“எங்க அக்கா இறந்தது ஆக்சிடெண்ட்டா, கொலை முயற்சியா..?” என்றாள்.
“இதோ பாரு ஒரு விஷயம் தான். முதல்ல கனகவேல் பொண்ணு தான் உங்கக்கான்னு எனக்குத் தெரியவே தெரியாது. அப்படித் தெரிஞ்சப்பவே நான் கிளியரா சொல்லியிருக்கேன். அப்படி இருந்தும் அந்த விமல் இடையில கேம் ஆடினான். நான் சொன்னாலும் நீயோ, உங்கப்பாவோ நம்பப் போறதில்லை. உங்க அக்காவைக் காப்பாத்த போய் தான், எனக்கு இந்த நிலைமை. இதை நீங்க சரியா புரிஞ்சுகிட்டா நல்லது. இல்லைன்னாலும் ஒன்னும் பிரச்சனை இல்லை..!” என்றான்.
“இதையெல்லாம் நீ ஏன் வந்து கேட்கிற..?” என்றான் பிரவீன்.
“அதையெல்லாம் உன்கிட்ட சொல்லனும்ன்னு அவசியம் இல்லை..!” என்றவள் அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.
“இவளும் இந்த ஜென்மத்துல திருந்த மாட்டா விஜய். கொஞ்சமாவது திமிர் குறைஞ்சிருக்கா பாரேன். அப்படியே கனகவேல் ரத்தம். இவங்களுக்கு அந்த விமல் தான் சரி..!” என்றான் பிரவீன்.
“அப்படி சொல்லாத பிரவீன், இவளுக்கு விமல் மேல ஏதோ சந்தேகம் வந்திருக்கு. இத்தனை நாள் இல்லாம, இப்ப திடீர்ன்னு வந்து கேட்க வேண்டிய அவசியம் என்ன வந்தது. அவளுக்குத் தெரியாத, தெளியாத விஷயத்தை நம்மகிட்ட கேட்க வந்திருக்கா. ஆனா ஒன்னை மட்டும் ஒத்துக்கணும்.. இவ வந்தனா அளவுக்கு இல்லை.. கொஞ்சம் புத்திசாலி தான்..!” என்று சொல்லிக் கொண்டிருக்க, நேராக ஒரு அட்டை அவன் மேல் வந்து விழுந்தது.
என்னவென்று நிமிர்ந்து பார்க்க, எதிரே ருத்ர காளியாய் நின்றிருந்தாள் துளசி.
“துளசி..! நீ எப்போ வந்த..?” என்றான் விஜய். காலையில் இருந்து பார்க்காமல், இப்போது அவளைப் பார்த்து விட்ட சந்தோசம் அவனுக்கு. அவனின் அந்த மகிழ்ச்சியை தப்பாக எடை போட்டாள் துளசி.
“ஏன் நான் வரக்கூடாதா..? உன்னோட முன்னால் மச்சினிச்சி மட்டும் தான் புத்திசாலியா..?” என்றாள்.
“அடக்கடவுளே..! என்ன நடந்ததுன்னு தெரியாம..”
“வாயை மூடு விஜய்..! நீ ஒன்னும் சொல்லத் தேவையில்லை..!” என்றவள் பிரவீனையும் முறைத்து விட்டே சென்றாள்.
“மொத்தத்துல எனக்கு நேரம் சரியில்லைடா..!” என்று நொந்து கொண்டான் விஜய்.
வீட்டிற்கு போன பிறகும் துளசியுடன் பேச விஜய் முயற்சி செய்ய, அவளோ அறைக்கதவை திறக்கவேயில்லை. ஒரு கட்டத்தில் எரிச்சல் அடைந்தவன், தானும் அறைக்குள் சென்று முடங்கினான்.
“இவளுக்கு திமிர் கொஞ்சம் அதிகம் தான். எப்பவும் என்ன சொல்ல வரேன்னு கேட்கிறதே இல்லை..! நாளைக்கு பர்த்டே வேற.. பர்ஸ்ட் விஷ் பண்ணலாம்ன்னு நினச்சேன். அதுக்கும் பெரிய ஆப்பா வச்சிட்டா..” என்று முனங்கிக் கொண்டிருந்தான்.
விஜய் நேரத்தைப் பார்த்துக் கொண்டே, குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்க, வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே போனது. பன்னிரெண்டு மணிக்கு ஐந்து நிமிடம் இருக்கும் போது, வேகமாக அறைக்கதவை திறந்து வெளியே வர, அவனுக்கு முன் அனைவரும் ஹாலில் கூடியிருந்தனர்.
“என்ன ஒருத்தரும் தூங்கலையா..? குடும்பமே அவளை சுத்தி தான் இருக்கு. அதுலையும் சுரேஷ் மாமா, அவளுக்கு பாடிகாட் மாதிரியே நிக்குறார். யோவ் மாமா, நீதான்யா எனக்கு மெயின் வில்லனே..!” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே கீழே வந்தான் விஜய்.
“என்ன விஜய்..? இப்போதான் வர..?” என்றான் பிரவீன்.
“வாயை மூடிக்க..! செம்ம கடுப்புல இருக்கேன். ஏண்டா அர்த்த ராத்திரியில தான் கேக் வெட்டனுமா..? உங்களுக்கு வேற நேரம் காலமே இல்லையா..? எனக்குன்னு வந்து சேர்றது எல்லாமே இப்படித்தான் இருக்கு..!” என்றான் விஜய்.
“எல்லாம் அப்பாவோட ஏற்பாடு விஜய்..!”
“முதல்ல அவரை நாடு கடத்தனும், இல்லண்ணா உன் தங்கச்சியை கடத்தணும்..!” என்று முணுமுணுத்தான். நேரம் பண்ணிரெண்டு ஆனவுடன், அனைவரும் வாழ்த்து சொல்ல, கேக்கை வெட்டினாள் துளசி. மறந்தும் விஜய்யைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. அவளின் இந்த செய்கையில் மனதளவில் அடிவாங்கினான் விஜய். அவன் ஏதோ செல்ல கோபம் என்று நினைத்திருக்க, அவளானால்… அவன் முகத்தைக் கூட பார்க்கவில்லை.
“துளசி கேக்கை முதல்ல விஜய்க்கு குடு..!” என்று பிரவீன் அவள் காதில் முணுமுணுக்க,
“நான் எப்பவும் அப்பாவுக்குத் தான் குடுப்பேன். அதையெல்லாம் மாத்த முடியாது..!” என்று பட்டென்று சொன்னவள், சுரேஷிற்கு தான் முதல் துண்டை ஊட்டினாள். அந்த நேரத்தில் விஜய்யின் மன நிலையை அனைவரும் மறந்தனர். அனைவரும் ஒன்றாய் இருப்பதைப் போலவும், தான் மட்டும் தனி என்கிற மாதிரியான பிம்பம் அவன் மனதில் விழ, முதன் முறையாக தன்னை நினைத்துத் தானே கழிவிரக்கம் கொண்டான் விஜய். அதற்கு மேல் அந்த இடத்தில் நிற்கவும் அவனுக்கு விருப்பம் இல்லாமல் போனது.
இயந்திரம் போல் அவள் அருகில் சென்றவன்,
“பிறந்தநாள் வாழ்த்துக்கள் துளசி..!” என்று அவளின் கையைப் பிடித்து வாழ்த்தை சொன்னவன், நேராக தன்னுடைய அறைக்கு சென்று விட்டான். அவன் அப்படி சொன்னது அவளுக்கு ஒரு மாதிரியாகிப் போனது. போகும் அவனையே யோசனையுடன் பார்த்தாள் துளசி.
“அப்பா என்னப்பா இதெல்லாம்..? அவதான் வீம்புக்கு பண்றான்னு பார்த்தா, நீங்களும் அவ கூட சேர்ந்துகிட்டு ஏன் இப்படி பண்றிங்க..? பாருங்க விஜய் முகமே சரியில்லை..!” என்று தந்தையை கடிந்து கொண்டான் பிரவீன்.
“எல்லாம் காரணமா தான் பிரவீன். நாரதர் கலகம் நன்மையில தான் முடியும். இப்படி எதையாவது தூண்டி விட்டுட்டே இருக்கணும். அப்பதான் நல்லது சீக்கிரம் நடக்கும்..!” என்றார் சுரேஷ்.
“டாடி..!” என்று அதிர்ந்து பார்த்தான் பிரவீன்.
“டாடியே தான்..! போ, போய் நிம்மதியா தூங்கு..! காலையில பாரு..!” என்றார் சுரேஷ்.
“அதனால தான் இப்பவே கேக் கட் பண்ணிங்களா..?” என்றான்.
“ஆமா..!”
“ரைட்டு..!” என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை.
அறைக்குள் சென்ற துளசிக்கு தூக்கம் சுத்தமாக வரவில்லை. விஜய்யின் சோர்ந்த முகமே அவளுக்கு மீண்டும் மீண்டும் நினைவுக்கு வர, ரொம்ப பண்ணிட்டேனோ..? என்று அவளாகவே நினைத்துக் கொண்டாள்.
“பாவம் துளசி அவன். நீ படுத்துற பாட்டுக்கு வேற ஒருத்தனா இருந்தா, இந்நேரம் நடக்குறதே வேற..?” என்று மனம் சொல்ல, கொஞ்சம் தயக்கத்துடன் அவனைத் தேடி சென்றாள்.
கதவைத் தட்டப் போக, கதவு தானாக திறந்து கொண்டது.
“என்ன பண்றான்..?” என்று எட்டிப் பார்க்க, விஜய் உள்ளே இல்லை.
“எங்க போனான்..? ஆளைக் காணோம்..?” என்று யோசித்துக் கொண்டே திரும்ப, அவளைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தான் விஜய்.
“என்ன..?” என்றான்.
“இல்லை.. சும்மா..” என்று அவள் இழுக்க,
“என்ன சும்மா..?” என்றான் கடுப்புடன்.
“எனக்கு உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்..!” என்றாள் அவனைப் போல்.
“என்ன கேட்கணும்..!” என்றான் விஜய்.
“ரொம்ப கோபமா இருக்கான் போலவே..! பேசாம எஸ் ஆகிடு துளசி. இவன் ரொம்ப பண்றான்..” என்று நினைக்க,
“நானா ரொம்ப பண்றேன்..! நல்லா யோசிச்சு பாரு துளசி..!” என்றான்.
“சாரி விஜய்..! இந்தா கேக்..!” என்றாள். அவளின் செய்கை அனைத்தும் சிறுபிள்ளைத் தனமாய் இருந்தது. அவளைப் பற்றிதான் அவனுக்குத் தெரிந்திருந்ததே. அவளின் முக பாவனையைப் பார்த்த விஜய்க்கு சன்னமாக சிரிப்பு எட்டிப் பார்த்தது. ஆனால் அடக்கிக் கொண்டான்.
“எனக்கு வேண்டாம்..! போய் உங்கப்பாவுக்கே ஊட்டு போ..!” என்றான்.
“அதெல்லாம் அவருக்கு ஊட்டியாச்சு. இப்போ எடுத்துக்கப் போறியா இல்லையா..?” என்றாள்.
“என்னத்தை..?” என்றான், அவளை மேலும் கீழும் பார்த்துக் கொண்டு.
“கேக்கைத் தான்..!” என்றாள்.
“வேண்டாம்ன்னு சொன்னதான் நியாபகம்..!”
“நான் தான் சாரி சொல்லிட்டேன்ல..! அவளை அங்க பார்த்ததும் கொஞ்சம் டென்சன் ஆகிட்டேன். அதான்..!” என்றாள்.
“உனக்குத் தான் என்னைக் கண்டாலே ஆகாதே. அப்பறம் நீ ஏன் டென்சன் ஆன..?” என்றான் அவள் வாயைப் பிடுங்கும் பொருட்டு.
“ஆமா ஆகாது..! பாவம்ன்னு வந்தேன் பாரு.. என்னைய சொல்லணும்..!” என்று அவள் அவனைக் கடந்து வெளியே செல்ல முற்பட, அவளின் கையைப் பிடித்து இழுத்து, மீண்டும் தன் முன் நிறுத்தியவன், மற்றொரு கரத்தால் அவளின் இடுப்பை வளைத்து தன்னருகில் நிறுத்தினான்.
“அதான் பாவம் பார்த்து வந்துட்ட தானே. அப்பறம் சும்மா போனா எப்படி..? பாவம் பார்த்து ஏதாவது குடுத்துட்டு போறது..?” என்றான்.
“நான் குடுக்கணுமா..? நீதாண்டா எனக்கு கிப்ட் குடுக்கணும்..!” என்றாள்.
‘மரமண்டை’ என்று வாய்க்குள் முனங்க,
“என்ன சொன்ன..?” என்றாள்.
“மறக்காம குடுத்திடுறேன்ன்னு சொல்ல வந்தேன்..!” என்றவன், அவள் கையிலிருந்த கேக்கில் கொஞ்சம் எடுத்து அவளுக்கு ஊட்ட,
“ஒன்னும் தேவையில்லை..!” என்றாள்.
“ஆனா எனக்குத் தேவையிருக்கே..!” என்றவன் கட்டாயமாக அதை அவள் வாயில் திணித்து, அடுத்த நிமிடம் அதை தனதாக்கிக் கொண்டான். அவள் அப்படியே விழித்துக் கொண்டு நிற்க,
“சும்மா சொல்லக் கூடாது..! கேக் ரொம்ப டேஸ்ட்..!” என்றான் சிரித்துக் கொண்டே. ஒரு நிமிடம் கழித்து தான் அவளுக்கு நடந்ததே புத்தியில் உறைத்தது.
“தடிமாடு..தடிமாடு..! உன்னை…” என்று அவனை அடிக்கத் துரத்த,
“துளசி பிளீஸ்..! நோ வயலன்ஸ்..!” என்று சிரித்துக் கொண்டே பின்னால் சென்றவன், அவளின் காலைத் தட்ட, தடுமாறி அவன் மேலேயே விழுந்தாள் துளசி.
“விஜய்..! பிளீஸ் விடு..! எனக்கு என்னவோ போல இருக்கு..!” என்றாள்.
“கிப்ட் கேட்ட, வாங்காமையே போற..?” என்றான் சிரிப்புடன்.
“எனக்கு ஒன்னும் வேண்டாம், ஆளை விடு..!” என்ற அவள், அவன் பிடியில் இருந்து திமிறிக் கொண்டிருக்க,
“ஒன்னு சொல்லவா..?” என்றான்.
“என்ன..?”
நான் இப்பல்லாம் ரொம்ப கெட்டுப் போயிட்டேன். உன்னைப் பார்த்தாலே தப்புத் தப்பா தான் தோணுது. தப்புத் தண்டா நடந்திடுமோன்னு பயமா இருக்கு…!” என்றான் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு.
“டேய் மரியாதையா விடு..! நீ அடுத்து என்ன படம் ஓட்டுவன்னு எனக்கு நல்லாத் தெரியும். நீ அப்பாவி மாதிரி இருக்குற அந்நியன். விடுடா முதல்ல..!” என்று அவன் பிடியில் இருந்து விலகி விட்டாள்.
அவள் அங்கிருந்து வெளியே செல்ல முற்பட,
“எனக்கு இன்னொன்னும் சொல்லணும்… விஷ்வா..” என்றான்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ‘விஷ்வா’ என்ற அவனுடைய அழைப்பு. அவன் சந்தோஷமாக இருக்கும் போது மட்டுமே அப்படி அழைப்பான்.
“என்ன..?” என்பதைப் போல் அவள் நெகிழ்ந்து போய் நின்றிருக்க,
“எனக்கு என்னோட அப்பாவும், அம்மாவும் குழந்தையா வேணும். அதுக்கு நீ எனக்கு மனைவியா வேணும். உன்னோட காதல் எனக்கு வேணும். ஏன்னா, நான் உன்னை லவ் பண்றேன். என்னோட ஆழ்மன உணர்வு உண்மைன்னா, நீதான் என்னோட முதல் காதல்..! ஐ லவ் யு விஷ்வா..!” என்றான் விஜய். அவனின் மொத்த உணர்வுகளும் அவன் வார்த்தையில் இருந்தது.
அவளின் எத்தனை நாள் காத்திருப்பு இது. ஆனால் அவள் எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்காமல், எதிர்பாரா இந்த நேரத்தில் விஜய்யின் மனதிலிருந்து இப்படி ஒரு வார்த்தைகள். அதை எப்படி வெளிக்காட்டுவது என்று தெரியாமல் நின்றவளின் கண்ணீர் மட்டும் நிற்கவேயில்லை. அது அவன் மீது கொண்ட ரகசிய காதலின் வெளிப்பாடு. அதை வார்த்தைகளால் அவளால் வரையறுக்க முடியாது. அவள் அழுகை கேவலாக மாற,
திரும்பி வந்து, விஜய்யின் சட்டைக் காலரை கொத்தாக பற்றியவள்,
“இதையேண்டா இப்ப வந்து சொல்ற..? உனக்கு இப்போதான் சொல்லனும்ன்னு தோணுச்சா..! போடா நீ வேண்டாம் எனக்கு..!” என்று கதறியவள் அவன் நெஞ்சிலேயே தஞ்சம் அடைந்தாள்.
“துளசி..! ப்ளீஸ் அழாத..!” என்று சமாதானப்படுத்த அவன் எவ்வளவோ முயல,
“போடா..! பேசாதடா. நீ வேண்டாம் எனக்கு..!” என்று மீண்டும் மீண்டும் அவள் சொன்னதையே தான் சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனால் அவளின் செய்கையோ அதற்கு நேர்மாறாய் இருந்தது. அவனுள் புதைந்து விடுவதைப் போல் முகத்தை புதைத்துக் கொண்டவள், அவனின் அணைப்பிற்குள் அடங்கிப் போனாள். அவனின் இறுகிய அணைப்பு மட்டுமே அவளுக்கு மருந்து.
“சாரிடி..!” என்ற விஜய் மேலும் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
பூ பூக்கும்..!!!