“என்னடி விளையாடிட்டு இருக்கியா? இதென்ன புது புது பழக்கம் எல்லாம்? அகராதி பண்ணாம சொல்பேச்சு கேட்டு இரு, சொல்லிட்டேன்” கோவமாய் கத்திக்கொண்டிருந்தார் நீலா.
அவர் கத்துவதை கேட்டும் அவரை தடுக்காமல் சண்முகமும், மங்களமும் அமைதியாய் இருக்க, தன் அன்னையின் பேச்சை பொருட்படுத்தாத அஷ்டா,
“அப்பா, ப்ளீஸ்ப்பா!!!” என்றாள் அவரிடம்.
வீராவின் வீட்டில் திருமணத்திற்கு முழுமனதாய் சம்மதம் சொல்லி அடுத்து ஆக வேண்டியதை பேச திட்டமிட்டுக்கொண்டிருந்த நேரம், திடீரென வந்த அஷ்டா,
‘எனக்கு அந்த மாப்பிள்ளை கூட தனியா பேசணும்! அதுக்குபிறகு எனக்கு பிடிச்சா தான் கல்யாணம்!’ என்று ஒரு குண்டை தூக்கி தலையில் போட, செய்வதறியாது அமர்ந்திருந்தனர் மங்களமும், சண்முகமும்.
‘எப்படியேனும் வீராவை தன் வீட்டு மாப்பிள்ளையாக்கிவிட வேண்டும்’ என வெகு முனைப்பாய் இருந்த சண்முகத்திடம், அவள் இப்படி சொன்னதும், ‘எங்கே பேசிவிட்டு ஒருவேளை அவரை ‘பிடிக்கவில்லை’ என்று இவள் சொல்லிவிட்டால்?’ என்ற பயமே அவரை கையை பிசைந்துக்கொண்டு உட்கார வைத்தது.
வீரா தான் தன் பேரன் என்று அன்றே முடிவு செய்துவிட்ட மங்களத்துக்கும் அஷ்டாவின் கோரிக்கையில் விருப்பம் துளியும் இல்லை எனினும், அவளை கண்டித்து பழகியிராதலால் எப்படி எடுத்து சொல்லி புரிய வைப்பது என யோசித்துக்கொண்டிருந்தார்.
ஆனால் இந்த பொறுமை எல்லாம் நீலாவிடம் இல்லையே! அன்று அவனை பார்த்தபோதே அவரின் மனதை கவர்ந்து விட்டவன், சிதம்பரத்திடம் பேசியதை கேட்டறிந்ததும், மகளுக்கு இதைவிடவா நல்ல வாழ்க்கை கிடைத்துவிடும்! என்று பூரித்து மகளை பற்றிய மனபாரம் நீங்கியவராய் சுற்றிக்கொண்டிருந்தார்.
அவரிடம் போய், ‘நான் பேசி பார்த்து எனக்கு பிடிச்சா தான் கல்யாணம்’ என இவள் சொல்ல, தான் பெற்றதன் அரைவேக்காட்டுத்தனம் அறியாதவரா அவர்!
‘கண்டிப்பா இது ஏதோ ஒரு ஏழரையை இழுத்துவிட போது!’ என திடமாய் நம்பியவர், வீட்டின் சர்வாதிகாரிகள் இதற்கு ஒப்புதல் அளிக்கும்முன் தனது ஒவ்வாமையை காட்டிவிட வேண்டும் என மறுப்பு தெரிவிக்க, அதிசயமாய் அவர்களும் அஷ்டாவின் கோரிக்கைக்கு பின்வாங்கினர்.
அதன்பின் கேட்கவும் வேண்டுமா? இதுதான் சாக்கு என மகளை போட்டு விளாசிக்கொண்டிருந்தார் நீலா.
“சும்மா ‘ப்ளீஸ்’ போட்டு காரியம் சாதிக்கலாம்ன்னு நினைக்காதடி… பையன்கிட்ட பேசக்கூடாதுன்னு சொல்ற அளவுக்கு ஒன்னும் நாங்க கட்டுப்பட்டித்தனம் பண்ணல! ஆனா, எல்லாம் முடிவாகி நிச்சயத்துக்கு நாள் குறிக்குற நேரம்… வந்து, ‘பேசி பாக்குறேன்! கீசி பார்க்குறேன்’ன்னு நிக்குற பாரு! இத தான் வேண்டாம்ன்னு சொல்றேன்!” என்றார் நீலா.
“ம்மா, எனக்கு சில விஷயம் பேசி முடிவு பண்ண வேண்டியது இருக்கு ம்மா!” என்றாள் அஷ்டா.
“அப்படி என்னத்தடி பேசப்போற!”
“………”
“சொல்லுடி”
“தட் இஸ் பர்சனல்” என்றவளை மூச்சுவாங்க முறைத்தார் நீலா.
“அந்த கருமத்தை அந்த பையன் வீட்டுக்கு வந்தபோவே பேசித்தொலைக்குறதுக்கு என்னவாம்?” அப்பட்டமான எரிச்சல் அவரிடம்.
“அப்போ தோணல! இப்போ தோணுது” என்றாள் அவள்.
விட்டால் ஓங்கி ஒன்று கன்னத்தில் வைத்திருப்பார். அந்த அளவுக்கு மகள் மீது எரிச்சல் மூண்டது அவருக்கு.
அமைதியாய் இருந்த சண்முகம், அஷ்டாவின் முகத்தில் விழுந்திருந்த முன்னுச்சி முடியை ஒதுக்கி தள்ளியபடி, “அவரை கண்டிப்பா உனக்கு பிடிக்கும்டா குட்டிமா! நீ சரின்னு சொல்லவும் தானே அப்பா எல்லாம் பேசி முடிவு செஞ்சேன்?” என்றார் தன்மையாய்.
‘மண்டைலயே நாலு போட்டு மனை’ல உட்கார வைக்குறத விட்டுட்டு, இப்போதான் நாய்குட்டியை கொஞ்சுற மாறி தடவிக்குடுத்து பேசிட்டு இருக்காரு’ என முனுமுனுப்பாய் பொருமிக்கொண்டிருந்தார் நீலா.
“பொண்ணு பாக்க வந்தபோவே பேசிருக்கணும்டி ராஜாத்தி! இப்போ தனியா பார்த்து பேசுறதெல்லாம் என்ன பழக்கம்?” அவரை விட தன்மையை பேசினார் மங்களம்.
தோசைக்கல்லில் கை நிறைய நீரை அள்ளி கொட்டிய நீலா, ‘ஆத்தாளும் மவனும் என்கிட்ட மட்டும் தான் மலை ஏறுவாங்க!’ என்று கல்லின் சூட்டோடு சேர்ந்து கொதித்துக்கொண்டிருந்தார்.
ஆனாலும், அவருக்கு ஒரு எண்ணம்! கண்டிப்பாக மகளின் கோரிக்கை இங்கே எடுப்படாது, தள்ளுபடி செய்யப்பட்டு விடும் என்று!!!
அந்தோ பரிதாபம்!
மகளின் முகம் வாடினாலே துடித்து போகும் பாசக்கார தந்தைக்கு, அஷ்டா லேசாக கண் கலங்குவது போல தோன்றவும், அடுத்த நொடியே தன் மொபைலில் இருந்து வீராவுக்கு அழைத்திருந்தார்.
“தம்…. வீரா?” தம்பி என அழைக்க வந்தவருக்கு அவரறியாது முகத்தில் புன்னகை தோன்றிவிட, ‘வீரா’ என்றழைத்தார்.
“சொல்லுங்க மாமா!!!” என்றவனுக்கு திருமண விஷயம் பேச அழைத்திருக்கிறார் என்ற எண்ணமே அவன் ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தியதை போல ஆனது.
வேகமாய் அழைத்துவிட்டார். ஆனால், விஷயத்தை சொல்ல தயக்கமாய் இருந்தது அவருக்கு.
உரிமையாய் ‘மாமா’ என்பவனிடம், ‘என் மகள் உன்னிடம் பேசிவிட்டு… பிறகு, அவளுக்கு பிடித்தால் தான் இந்த திருமணம் உறுதி’ என்று எப்படி சொல்வதாம்!?
அருகே அஷ்டா, ‘சொல்லுங்கப்பா’ என்று ஜாடை வேறு காட்ட,
“அது… அது என்னன்னா…?”
“சொல்லுங்க மாமா!”
“தம்.. வீரா! என் பொண்ணு உங்களை பார்த்து பேசனும்ன்னு பிரியப்படுரா!” என்றுவிட, அஷ்டா ‘ஐயோ!!! நான் அப்படியா சொன்னேன்?’ என தலையில் தட்டிக்கொண்டாள்.
ஆனால், அதைக்கேட்ட வீராவுக்கு சிறகு மட்டும் தான் முளைக்கவில்லை. ஹைட்ரஜன் பலூன் போல காற்றில் பறந்துக்கொண்டிருந்தான் அவன்.
“ஹலோ? ஹலோ?”
சண்முகம் அழைப்பில் பலமுறை கத்தும்வரை கூட சந்தோசத்தில் அவனுக்கு வார்த்தை வரவில்லை. கடினப்பட்டு அடைத்துக்கொண்டிருந்த தொண்டையை சரிசெய்து,
“இதோ பத்து நிமிஷம் மாமா… பத்தே நிமிஷத்துல உங்க வீட்டுல இருப்பேன்” என்றான் அவன். சொல்லிக்கொண்டே வேகமாய் தன் பைக்கை எடுக்க ஓடினான் வீரா.
திடுமென ஓடும் அவனை பங்க்’கில் இருந்த ஆட்கள் எல்லாம் அவனை விநோதமாய் ‘ஆஆ’ என பார்க்க, அதை கண்டுக்கொள்ளாமல், எதிர்ப்பட்ட மேனேஜரிடம், ‘தான் வெளியே செல்வதாய்’ சைகை செய்துவிட்டு பைக்கில் ஏறி அமர்ந்தான். இத்தனையும் அரை நிமிடத்திற்கும் குறைந்த நேரத்தில் நடந்து முடிந்து விட,
அவன் பேசியதை கேட்டுகொண்டிருந்த அஷ்டா அவசரமாய், ‘வீடு வேண்டாம்’ என்று சொன்னதும், அதையே அவனிடம், “வீட்டுல வேண்டாம்ன்னு சொல்லுறா வீரா” என்றார் சண்முகம்.
அடுக்களையில், ‘டங்’கென நீலா பாத்திரத்தை வீசுவதை நன்றாய் கேட்டது வீராவுக்கு.
ஒரு நொடி தயங்கியவன், “வீடு வேண்டான்னா?” என யோசித்து, சட்டென, “நான் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்துடுறேன் மாமா! உங்களுக்கு அது பக்கம் தானே! அங்க சந்திப்போம்” என்றுவிட்டு மறுமொழிக்கு கூட காத்திராது கிளம்பிவிட்டான்.
மொபைலை மேசை மீது வைத்த சண்முகம், “இப்போ சந்தோஷமாடா குட்டிமா? இதுக்கு போய் கண்ணு எல்லாம் கலங்கிக்கிட்டு” என்று சொல்ல, “என் செல்….ல அப்பா” என அவர் கன்னம் கிள்ளி கொஞ்சியவள் அவனை சந்திக்க வேண்டி உடை மாற்றி வர தன்னறைக்குள் சென்றாள்.
மீண்டும் அடுக்களையில் பாத்திரம் உருளும் சப்தம் கேட்க, “உன் பொண்டாட்டி இருக்குற கடுப்புக்கு அவ கொண்டாந்த சீரு சாமான் மட்டுமில்லாது என் அம்மா வீட்டுல கொடுத்ததையும் சேர்த்து போட்டு உடைச்சுடுவா போலருக்கு! சித்த என்னான்னு கேளு அவளை” என்ற மங்களம் பாட்டி எழுந்து வெளிப்பக்கம் சென்றுவிட்டார்.
கிச்சனுக்குள் எட்டிப்பார்த்த சண்முகம், “எதுக்கு எல்லாத்தையும் போட்டு உடைச்சுக்கிட்டு இருக்க?” என்றார் முறைப்பாய்.
வெடுக்கென திரும்பிய நீலா, “இந்த கிட்சன் ஒன்னு தான் என் இஷ்டத்துக்குன்னு இருந்துச்சு! இப்ப அதுலயும் நீங்க சொல்றதை தான் செய்யணுமா?” என்று வெடிக்க,
“இப்ப நான் என்ன கேட்டுட்டேன்னு என்னனென்னவோ பேசுற நீ?” என்ற சண்முகத்தின் குரல் சற்றே இறங்கி ஒலித்தது.
“உங்க பொண்ணு செய்யுற எல்லாத்துக்கும் தலையாட்டுறீங்களே? சரி எது, தப்பு எதுன்னு எடுத்து சொல்ல மாட்டீங்களா?”
“அவ விருப்பத்தை மீறி அவ கல்யாணத்துல என்ன செய்ய சொல்ற?”
“அதுக்காக? அவளுக்கு நல்லது கெட்டது என்னங்க தெரியும்? பேசனும்ன்னு சொன்னதே எனக்கு சரியாப்படல! இதுல வெளியிடத்துல வச்சு பேசனும்ன்னு சொல்றா! நீங்க தலையாட்டுறீங்க” ஆதங்கமாய் வந்தது அவருக்கு.
“சும்மா எல்லாத்துக்கும் குறை கண்டுபிடிக்காத நீலா! நான் தான் கூட போறேன்ல… நான் பார்த்துப்பேன்! நீ உன் வேலையை மட்டும் பாரு” என சுருக்கென சொன்னார் சண்முகம்.
அப்போது வந்த அஷ்டா, “அப்பா… நான் ரெடி! நீங்க அவர் நம்பர் எனக்கு மெசேஜ் பண்ணுங்க! நான் கிளம்புறேன்” என வேகமாய் ஸ்கூட்டி எடுக்க செல்ல,
“இருமா, அப்பா வரேன்” என்ற சண்முகத்திடம்,
“நீங்க எதுக்குப்பா? நான் மட்டும் போய்க்குறேன்! பை” என்றதோடு வேகமாய் சென்றுவிட்டாள்.
மகளை தடுக்க முடியாது தேங்கி நின்ற கணவரை நீலா முறைக்க, ஒன்றும் பேசாது அங்கிருந்து நழுவிவிட்டார் சண்முகம்.
***
பைக்கில் வந்துக்கொண்டிருந்த வீரா முகத்தில் ஏகத்துக்கும் புன்னகை நிரம்பி வழிந்தது. தன்போக்கில் சிரித்துக்கொண்டே அவன் சிக்னலில் நிற்க, அருகே இருந்தவர்கள் அவனை ‘ஒருமாதிரி’ பார்த்ததைக்கூட அவன் உணரவில்லை.
அந்த அளவுக்கு மயக்கத்தில் சென்றுக்கொண்டிருந்தான் அவன்.
‘பர்ஸ்ட் டைம் பார்க்கப்போறோம்! என்ன வாங்கிட்டு போறது?’ என்ற சிந்தனை வேறு!!!
ஒருவழியாய் ஸ்ரீரங்கத்தை அடைந்தவன், பார்கிங்கில் பைக்கை நிறுத்திவிட்டு அண்ணாந்து பார்த்து கோபுரத்திற்கு ஒரு கும்பிடு போட, ‘டொய்ங்’ என சத்தம் போட்டது அலைபேசி.
எடுத்து பார்த்தால், அவன் மாமனார் தான் அஷ்டாவின் அலைபேசி எண்ணை அவனுக்கு குறுஞ்செய்தி செய்திருந்தார்.
இன்னுமாய் சிரிப்பு நீண்டது அவன் முகத்தில்.
கைகள் பரபரவென, “ஹாய்… ஐ’அம் வீரா. வைய்டிங் நியர் தெற்கு வாசல்” என டைப் செய்து அனுப்ப, அவளை பார்க்கும் நொடிக்காக காத்திருக்க ஆரம்பித்தான் அவன்.
ஸ்கூட்டியில் கிளம்பிய அஷ்டா, மனதுக்குள் என்ன கேட்க வேண்டும்? எதை பேச வேண்டும்? என ஒத்திகை பார்த்தபடியே சென்றாள்.
‘எப்படி இருந்தாலும் சரி! இந்த திருமணம் நடக்க வேண்டும்!’ என நினைத்தவளின் மனது, ‘பேசி பார்த்து, பிறகு தான் முடிவெடுக்க வேண்டும்’ என்று திடீரென மாறியதற்கு ஒரு ‘ஃபோன் கால்’ மட்டுமே காரணம்!!!
முதல் நாள் இரவு ஜோதி தன்னிடம் பேசியதை மனதுக்குள் ஓட்டிப்பார்த்தாள் அஷ்டா. இப்போதும் அவள் வார்த்தைகள் இவள் செவிகளில் ஒலிப்பதை போன்றதொரு பிரம்மை தோன்றியது.
இரவு உணவுக்கு பின் தன் அறையில் படுத்து மொபைலை நோண்டிக்கொண்டிருந்த அஷ்டாவுக்கு, திடீரென ஜோதியின் நினைவு வந்தது.
‘அன்னைக்கு அழுதாளே? பாவம்! இப்போ எப்படி இருக்கான்னு கேட்போம்!’ என்றெண்ணி, “ஹவ் ஆர் யூ ஜோதி?” என அவள் குறுஞ்செய்தி அனுப்ப, அடுத்த ஐந்து நிமிடத்தில் ஜோதியிடம் இருந்து அழைப்பு வந்தது அவளுக்கு.
“சொல்லு ஜோதி… நல்லாருக்கியா?”
“ஹும்… இருக்கேன்”
“பையன் எப்டி இருக்கான்…?” என்று அஷ்டா கேட்டதும், மறுப்பக்கம் அழுகை சத்தம் பலமாக கேட்க ஆரம்பித்தது.
“ஜோதி? ஜோதி அழறியா? என்னாச்சுடி?” இந்த பக்கம் அஷ்டா பதற, சற்று நேர அழுகையில் தன்னை தேற்றிக்கொண்ட ஜோதி, “பையன் என்கிட்ட இல்ல அஷ்டா… அவரு வந்து வாங்கிட்டு போயிட்டாரு” என்றாள் விசும்பலுடன்.
“அண்ணா வா? ஏன்?”
“அது அவரு புள்ளையாம்! குடுன்னு தூக்கிட்டு போயிட்டாரு”
“இதென்ன அநியாயம்? அவன் உனக்கும் தானே புள்ள?”
“நியாயம், அநியாயம் பார்த்தா எல்லாம் நடக்குது! விடுடி! எல்லாம் என் தலைவிதி” என நொந்துப்போய் சொன்னாள் ஜோதி.
“என்ன ஜோதி இப்படி பேசுற? என்னதான் பிரச்சனை உனக்கு? என்கிட்ட சொன்னா உனக்கு ஆறுதலா இருக்கும்ன்னா சொல்லேன்!!”
சில நிமிடங்கள் விசும்பல் ஒலி மட்டுமே மறுபுறம் இருந்து வந்தது.
பின்னே, “எதைன்னு சொல்றதுன்னு தெரியல அஷ்டா. முதல்ல பிரச்சனைன்னா அது பணம் தான்! நல்ல வேலை, கை நிறைய சம்பளம்ன்னு சொல்லி தான் என்னை கட்டுனாங்க! கல்யாணம் செஞ்சப்போ ‘வேலைக்கு போறதும் போகாததும் பொண்ணோட விருப்பம்ன்னு சொன்னாங்க!!!
ஆனா, கல்யாணம் முடிஞ்ச ஆறே மாசத்துல ‘வீட்டுல சும்மாதானே இருக்க, வேலைக்கு போனா என்ன’ன்னு மாமியார் டார்ச்சர்! கொஞ்ச நாள்ல என் புருஷனும் அதையே சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க! அப்ப நான் ‘மாசமா’ வேற இருந்தேன்! என்னை பத்தி யாருமே கவலைப்படல!”
“அவர் வாங்குற சம்பளமே எங்க குடும்பத்துக்கு தாராளமா இருக்குமே?! அப்புறம் எதுக்கு என்னை வேலைக்கு போக சொல்றாங்கன்னு கேட்டப்போ தான் தெரிஞ்சுது, அவருக்கு லட்ச கணக்குல கடன் இருக்குன்னு! இதெல்லாம் சொல்லாம, மறைச்சு என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க!!!”
“என் வீட்டுக்கு தெரிஞ்சதும் செம்ம பிரச்சனை ஆச்சு! ஆரம்பத்துல ரொம்ப நல்லவிதமா பேசுன என் மாமியார்… பிரச்சனைன்னு வந்ததும் எந்த அளவு மோசமா நடந்துக்கனுமோ அந்த அளவு மோசமா நடந்துக்கிட்டாங்க! என் அப்பாக்கு மனசே விட்டுப்போச்சு!
நான் வாழ்ந்த வரைக்கும் போதும்ன்னு என்னை கிளம்பி வர சொன்னாங்க! சட்டுன்னு அவரை வேண்டாம்ன்னு என்னால உதறி தள்ள முடியல! வயித்துல புள்ளையை வச்சுக்கிட்டு இந்த பக்கமும் போக முடியாம, அந்த பக்கமும் போக முடியாம!!! கடைசில அம்மா வீட்டுக்கே வந்து உட்காந்துட்டேன்!
கிட்டத்தட்ட ஒரு வருஷமே ஆச்சு!!! இன்னும் இப்படியே தான் ஒரு முடிவுக்கு வராம என் வாழ்க்கை இழுத்துட்டு இருக்கு” என்றாள் ஜோதி.
முழுதாய் கேட்ட அஷ்டா, “பணம் தான் பிரச்சனைன்னா, அதை சரி பண்ண உங்க வீட்டுல ஹெல்ப் பண்ணிருக்கலாம்ல?” என்றாள் அறிவாளியாய்.
“ஆரம்பத்துல பணம் தான் பிரச்சனையா இருந்துச்சு! ஆனா, பிரச்சனையை பேச ஆரம்பிச்சபோ தான் என் மாமியார், மாமனார், நாத்தனார்ன்னு எல்லார் குணமும் வெளிய வந்துச்சு! ரெண்டு வீட்டுலையும் பேசி பேசி… எல்லாருக்கும் மனகசப்பு வந்தது தான் மிச்சம்!” என்றாள் ஜோதி.
அஷ்டா, “……..”
“இதுக்குமேலையும் என்னால அந்த வீட்டுல போய் எல்லாரோடவும் ஒண்ணா இருக்க முடியும்ன்னு தோணல! அப்படி நான் போனா கண்டிப்பா என் வீட்டுல இருந்து யாரும் அந்த வீட்டு வாசல்படியை கூட மிதிக்க மாட்டாங்க!” என்ற ஜோதி,
“என்னை அங்க வர வைக்குறதுக்காக என் குழந்தையை அங்க தூக்கிட்டு போய்ட்டாங்க! அப்பா நாளைக்கு போலிஸ் கம்ப்ளைன்ட் குடுப்போம்ன்னு சொல்லிட்டு இருக்காரு! எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல!” என அழுகை அழுதவளை தன்னால் முடிந்த வரை சமாதானம் செய்து வைத்தாள் அஷ்டா.
தன் போக்கில் சிந்தனையில் இருந்தவள், சரியாய் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து வண்டியை நிறுத்த, ‘இவரு எங்க இருப்பாருன்னு தெரியலையே? அப்பா’ட்ட கேட்போம்!’ என்றெண்ணி அவள் மொபைலை எடுத்தபோது, ‘வைய்டிங் நியர் தெற்கு வாசல்’ என்ற அவனது குறுஞ்செய்தி கண்டு அவள் கால்கள் தன்னால் அவ்விடம் பெயர்ந்தது.
****
கையில் ரத்த சிவப்பு நிற ரோஜாவை வைத்துக்கொண்டு அந்த மண்டபத்தில் இங்கும் அங்கும் நடந்துக்கொண்டிருந்தான் வீரா.
ரோஜாவின் மீதிருந்த நீர்த்துளிகள் அவன் நடக்க நடக்க அழகாய் சாரலென சிந்தியது.
‘ஸ்கூல் பையன் மாதிரி ரோஜாவை வாங்கி வச்சுருக்க! இப்போ இதை எப்படி அவங்கக்கிட்ட குடுக்குறதாம்? ஒரே ‘ஷை’யா இருக்கே ஆண்டவா!!!’
முதன்முதலில் சந்திக்கும்போது(!?) எதையாவது கொடுக்க வேண்டுமே என்று நினைத்துக்கொண்டிருந்தவன் கண்களில் இந்த ‘காதல் ரோஜா’ தான் சிக்கியது.
ஜம்பமாய் அதை வாங்கிவிட்டவனுக்கு அதை எப்படி? என்ன சொல்லி அவளிடம் கொடுப்பது என்ற தயக்கம் தோன்ற, ‘குட்டி போட்ட புலிக்குட்டி’ போல அங்கும் இங்குமாய் யோசித்தபடி அலைந்துக்கொண்டிருந்தான் வீரா.
எப்படி யோசித்தும் இதை அவளிடம் கொடுக்க அவனுக்கு சரிப்படாது’ என்றே தோன்ற, ‘சரி போடா, கோவிலுக்கு வந்தோம், சாமிக்கு வச்சுடுவோம்’ என அலுத்துப்போய் அவன் திரும்ப,
“ஹாய்!!!” என அவனை நோக்கி கரம் அசைத்தபடி நின்றாள் அஷ்டா.
சட்டென கண்முன் பிரசன்னமானவளை கண்டதும், வீராவின் கைகள் தன்னிச்சையாய் அவளை நோக்கி நீள, கையோடு சேர்ந்து ரோஜாவும் சென்றது அவளிடம்!!!